எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பாட்ரிசியா ரேபோன்கட்டுரைகள்

பரலோகத்திலிருந்து செவிகொடுப்பவர்

மெய்சன் என்னும் பதினெட்டு மாத குழந்தை தன் தாயின் குரலைக் கேட்டதேயில்லை. மருத்துவர்கள் அவனுக்கு முதன்முதலாய் செயற்கைக் காது கேட்கும் கருவியைப் பொருத்தினர். அதைப் பொருத்தியவுடன், அவன் தாய் லாரின், அவனிடம் “என் குரல் கேட்கிறதா?" என்றார். அந்தக் குழந்தையின் கண்கள் ஒளிர்ந்தது, “ஹாய் பேபி” என்று லாரினின் பேச்கைக் கேட்டு, மென்மையாய் புன்னகைத்த மெய்சன் தன் மென்மையான குரலால் பதிலளித்தான். லாரின் கண்ணீருடன் அந்த அற்புதத்தை சாட்சியிட்டார். ஒரு பிரச்சனையில் அவரை சிலர் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதால், லாரின் மெய்சனை உரிய காலத்திற்கு முன்னரே பெற்றெடுத்தார். ஒரு பவுண்ட் எடை மட்டுமே இருந்த மெய்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் 158 நாட்கள் இருந்தான். அவன் பிழைப்பான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் கேட்கும் திறனை மட்டும் இழந்துவிட்டான்.

அந்த மனதை உருகச்செய்யும் சம்பவம் எனக்கு தேவன் செவிகொடுக்கிறவர் என்பதை நினைவுப்படுத்தியது. மக்களின் கடினமான காலங்களில் சாலமோன் ராஜா தேவனின் செவிகளில் கேட்கும்படி ஆர்வத்துடன் ஜெபித்தார். “மழை பெய்யாதிருக்கும்போது" (1 இராஜாக்கள் 8:35), “பஞ்சம் அல்லது கொள்ளை நோய்," வாதை அல்லது வியாதி, (வச. 37), யுத்தம் (வச. 44), பாவம், ஆகிய இவற்றில் “பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக" (வச. 45) என்று வேண்டிக்கொண்டார்.

தேவன் பதில் அளித்ததை நினைக்கும்போது நம் இருதயங்கள் அசைகிறது. “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14). பரலோகம் தூரத்தில் இருக்கலாம்; ஆனால் இயேசு அவரை நம்பிக்கையோடு தேடுகிறவர்களின் கூடவே இருக்கிறார். தேவன் நம் வேண்டுதல்களைக் கேட்டருளி பதில் கொடுப்பவராயிருக்கிறார்.

பொன்னிலும் சிறந்தது

அமெரிக்காவின் பெரிய தங்கவேட்டை நடந்த நாட்களில், கலிபோர்னியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட எட்வர்ட் ஜாக்சன், மே 20ம் தேதி 1849இல் தன்னுடைய டைரி குறிப்பில், வியாதினாலும் மரணத்தினாலும் குறிக்கப்பட்ட அந்த கொடுமையான வேகன் பயணத்தைக் குறித்து புலம்பியிருக்கிறார். “என்னுடைய எலும்புகளை இங்கு விட்டுச்செல்லாதீர்கள்; முடிந்தால் அவற்றை வீட்டிற்கு கொண்டுசெல்லுங்கள்” என்று அவர் எழுதியிருக்கிறார். தங்கவேட்டையில் ஈடுபட்ட ஜாண் வாக்கர் என்னும் வேறொரு நபர், “நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு இங்கு பொக்கி~ங்கள் இருக்கிறது... ஆனால் யாரும் இங்கே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

வாக்கர் பின்நாட்களில் வீடு திரும்பி, விவசாயத்தில் ஈடுபட்டு, கடைசியில் மாநில தேர்தலில் வெற்றிபெற்றார். வாக்கரின் பழைய கடிதங்களை அவருடைய வீட்டார், “ஆன்டிக்ஸ் ரோட்ஷோ” என்னும் அமெரிக்காவின் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு கொண்டுபோனபோது, அவைகள் அங்கு பல மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “அவர் தங்க வேட்டையைக் காட்டிலும் விலைமதிக்கமுடியாத கடிதங்களை அங்கிருந்து எடுத்துள்ளார்” என்று கூறினாராம். 

வாக்கரும் ஜாக்சனும் அந்த தங்க வேட்டையிலிருந்து ஞானத்தைக் கற்றுக்கொண்டு வீடு திரும்பி, நடைமுறை வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டனர். “ஞானத்தைக் கண்டடைகிற மனு~ன்... பாக்கியவான்... அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம்” (நீதிமொழிகள் 3:13,18) என்று ஞானத்தைக் குறித்த சாலமோனின் வார்த்தைகளை பார்க்கிறோம். “அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது” (வச. 14) என்று பூமியின் அனைத்து காரியங்களைக் காட்டிலும் ஞானம் விலையேறப்பெற்றதாய் முன்வைக்கப்படுகிறது (வச. 15).

“அதின் வலதுகையில் தீர்க்காயுசும், ... அதின் பாதைகளெல்லாம் சமாதானம்” (வச. 16-17). கண்ணைப் பறிக்கும் காரியங்களை விட்டுவிட்டு ஞானத்தை தெரிந்துகொள்வதே நம்முடைய சவால். இதுவே தேவனுடைய ஆசீர்வாதமான பாதை. 

ஜெபத்தில் நினைவுகூரப்பட்டது

ஆப்பிரிக்காவின் அந்த பெரிய திருச்சபையின் போதகர் முழங்கால் படியிட்டு தேவனிடத்தில் ஜெபித்தார். “எங்களை நினைத்தருளும்” என்று அவர் கதற, “கர்த்தாவே எங்களை நினைத்தருளும்” என்று கூடியிருந்த அனைவரும் கதறினார்கள். அந்த காட்சியை யூடியூபில் பார்த்த நான் ஆச்சரியப்பட்டு கண்ணீர் சிந்தினேன். அந்த ஜெபம் சில மாதங்களுக்கு முன்பாக பதிவுசெய்யப்பட்ட ஒன்று. ஆனாலும் என்னுடைய சிறுவயதில் என்னுடைய போதகர் “கர்த்தாவே எங்களை நினைத்தருளும்” என்று அதே ஜெபத்தை ஏறெடுத்ததை அது எனக்கு நினைவுபடுத்தியது.

ஒரு சிறுபிள்ளையாய் அந்த ஜெபத்தைக் கேட்ட நான், தேவன் சிலவேளைகளில் நம்மை மறந்துவிடுவார் என்று தவறாய் எண்ணிக்கொண்டேன். ஆனால் தேவன் எல்லாம் அறிந்தவர் (சங்கீதம் 147:5; 1 யோவான் 3:20), அவர் எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார் (சங்கீதம் 33:13-15), எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மை நேசிக்கிறார் (எபேசியர் 3:17-19). 

நினைவுகூருதல் என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையான “ஸாகர்” என்ற வார்த்தையானது, தேவன் நம்மை நினைவுகூரும்போது அவர் நமக்காக செயல்படுகிறார் என்று பொருள்படுகிறது. ஒருவரின் சார்பில் நின்று செயல்படுதல் என்றும் அர்த்தம் கொடுக்கிறது. “தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது” (ஆதியாகமம் 8:1). மலடியாயிருந்த ராகேலை தேவன் நினைத்தருளியபோது, “அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனை” பெற்றாள் (30:22-23).

நம்மை நினைத்தருளும்படிக்கு தேவனிடத்தில் கேட்பது மேன்மையான ஒரு விண்ணப்பம். அவர் எப்படி பதிலளிக்கவேண்டும் என்று அவரே தீர்மானிப்பார். நம்முடைய தாழ்மையான விண்ணப்பம் நிச்சயமாய் தேவனை அசைக்கும் என்று அறிந்து நாம் ஜெபிக்கலாம். 

நம் மெய்யான அங்கீகாரம்

ஒரு மனிதன் முதலில் ஒரு பொருட்கள் சேகரிக்கும் பெட்டியை கையிலெடுத்தார். அவருடைய ஊரில் இருந்த ஒரு மீன் தூண்டில் கடையில், தூண்டில் கொக்கிகள், ஈர்ப்புகள், தக்கைகள் மற்றும் எடைகளுடன் தன்னுடைய வணிகக் கூடையை நிரப்பினார். அத்துடன் ஒரு முழுமையான தூண்டிலோடு கூட குச்சியையும் சுற்றும் குழலையும் தேர்ந்தெடுத்தார். இதற்கு முன்பாக மீன் பிடித்ததுண்டா? என்று கடைக்காரர் அவரிடம் கேட்டார். அவர் இல்லை என்று பதிலளித்தார். “இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று அந்த கடைக்காரர் முதலுதவிப் பெட்டியை நீட்டினார். அதை ஒத்துக்கொண்டு அதற்கான விலையைக் கொடுத்து விடைபெற்ற அந்த மனிதர், மாலையில் கொக்கிகளினாலும், கயிற்றினாலும் கைகளில் ஏற்பட்ட காயங்களுடன் ஒரு மீன் கூட பிடிக்காமல் திரும்பினார்.    

அந்த பிரச்சனை சீமோன் பேதுருவுக்கு இல்லை. அவன் ஒரு திறமையான மீன்பிடிக்கும் நபர். அவனைப் பார்த்து இயேசு, “ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சொல்லும்போது அவன் ஆச்சரியப்படுகிறான் (லூக்கா 5:4). இரா முழுதும் தேடியும் ஒரு மீனும் அகப்படாத நிலையில் சீமோனும் அவனுடைய குழுவினரும் “தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்” (வச. 6). “இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்” (வச. 7).

அதைப் பார்த்த சீமோன் பேதுரு, “இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்” (வச. 8). இயேசு சீமோனின் உண்மையான அங்கீகாரத்தை அறிந்திருந்தார். தன்னுடைய சீஷனைப் பார்த்து, “இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்று சொன்னார். அதைக் கேட்டமாத்திரத்தில் சீமோன், “எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றான்” (வச. 10-11). நாமும் அவரைப் பின்பற்றும்போது, நம்மை யார் என்பதையும், நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு விளங்கச்செய்வார். 

நீங்கள் தனியாய் இல்லை

“உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!” “உங்களையும் தான்” “நீங்கள் இங்கிருப்பது மகிழ்ச்சி!” இந்த வாழ்த்துக்கள் மென்மையாகவும் வரவேற்கக்கூடியதாகவும் இருந்தது. ஒரு ஊரில் இருந்த ஊழியர்கள் தங்கள் மாலை நேர நிகழ்ச்சிக்கு முன்பு ஆன்லைனில் சந்தித்தார்கள். அவர்களின் தலைவர் அவர்களை வரவேற்றபோது, மற்றவர்கள் வீடியோ காலில் இணைவதை நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருப்பவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது என்பதினால், நான் என்னை வேற்று நபராக எண்ணினேன். திடீரென்று ஒரு வீடியோ தோன்றியது, அதில் என்னுடைய போதகரை பார்த்தேன். வேறொரு வீடியோ இணைந்தது. அதில் என் நீண்ட நாள் திருச்சபை நண்பர் இணைந்தார். அவர்களைப் பார்த்தமாத்திரத்தில் நான் தனிமையாய் உணர்வதிலிருந்து விடுபட்டேன். தேவன் எனக்கு ஆதரவை அருளினார் என்று நம்பினேன். 

யெசபேல் மற்றும் ஆகாபினால் எலியாவுக்கு நேரிட்ட பிரச்சனையில், “நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்” என்று சொன்ன எலியாவும் தனிமையாயில்லை (1 இராஜ. 19:10). 40 பகல், 40 இரவுகள் வனாந்திரத்தில் பயணம் மேற்கொண்டு, எலியா ஓரெப் கன்மலையில் தன்னை ஒளித்துக்கொள்ளுகிறான். ஆனால் தேவன், “நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (வச. 15-16) என்று கட்டளையிடுகிறார். 

“ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” என்று கர்த்தர் எலியாவுக்கு உறுதியளித்தார் (வச. 18). தேவனுக்கு ஊழியம் செய்யும்போது நாம் தனித்து இருப்பதில்லை என்பதை எலியா கற்றுக்கொண்டான். தேவன் நமக்கு உதவிசெய்யும்போது, நாம் இணைந்து அவரை சேவிப்போம். 

பேசுகிற காலம்

முப்பது ஆண்டுகளாய், ஒரு பெரிய உலகளாவிய ஊழிய நிறுவனத்தில் உண்மையாய் பணியாற்றினார். ஆனால் தன்னுடைய உடன் ஊழியர்களிடம் சமுதாய அநீதிகளைக் குறித்து அவர் விவாதிக்கும்போது, மௌனத்தையே பதிலாய் பெற்றார். கடைசியாக 2020ல் இனவெறியைக் குறித்த விவாதங்கள் உலகம் முழுமையும் பற்றியெரியத்தொடங்கும்போது, அவருடைய உடன் ஊழியர்கள் அதைக்குறித்து வெளிப்படையாய் பேசத்துவங்கினர். வலி கலந்த உணர்வுகளுடன், அந்த விவாதத்தை துவக்கினார். ஆனால் தன் உடன் ஊழியர்கள் தைரியமாய் பேசுவதற்கு இவ்வளவு காலங்களானதா என்று ஆச்சரியப்பட்டார்.

மௌனம் என்பது சிலவேளைகளில் நற்குணாதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரசங்கி புத்தகத்தில் சாலமோன் ராஜா எழுதும்போது, “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு... மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” (பிரசங்கி 3:1,7). 

மதம் மற்றும் இனப்பாகுபாடுகள் நிகழும்போது மௌனமாயிருப்பது மனதில் காயங்களை ஏற்படுத்தும். பேசியதற்காக லூத்தரன் திருச்சபை போதகர் மார்டின் நீமோயெல்லர்ஜெர்மானிய நாட்டில் உள்ள நாசி சிறையில் அடைக்கப்பட்டார்.யுத்தத்திற்கு பின்பு தன் பாடல் ஒன்றில் தன் எண்ணத்தைப் பிரதிபலித்தார். “முதலில் அவர்கள் கம்யூனிஸ்டை தேடி வந்தனர், நான் பேசவில்லை; ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் இல்லை. பின்பு அவர்கள் யூதர்களுக்காய், கத்தோலிக்கர்களுக்காய், மற்றவர்களுக்காய் ஒன்றன்பின் ஒன்றாய் வந்தனர், அப்போதும் நான் பேசவில்லை. கடைசியாய் அவர்கள் எனக்காய் வந்தனர், அப்போது எனக்காக பேச யாருமில்லை” என்று எழுதுகிறார். 

அநியாயத்திற்கு எதிராய் குரல்கொடுக்க நமக்கு தைரியமும் அன்பும் தேவைப்படுகிறது. இப்போதே பேச வேண்டிய நேரம் என்பதை உணர்ந்து தேவனுடைய உதவியை நாடுவோம்.

உங்கள் வேலியை நகர்த்தவும்

அந்த கிராம பாதிரியாரால் தூங்க முடியவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, அவர் அமெரிக்க ராணுவத்தினரின் ஒரு சிறிய குழுவிடம், இறந்துபோன வீரரர்களை தங்களுடைய ஆலயத்திற்கு அருகாமையில் வேலியிடப்பட்ட கல்லறையில் புதைக்க முடியாது என்று கூறியிருந்தார். ஆலயத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே அங்கு புதைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனால் ராணுவத்தினர் இறந்துபோன தங்கள் நண்பர்களை வேலிக்கு வெளியே புதைத்தனர். 

இருந்தாலும், அடுத்த நாள் காலையில் இராணுவத்தினர் தாங்கள் புதைத்த கல்லறையைக் காணமுடியவில்லை. ஒரு வீரன் பாதிரியாரிடம் “என்ன ஆனது கல்லறை காணாமல் போய்விட்டது” என்று கேட்டான். “ஓ அது இன்னும் அங்கே தான் இருக்கிறது” என்று பாதிரியார் கூறினார். ராணுவ வீரனுக்கு குழப்பமாக இருந்தது. அப்பொழுது பாதிரியார் “நேற்று உங்களுக்கு இங்கு இடமில்லை என்று சொன்னது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால் இரவு எழுந்து வேலியை நகர்த்திவிட்டேன்” என்று விளக்கமளித்தார். 

நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களுக்கு தேவன் புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கமுடியும். நாம் அதைத் தேடினால், ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு ஏசாயா தீர்க்கதரிசி கொடுத்த செய்தி இதுதான். அவர்கள் செங்கடலைக் கடந்ததை ஆவலோடு திரும்பிப் பார்ப்பதற்கு பதிலாக, தேவன் செய்யும் புதிய அற்புதங்களுக்கும், காட்டும் புதிய வழிகளுக்கும் தங்கள் பார்வையைத் திருப்ப வேண்டியிருந்தது. “முந்தினவைகளை நினைக்க வேண்டாம்.” இதோ நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” (ஏசாயா 43:18-19) என்று சொல்லி தேவன் அவர்களை உற்சாகப்படுத்தினார். சந்தேகங்கள் மற்றும் யுத்தங்களின் மத்தியிலும் அவரே நம்முடைய நம்பிக்கையின் ஆதாரமாயிருக்கிறார். “நான் தெரிந்துக்கொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்தில் தண்ணீர்களையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும்… உண்டாக்குவேன்.” (வச. 20).

புதுப்பிக்கப்பட்ட கண்ணோட்டத்துடன், நாமும் தேவன் நம்முடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் புதிய திசைகளைப் பார்க்க முடியும். புதிய கண்களுடன் அவருடைய புதிய வழிகளைப் பார்ப்போம். பின்பு, தைரியத்துடன், புதியப் பாதையில் நாம் அடியெடுத்து, தைரியமாக அவரைப் பின்பற்றுவோம்.

ஞானத்திலிருந்து மகிழ்ச்சி வரை

தொலைபேசி ஒலித்ததும் நான் தாமதமின்றி அதை எடுத்தேன். எங்கள் சபை குடும்பத்திலேயே மூத்த வயதுடைய, துடிப்பான, கடின உழைப்புள்ள, கிட்டதட்ட நூறு வயதுடைய பெண்மணி என்னை அழைத்தாள். தான் சமீபத்தில் எழுதிய புத்தகத்தின் இறுதித் தொகுப்பைக் கொடுத்து, இதை முடிக்க சில கேள்விகளை எழுதச் சொன்னாள். இருப்பினும், நான், எப்போதும்போல, அவளுடைய வாழ்க்கை, வேலை, அன்பு மற்றும் குடும்பத்தைக் குறித்து கேள்விகள் கேட்டேன். அவளுடைய நீண்ட வாழக்கையிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் ஞானத்தினால் பிரகாசித்தது. அவள் என்னைப் பார்த்து “உன்னைத் தயார் செய்” என்று சொன்னாள். அவள் அதைச் செய்ய மறந்த தருணங்களை நினைத்து நாங்கள் சிரித்துக் கொண்டிருந்தோம் - அவளுடைய அற்புதமான நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மையான மகிழ்ச்சியினால் பக்குவப்பட்டிருந்தன.

ஞானம் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று வேதாகமம் கற்றுக்கொடுக்கிறது. “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியை சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்” (நீதி. 3:13). ஞானத்திலிருந்து மகிழ்ச்சி வரை – என்ற இந்தப் பாதை மெய்யாகவே ஒரு வேதாகம ஒழுக்கம் என்று நாம் காண்கிறோம். “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்.” தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும், அறிவையும், இன்பத்தையும் அளிக்கிறார்” (பிரசங்கி 2:26). “அதின் (ஞானம்) வழிகள் இனிதான வழிகள்” (நீதி. 3:17). 

வாழ்க்கையின் விஷயங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சி.எஸ்.லூயிஸ் அவர்கள், இது “பரலோகத்தின் தீவிரமான வணிகம்” என்று அறிவிக்கிறார். ஆயினும் அந்தப் பாதை ஞானத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. 107 வயதான என்னுடைய சபை நண்பர் ஒப்புக்கொள்வார். அவள் இராஜாவினிடத்திற்கு ஞானத்துடனும், மகிழ்ச்சியுடனும் கவனமாய் நடந்தாள். 

வேதாகமத்தை நம்பு

அமெரிக்காவின் புகழ்பெற்ற சுவிசேஷகர் பில்லிகிரகாம் ஒருமுறை வேதாகமத்தை உண்மையானது என்று முழுமையாய் நம்பமுடியாமல் தவித்ததைக் குறித்து பகிர்ந்தார். ஒருமுறை சான் பெர்னான்டினோ கொண்டாட்ட மையத்திற்கு ஓர் இரவுநேரத்தில் அவர் நடந்து சென்றபோது, தன்னுடைய வேதாகமத்தை ஒரு மரக்கட்டையின் மீது வைத்து அங்கேயே முழங்கால்படியிட்டு, திக்கி திக்கி ஜெபம் செய்தார்: “தேவனே! இந்த புத்தகத்திலுள்ள பெரும்பாலான விஷயங்களை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.” 

தன்னுடைய குழப்பத்தை அறிக்கையிட்டவுடன், பரிசுத்த ஆவியானவர், “பிதாவே, நான் விசுவாசத்தில் இதை உம்முடைய வார்த்தையாய் ஏற்றுக் கொள்ளப்போகிறேன்!” என்று சொல்லும்படிக்கு என்னை பெலப்படுத்தினார். அவர் எழுந்து நின்றபோது, அவருக்கு இன்னும் கேள்விகள் இருந்தது. ஆனால் அவர், “என் ஆத்துமாவில் ஓர் ஆவிக்குரிய யுத்தம் நடைபெற்று, அதில் வெற்றியும் அடைந்துவிட்டேன்” என்று சொன்னார். 

இளம் தீர்க்கதரிசியான எரேமியாவும் இந்த ஆவிக்குரிய யுத்தத்தை செய்துள்ளான். ஆனால் வேதத்தில் அதற்கான பதிலை கண்டுபிடித்தான். “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன் ;  உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரேமியா 15:16). மேலும் “அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது” (20:9) என்றும் கூறுகிறான். 19ஆம் நூற்றாண்டின் சுவிசேஷகர் சார்லஸ் ஸ்பர்ஜன், “எரேமியா நமக்கு ஓர் இரகசியத்தை கற்றுக்கொடுத்திருக்கிறார். அவருடைய வெளியரங்கமான வாழ்க்கை, குறிப்பாய் அவருடைய விசுவாசமான ஊழியம் நடைபெற்றதற்கான காரணம், அவர் கர்த்தருடைய வார்த்தையை அந்தரங்கத்தில் நேசிப்பவராய் இருந்தார்” என்று குறிப்பிடுகிறார். 

நம்முடைய போராட்டங்களின் மத்தியிலும், நம்முடைய வாழ்க்கையை வேதாகமத்தின் ஞானத்தைக் கொண்டு நேர்த்தியாய் வடிவமைக்க முடியும். விசுவாசத்தோடு எப்போதும்போல நாம் தொடர்ந்து வேதத்தை தியானிப்போம்.