எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

குற்ற உணர்வு போய்விட்டது!

சிறுமியாயிருக்கையில், என் வீட்டின் அருகிலிருந்த பரிசுப் பொருட்கள் கடைக்கு எனது தோழியை கூட்டிக்கொண்டு சென்றேன். அவளது செய்கை என்னை அதிர்ச்சிகுள்ளாக்கிற்று. வண்ணமிக்க சிறு பென்சில்களை அள்ளி எனது பையிள் திணித்த அவள் அவைகளுக்காக பணம் செலுத்தாமல் என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டாள். ஒரு வாரமாக குற்ற உணர்வு என்னை வாதித்தது. எனது அம்மாவிடம் சென்று கண்ணீரோடு என் தவறை அவரிடம் அறிக்கையிட்டேன்.

எனது தோழி தவறு செய்தபோது அதை எதிர்க்காதற்காக மனம் வருந்திய நான், திருடப்பட்ட பொருட்களை அந்தக் கடையில் கொடுத்து, இனி ஒருபோதும் நான் திருடமாட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டேன். தன் கடைக்கு இனிமேல் நான் வரக்கூடாதென கடை உரிமையாளர் கூறினார். ஆனால் எனது அம்மா என்னை மன்னித்துவிட்டபடியாலும், நடந்ததைச் சரிசெய்ய உரியதை நான் செய்துவிட்டேன் என அவர் உறுதிசெய்ததாலும் அன்றிரவு நான் நிம்மதியாகத் தூங்கினேன்.

இராஜாவாகிய தாவீதும் அறிக்கையிடுவதால் கிடைக்கும் மன்னிப்பை அதிகம் சார்ந்திருந்தான் (சங். 32:1-2) அவனது எலும்புகள் உலர்ந்துபோகுமட்டும் (வச. 3). அவன் பத்சேபாள் மற்றும் உரியாவுக்கெதிரான தனது பாவத்தை மறைத்துவைத்தான் (2 சாமு. 11-12). ஆனால் தாவீது தனது தவறுகளை மறைக்க மறுத்தபோது தேவன் அவனது குற்ற உணர்வை எடுத்துப் போட்டார் (வச. 5). தேவன் அவனை இக்கட்டுக்கு விலக்கிக் காத்து இரட்சண்யப் பாடல்களால் அவனைச் சூழ்ந்து கொண்டார் (வச. 7). “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்” என்பதினால் தாவீது அகமகிழ்ந்தான் (வச. 10).

பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பைத் தேடும்போது, நமது பாவங்களுக்கான விளைவுகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாது அல்லது ஜனங்களின் மாறுத்தரங்களை நாம் கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால், பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமாக பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும் சமாதானத்தையும் நாம் பெற்று மகிழ தேவன் நமக்கு வல்லமை அளிக்கிறார். நமது பாவம் என்றென்றும் மறைந்துபோனதை தேவன் உறுதிப்படுத்துகிறார்.

தேவ அன்பைப் பிரதிபலித்தல்!

எனது தாயார் ஒரு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றபோது, அவருக்கு பராமரிப்பு அளிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. மிகவும் கடினமான நாட்களில்கூட எனது தாயார் படுக்கையிலிருந்து இறங்கி நடக்குமுன் வேதாகமத்தை வாசித்து, பிறருக்காக ஜெபித்தார்கள் அவரது நற்செயல்களும் பிறரை உற்சாகப்படுத்தி அவர்களுக்காக ஜெபிப்பதும் இடைவிடாமல் நடந்து கொண்டேயிருந்தது. பரலோக வீட்டிற்கு தேவன் அவர்களை அழைத்துக் கொண்ட நாள் வரைக்கும் தன்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் தேவனுடைய அன்பை அவர் பகிர்ந்துகொண்டார்.

தேவனோடு 40 நாட்கள் இரவும் பகலும் இருந்தபின் மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கினான் (யாத். 34:28). ஆண்டவருடன் கொண்ட மிக நெருக்கமான உறவு அவனது தோற்றத்தை மிகவும் மாற்றியதை அவன் உணரவில்லை (வச. 29). ஆனால் மோசே ஆண்டவருடன் பேசியதை இஸ்ரவேலர்கள் கண்டு கொண்டனர் (வச. 30-32). தொடர்ந்து ஆண்டவரைச் சந்தித்த மோசே தன்னைச் சுற்றி வாழ்ந்த மக்களை வழிநடத்த முடிந்தது (வச. 33-35).

தேவனோடு நாம் கொள்ளும் உறவு காலப்போக்கில் நம்மை எப்படி மாற்றுகிறதென்பதை நாம் அறியாமலிருக்கலாம். மோசேயின் முகப் பிரகாசத்தைப்போல நமது தோற்றம் வெளிப்படையாய் மாறாமலிருக்கலாம். ஆகிலும், தேவனுடன் நாம் நேரம் செலவிட்டு ஒவ்வொரு நாளும் அதிகமதிகமாய் நமது வாழ்வை அவரிடம் அர்ப்பணிக்கும்போது தேவ அன்பை நாம் பிரதிபலிக்கக் கூடும். அவரது பிரசன்னம் நம்மிலும் நம் மூலமாகவும் வெளிப்படும்போது மற்றவர்களை நம்மண்டை அவர் நெருக்கமாக அழைத்துக் கொள்வார்.

பிரிவுகளை அழித்தல்

எனக்கும் என் கணவனுக்கும் இடையே அன்று காலை ஏற்பட்ட வாக்குவாதம் எனது மனதில் புயல்போல் மோதி அடித்துக் கொண்டிருந்தபொழுது, அன்றையத்தினமே நான் முடிக்க வேண்டிய ஒரு எழுத்து வேலையைக் குறித்த மன உளைச்சலும் என்னை ஆட்கொண்டது. எனது கணினியில் விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்த சுட்டும் குறியையே (Cursor) நான் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். எனது விரல்நுனிகள் கணினியில் விரல் கட்டைகளின் மீது (Keyboard) இருந்தன. அவள் தனக்குள்ளாக “கர்த்தாவே எனது கணவர் செய்ததும் தவறுதானே” என்று கூறிக்கொண்டாள்.

எனது கணினியின் திரை இருண்ட பொழுது, அதிலிருந்த எனது கடுகடுப்பான முகத்தின் பிம்பத்தைப் பார்த்தேன். நான் ஒத்துக்கொள்ளாத எனது தவறு, நான் செய்யவிருந்த வேலையை செய்யவிடாமல் தடுத்து மேலும் என் கணவனோடும், என் தேவனோடும் இருந்த உறவையும் பாதித்தது.

நான் எனது பெருமையை விட்டுவிட்டு, எனது கைபேசியை வேகமாக எடுத்து என் கணவனிடம் மன்னிப்புக் கேட்டேன். எனது கணவனும் அவருடைய தவறுக்கு மன்னிப்புக் கேட்ட பொழுது, எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்புரவினால் என் மனதில் உண்டான சமாதானத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். உடனே என் தேவனுக்கு நன்றி கூறி நான் எழுதி முடிக்க வேண்டிய கட்டுரையையும் விரைவில் எழுதி முடித்துவிட்டேன்.

இஸ்ரவேல் மக்களும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் உள்ள பாவத்தினால், மன வேதனையையும், தேவனோடு மறுபடியும் ஒப்புரவாகுதலினால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவித்தார்கள். எரிகோவிற்கு எதிராக அவர்கள் தொடுத்த யுத்தத்தின் முடிவில் எரிகோவிலிருந்த எந்த ஒரு சாபத்தீடான பொருளையும் எடுத்து ஐசுவரியத்தை சேர்க்கக் கூடாது என்று யோசுவா எச்சரித்தான். ஆனால், ஆகான் அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்கள் சிலவற்றை எடுத்து தனது கூடாரத்தின் கீழ் ஒளித்து வைத்தான் (7:1). அவனது பாவம் வெளிப்படுத்தப்பட்டு அவன் தண்டிக்கப்பட்ட பின்புதான் (4-12) இஸ்ரவேல் மக்கள் தேவனோடு ஒப்புரவாகி, அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவர்களால் அனுபவிக்க முடிந்தது.

ஆகானைப்போல் நாமும் “நமது கூடாரத்திற்குள் பாவத்தை ஒளித்து வைப்பதினால்” நம்முடைய இருதயம் தேவனை விட்டு விலகுவதோடு நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் எப்பொழுதும் முக்கியமாகக் கருதுவதில்லை. இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை இட்டு, நாம் பாவிகள் என்பதை ஒத்துக்கொண்டு தேவனிடம் மன்னிப்புக்காக மன்றாடுவது, தேவனோடும், பிறரோடும் உண்மையான உறவைக் கட்டுவதற்கான சிறந்த ஆரம்பமாக உள்ளது. நமது அன்பான சிருஷ்டிகரும், நம்மை அன்றாடம் போஷிக்கிறவருமான தேவனிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதின்மூலமாக அவருக்கு ஊழியம் செய்வதோடு, அவரது பிரசன்னத்தையும் மகிழ்ச்சியோடு அனுபவிக்கலாம்.

தேவ வார்த்தையை கிரகித்து

எங்கள் மகன் சேவியர் பாலகனாய் இருந்தபோது, ‘மான்டெரி பே’ நீர்வாழ் உயிரினக் காட்சிசாலைக்கு குடும்பமாக சென்றிருந்தோம். நாங்கள் கட்டிடத்திற்குள் நுழைந்ததும், உட் கூரையில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய சிற்பத்தை என் மகனுக்கு காட்டி, “அதோ பார், முதுகில் கூன் உள்ள திமிங்கலம்,” எனக் கூறினேன்.

அப்பொழுது அவன் தன் கண்கள் விரிய ஆச்சரியத்துடன், “பிரமாண்டமானது,” எனக் கூறினான்.

உடனே என் கணவர் என்னை திரும்பிப் பார்த்து, “இவனுக்கு எப்படி இந்த வார்த்தை தெரியும்?” எனக் கேட்டார். எனக்கும் என்ன சொல்வதேன்று தெரியாமல், “ஒருவேளை நாம் அவ் வார்த்தையை பேசும்போது அவன் கவனித்திருக்கலாம்,” என பதிலளித்தேன். நாங்கள் திட்டமிட்டு என் மகனுக்கு கற்றுத்தராதபோதும், எங்கள் மகன் பல வார்த்தைகளை கிரகித்துள்ளான் என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

இளைய தலைமுறையினர் வேதவசனத்தை அறிந்துகொள்ளவும், அதற்கு கீழ்ப்படியவும், திட்டமிட்ட நோக்கத்தோடு அவர்களுக்கு அதை கற்றுத் தருமாறு தன் ஜனத்தை தேவன் ஊக்குவிப்பதை உபாகமம் 6ஆம் அதிகாரத்தில் காணலாம். இஸ்ரவேலர் தேவனை அறிகிற அறிவிலே விருத்தியடையும்போது, அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பயபக்தியோடு தேவனை தொழுதுகொள்ள கற்றுக்கொள்வார்கள். மேலும் முழுமையாய் அவரை நேசிக்கவும், கீழ்ப்படியவும், அவரை அறிகிற அறிவினால் கிட்டிச்சேரும் பொழுது, அதற்குறிய நற்பலனையும் அவர்கள் அனுபவிப்பார்கள் (வச. 2-5).

திட்டமிட்டு நம்முடைய இருதயத்தையும் மனதையும் வேத வசனத்தினால் நிரப்பும்பொழுது (வச:6), நம்முடைய அன்றாட அலுவல்கள் மத்தியிலும் தேவனுடைய அன்பையும் சத்தியத்தையும் நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தர நன்கு ஆயத்தமாயிருப்போம் (வச. 7). நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு மாதிரியாக இருந்து, இன்றும் நமக்கு பொருந்தக்கூடிய தேவனுடைய நிலையான சத்தியத்தை, அதன் அதிகாரத்தை, அவர்கள் கண்டுகொள்ளவும், அங்கீகரிக்கவும் கனப்படுத்தவும், அவர்களை ஊக்குவித்து ஆயத்தப்படுத்துவோமாக (வச 8-9).

நம்முடைய இருதயத்தின் நிறைவால், தேவனுடைய வார்த்தைகள் நம்முடைய வாய்களிலிருந்து இயல்பாக பொங்கி வழியும்பொழுது, நாம் ஒரு விசுவாச பாரம்பரியத்தை, தலைமுறை தலைமுறைதோறும் கடந்து செல்லும்படியாக விட்டுச் செல்லலாம் (4:9).

ஆறுதலின் பாத்திரமாய்

என் தோழி, தான் வீட்டிலேயே செய்த சில மண்பாண்டங்களை எனக்கு தபால் மூலம் அனுப்பிவைத்தாள். அப்பார்சலை பிரித்து பார்த்தபோது, அதிலிருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தும் உடைந்திருக்க கண்டேன். அதில் ஒரு பாத்திரம், பல பெரிய துண்டுகளாகவும், சில்லுகளாகவும், தூசியும் மண்ணும் கலந்த உருண்டைகளாகவும் நொறுங்கிப்போயிருந்தது.

ஆனால், உடைந்துபோன அப்பாத்திரத்தை என் கணவர் பசையிட்டு ஒட்டிய பிறகு, அழகான பாத்திரமாக மாறிற்று. பல விரிசல்களை கொண்ட அவ்வழகிய பாத்திரத்தை, அனைவரும் காணும்படி நான் அலமாரியிலே வைத்தேன். ஒட்டப்பட்ட அப்பாத்திரத்தில் உள்ள விரிசல்களைப் போலவே, பல கடினமான சமயங்களை நான் கடந்து வந்த போது ஏற்பட்ட வடுக்கள், எனக்கும் உண்டு.  நான் அச்சூழ்நிலைகளைக் கடந்து வரவும், இன்றும் பலத்தோடு நிற்கவும், தேவனே உதவி செய்தார். துன்ப வேளையில் தேவன் என் வாழ்விலும் என் மூலம் மற்றவர்களுக்கும் செய்த நன்மைகளை நான் பிறரிடம் பகிர்வதின் மூலம், துன்பப்படுகிற அநேகருக்கு நான் ஆறுதலளிக்கும் பாத்திரமாக இருக்க முடியும் என்பதை அப்பாத்திரம் எனக்கு நினைவூட்டியது.

நம்முடைய தேவன் இரக்கமும் ஆறுதலும் அளிப்பவராய் இருப்பதால், “இரக்கங்களின் பிதாவும் சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்,” என அப்போஸ்தலனாகிய பவுல் தேவனை போற்றி துதிக்கிறார் (2 கொரி. 1:3). நாம் தேவனைப்போல மாறுவதற்கு, நம்முடைய சோதனைகளையும் பாடுகளையும் ஒரு கருவியாக தேவன் பயன் படுத்துகிறார். நம்முடைய சோதனை வேளையில், தேவன் நமக்களித்த ஆறுதலைக்கொண்டு, உபத்திரவத்தில் இருக்கும் அநேகருக்கு நாம் ஆறுதலளிக்கமுடியும் (வச. 4).

கிறிஸ்துவின் பாடுகளை நாம் எண்ணிப் பார்ப்போமானால், துயரத்தின் மத்தியிலும் நாம் ஆறுதலடைந்து, தேவன்மேல் நம்பிக்கை வைத்து, விடாமுயற்சியுடன் பாடுகளை சகிப்போம். அப்பொழுது தேவன் நம்முடைய அனுபவங்களைக் கொண்டு பாடுகள் மத்தியில் இருக்கும் அநேகருக்கு ஆறுதல் அளிப்பார் (வச 5-7). தேவன் நம்முடைய பாடுகளை எல்லாம் அவருடைய மகிமைக்கென்று மீட்டுக்கொண்டுள்ளார் என்பதை பவுல் அறிந்ததினால் ஆறுதலடைந்தது போல நாமும் ஆறுதலடைவோமாக. தேவன் நமக்களிக்கும் ஆறுதலின் பாத்திரத்தை துயரப்படுகிறவர்களோடு பகிர்ந்து, அவர்களுக்கு உறுதியான நம்பிக்கையை அளிப்போமாக.

எதுவும் பயனற்றதல்ல!

சரிரத்தில் மிகுந்த வலிவேதனைகளோடு, இயல்பாக இயங்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறேன். குறைந்துபோன செயல்பாட்டினால் மனமுடைந்து மிகவும் சோர்ந்துபோன வேளையில், “என் சரீரம் செயலற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே இப்பொழுது  தேவனுக்கும் மற்றவர்களுக்கும் என்னால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தோன்றுகிறது”, என என் தோழியிடம் மனந்திறந்து கூறினேன்.

அப்பொழுது அவள் தன் கரத்தை என் கரம் மீது வைத்து, “நான் புன்னகையோடு உனக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொழுதும், உன் பேச்சை நான் கவனித்து கேட்கும் பொழுதும், உனக்குள் எவ்வித தாக்கத்தையும் நான் ஏற்படுத்துவதில்லை எனக் கூறுவாயா?”, எனக் கேட்டாள்.

அதைக் கேட்டு நான் சற்று தடுமாறி, என் சாய்வு நாற்காலியில் நன்கு சாய்ந்து, “கண்டிப்பாக இல்லை”, என பதிலளித்தேன்.

அதற்கு என் தோழி, “இதைத்தானே நீ எனக்கும் மற்றவர்களுக்கும் செய்கிறாய். அப்படியிருக்க ஏன் உனக்கு தானே பொய்களைக் கூறிக்கொள்கிறாய்”, என பாசத்தோடு முறைத்தாள்.

தேவனுக்கென்று நாம் செய்வது எதுவும் பயனற்றது கிடையாது என்பதை தேவன் எனக்கு நினைவூட்டியதற்காக அவளுக்கு நன்றி செலுத்தினேன்.

நம்முடைய சரீரங்கள் இப்பொழுது பலவீனமுள்ளதாயிருந்தாலும், “பலமுள்ளதாய் எழுந்திருக்கும்,” என பவுல் உறுதியளிக்கிறார் (1 கொரி. 15:43). மேலும், கிறிஸ்தவுக்குள் மரித்தோர் மீண்டுமாய் உயிர்த்தெழுவார்கள் என தேவன் வாக்குபண்ணியுள்ளதால், அவர் நம்முடைய ஒவ்வொரு
காணிக்கையையும், எல்லா பிரயாசங்களையும் அவருடைய ராஜ்ஜியத்தைக் கட்ட பயன்படுத்துவார் (58).

பலவிதமான நபர்களைக் கொண்ட கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே நாம் ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதினால், நாம் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், நம் சரீர இயக்கம் குறைந்துபோயிருந்தாலும், சோதனை வேளையிலும் நாம் வெளிப்படுத்தும் விசுவாசம், ஒரு புன்னகை, உற்சாகமூட்டும் வார்த்தை அல்லது ஒரு ஜெபம் யாவும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும், நாம் செய்யும் எவ்வித பணியும் சாதாரணமானதுமன்று, பயனற்றதுமன்று.

இரக்கத்தை எதிர்பார்த்திடு இரக்கத்தை அளித்திடு!

என் தோழியின் தவறான தீர்மானங்களும் தேர்வுகளும் அவளை பாவத்திற்குள்ளாக மிக அதிகமாய் அழைத்துச் சென்றது மாத்திரமன்றி அவளுடைய செயல்கள் என்னையும் பாதித்தது. இதைக் குறித்து நான் ஒவ்வொரு வாரமும் என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும் பெண் ஒருவரிடம் முறையிட்டபொழுது, அவர் தன்னுடைய கரங்களை என் கரங்கள் மீது வைத்து, “சரி நாம் நம் அனைவருக்காகவுமே ஜெபிக்கலாம்” என்று கூறினார். 

அதற்கு நான், “நம் அனைவருக்காகவுமா?” என முகம் சுளித்து வினவினேன். 

“ஆம் எப்பொழுதும் இயேசுவே நம்முடைய பரிசுத்தத்தின் அளவுகோலாய் இருப்பதால், நம்முடைய பாவங்களை நாம் ஒருபோதும் மற்றவருடைய பாவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது என்று நீயே கூறியிருக்கிறாயே?” என அவர் பதிலளித்தார். 

நான் தவறை உணர்ந்து, “இந்த உண்மை எனக்கு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நீங்கள் கூறுவது சரியே. என்னுடைய நியாயந்தீர்க்கும் மனப்பான்மையும் ஆவிக்குரிய பெருமையும் அவளுடைய பாவங்களை விட சாதாரமானதும் இல்லை மோசமானதுமில்லை” எனக் கூறினேன். 

அதற்கு அவர் “மேலும், நாம் உன்னுடைய தோழியை பற்றி பேசுவதின் மூலம் புறங்கூறிக் கொண்டிருக்கிறோம். இதனால்...” என்று கூற… 

“நாம் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்,” என பதிலளித்தேன். தவறை உணர்ந்து, தலையை தாழ்த்தி, “தயவு செய்து நமக்காக ஜெபம் செய்யுங்கள்,” என்றேன். 

தேவலாயத்திற்கு வந்து வெவ்வேறு விதமாக ஜெபித்த இரண்டு நபர்களைக் குறித்து உவமையாக இயேசு கூறியிருப்பதை லூக்கா 18ஆம் அதிகாரத்தில் காணலாம் (வச. 9-14). அந்த பரிசேயனைப் போல நாமும் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வட்டத்திற்குள் மாட்டிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நாம் நம்மை பற்றியே பெருமை பாராட்டிக்கொள்ளவும் கூடும் (வச. 11-12). இந்த மனப்பான்மையினால், மற்றவர்களை நியாயந்தீர்க்க நமக்கு அதிகாரம் உண்டென்றும், அவர்களை சீர்படுத்த நமக்கு வல்லமை உண்டென்றும், அப்பொறுப்பு நம்முடையதே என்றும் நாம் எண்ணி ஜீவிப்போம். 

ஆனால், நாம் இயேசுவின் பரிசுத்த வாழ்வையே மாதிரியாகக் கொண்டு, அவருடைய நன்மைகளை நம் வாழ்வில் கண்டுணரும் பொழுது, நாமும் அந்த ஆயக்காரனைப்போல, தேவகிருபை நமக்கு இன்னும் எவ்வளவு அதிகமாய் தேவை என்பதை அறிந்துகொள்வோம் (வச. 13). தேவனுடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் நாம் நம் வாழ்வில் அனுபவிக்கும்பொழுது, நாம் மனமாற்றம் அடைந்து, இரக்கத்தை எதிர்பார்க்வும் அதையே பிறருக்கு அளிக்கவும் வல்லமைபெறுவோம். ஒருபோதும் நாம் பிறரை குற்றவாளியாக தீர்க்கமாட்டோம். 

நான் மன்னிக்க வேண்டுமா?

ஓர் நிகழ்ச்சிக்காக ஆயத்தம்செய்யும்படி ஆலயத்திற்கு நான் சீக்கிரமாக வந்திருந்தேன். அப்போது ஆலயத்தின் ஓர் ஓரத்திலே ஒரு பெண் நின்று அழுதுகொண்டிருந்தாள். கடந்த காலத்தில் அவள் என்னைப்பற்றி மிகமோசமாக புறங்கூறியதை நான் அறிந்ததினால், அவளைக் கண்டுகொள்ளாமல் ‘வாக்யூம் கிளீனரின்’(vacuum cleaner) சத்தத்தில் அவள் அழுகையின் சத்தத்தை மூழ்கடித்துவிட்டு இடத்தை சுத்தப்படுத்த தொடங்கினேன். என்னை விரும்பாத ஒருவரைப்பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும் என்று எண்ணினேன்.

ஆனால், தேவன் என்னை எவ்வளவாக மன்னித்திருக்கிறார் என்பதை ஆவியானவர் நினைவுபடுத்தியவுடன், நான் அவளருகே சென்றேன். தன்னுடைய குழந்தை மருத்துவ மனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாக அவள் கூறினாள். நாங்கள் அழுதோம், அரவனணத்துக் கொண்டோம், பின்பு அவளது குழந்தைக்காக ஜெபித்தோம். எங்களுக்கு இடையே இருந்த பிரச்சனைகளை நாங்கள் சரிசெய்து கொண்டபின், இப்பொழுது நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம். 

மத்:18ஆம் அதிகாரத்தில், கணக்குவழக்கை சரிபார்க்கத் தொடங்கும் ஒரு ராஜாவுடன் பரலோகராஜ்ஜியத்தை இயேசு ஒப்பிடுகிறார். தன்னிடம் ஒரு மிகப்பெரிய தொகையை கடனாகப் பெற்றிருந்த ஓர் வேலைக்காரன் இரக்கத்திற்காக மன்றாடினபொழுது. ராஜா அவனது கடனை ரத்து செய்தார். ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே சென்று, தன்னிடம் மிக சொற்ப தொகை கடன் வாங்கியிருந்த ஓர் நபரை கண்டுபிடித்து அவனிடம் இரக்கமின்றி மிகக் கடினமாக நடந்து கொண்டான். ராஜாவிடம் இவன் வாங்கியிருந்த கடனோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிகவும் சிறிய தொகையே. இதை அறிந்த ராஜா, மன்னிக்காத சுபாவத்தையுடைய அந்த கொடிய வேலைக்காரனை கைது செய்து சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டார் (வச. 23-24). 

மன்னிக்கும்படியான தீர்மானத்தை நாம் எடுப்பதினால், பாவத்தை ஆதரிக்கலாம் என்றோ, நமக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும் என்றோ, அல்லது நம்முடைய காயங்களின் வலி குறைந்து போகும் என்றோ நினைக்கக்கூடாது. மன்னிப்பதின் மூலம் நம் வாழ்விலும், நமது உறவுகளின் மத்தியிலும் சமாதனம் உண்டுபண்ணும் அழகிய கிரியைகளை செய்யும்படியாக தேவனை அழைக்கிறோம். மன்னிப்பை அளிப்பதினால் நாம் விடுதலையடைந்து கிருபையினால் தேவன் நமக்களித்த இரக்கத்தினை அனுபவிக்கத் தொடங்குகிறோம்.

ஆம் என்பது இல்லை என்றாகும்பொழுது

புற்றுநோயால் போராடிக் கொண்டிருந்த என் தாய்க்கு உடனிருந்து பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி தேவனுக்கு நான் நன்றி செலுத்தினேன். மருந்து மாத்திரைகள், உதவி செய்வதற்குப் பதிலாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதால் என் தாயார் அச்சிகிச்சையை கைவிட முடிவு செய்தார். “பரலோக வீட்டிற்கு செல்ல நான் தயாராகி விட்டேன் என்பதை தேவன் அறிவார். ஆகவே என்னுடைய கடைசி நாட்களை குடும்பத்தினரோடு சந்தோஷமாக கழிக்கவே விரும்புகிறேன்;` வேதனையோடு இருக்க விரும்ப வில்லை” என்று அவர் கூறினார்.

பரம வைத்தியராகிய நம்முடைய பரமபிதாவிடம் நம்பிக்கையோடு ஓர் அற்புதத்தை எதிர் பார்த்து மன்றாடினேன். ஆனால் என்னுடைய தாயாரின் ஜெபத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தால், என்னுடைய ஜெபத்திற்கு மறுப்பு தெரிவிக்க நேரிடுமே. ஆகவே, கண்ணீரோடு, “தேவனே, உம்முடைய சித்தம் நிறைவேறுக,” என்று என்னை ஒப்புக்கொடுத்தேன்.

இதற்குப் பின்பு, வேதனையற்ற நித்தியத்திற்குள் என் தாயாரை இயேசு சீக்கிரத்தில் அழைத்துக் கொண்டார்.

 

இயேசு வருமளவும், விழுந்து போன இவ்வுலகில் நாம் பல உபத்திரவங்களை அனுபவிக்க நேரிடும் (ரோ. 8:22-25). நம்முடைய பாவசுபாவம், தெளிவற்ற கண்ணோட்டம், மற்றும் வலி வேதனைகளை குறித்த பயம் ஆகியவை நம்முடைய ஜெபிக்கும் திறனை நிலைகுலையச் செய்திடும். ஆனால், நல்லவேளை, “ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்” (வச. 27). வேறோருவருடைய ஜெபத்திற்கு சம்மதம் தெரிவிப்பதால் நமக்கு மனவேதனை அளிக்கக்கூடிய மறுப்பு தெரிவிக்க நேரிடும். ஆயினும் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று நமக்கு நினைவூட்டுகிறார் (வச. 28).

தேவனுடைய மகத்தான திட்டத்தில் நம்முடைய சிறிய பங்களிப்பை நாம் அளிக்க சித்தம் கொண்டால், “தேவன் நல்லவர். நான் அறிந்துகொள்ள வேண்டியது இதுவே. அப்படியிருக்க, அவர் என்ன செய்ய சித்தம்கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே,” என்னும் என் தாயாருடைய பொன்மொழியை நாம் எதிரொலிக்கலாம். அவருடைய மகிமைக்கென்று நம்முடைய எல்லா ஜெபங்களையும் தம்முடைய சித்தத்திற்குள்ளாக நமக்கு பதிலளிக்கிறார் என்கிற நிச்சயமுள்ளவர்களாய் தேவ கிருபையின் மேல் விசுவாசம் கொள்வோமாக.