Peter Chin | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பீட்டர் சின்கட்டுரைகள்

ஆவியானவரோடு நடத்தல்

பத்தாயிரம் மணி நேரம். எந்த ஒரு கைத்தொழிலிலும் கைதேர்ந்தவராக வேண்டுமெனின், இவ்வளவு நேரத்தை, அதற்குச் செலவிட வேண்டுமென, எழுத்தாளரான மால்காம் கிளாட் வெல் பரிந்துரைக்கிறார். மிகச் சிறந்த கலைஞர்களும், இசைஞர்களும் நிபுணத்துவத்தை அடைவதற்கு, அவர்களின் சுபாவத் திறமைமட்டும் போதுமானதாக இல்லை. அவர்கள், ஒவ்வொரு நாளும், தங்களின் கலையில் மூழ்கி, பயிற்சி எடுத்தப் பின்னரே இத்தகைய நிலையை அடைய முடிந்தது.

பரிசுத்த ஆவியின் வல்லமைக்குள் வாழக் கற்றுக் கொள்வதற்கும், இத்தகைய ஒரு மனநிலையே நமக்குத் தேவை என்பது, சற்று வினோதமாகத் தோன்றலாம். கலாத்தியரில்,  உங்களை தேவனுக்கென்று பிரித்துக்கொள்ளுங்கள் என்று கூறி, பவுல் சபையின் மக்களை ஊக்கப்படுத்துகின்றார். வெறுமனே சட்ட திட்டங்களை கைக்கொள்வதன் மூலம் இதனை அடைய முடியாது, நாம் பரிசுத்த ஆவியானவரோடு நடக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். “நடத்தல்” என்பதற்கு, கலாத்தியர் 5:16 ல் பவுல் பயன் படுத்திய கிரேக்க வார்த்தை (peripateo), ஒன்றினைச் சுற்றி சுற்றி நடத்தல் அல்லது பயணித்தல் என்பதாகப் பொருள்படும். எனவே, ஆவியானவரோடு நடத்தல் என்பதன் மூலம் பவுல் கூற விரும்புவதென்னவெனின், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஒரு முறை மட்டும் அநுபவிப்பதல்ல, அனுதினமும் அவரோடு பயணம் செய்வதேயாகும்.

பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருந்து, அவர் நமக்குச் சொல்லும் வேலையை நாம் செய்யும் படி, நமக்கு ஆலோசனை தந்து, வழிநடத்தி, தேற்றும்படி, அவர் நம்மை முழுவதும் நிரப்புமாறு நாம் ஜெபிப்போம். இவ்வாறு நாம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும் போது (வ.18), அவருடைய வார்த்தையை கேட்பதிலும், அவருடைய வழிகாட்டலின்படி நடப்பதிலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண்போம். பரிசுத்த ஆவியானவரே, இன்றைக்கும், இனிவரும் நாட்களிலும் நான் உம்மோடு நடக்க, எனக்கு உதவியருளும்.

இயேசுவும், பெரிய கதையும்

நல்லெண்ணம் கொண்ட ஒரு சிநேகிதி, எங்களுடைய குழந்தைகளை ஒரு நாள் கவனித்துக்கொள்வதாகவும், அந்நாளில் நாங்கள் இருவரும் விரும்பும் இடத்திற்குச் சென்று வரும்படியும், எங்களுக்கு உதவி செய்தாள். “நீங்கள் ஏதாவது உயர் தர இடத்திற்குச் செல்ல வேண்டும்’’ என்றாள். நாங்கள் கடைக்குச் சென்று, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தோம். கடைச் சாமான்களோடு வந்து இறங்கிய  எங்களைப் பார்த்த என்னுடைய சிநேகிதி, நாங்கள் ஏன் வித்தியாசமாக எங்கும் செல்லவில்லை என்று கேட்டாள். ஒரு நாளைச் சிறப்பிப்பது என்பது, அந்நாளில் என்ன செய்தோம் என்பதைச் சார்ந்ததல்ல, அந்நாளில் யாரோடு இருந்தோம் என்பதையே சாரும் என்று கூறினேன்.

வேதாகமத்தில் சில புத்தகங்கள், தேவன் நேரடியாகப் பேசினதை, அல்லது செய்ததை விளக்காமல், சில சரித்திரங்களைக் கூறும். அப்படிப் பட்டவைகளில் ஒன்று ரூத் புத்தகம். சிலரை, அது உணர்ச்சிகரமான கதையாக, ஒரு உறவில் இருவர் இணைக்கப்படுவதையே அது விளக்குகின்றது.

ஆனால், உண்மையில் அசாதாரணமான ஒன்று அங்கு கூறப்பட்டுள்ளது. ரூத்தின் கடைசி அதிகாரத்தில், ரூத்தும் போவாஸும்  இணைந்து ஓபேத் என்ற குமாரனைப் பெறுகின்றனர், அவன்தான் தாவீதின் தாத்தா (4:17). மத்தேயு 1:1ல் தாவீதின் குடும்பத்தில் இயேசு பிறக்கின்றார் என்று காண்கின்றோம். ரூத், போவாஸ் என்பவர்களின் சாதாரண வாழ்க்கையில், தேவன், வியத்தகு திட்டத்தையும், நோக்கத்தையும் செயல் படுத்துவதை வெளிப்படுத்துகின்றார்.

நம்முடைய வாழ்க்கை சாதாரணமாகவும், எந்த ஒரு சிறப்பான திட்டமும் இல்லாதது போலவும் காணப்படலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் நம் வாழ்வைப் பார்த்தோமானால், நம்முடைய சாதாரண சூழல்களிலும், உறவுகளிலும் ஓர் அழியாத  முக்கியத்துவத்தைக் காணமுடியும்.

நம்முடைய ஆசிர்வாதங்களும், அவருடைய அன்பும்

2015 ஆம் ஆண்டு ஒரு பெண், காலம் சென்ற தன் கணவனுடைய கம்ப்யூட்டரை மறு சுழற்சி மையத்திற்கு கொடுத்தாள். அந்த கம்ப்யூட்டர் 1976ல் உருவாக்கப்பட்டது. ஆனால், அது எப்பொழுது செய்யப்பட்டது என்பதைவிட, அது யாரால் உருவாக்கப்பட்டது என்பதே முக்கியம். அது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரான ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் தன்னுடைய கையால் உருவாக்கிய 200 கம்ப்யூட்டர்களில் ஒன்று. அதன் மதிப்பு 0.25 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது ! சில பொருட்களின் உண்மையான மதிப்பு அதை உருவாக்கியவராலேயே கிடைக்கின்றது.

தேவன் நம்மை அவருடைய சாயலால் உருவாக்கியதால் நாம் அவருக்கு அதிக விலையேறப் பெற்றவர்கள் (ஆதி. 1:27). சங்கீதம் 136ல் ஆதி இஸ்ரவேலர்களின் சில முக்கிய நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் விடுபட்ட விதம், (வச. 11-12), வனாந்தரப் பயணம் (வச. 16), கானான் தேசத்தைச் சுதந்தரித்தல் (வச. 21-22) என்பன குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேல் சரித்திரத்தின் நிகழ்வுகள், ஒவ்வொரு முறை குறிப்பிடப்படும் போதும், அதனோடு “அவர் கிருபை என்றுமுள்ளது” என்ற பல்லவி திரும்பத் திரும்ப வருகின்றது. இந்தப் பல்லவி, இஸ்ரவேலரின் சரித்திர நிகழ்வுகள் தற்செயலாய் நடந்தவையல்ல என்பதை அவர்களுக்கு நினைவு படுத்துகின்றது. ஒவ்வொரு நிகழ்வும், தேவன் திட்டமிட்டு செயல் படுத்துவதையும், தான் படைத்த ஜனங்களின் மேல் அவர் வைத்துள்ள மாறாத அன்பினையும் காட்டுகிறது.

என்னுடைய வாழ்வில் தேவன் கிரியை செய்கிறதையும், அவருடைய அன்பின் வழிநடத்துதலையும், நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும், பரத்திலிருந்து உண்டாகி, என்னை உருவாக்கி, என்னை நேசிக்கின்ற சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. (யாக். 1:17) என்பதையும் நான் நினைவுகூற அடிக்கடி தவறி விடுகிறேன். நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு ஆசிர்வாதமும், நம் மீது மாறாத அன்பு கொண்டுள்ள தேவனாலேயே வருகின்றது என்பதை புரிந்துகொள்ள நீயும், நானும் கற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் தரமல்ல

முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்த போது, அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன், உலகத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்த மனிதனாகப் பார்க்கப்பட்டார். 1919 ஆம் ஆண்டு பேரதிர்ச்சி தரும் பக்கவாதம் அவரைத் தாக்கிய போது, அவருடைய மனைவி அனைத்து அலுவல்களையும் கவனித்தார். அவருடைய கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை எவை என்பதைத் தீர்மானித்தார். ஒரு சிறிய காலத்திற்கு அமெரிக்க அதிபராக அவருடைய மனைவி ஈடித் வில்சன் செயல் பட்டாரென வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

ஆதி திருச்சபையின் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடும்படிச் சொன்னால், நாம் கொடுக்கும் வரிசையில் பேதுரு, பவுல், தீமோத்தேயு போன்றோர் இடம் பெறுவர். ஏனெனில் இவர்களின் திறமைகளைக் குறித்து சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், ரோமர் 16ஆம் அதிகாரத்தில் பவுல் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்த, கிட்டத்தட்ட நாற்பது பேரைக் குறிப்பிடுகின்றார். அதில் பெண்கள், ஆண்கள், அடிமைகள், யூதர்கள் மற்றும் புறஜாதியினர் அடங்குவர். இவர்களனைவரும் சபை வளர்ச்சியில் வெவ்வேறு வகைகளில் பங்களித்துள்ளனர்.

இவர்களை இரண்டாம் நிலை நபர்களாக பவுல் கருதவேயில்லை. அவர் இவர்களுக்கு உயர்ந்த மரியாதையைக் கொடுக்கின்றார் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்கள் என இவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றார் (வச. 7) இவர்கள் இயேசுவுக்காக செய்த பணியினிமித்தம் போற்றப்பட வேண்டியவர்கள்.

நம்மில் அநேகர் தங்களை சபையின் தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்களாகக் கருதுவதுண்டு. ஆனால், உண்மையில் ,ஒவ்வொருவரிடமும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய திறமைகளுள்ளன.தேவனுடைய பெலத்தால், நம்முடைய திறமைகளை அவருடைய நாம மகிமைக்காக நாம் பயன்படுத்துவோம்.

 

தண்ணீரைக் காட்டிலும் மேலானது.

என்னுடைய குழந்தைப் பருவத்தில், என்னுடைய ஆலயத்தைக் குறித்து என் நினைவில் தங்கியிருக்கும் ஒரு காட்சி -  எங்கள் போதகர் ஆலயத்தின் நடுப் பகுதி வழியே நடந்து வந்து “ஞானஸ்நானத்தின் தண்ணீரை நினைத்துக் கொள்ளுங்கள்” என்பார். ஞானஸ்நானத்தின் தண்ணீரை நினைவு படுத்துவதா? நான் எனக்குள்ளாகவே கேட்டுக் கொள்வேன்.  தண்ணீரை எப்படி நினைவில் வைப்பது? அத்தோடு அவர் ஒவ்வொருவர் மீதும் தண்ணீரைத் தெளிப்பார். குழந்தையாக இருந்த எனக்கு அது மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது.

நாம் ஏன் ஞானஸ்நானத்தை நினைவு கூர வேண்டும்? ஒரு மனிதன் ஞானஸ்நானம் பெறும் போது தண்ணீரை விட மேலான அநேகக் காரியங்கள் அதில் அடங்கியுள்ளன. ஞானஸ்நானம் என்பது இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால் நாம் அவரையே தரித்துக் கொள்கின்றோம் (கலா. 3:27) என்பதன் அடையாளம். இன்னும் சொல்வோமாகில், நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களென்பதையும், அவர் நம்மில், நம்மோடு வாசமாயிருக்கிறார் என்பதையும் நாம் ஞானஸ்நானத்தின் மூலம் கொண்டாடுகின்றோம்.

நாம் சொல்லிக் கொள்ளக் கூடிய அளவு எந்த முக்கியத்துவமும் வாய்ந்தவர்களல்ல, ஆனால்  நாம் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டவர்களானால் நம்முடைய அடையாளம் அவர் மூலமாய் வெளிப்படுகின்றது.. நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம் (வச. 26) என இப்பகுதி தெரிவிக்கின்றது. நாம் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொண்டதாலல்ல, தேவன் மீதுள்ள விசுவாசத்தினாலேயே நீதிமான்களாக்கப் பட்டோம் (வச. 23-25). எனவே, நமக்குள் ஆண், பெண் என்றோ, கலாச்சாரத்தினாலோ அல்லது தகுதியினடிப்படையிலோ எந்தப் பிரிவும் இல்லை. நாம் விடுதலையாக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் நாமனைவரும் ஒன்றாயிருக்கின்றோம். இப்பொழுது, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் (வ 28)

எனவே, நாம் ஞானஸ்நானத்தை  நினைவு கூரவும், அதன் முக்கியத்துவத்தை உணரவும் காரணங்களுள்ளன. நாம் வெறுமனே ஞானஸ்நானத்தை சடங்காச்சாரமாகப் பார்க்காமல்,  நாம் தேவனுக்குச் சொந்தமாகிறோம், அவருடைய பிள்ளையாகிறோம், என்பதை நினைவில் கொள்ளுவோம்.  நம்முடைய அடையாளமும், எதிர் காலமும், ஆவியின் விடுதலையும் அவருக்குள் உண்டாயிருக்கின்றது.

நாம் யார்?

என் வருங்கால மனைவியை என் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்வதற்காக அழைத்துச் சென்றேன். என்னோடு பிறந்த, எனக்கு மூத்தவர்களான இருவர், கண்களில் மிளிர்ச்சியுடன், “இவனிடம் உனக்கு எது பிடித்திருந்தது?” என்று கேட்டார்கள். தனக்குப் பிடித்தளவுக்கு ஒரு நல்ல மனிதனாக தேவனுடைய கிருபையால் நான் வளர்ந்திருப்பதாக சிரித்தவாறே பதிலளித்தாள்.

அது ஒரு புத்திசாலித்தனமான பதில். நம்முடைய கடந்தகாலத்தைக் கடந்து, தேவன் எவ்வாறு நம்மைப் பார்க்கிறார் என்பதை அந்தப் பதில் மிகசரியாகப் பிரதிபலிக்கிறது. தேவனுடைய சபையை உபத்திரவப்படுத்தி வந்த சவுல் கிறிஸ்துவின் பிரசன்னத்தால் குருடாகிறார், அவரைக் குணப்படுத்தும்படி அனனியாவிடம் கிறிஸ்து சொல்கிறார் (அப். 9). அனனியாவுக்கு நம்பமுடியவில்லை, இயேசுவை விசுவாசித்தவர்களை உபத்திரவப்படுத்தி, மரணத்தண்டனைக்கு ஒப்புக்கொடுத்த சவுலையா தான் குணமாக்கவேண்டுமெனக் கேட்கிறார். சவுல் எப்படியிருந்தான் என்று பார்க்காமல், அவன் எப்படி மாறியிருக்கிறான் என்று பார்க்குமாறு அனனியாவிடம் தேவன் சொல்லுகிறார். புறஜாதியார் (யூதர் அல்லாதவர்கள்), ராஜாக்கள் உட்பட (வச. 15) அப்போது அறியப்பட்டிருந்த தேசங்கள் முழுவதிற்கும் நற்செய்தியைக் கொண்டுசெல்கிற சுவிசேஷகனாக மாறியிருந்தார். சவுலை அனனியா ஒரு பரிசேயனாகவும் உபத்திரவக்காரனாகவும் பார்த்தார், ஆனால் தேவன் அவரை அப்போஸ்தலனாகவும் சுவிசேஷகனாகவும் பார்த்தார்.

நான் இருக்கிற நிலை இதுதானே என்று சிலசமயங்களில் நம்மைபற்றி நாம் நினைக்கலாம். நம் தோல்விகளும் குறைகளுமே நம் கண்களுக்குத் தெரியலாம். ஆனால் நம்மைப் புதுச்சிருஷ்டிகளாக தேவன் பார்க்கிறார். நாம் எப்படி இருந்தோம் என்பதை அல்ல, இயேசுவுக்குள் நாம் எப்படி இருக்கிறோம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நாம் எப்படிப்பட்டவர்களாக மாறி வருகிறோம் என்று பார்க்கிறார். தேவனே, இப்படியே நாங்கள் எங்களையும் மற்றவர்களையும் பார்ப்பதற்கு எங்களுக்கு உதவிசெய்யும்!

காலந்தாழ்த்துவதே இல்லை

என்னுடைய மாமியாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் அனைவருமே மிகுந்த பதட்டத்திற்குள்ளானோம். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கமுடிந்தது. பிறகு மருத்துவரிடம் பேசியபோது, மாரடைப்பு வந்ததும் 15 நிமிடங்களுக்குள் சிகிச்சை எடுத்தால் அபாயக்கட்டம் நீங்கி 33 சதவீதம்பேர் பிழைப்பதாகச் சொன்னார். 15 நிமிடங்களுக்கு பிறகு சிகிச்சை எடுப்பவர்களில் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே பிழைக்கிறார்களாம்.

யவீருவின் மகள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள் (உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது), அவளைக் குணமாக்குவதற்காகச் சென்றுகொண்டிருந்த இயேசு, யாருமே யோசித்திராத வகையில் இடையில் நின்றுவிட்டார் (மாற். 5:30). தம்மைத் தொட்டது யார் என்பதை அறியும்படி நின்றார், தம்மைத் தொட்ட பெண்ணிடம் அன்புடன் பேசினார். யவீரு என்ன யோசித்திருப்பார்? ‘என் மகள் மரிக்கப்போகிறாள், இந்த நேரத்தில் இப்படி காலதாமதமாகிறதே?’ இயேசு அங்கு வெகுநேரம் நின்றுவிட்டார் போலும், யவீரு பயந்ததுபோலவே நடந்தது; அவனுடைய மகள் மரித்துப்போனாள். வசனம் 35.

ஆனால் இயேசு யவீருவிடம் திரும்பி, அவனுக்கு ஆறுதலான ஒரு வார்த்தையைக் கூறுகிறார்: “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” (வச. 36). பிறகு யவீருவின் வீட்டிற்குச் சென்றதும் தன்னைப் பரிகாசமாகப் பார்த்த யாரையுமே பொருட்படுத்தாமல், யவீருவின் மகளைப் பார்த்து, அவளை எழுந்திருக்கச் சொல்லி, மீண்டும் உயிரோடு கொண்டுவந்தார்! ஒருபோதும் தாம் காலதாமதம் பண்ணுவதில்லை என்பதை அங்கு வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் வல்லமைக்கும், அவர் செய்யத் தீர்மானித்திருப்பதற்கும் காலம் தடைபோடவே முடியாது.

நான் நம்பியிருந்தபடி செய்யாமல் தேவன் காலந்தாழ்த்திவிட்டாரே என்று எத்தனை நேரம் யவீருவைப் போல நாமும் நினைத்திருப்போம். ஆனால் அவ்வாறு ஒருபோதும் செய்யமாட்டார். நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய நன்மையான, இரக்கமான கிரியைகளை நிறைவேற்ற அவர் காலந்தாழ்த்தவே மாட்டார்.

ஒப்பிட முடியாத வாழ்வு

ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில், நடுத்தர வயதினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களைப் போல நடித்தனர். இளைஞர்களின் வாழ்வை நன்கு புரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தனர். இளைஞர்கள் தங்களுடைய சுயமதிப்பை அளப்பதில் சமுதாயத் தொடர்பு சாதனங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒரு நபர், 'மாணவர்களின் சுயமதிப்பு, தொடர்பு சாதனங்களோடு இணைந்துள்ளது. தங்களுடைய ஒரு புகைப்படத்திற்கு எத்தனை 'விருப்பங்கள்" கொடுக்கப்பட்டுள்ளன என்பதையே அது சார்ந்துள்ளது" என்றார். மற்றவர்கள் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் தேவை, இளைஞர்களை அதிக நேரம் வலைதளங்களில் தொடர்புகொள்ளத் தூண்டுகின்றது.

நாம் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஏக்கம் எப்பொழுதும் இளைஞர்களுக்குள் இருக்கின்றது. ஆதியாகமம் 29ல் லேயாள், தன்னுடைய கணவன் யாக்கோபின் அன்பினைப் பெற ஏங்குவதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன் வெளிப்பாட்டை தன்னுடைய முதல் மூன்று குமாரரின் பெயர்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அத்தனையும் அவளுடைய தனிமையை வெளிக்காட்டுகின்றன (வச. 31-34). ஆனால், வருத்தத்திற்குரியது என்னவெனில், யாக்கோபு தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவள் எதிர்பார்த்த எண்ணம் நிறைவேறியதாகத் தெரியவில்லை.

லேயாளுக்கு நான்காவது மகன் பிறந்தபோது அவள் தன் கணவனிடமல்ல, தேவனிடம் திரும்பி, தன் மகனுக்கு யூதா என்று பெயரிடுகின்றாள். அதற்கு 'கர்த்தரைத் துதிப்பேன்" என அர்த்தம் (வச. 35). லேயாள் தனக்குரிய முக்கியத்துவம் தேவனிடம் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டாள். அவள் தேவனுடைய இரட்சிப்பின் வரலாற்றில் இடம் பெறுகின்றாள். தாவீது அரசனின் முன்னோர்களின் பட்டியலில் யூதா இடம்பெறுகின்றார். பின்;னர் இயேசு கிறிஸ்துவும் தாவீதின் வம்சத்தில் தோன்றுகின்றார்.

நாமும் நம்முடைய முக்கியத்துவத்தைப் பெற பலவகைகளில், பல வழிகளில் முயற்சிக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே, நாம் தேவனுடைய பிள்ளைகள், இயேசு கிறிஸ்துவின் சந்ததியின், பரலோகத் தந்தையோடு நித்தியமாக வாழப் போகின்றவர்கள் என்ற அடையாளத்தைப் பெற முடியும். பவுல் எழுதுவது போல, 'என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்று நாமும் சொல்வோமாக (பிலி. 3:8).

பொருளைவிட பகிர்தல் மேலானது

“ஆனால், நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை" எனக் கதறினான் என்னுடைய இளைய மகன். அவன் தன்னுடைய வீகோ துண்டுகளில் ஒன்றையாகிலும் கொடுக்கனேரிடும் என எண்ணி, உள்ளம் உடைந்தான். நான் அவனுடைய முதிர்ச்சியின்மையை வியந்து பார்த்தேன். ஆனால், உண்மையில் இந்த குணம் குழந்தைகளிடம் மட்டும் தானுள்ளதா? எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கொடுப்பதற்கு விடாப்பிடியான மறுப்பைத் தெரிவிக்கும் குணம் மனிதருக்கு உள்ளது என்பதை என்னுடைய வாழ்வின் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

இயேசுவின் விசுவாசிகளான நாம் நம்முடைய வாழ்வை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். இதனையே ரூத் தன்னுடைய மாமியோடு செய்தாள். கைவிடப்பட்ட விதவையான நகோமியிடம் ரூத்துக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ரூத் தன் வாழ்வை தன் மாமியாரோடு இணைத்துக் கொண்டாள். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிப்போம், மரணம் வரை சேர்ந்தே வாழ்வோம் என்கின்றாள். அவள் நகோமியிடம், “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" (ருத். 1:16) என்கின்றாள். அவள் தனக்குள்ளதையெல்லாம் தாராளமாக அந்த முதிய பெண்மணிக்குக் கொடுத்தாள், தன்னுடைய அன்பையும், கரிசனையையும் காட்டினாள்.

நம்முடைய வாழ்வை இத்தகைய முறையில் பகிர்ந்துகொள்வதென்பது சற்று கடினமானதுதான். ஆனால், அந்த தாராள குணத்தின் விளைவு என்ன என்பதை நாம் நினைவு கூரவேண்டும். ரூத் தன் வாழ்வை நகோமியோடு பகிர்ந்து கொண்டாள். பின்னர், அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவன்தான் தாவீது அரசனின் தாத்தா. இயேசு தம்முடைய சொந்த வாழ்வை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் நிராகரிக்கப்பட்ட போதும் பிதாவினால் அவர் மகிமைப்படுத்தப்பட்டார். இப்பொழுது அவர் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து அரசாட்சி செய்கின்றார். நாமும் நம் வாழ்வை பிறரோடு தாராளமாகப் பகிர்ந்து கொள்ளும்போது நிச்சயமாக ஓர் நாள் ஒரு பெரிய வாழ்வை அனுபவிப்போம் என்பதில் எந்த ஐயமுமில்லை.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எப்போதும் நம்பக்கூடியவர்

 நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது.  
டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.  
தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12). 
நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23). 

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே! 

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).