பிறப்புகளின் ஆராய்ச்சி
நாம் ஒரு நபரைச் சந்திக்கும்போது, “நீங்க யாரு, எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றெல்லாம் கேட்பது வழக்கம். ஆனாலும், நம்மில் அநேகருக்கு, அந்தக் கேள்விக்கான விடையளிப்பது வில்லங்கமாய் இருக்கும். சிலசமயம், முழுவிவரங்களை சொல்ல விரும்பவும் மாட்டோம்.
நியாயாதிபதிகள் புத்தகத்தில், யெப்தா அந்தக் கேள்விக்கான பதிலை தர விரும்பியிருக்கமாட்டான். அவனுடைய பிறப்பில் குற்றம் கண்டுபிடித்த அவன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அவனை அவனுடைய சொந்த ஊரான கீலேயாத்திலிருந்து துரத்திவிட்டார்கள். “நீ அந்நிய ஸ்திரியின் மகன்” (நியாயாதிபதிகள் 11:2) என்று அவனை பழித்தார்கள். அந்த வேதபகுதி அப்பட்டமாக, “அவனுடைய தாய் ஒரு பரஸ்திரி (வேசி) என்றே குறிப்பிடுகிறது” (வச. 1).
ஆனால் யெப்தா சுபாவத்தின்படியே ஒரு தலைவனாக இருந்தான். கீலேயாத்துக்கு விரோதமாக பகைஞர் எழும்பினபோது அவனை துரத்திவிட்டவர்கள் அவனைத் தேடிப்போய், “நீ எங்கள் சேனாதிபதியாக இருக்கவேண்டும்” (வச. 6) என்று கேட்டார்கள். அதற்கு யெப்தா, “நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்?” (வச. 7) என்று கேட்டதற்கு காரியங்கள் சுமூகமாய் மாறும் என்ற ஒரு உத்தரவாதம் பெற்றபின் அவர்களைத் தலைமைதாங்க ஒப்புக்கொண்டான். வேதம் நமக்கு சொல்லுகிறது “அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்…” (வச. 29). விசுவாசத்துடன் முன்னேறிய யெப்தா பெரிய வெற்றிக்கு நேராக அவர்களை நடத்தினான். புதிய ஏற்பாட்டு விசுவாச வீரர்களின் பட்டியலில் அவனுடைய பெயரும் இடம்பெறுவதைப் பார்க்கிறோம் (எபி. 11:32).
அநேக வேளைகளில் தேவன் பொருத்தமில்லாத மக்களையே தம் பணிக்காகத் தெரிந்தெடுக்கிறார். நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி வந்தோம் அல்லது என்ன செய்தோம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகாது. அவருடைய அன்பில் நம்பிக்கை வைத்து எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம்.
அசட்டைபண்ணப்பட்டவர்
சூசன்னா சிபர் 18-ஆம் நூற்றாண்டின் பிரபல பாடகிகளில் ஒருவர். பாடல்திறனோடு தன் திருமண வாழ்க்கையில் நிகழ்ந்த அவலங்களுக்காகவும் இவள் அதிகமாய் அறியப்பட்டிருந்தார். ஆகையால்தான், புகழ்மிக்க ஹேண்டலின் மேசியா (Messiah) இசைவரிகளை ஏப்ரல் 1742-ஆண்டில் டப்ளின் நகரில் அரங்கேற்றினபோது, நேயர்களில் அநேகர் இவளை ஒரு தனிபாடகியாக பாடவிட்டதை அங்கீகரிக்கவில்லை.
துவக்கவிழாவில் பாடகி சிபர் “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார் (ஏசா. 53:3) என்ற வரியை பாடினாள். அந்த வார்த்தைகளை கேட்டு பக்திபரவசமடைந்த போதகர் பாட்ரிக் டெலனி என்பவர் எழும்பி நின்று, “ஸ்திரியே, இதன் நிமித்தம் உன் பாவங்கள் அனைத்தும் உனக்கு மன்னிக்கபடுவதாக!” என்றார்.
சூசன்னா சிபருக்கும், ஹேண்டலின் மேசியாவிற்கும் உள்ள தொடர்பு தெளிவானது. “துக்கம் நிறைந்தவரான” – மேசியா இயேசு – பாவத்தின் காரணமாகவே “அசட்டைபண்ணப்பட்டவரும் புறக்கணிக்கப்பட்டவருமாக” இருந்தார். “என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார் (வச. 11). எனவும் தீரிக்கன் ஏசாயா கூறியுள்ளார்.
மேசியாவிற்கும் நமக்கும் உள்ள தொடர்பும் அப்படியே உள்ளது. சூசன்னா சிபரோடோ அல்லது நியாயந்தீர்க்கும் கூட்டத்தாரோடோ அல்லது இரண்டிற்கும் இடையிலோ நாம் எங்கு நின்றாலும், நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி தேவன் அருளும் மன்னிப்பை பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். தம்முடைய வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக இயேசு பிதாவாகிய தேவனோடு நமக்கு உள்ள உறவை மீட்டெடுக்கிறார்.
இதன் நிமித்தமாக – இயேசு செய்த எல்லாவற்றினிமித்மாக – நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதாக
வீட்டிற்கு கடிதங்கள்
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவத்தில் புதிதாக சேர்ந்தோர், தங்கள் வீடுகளை விட்டு வெகு தொலைவில் பயிற்சி பெற்ற போது, தாங்கள் எதிர் நோக்கிய சவால்களை எப்படி வெற்றியாகச் சமாளித்தனர் என்பதை நகைச்சுவையோடு கடிதமாக எழுதச் செய்தனர். ஓர் இளைஞன் தன் வீட்டிற்கு எழுதிய கடிதத்தில் அங்கு தடுப்பு ஊசி போட்ட செயலை அற்புதமாக மிகைப்படுத்தி விளக்கியிருந்தான். இரண்டு மருத்துவ அதிகாரிகள் எங்களை ஈட்டி இணைக்கப்பட்ட கயிறுகளோடு வந்து, எங்களை விரட்டிப் பிடித்து, இழுத்துச் சென்றனர். எங்களை தரையோடு சேர்த்து அசையமுடியாதபடி செய்தனர், இரு புயங்களிலும் ஈட்டியைக் குத்தினர் என்றெழுதியிருந்தான்.
மற்றொரு இராணுவ வீரர் அந்த நகைச்சுவை தன்னை இவ்வளவு தூரம் தான் கொண்டுவர இயலும் என்று கண்டுகொண்டார். அப்பொழுது அவருக்கு ஒரு வேதாகமம் கொடுக்கப்பட்டது. “நான் அதனை மிகவும் நேசித்து ஒவ்வோர் இரவும் வாசித்தேன்” என்று எழுதுகின்றார். ‘‘நான் ஒரு வேதாகமத்திலிருந்து இவ்வளவு கற்றுக் கொள்ள முடியும் என்பதை அதுவரை உணராதிருந்தேன்” என்று எழுதியிருந்தார்.
வெகு நாட்களுக்கு முன்பு யூதர்கள், அநேக வருடங்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்த பின் தங்கள் நாட்டிற்குத் திரும்புகின்றனர். அப்பொழுது அவர்களோடு பிரச்சனைகளும் வந்தன. அவர்கள் எருசலேமின் சுற்றுச் சுவரை கட்டியெழுப்பப் போராடிய போது, எதிரிகளிடமிருந்து எதிர்ப்பையும், பஞ்சத்தையும், அவர்களுடைய பாவத்தின் விளைவையும் எதிர் கொண்டனர். அவர்களுடைய துன்பங்களின் மத்தியில் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு நேராகத் திரும்பினர். அவர்கள் கற்றுக் கொண்டதைக் குறித்து ஆச்சரியப்பட்டனர். ஆசாரியர்கள் தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்தபோது, ஜனங்கள் கண்ணீர் விட ஆரம்பித்தனர் (நெ. 8:9). அத்தோடு அவர்கள் ஆறுதலையும் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது அதிபதியான நெகேமியா, ஜனங்களிடம் விசாரப்பட வேண்டாம்; “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (வச. 10) என்றார்.
நாம் தேவனிடமிருந்து வார்த்தைகளைப் பெறும்படி காத்திருந்து, கஷ்டப்பட தேவையில்லை. வேதாகமத்தில் அவருடைய குணாதிசயங்களையும், அவருடைய மன்னிப்பையும் அவருடைய ஆறுதலையும் குறித்துப் படிக்கின்றோம். நாம் வேதத்தை வாசிக்கும் போது தேவனுடைய ஆவியானவர் அந்தப் பக்கங்களில் நம்மோடு பேசுவதைப் பார்த்து வியந்து போவோம்.
சரியான இடத்தில் மலர்தல்
களை என்பது நீ விரும்பாத இடத்தில் வளரும் ஒரு செடி என்று சொல்லி களையெடுக்கும் கருவியை என் கையில் கொடுத்தார் என் தந்தை. நான் பட்டாணி செடிகளுக்கூடே தானாக வளர்ந்திருக்கும் சோளச் செடியை விட்டு விட விரும்பினேன். ஆனால் பண்ணை அனுபவமிக்க என் தந்தை அதனைப் பிடுங்கிவிடச் சொன்னார். அந்த தனிமையான சோளக்கதிர் பயன் தருவதற்குப் பதிலாக பட்டாணிகளை அமிழ்த்தி அவற்றின் சத்துக்களை எடுத்துக் கொள்ளும் என்றார்.
மனிதர்கள் செடிகளல்ல. நமக்கு தானாகச் சிந்திக்கும் திறனுண்டு. அது தேவன் தந்த சுதந்திரம். ஆனால் நாம் தேவன் நமக்கென்று நியமிக்காத இடங்களில் மலர முயற்சிக்கின்றோம்.
சவுல் ராஜாவின் மகன் யுத்த வீரன். இளவரசன் யோனத்தான் தான் விரும்பியபடி செய்திருக்கலாம். அவன் தான் ஓர் அரசனாகுவதை எதிர்பார்ப்பதற்கு சரியான காரணங்களிருந்தன. ஆனால் அவன் தேவனுடைய ஆசீர்வாதம் தாவீதின் மீதிருந்ததைக் கண்டான். அவன் தன் தந்தையின் பொறாமை பெருமை ஆகியவற்றைக் கண்டு கொண்டான். (1 சாமு. 18:12-15). எனவே தனக்கு மறுக்கப்பட்ட அரியணையை பற்றிக் கொள்ள எண்ணுவதை விட்டு, தன் உயிரையும் பணயம் வைத்து யோனத்தான் தாவீதின் நெருங்கிய நண்பனானான் (19:1-6 ; 20:1-4). அவனுடைய உயிரையும் காத்தான்.
சிலர் யோனத்தான் மிக அதிகமாக விட்டுக் கொடுத்தான் என்கின்றனர். ஆனால் நாம் நினைக்கப்படும்படி என்ன செய்வோம்? பேராசை கொண்ட சவுலைப் போலவா? அவன் தன் அரசாட்சியைப் நிலைப்படுத்த நினைத்தான். ஆனால் அதை இழந்து போனான். அல்லது கனம் பெற்ற இயேசுவின் முன்னோர் பட்டியலில் இடம் பெற்ற ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றிய யோனத்தானைப் போலவா?
தேவனுடைய திட்டங்கள் நம்முடைய திட்டங்களை விட மேலானவை. நாம் அவருடைய திட்டங்களுக்கு எதிர்த்து நிற்போமாயின் தவறான இடத்தில் வளர்ந்த களையைப் போலாவோம். அல்லது அவருடைய வழி நடத்துதலை ஏற்றுக் கொள்வோமாகில் அவருடைய தோட்டத்தில் நாட்டப்பட்டு செழித்து வளர்ந்து கனிதரும் செடியைப் போலிருப்போம். இந்த தேர்ந்தெடுத்தலை அவர் நம்மிடம் விட்டு விட்டார்.
தவறான கோடுகள்
எங்கள் சமூகத்தினரிடையே அகதிகளின் வருகை, எங்கள் பகுதி தேவாலயங்களின் புதிய வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இந்த வளர்ச்சி சவால்களைக் கொண்டு வந்தது. ஆலய அங்கத்தினர்கள் புதிய நபர்களை எப்படி வரவேற்பது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் புதிய நபர்கள் இவர்கள் அறியாத கலாச்சாரம், புதிய மொழி, மாறுபட்ட ஆராதனை முறைகளை அனுசரிக்க வேண்டியுள்ளது. இந்த மாற்றங்கள் சில விகற்பமான சூழல்களை உருவாக்கும்.
புரிந்து கொள்ளாமையும், ஒத்துழையாமையும் மக்கள் அதிகமுள்ள இடங்களில் காண்கிறோம். அதற்கு ஆலயம் ஒரு விதி விலக்கல்ல. நாம் நம்முடைய மாறுபாடுகளை நல்ல முறையில் கையாளாவிடில், அவைகள் கடினப்பட்டு பிரிவினைகள் உண்டாகிவிடும். நிரந்தர பிரிவினைக்குள்ளாகிவிடுவார்கள்.
எருசலேமிலுள்ள ஆதி திருச்சபை வளர்ந்து வந்த போது ஒரு சர்ச்சை உருவாகி, அது கலாச்சாரம் சார்ந்த தவறான கோடு வழியே வெடித்தது. கிரேக்க மொழி பேசும் யூதர், எபிரேய மொழி பேசும் யூதர்களைக் குற்றப்படுத்தினர். கிரேக்கர்கள் தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லை (அப். 6:1) என்று குற்றம் சாட்டினார்கள். எனவே அப்போஸ்தலர்கள், பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழு பேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள் (வச. 4) என்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்த ஏழு பேரும் கிரேக்க பெயருடையவர்கள் (வச. 5). இவர்களனைவரும் கிரேக்கர்கள், புறக்கணிக்கப்பட்ட கூட்டத்திலுள்ள உறுப்பினர்கள். அவர்கள் தங்கள் பிரச்சனைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். அப்போஸ்தலர்கள் ஜெபம் பண்ணி அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள். தேவ வசனம் விருத்தியடைந்தது. (வச. 6-7).
வளர்ச்சி என்பது சவால்களைப் பகுதியாகக் கொண்டு வரும். ஏனெனில் அங்கு பாரம்பரிய கட்டுகள் உடைக்கப்பட்டு உறவுகள் வளருகின்றன. நாம் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைத் தேடும்போது நாம் ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டு கொள்வோம். மேலும் அசாத்தியமான பிரச்சனைகள் வளர்ச்சிக்குகந்த சந்தர்ப்பங்களாக மாற்றப்படும்.
நிபுணர்கள் சொல்வதென்ன?
“சில காரியங்களில் திரளான, மிகமோசமான தவறுகளைச் செய்யும் நிபுணர்களின் விசித்திர திறமையைக் குறித்து பாஸ்டன் குளோப் என்ற பத்திரிக்கையின் எழுத்தாளர் ஜெஃப் ஜேகோபி எழுதுகிறார். சமீப கால நிகழ்வுகள் அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் எனக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக மிகப் பெரிய கண்டுப் பிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் பேசும் படங்களால் ஒருபோதும் பேசா ஊமைப் படங்களை நீக்கிவிட முடியாது என தெரிவித்தார். 1928 ஆம் ஆண்டு ஹென்றி ஃபோர்ட் “மக்கள் மிகவும் புத்திசாலிகளாகிவிட்டதால் மீண்டும் ஒரு யுத்தம் வராது” எனத் தெரிவித்தார். இதைப் போன்று அநேக நிபுணர்களின் கணிப்புகள் தவறாகிவிட்டன. மிகச் சிறந்த திறமைகளுக்கும் ஓர் எல்லையுண்டு.
ஆனால், ஒரேயொரு நபர் மட்டும் முற்றிலும் நம்பக்கூடியவர். இந்த திறமைசாலிகளுக்குக் கடுமையான சில வார்த்தைகளைச் சொன்னார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மதத்தலைவர்கள் தங்களிடம்தான் உண்மையுள்ளதென உறுதியாகக் கூறினார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா வரும்போது அவர் எவ்வாறிருப்பார் என்பது அவர்களுக்குத்தான் தெரியும் என இந்த கற்றவர்களும், வேத அறிஞர்களும் எண்ணினர்.
இயேசு அவர்களை எச்சரிக்கின்றார். “நீங்கள் வேதத்தைத் தீவிரமாகக் விடாமுயற்சியோடு கற்கின்றீர்கள். ஏனெனில், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என நினைக்கிறீர்கள்” ஆனால், வேத வாக்கியங்களின் மையம் என்ன என்பதைக் காணத் தவறி விடுகிறீர்கள் என சுட்டிக்காட்டுகின்றார். “என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் வேத வாக்கியங்களே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவா. 5:39-40) என்றார்.
மற்றுமோர் புதிய ஆண்டிற்குள் வந்துள்ள நாம், பயங்கரமானவற்றிலிருந்து பரவலாக நம்பக்கூடியவை வரை அநேக கணிப்புகளைக் கேட்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை மிகப்பெரிய நம்பிக்கைக்குரியதாகவும், அதிகாரத்தோடும் சொல்லப்படுகின்றன. ஆனாலும் பயப்படாதிருங்கள். நமது நம்பிக்கை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நபரையே சார்ந்துள்ளது. அவர் நம்மீதும் நமது எதிர்காலத்தின்மீதும் மிக உறுதியான பிடிப்பு கொண்டுள்ளார்.
என்ன நடக்கிறது பூமியில்?
ஆன்ட்ரு சீட்டில், ஓர் இளைஞனின் செல்போன் கடற்கரையில் காணாமற்போன போது, அது தொலைந்தே போயிற்றென்று நினைத்தார். ஆனால், ஒருவாராம் கழித்து கிளென் கெர்லி என்ற ஓர் மீனவர் அவரை போனில் அழைத்தார். அந்த மீனவர் 25 பவுண்ட் எடையுள்ள “காட்” (COD) மீனின் வயிற்றிலிருந்து அதைத் தான் எடுத்ததாகவும், காய்ந்தவுடன் அது வேலை செய்ததாகவும் அவரிடம் கூறினார்.
வாழ்க்கை என்பது நம்பமுடியாத நிகழ்ச்சிகளால் நிறைந்திருக்கிறது. அப்படிப்பட்டவற்றில் ஒரு சில வேதாகமத்தில் காணப்படுகிறது. ஒரு நாள் வரிவசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து “உங்கள் போதகர் வரி செலுத்துகிறதில்லையா?” என்று கேட்டனர் (மத், 17,24). இதை இயேசு போதிக்கிற நேரமாக மாற்றினார். தான் ராஜா என்பதை பேதுரு அறிந்துகொள்ள விரும்பினார். ராஜாவின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியது அவசியமில்லை என்று சொல்லிவிட்டு, “ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப்பிடித்து அதின் வாயைத் திறந்து பார் ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்” (வச. 25-36). இது இக்கதையின் நம்பமுடியாத நிகழ்ச்சியின் ஒரு பகுதி.
இங்கே இயேசு என்ன செய்கிறார்? இன்னும் சற்று தெளிவாகக் கூறினால், “இயேசு தேவனுடைய ராஜ்யத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” அநேகர் அவரை யார் என்று புரிந்துகொள்ளவில்லை என்றாலும், அவரை நம் வாழ்வின் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளும்பொழுது , நாம் அவருடைய பிள்ளைகளாகிறோம்.
வாழ்க்கையில் நமக்குப் பல தேவைகளுண்டு, அனால், அவை எல்லாலற்றையும் இயேசு நமக்கு அளிக்கிறார். முன்னாள் போதகர் டேவிட் பாம்போ, சென்னதுபோல, “நாம் இயேசுவுக்காக மீன்பிடிக்கும்போது, நம்முடைய எல்லாத் தேவைகளுக்கும் அவரை சார்ந்திருக்கலாம்.”
கிறிஸ்துமஸ் தினத்தன்று வீட்டில்
ஒரு கிறிஸ்துமஸ் தினத்தில் வேலையினிமித்தம் நான் தேசப்படத்தில்கூட கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு அனுப்பப்பட்டேன். கருங்கடலிலிருந்து வீசிய குளிர்காற்றுக்கெதிராக மெதுவாக நடந்து என் அறைக்கு வந்தேன். என் வீட்டை நினைத்தேன்.
நான் அறைக்கு வந்து கதவைத்திறந்தபொழுது நான் கண்டது மாயாஜாலம் போலிருந்தது. கலை ஆர்வம் கொண்ட என் நண்பன் களிமண்ணினால் ஒரு பத்தொன்பது அங்குல கிறிஸ்மஸ் மரமொன்றைச் செய்து கலர் பல்புகளால் அலங்கரித்திருந்தான். நான் வீட்டிலிருப்பது போல உணர்ந்தேன்!
யாக்கோபு ஏசாவுக்கு பயந்து தப்பி ஓடுகையில், தனியாய் அந்நிய தேசத்தில் தனித்திருந்தான். அந்த கட்டாந்தரையில் படுத்துத் தூங்கினபொழுது, சொப்பனத்தில் தேவனைத் தரிசித்தான். தேவன் யாக்கோபுக்கு ஒரு வீட்டை வாக்குப்பண்ணினார். “நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்” “உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார் (ஆதி. 28:13,14).
நம்மைத் தம்மிடம் இழுத்துக் கொள்ளும்படி தம்முடைய பரம வீட்டைவிட்டு வந்த மேசியா வாக்குத்தத்தம் பண்ணிய யாக்கோபின் வம்சத்திலேதான் தோன்றினார். “நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்” என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார் (யோவா. 14:3).
அந்த டிசம்பர் மாத இரவில், நான் அந்த கிறிஸ்துமஸ் மரத்தையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில், பரம வீட்டிற்குப் போகும் வழியை நமக்குக் காட்ட பூமிக்கு வந்த ஒளியை நினைத்துக்கொண்டேன்.
வல்லமையுள்ள குழந்தை
நான் அவனை முதல்முதலாகப் பார்த்தபொழுது அழுதுவிட்டேன். தன் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போலிருந்தான். ஆனால், அவன் இனி இயேசுவின் கைகளில் இருக்கும்வரை ஒருபோதும் கண்விழிக்கப் போவதில்லை என்று எங்களுக்குத் தெரியும்.
அவன் அநேக மாதங்களாக உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தான். பின்பு அவனுடைய தாயார் இருதயத்தைக் வேதனையடையச் செய்யும் ஒரு மின்னஞ்சல் மூலமாக அவன் மரணத்தை எனக்குத் தெரிவித்தாள். அவள் தனக்குள்ளே ஆழமாக, மிக ஆழமாக, முனகிக் கொண்டிருக்கும் வேதனையைக் குறித்து எழுதினாள். அதன்பின் அவள், அந்த சிறு குழந்தையின் குறுகிய வாழ்க்கையின்மூலம், தேவன் எங்கள் இருதயங்களில் எவ்வளவு ஆழமாகத் தம் அன்பின் கிரியையைப் பதித்திருக்கிறார்! அந்த வாழ்க்கை எவ்வளவு வல்லமையுள்ளதாயிருந்தது என்று சொன்னாள்!
வல்லமையா? அவள் எப்படி அதைச் சொல்ல முடியும்?
அந்தக் குடும்பத்தின் விசேஷித்த பையன் அவர்களுக்கும் - எங்களுக்கும் - எல்லாவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டினான். அதுவும், மிக மோசமான காரியங்கள் நேரிடும்போது! கடினமான ஆனால், ஆறுதலான சத்தியம் என்னவென்றால், தேவன் நம்மை நம்முடைய வேதனைகளில் சந்திக்கிறார் என்பதே. ஒரு மகனை இழப்பதின் வேதனை அவருக்குத் தெரியும்.
நம்முடைய அழமான வேதனையின் நேரங்களில் நாம் தாவீதின் சங்கீதங்களை வாசிக்கிறோம்; ஏனென்றால் அவன் அவற்றை தன் சொந்த வேதனையின் அனுபவத்திலிருந்து எழுதியுள்ளான். “என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்?” என்று கேட்டான் (வச. 13:2). “நான் மரண நித்திரை அடையாதபடி என் கண்களைத் தெளிவாக்கும்” (வச. 3). ஆனாலும், தாவீது தன் மிகப்பெரிய கேள்விகளைக் தேவனிடத்தில் விட்டுவிட்டான். “நான் உம்முடைய கிருபையின் மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூறும்.
தேவனால் மட்டுமே நம் வாழ்வின் மிக துக்ககரமான நிகழ்வுகளுக்கு முடிவான அர்த்தம் கொடுக்க முடியும்.