இயேசுவைப் பற்றி மக்களிடம் பேசுங்கள்
பவுல் யூதர்களின் சுத்திகரிப்பு முறைமைக்காக ஆலயத்திற்குச் சென்றிருந்தார் (அப் 21:26). ஆனால் அவர் நியாயப்பிரமாணத்திற்கு எதிராகப் போதிப்பதாகக் கருதிய சில கிளர்ச்சியாளர்கள், அவரை கொல்ல முயன்றனர் (வ.31). ரோமானிய வீரர்கள் விரைந்து தலையிட்டு, பவுலைக் கைது செய்து, அவரைக் கட்டி, ஆலய பகுதியிலிருந்து கொண்டு சென்றனர்; “இவனை அகற்றும்” (வ.36) என்று அந்தக் கும்பல் கூச்சலிட்டது.
இந்த அச்சுறுத்தலுக்கு அப்போஸ்தலன் எவ்வாறு எதிர்வினையாற்றினார்? படைகளின் தளபதியிடம், "ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று" என்று கேட்டார் (வ. 39). ரோமானியத் தலைவர் அனுமதி அளித்தபோது; பவுல், இரத்தம் ஒழுக காயத்துடன், கோபமான கூட்டத்தினரிடம் திரும்பி, இயேசுவின் மீதான தனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார் (22:1-16).
இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த பழைய வேதாகம கதையோடு நம்மைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதே கடினமாக இருக்கும். மிகச் சமீபத்தில், விசுவாசிகளைத் தொடர்ந்து துன்புறுத்தும் ஒரு நாட்டில், சிறையில் அடைக்கப்பட்ட இயேசுவின் விசுவாசியான ஒரு நண்பரைப் பார்க்கச் சென்ற பீட்டர் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பீட்டர் ஒரு இருண்ட சிறை அறையில் தூக்கி எறியப்பட்டார் மற்றும் விசாரணையின் போது கண்கள் கட்டப்பட்டிருந்தார். கண்கட்டை அவிழ்த்தபோது, நான்கு வீரர்கள் துப்பாக்கியுடன் தன்னை குறி வைத்திருப்பதைக் கண்டார். பீட்டரின் மறுமொழி? அவர் அதை “அவரது நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சரியான வாய்ப்பு" என்று கண்டார்.

கிறிஸ்துவில் வலுவான ஆதரவு
லண்டன் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒரு ஓட்டப்பந்தய வீரர், பெரிய பந்தயத்தில் தனியாக ஓடக்கூடாது என்பது ஏன் இன்றியமையாதது என்பதை அனுபவித்தார். பல மாதங்கள் கடினமான ஆயத்தங்களுக்குப் பிறகு, அவர் வலுவான இடத்தில் முடிக்க விரும்பினார். ஆனால் அவர் இறுதி கோட்டை நோக்கித் தடுமாறியபோது, இருமடங்கு சோர்வுடன் சரிவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்தார். அவர் தரையில் விழுவதற்கு முன், இரண்டு சக வீரர்கள் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டனர்; ஒருவர் இடதுபுறமும் மற்றவர் வலதுபுறமும் நின்று, போராடும் ஓட்டப்பந்தய வீரருக்கு ஓட்டத்தை முடிக்க உதவினார்கள்.
அந்த ஓட்டப்பந்தய வீரரைப் போலவே, பிரசங்கியின் எழுத்தாளரும், பிறர் நம்முடன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடுவதால் ஏற்படும் பல முக்கியமான நன்மைகளை நமக்கு நினைவூட்டுகிறார். சாலொமோன், "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்" (பிரசங்கி 4:9) என்ற கொள்கையை முன்வைத்தார். கூட்டு முயற்சிகள் மற்றும் பரஸ்பர உழைப்பின் நன்மைகளை அவர் முக்கியத்துவப்படுத்தினார். கூட்டாண்மையில், "அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்" (வ. 9) என்றும், கடினமான காலங்களில் "ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்" (வ.10) என்றும் அவர் எழுதினார். இருண்ட மற்றும் குளிரான இரவுகளில், நண்பர்களின் அரவணைப்பில் "சூடுண்டாகும்" (வ.11). மேலும் ஆபத்தின் போது, "ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்" (வ. 12). யாருடைய வாழ்க்கை ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளதோ, அவர்களால் பெரும் வலிமையைப் பெற முடியும்.
நம்முடைய எல்லா குறைகள் மற்றும் பலவீனங்களுடன், இயேசுவை விசுவாசிக்கிற குழுவின் வலுவான ஆதரவும் பாதுகாப்பும் நமக்குத் தேவை. அவர் நம்மை வழிநடத்திச் செல்லுகையில், நாம் ஒன்றாக முன்னேறுவோமாக.

கீழ்ப்படிதல் ஒரு தெரிந்தெடுப்பு
நெதர்லாந்தில் குளிர்காலம் அரிதாகவே நிறையப் பனியைக் கொண்டுவருகிறது, ஆனால் கால்வாய்கள் உறைந்து போகும் அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். என் கணவர், டாம், அங்கு வளர்ந்து கொண்டிருந்தபோது, அவரது பெற்றோருக்கு ஒரு குடும்ப சட்டம் இருந்தது: "குதிரையின் எடையைத் தாங்கும் அளவில் பனிக்கட்டி இல்லையென்றால், அதை விட்டு விலகி இருங்கள்". குதிரைகள் தங்கள் இருப்புக்கான தடயங்களை விட்டுச் செல்லும் என்பதால், டாம் மற்றும் அவரது நண்பர்கள் சாலையிலிருந்து கொஞ்சம் குதிரையின் சானத்தை எடுத்து அதை மெல்லிய பனிக்கட்டி மீது எறிந்து, குடும்பச் சட்டத்தை மீறி மேற்பரப்பில் மேலே ஏறிச் சென்றனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, அவர்கள் செயலை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பதை அவர்கள் தங்கள் இதயங்களில் அறிந்திருந்தனர்.
கீழ்ப்படிதல் எப்போதும் இயல்பாக வருவதில்லை. கீழ்ப்படிவதா அல்லது வேண்டாமா என்ற விருப்பம், கடமை உணர்வு அல்லது தண்டனை பற்றிய பயத்திலிருந்தும் உருவாகலாம். ஆனால் நம்மீது அதிகாரம் உள்ளவர்களிடம் அன்பும் மரியாதையும் இருப்பதாலும் கீழ்ப்படிவதைத் தெரிவு செய்யலாம்.
யோவான் 14 இல், இயேசு தம் சீடர்களுக்கு அறைகூவல் விடுத்தார், "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,. . . . என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்” (வ. 23-24). கீழ்ப்படிவது எப்போதுமே எளிதான விருப்பம் அல்ல. ஆனால் நமக்குள் வாழும் ஆவியானவரின் வல்லமை, அவருக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பத்தையும் திராணியையும் அளிக்கிறது (வ. 15-17). அவருடைய உதவியால், நம்மை மிகவும் நேசிப்பவரின் கட்டளைகளை நாம் தொடர்ந்து பின்பற்றலாம். இது தண்டனை பயத்தால் அல்ல, மாறாக அன்பினால்.

ஆவிக்குரிய ஏற்ற தகுதி
நிர்மல், உடற்பயிற்சி கூடத்தில் தவறாமல் பயிற்சி செய்வான். அது அவன் உடலில் வெளிப்படையாகத் தெரியும். அவனுடைய அகன்ற தோள்கள், புடைத்த தசைகள், மேலும் அவனது மேற்கைச் சுற்றளவு என் தொடைகளின் அளவாக இருக்கும். அவனது இந்த கட்டழகே, அவனோடு தேவனைக் குறித்துப் பேச, என்னைத் தூண்டியது. உடல் தகுதிக்கான அவனது அதே அர்ப்பணிப்பு, தேவனுடனான ஆரோக்கியமான உறவிலும் வெளிப்படுகிறதா என்று நான் அவனிடம் கேட்டேன். நாங்கள் மிகவும் ஆழமாகப் பேசவில்லை என்றாலும், நிர்மல் "தன் வாழ்க்கையில் தேவன் இருப்பதை" ஒப்புக்கொண்டார். நானூறு பவுண்டு எடையுள்ள, பொருத்தமற்ற, ஆரோக்கியமற்ற உருவத்திலிருந்த அவனது பழைய புகைப்படத்தை என்னிடம் காண்பிக்கும் அளவுக்கு நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். அவனது வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம், உடல் ரீதியாக ஆச்சரியமானவற்றைச் செய்திருந்தது.
1 தீமோத்தேயு 4:6-10 இல், உடல் மற்றும் ஆவிக்குரிய பயிற்சி மீது நம் கவனத்தை திரும்புகிறது. “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது" (வ. 7-8). ஒருவருடைய வெளிப்புறத் தகுதி, தேவனுடனான நமது நிலையை மாற்றாது. நமது ஆவிக்குரிய தகுதி, உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம். இது இயேசுவை நம்புவதற்கான தீர்மானத்தோடு தொடங்குகிறது, அவர் மூலமே நாம் மன்னிப்பைப் பெறுகிறோம். அந்த புள்ளியிலிருந்தே, தேவபக்தியான வாழ்க்கைக்கான பயிற்சி தொடங்குகிறது. இதில், “விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும்.. நற்போதகத்திலும்” (வ. 6) தேறி வருதல் மற்றும் தேவனுடைய பெலத்தால், நம் பரலோகத் தகப்பனைக் கனம் பண்ணுகிற வாழ்க்கையை வாழ்தல் ஆகியன அடங்கும்.

உதவியை வழங்குதல்
வீடு தேடி உணவு வழங்கும் தனது வேலையினிமித்தம் சுவாதி, சுதாகரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, உணவுப் பையிலிருந்த முடிச்சை அவிழ்க்க அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். சுதாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், ஆகவே முடிச்சை அவிழ்க்கும் திறன் அவரிடம் இல்லை. சுவாதி மகிழ்ச்சியுடன் கடமையைச் செய்தாள். சுவாதி அந்த நாள் முழுவதும் சுதாகரை பற்றி அடிக்கடி நினைவு கொண்டாள், மேலும் அவருக்குத் தேவையான சில அத்தியாவசியங்களைச் சேகரிக்க அவள் தூண்டப்பட்டாள். ஊக்கமளிக்கும் குறிப்புடன் சுவாதி, தனது வீட்டு வாசலில் விட்டுச் சென்ற சூடான தேநீரையும்…