இளவயது விசுவாசம்
இளமைப்பருவம் என்பது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இக்கட்டான ஒரு பருவம். என்னுடைய இளமைப் பருவத்தில் என் தாயாரிடத்திலிருந்து என்னை தனியே அடையாளப்படுத்த எண்ணிய நான், அவர்களுடைய கருத்துகள், விதிமுறைகள், நோக்கங்கள் ஆகியவைகள் என்னை தவறாய் நடத்துகிறது என்று புறக்கணித்தேன். அவைகள் நல்லது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்துகொள்ள நேரிட்டாலும், அந்த பருவத்தில் அதை என்னால் செய்யமுடியவில்லை. அதை மீறுவது எனக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்த என் தாய் என்னுடைய மீறுதல்களைக் குறித்து புலம்பினார்.
தேவனும் அவருடைய பிள்ளைகளான இஸ்ரவேலைக் குறித்து இதேபோன்று எண்ணினார். தேவன் தன்னுடைய ஞானத்தை பத்து கற்பனைகளாய் கொடுத்துள்ளார் (உபாகமம் 5:7-21). அவைகள் விதிமுறைகளை உள்ளடக்கிய பட்டியல் போல் தெரிந்தாலும், “அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி..” (வச.29) என்று தேவன் அதை கொடுத்ததற்கான சித்தத்தை மோசேக்கு வெளிப்படுத்துகிறார். கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதின் மூலம் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தேவ பிரசன்னத்தை இஸ்ரவேலர்கள் அனுபவிக்க முடியும் என்ற தேவனுடைய இருதயத்தை மோசே அறிந்திருந்தார் (வச.33).
கர்த்தருடைய கற்பனைகள் நன்மையானவைகள் என்பதை உணராமல் தேவனோடு ஒரு இளமைப்பருவ அனுபவத்திற்குள் கடந்துசெல்கிறோம். நமக்கு எது நல்லது, எது ஞானத்திற்கேதுவானது என்று தேவன் வைத்துள்ளவைகளை உணர்ந்து அதை கவனமாய் கைக்கொள்ள பிரயாசப்படுவோம். நாம் இயேசுவைப் போல மாறுவதற்கும், ஆவிக்குரிய முதிர்ச்சி நம்மில் ஏற்படுத்துவதுமே அவருடைய வழிநடத்துதல்களின் நோக்கமாயிருக்கிறது (சங். 119:97-104; எபேசியர் 4:15; 2 பேதுரு 3:18).
வேதாகமத்தின் மாபெரும் கதை
கோலின், தான் வாங்கின கறைபடிந்த கண்ணாடித்துண்டுகளின் பெட்டியைத் திறந்தபோது, அதில், தான் ஒரு செயல்திட்டத்திற்காக ஆர்டர் செய்த கண்ணாடித் துண்டுகளுக்குப் பதிலாக முழு ஜன்னல் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் அந்த ஜன்னல்களின் தோற்றத்தை ஆராய்ந்தபோது, இரண்டாம் உலகப்போரின் போது குண்டுவீச்சிலிருந்து அவைகளைப் பாதுகாக்க ஒரு தேவாலயத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள் என்று அறிந்துக்கொண்டார். அந்த ஜன்னல்களின் வேலைப்பாடுகளையும் அந்தத் “துண்டுகள்” எவ்வாறு ஒரு அழகான சித்திரமாக்கப்பட்டிருந்ததையும் கண்டு ஆச்சரியப்பட்டார்.
நான் நேர்மையானவனாக இருந்தால், அநேக நேரங்களில் நான் வேதாகமத்தில் குறிப்பிட்ட பகுதிகளை வாசிக்கும்போது, அதாவது வம்சவரலாற்றுப் பட்டியல்கள் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள், அவைகள் இவ்வளவு பெரிய வேதாகம சித்திரத்தில் எவ்வாறு பொருந்தும் என்பதை நான் உடனடியாக அறிந்துகொள்ளவில்லை. அதேபோன்று தான் ஆதியாகமம் 11 – சேம், சேலா, ஏபேர், நாகோர் மற்றும் தேராகு போன்ற அறிமுகமில்லாதவர்களின் பெயர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு அதிகாரம் (வச. 10-32). நான் அவ்வப்போது இப்படிப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து நன்கு அறிமுகமான வேதப் பகுதிகளை, எனக்கு எளிதில் விளங்கக்கூடிய வேதப்பகுதிகளை வாசிக்க ஆசைப்படுகிறேன்.
“வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டும் அவைகள் பிரயோஜனமுள்ளவைகளாய்” (2 தீமோத்தேயு 3:15) இருப்பதால், ஒரு சிறிய துண்டு எப்படி ஒரு முழுமையானதில் பொருந்த முடியும் என்பதை புரிந்துக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கண்களைத் திறப்பார். உதாரணமாக, சேலா, எவ்வாறு தாவீதின் மூதாதையரான ஆபிராகாமுக்கு, முக்கியமாக இயேசுவுக்கு தொடர்புடையவர் என்பதை நன்கு புரிந்துக்கொள்ள நமக்கு உதவி செய்வார் (மத் 1:2,6,16). சிறிய பகுதிகள் கூட வேதாகமம் முழுவதிலும் உள்ள தேவனுடைய பணிகளை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான சாளரம் என்னும் பொக்கிஷத்தினால் நம்மை ஆச்சரியப்படுத்தி மகிழ்விக்கிறார்.
மற்றவர்களுக்கு கைகொடுப்போம்
எங்களுடைய மகனை நாங்கள் தத்தெடுப்பதற்கு முன்பு அவனுடைய ஆரம்பநாட்களை அவன் சிறுவர் விடுதியில் கழித்தான். அந்த விடுதியை விட்டு எங்களோடு அவனை கூட்டிவருவதற்கு முன், அவனுடைய பொருட்களையெல்லாம் எடுத்துவரும்படி கூறினோம். ஆனால் பொருட்கள் என்று அவனிடத்தில் எதுவுமில்லை. அவனுக்காய் நாங்கள் வாங்கிச் சென்றிருந்த புத்தாடையை மாற்றச்செய்தோம். அங்கிருந்த சில பிள்ளைகளுக்கும் ஆடைகள் வாங்கிச் சென்றிருந்தோம். அவனுடைய நிலைமையை நினைத்து நாங்கள் பரிதாபப்பட்டாலும் அவனுடைய சரீரப்பிரகாரமான தேவைகளையும் உணர்வு ரீதியான தேவைகளையும் தற்போது எங்களால் சந்திக்க முடிந்ததை எண்ணி மகிழ்ந்தேன்.
சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய குடும்பத்தின் தேவைக்காய் நன்கொடை சேகரித்த ஒரு நபரை நாங்கள் பார்த்தோம். என்னுடைய மகன் அவருக்கு தன்னுடைய பொம்மைகளையும், சில நாணயங்களையும் கொடுத்து உதவினான். அவனுடைய பொருட்களை அவன் தனக்கென்று கெட்டியாய் பிடித்து வைத்திருந்திருக்க முடியும்.
அவனுடைய அந்த தாராள குணத்திற்கான காரணமே ஆதித்திருச்சபையின் காரணமாயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் குறைவுள்ளவர்கள் யாருமில்லை. “அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது” (அப்போஸ்தலர் 4:33-34). ஜனங்கள் தங்கள் ஆஸ்திகளை விற்று மற்றவர்களின் தேவைகளை சந்தித்துக்கொண்டனர்.
பொருளோ அல்லது புலப்படாத ஏதோ ஒரு தேவையோடிருக்கிறவர்களின் தேவையை நாம் உணர்ந்தால், தேவையுள்ளவர்களின் தேவையை முழுமனதுடன் சந்தித்த ஆதித்திருச்சபை விசுவாசிகளைப் போன்று நம்மையும் உதவசெய்வதற்கு தேவன் கிருபை செய்வார். அது நம்மை “ஒரே இருதயமும் ஒரே மனதும்” (வச. 32) கொண்ட கிருபையின் பாத்திரங்களாய் மாற்றுகிறது.
சுவிசேஷம் பகிர்தல் என்றால் “என்ன”
மக்களின் முன்னிலையில் பேசும்போது ஏற்படும் பயத்தை எப்படி மேற்கொள்வது என்று மகேஷ் என்னிடத்தில் ஆலோசனைக் கேட்டான். மக்களுக்கு முன்பு பேசுவதென்றாலே எல்லோரைப் போலவும் இருதயம் படபடக்கிறது; நாவு வறண்டு, வாய் ஒட்டிக்கொள்கிறது; முகம் சிவக்கிறது. “கிளாசோஃபோபியா” என்றழைக்கப்படும் இந்த வகையான பயம் சமுதாயத்தில் பொதுவானது. மரண பயத்தைக் காட்டிலும் மக்களுக்கு முன்பாகப் பேசுவது கொடுமையானது என்று வேடிக்கையாகவும் சொல்லுவார்கள். மகேஷின் இந்த குறைபாட்டை நிவிர்த்தி செய்வதற்கு, எப்படி பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசும்படி ஆலோசனைக் கொடுத்தேன்.
சொல்லுபவரின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து சொல்லப்படும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த முறையை பின்பற்றியே பவுல் அப்போஸ்தலரும் மக்களை தேவனண்டை வழிநடத்தியுள்ளார். கொரிந்திய சபைக்கு எழுதும்போது, “மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமாயிராமல்” (1 கொரி. 2:5), கிறிஸ்துவையும் அவருடைய சிலுவை மரணத்தையும் மையப்படுத்துவதாக அறிவிக்கிறார். தன்னுடைய பேச்சுத் திறமையை வளர்க்கும்படியல்லாமல், தன்னுடைய செய்தியை அதிகாரமுள்ளதாய் மாற்றும்படிக்கே ஆவியானவரை பவுல் நம்புகிறார்.
தேவனை தனிப்பட்ட வகையில் அறிந்துகொள்ளும்போது, அவரைக் குறித்து நம்மை சுற்றியுள்ளவர்களிடம் அறிவிக்க தவறமாட்டோம். ஆயினும் சிலநேரங்களில் பேச்சுக் குறைபாட்டின் காரணமாய், துணிந்து பேசமுடியாமல் கூச்சப்பட்டுத் தயங்குகிறோம். “என்ன” என்னும் கேள்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும், தேவன் யார் என்பதையும் அவருடைய ஆச்சரியமான கிரியைகளையும், பவுலைப் போல கூச்சமில்லாமல் துணிச்சலாய் நம்மால் பிரசங்கிக்க முடியும்.
ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு நேராய் நகர்தல்
வாழ்க்கையின் எந்த பருவத்தில் ஒரு மனிதன் முதிர்ச்சியடைகிறான் என்னும் புள்ளிவிபர கணக்கிற்கான கேள்வியுடன் சமீபத்தில் பலரை அனுகினர். தாங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டோம் என்று நம்புகிற பலர், குறிப்பிட்ட சில சுபாவங்களை சுட்டிக்காண்பித்து தங்களுடைய முதிர்ச்சியை ஆதாரமாய் காண்பித்தனர். வரவுசெலவைத் திட்டமிட்டு, சொந்தமாக வீடு வாங்கியதே முதிர்ச்சிக்கு அடையாளமாய் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும், சமைத்தல், மருத்துவரைச் சந்திக்க முன்பதிவுசெய்தல், நொறுக்குத் தீனியை தானே தேர்ந்தெடுத்தல் போன்ற வேடிக்கையான பதில்கள், அல்லது இரவில் தனியே நடந்துசெல்லுதல் போன்ற பல்வேறு காரியங்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
வேதாகமமும் நாம் ஆவிக்குரிய முதிர்ச்சியடையவேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கிறது. பவுல் எபேசு சபைக்கு எழுதும்போது, சபையின் மக்களை “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்...” என்று உற்சாகப்படுத்துகிறார் (எபே. 4:11). நம்முடைய விசுவாசத்தில் குழந்தைகளாயிருந்தபோது, நமக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்திய “காற்றினாலே அலைகளைப்போல அடிபட்(ட)” பலவித போதனைகளுக்கு செவிசாய்த்தோம். அதற்கு பதிலாக, சத்தியத்தைக் குறித்த அறிவில் முதிர்ச்சியடையும்போது, “தலையாகிய கிறிஸ்துவுக்குள்” (வச. 15) ஒன்றாக்கப்பட்ட சரீரமாய் செயல்படுகிறோம்.
தேவன் யார் என்று அறிகிற பூரண அறிவில் தேறுவதற்கு அவருடைய ஆவியை நமக்கு தருகிறார் (யோவான் 14:26). அத்துடன், விசுவாச முதிர்ச்சிக்கு நேராய் நம்மை வழிநடத்துவதற்கு மேய்ப்பர்கள் மற்றும் போதகர்களை தேவன் கொடுத்துள்ளார் (எபே. 4:11-12-13). நம்முடைய சரீர முதிர்ச்சியை அடையாளப்படுத்த சில காரியங்கள் இருப்பதுபோல, தேவனுடைய சரீரத்தின் அவயவங்களாய் ஒன்றிணைவதே ஆவிக்குரிய முதிர்ச்சிக்கான அடையாளம்.
வானவில் ஒளிவட்டம்
மலை உச்சியல் தாழ்வான மேகங்களுக்கு பின்பாக ஒளிருகின்ற காட்சியை அட்ரியன் பார்வையிட்டார். கீழே பார்த்தபோது, அவரது நிழலை மட்டுமல்ல, சிதயிருந்த வண்ணப் பட்டி (ப்ரோக்கன் ஸ்பெக்டர்) என்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான காட்சியையும் பார்த்தார். இந்த நிகழ்வு ஒரு வானவில் ஒளிவட்டத்தை ஒத்திருந்தது. இது அந்த நபரின் நிழலை சுற்றி வளைந்திருந்தது. சூரிய ஒளி கீழே உள்ள மேகங்களை பிரதிபலிக்கும் போது இது நிகழ்கிறது. அட்ரியன் அதை ஒரு “மந்திர” தருணம் என்று கூறுகிறார். இது அவரை மிகவும் மகிழ்வித்தது.
முதல் வானவில்லை பார்த்த உணர்வு நோவாவுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்யலாம். அவரது கண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததை காட்டிலும், ஒளிவிலகலும் வெளிச்சமும் அதன் விளைவாக வரும் வண்ணங்களும் தேவனிடமிருந்து ஒரு வாக்குறுதியுடன் வந்தன. ஒரு பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு, நோவாவுக்கும், பின்னர் வாழ்ந்த எல்லா “மாம்ச ஜீவன்களுக்கும்”, “இனி ஜலமானது பிரளயமாய்ப் (பெருகாதபடிக்கு) எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன் (ஆதியாகமம் 9:15) என்று தேவன் உடன்படிக்கை ஏற்படுத்துகிறார்.
நம் பூமி இன்னமும் வெள்ளம் மற்றும் பிற பயமுறுத்தும் சீதோஷ நிலை ஆகியவற்றை அனுபவிக்கிறது. அது துன்பகரமான இழப்பையும் அவ்வப்போது ஏற்படுத்துகிறது. ஆனால் வானவில் என்பது உலகளாவிய வெள்ளத்தால் பூமியை மீண்டும் தேவன் அழிக்கமாட்டார் என்பதற்கான வாக்குறுதியாகும். அவருடைய விசுவாசத்தின் இந்த வாக்குறுதி, இந்த பூமியில் தனிப்பட்ட இழப்புகள் மற்றும் உடல் ரீதியான மரணங்களை நாம் தனித்தனியாக அனுபவிப்போம் என்றாலும், நோய், இயற்கை பேரழிவு, தவறு, அல்லது வயது முதிர்வால் நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் முழுவதும் தேவன் தம்முடைய அன்பையும் முன்னிலையையும் கொண்டு நம்மை மேம்படுத்துகிறார். சூரிய ஒளியானது நீரின் மூலம் வண்ணங்களை பிரதிபலிக்கிறது, அவருடைய உருவத்தைத் தாங்கி, அவருடைய மகிமையை மற்றவர்களுக்கு பிரதிபலிப்பவர்களால் பூமியை நிரப்ப அவர் உண்மையுள்ளவர் என்பதை நினைவூட்டுகிறது.
நமக்கு மேல் பாடுவது
ஒரு இளம் தந்தை தனது ஆண் குழந்தையை கைகளில் பிடித்து, அவனிடம் பாடி, இனிமையான தாளத்தில் ஆட்டினார். குழந்தைக்கு காது கேட்கும் திறன் இல்லாதிருந்தது, எனவே அந்த பாடலின் மெட்டையோ அல்லது சொற்களையோ அதனால் கேட்க முடியவில்லை. ஆயினும் தந்தை அழகான, கனிவான அன்பில் தனது மகனை நோக்கி தொடர்ந்து பாடினார். அவரது முயற்சிகளுக்கு பலனாக அவரது பிள்ளையிடமிருந்து ஒரு மகிழ்ச்சியான புன்னகை பதிலாகக் கிடைத்தது.
தந்தை-மகன் பரிமாற்றத்தின் பிம்பங்களுக்கும் செப்பனியாவின் வார்த்தைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பழைய ஏற்பாட்டின் இந்த தீர்க்கதரிசி, தேவன் உன்பேரில் கெம்பீரமாய் களிகூருவார் என்று கூறுகிறார் (செப்பனியா 3:17). தேவன் தம்முடைய அன்புக்குரிய மக்களுக்கு அவர்களின் ஆக்கினைகளை அகற்றி, சத்துருக்களை விலக்குவது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறார் (வச.15). இனி அவர்கள் பயப்பட தேவையில்லை, அதற்கு பதிலாக மகிழ்ந்து களிகூரலாம் என்று செப்பனியா கூறுகிறார்.
இயேசு கிறிஸ்துவின் தியாகத்தினால் மீட்கப்பட்ட தேவ பிள்ளைகளாகிய நாம் சில சமயங்களில் தேவன் நமக்காய் பாடும் தெய்வீக அன்பிற்கு செவிகொடுக்க விரும்புவதும் முயற்சிப்பதும் இல்லை. அவர் நம்மீது அதிக அன்பு கொண்டிருப்பது அந்த இளம் தந்தையைப் போன்றது. அவருடைய மகனால் கேட்க முடியாத போதிலும் அவனிடம் அன்பாகப் பாடினார். அவர் நமது தண்டனையை சுமந்து கொண்டார். நாம் மகிழ்ச்சியடைய மேலும் காரணத்தைத் தருகிறார். அவருடைய குரலில் சந்தோஷம் சத்தமாக ஒலிப்பதைக் கேட்க நாம் இன்னும் அருகில் நெருக்கமாக சென்று கேட்க முயற்சி செய்யலாம். பிதாவே, உங்கள் அன்பான மெட்டுக்களை கேட்க மற்றும் உங்கள் கைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை அனுபவிக்க எங்களுக்கு உதவும்.
மூட்டை தூக்கும் செயல்பாடு
ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியரான கரேன், தனது மாணவர்களுக்கு ஒருவருக்கொருவர் எவ்வாறு நன்கு புரிந்துகொள்வது என்பதைக் கற்பிப்பதற்கான ஒரு செயல்பாட்டை உருவாக்கினார்.. இந்த “மூட்டை தூக்கும் செயல்பாட்டில்” - மாணவர்கள் தாங்கள் சுமந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான சுமைகள் சிலவற்றை எழுதினர். அந்த குறிப்புகள் ஒருவொருக்கொருவர் மாற்றி கொடுக்கப்பட்டதால், சக மாணவர்களுக்கு ஒருவருக்கொருவர் பட்ட கஷ்டங்களைப் பற்றிய நுண்ணறிவைக் கொடுத்து பெரும்பாலும் அவர்களது சகாக்களிடமிருந்து கண்ணீரே பதிலாக வந்தது. இளம் வயதினருடைய ப்ரஸ்பர மரியாதைக்குரிய ஆழ்ந்த உணர்வால் அந்த வகுப்பறை நிரப்பப்பட்டிருந்தது, அவர்கள் இப்போது ஒருவருக்கொருவர் அதிக பச்சாதாபம் கொண்டவர்களாகினர்.
வேதாகமம் முழுவதும், ஒருவருக்கொருவர் கண்ணியத்துடன் நடந்துகொள்வதற்கும் மற்றவர்களுடனான தொடர்புகளில் பச்சாத்தாபம் காட்டுவதற்கும் தேவன் தம் மக்களுக்கு சுட்டிக்காட்டி உள்ளார் (ரோமர் 12:15). ஆரம்ப கால இஸ்ரவேலின் வரலாற்றில் லேவியராகமம் புத்தகமத்தில், தேவன் இஸ்ரவேலரின் பச்சாத்தாபத்தை நோக்கி சுட்டிக்காட்டினார்-குறிப்பாக புறஜாதியினருடனான நடவடிக்கைகளில். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் “உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக”; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; (லேவியராகமம் 19:34).
சில நேரங்களில் நாம் சுமக்கும் சுமைகள் நம்மை அந்நியர்களைப் போல – தனித்து விடப்பட்டவர்களாக, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டர்களாக – நம் சுற்றத்தாரிடம் கூட உணர வைக்கின்றன. இஸ்ரவேலர் தங்களோடிருந்த புறஜாதியினருடன் செய்ததைப் போன்றதொரு அனுபவம் நமக்கு எப்போதும் இருப்பதில்லை. ஆயினும்கூட, தேவன் நம் வாழ்க்கையின் பாதைகளில் அனுப்புகிறவர்களை நாம், நாம் விரும்பும் மரியாதையுடனும் புரிதலுடனும் எப்போதும் நடத்தலாம். ஒரு நவீனகால நடுத்தர பள்ளி மாணவன், இஸ்ரவேலர் அல்லது இதற்கு இடையில் யாராக இருந்தாலும், நாம் அப்படி செய்யும் போது தேவனை கனப்படுத்துகிறோம்.
ஓய்வெடுப்பதற்கான காரணம்
நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்பினால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்! இதய நோய் அபாயம் உள்ள நடுத்தர வயது ஆண் நிர்வாகிகள் ஒவ்வொருவரை பற்றிய ஆய்வுக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பின்லாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் பங்கேற்பாளர்களைப் பின்தொடர்ந்தனர். விஞ்ஞானிகள் தங்கள் மூல கண்டுபிடிப்புகளில் தாங்கள் தேடாத ஒன்றைக் கண்டறிந்தனர்: விடுமுறைக்கு நேரம் ஒதுக்கியவர்களில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது.
வேலை என்பது வாழ்க்கையின் மிகவும் அவசியமான பகுதியாகும் - ஆதியாகமம் 3-ல் அவருடனான நம் உறவு முறிந்து போவதற்கு முன்பே தேவன் நமக்கு நியமித்த ஒரு பகுதி. தேவனின் மகிமைக்காக வேலை செய்யாதவர்கள் அனுபவிக்கும் வேலையின் அர்த்தமற்ற தன்மையைப் பற்றி சாலமோன் எழுதுகிறார். அதனை "ஆர்வத்துடன் பாடுபடுவது" மற்றும் "அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது" என்று அடையாளப்படுத்துகிறார் (பிரசங்கி 2: 22-23). அவர்கள் சுறுசுறுப்பாக செயல்படாவிட்டாலும் கூட அவர்களின் “மனதுக்கு இளைப்பாறுதலில்லை” என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் இன்னும் செய்து முடிக்க வேண்டியவைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள் (வச. 23).
நாமும் சில சமயங்களில், நாம் “காற்றைத் துரத்துகிறோம்” என்பதைப்போல உணரலாம் (வச. 17). மேலும் நாம் நம் வேலையை “முடிக்க” முடியாமல் விரக்தியடைகிறோம். ஆனால் தேவன் நம் உழைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும்போது - நம்முடைய நோக்கம் - நாம் கடினமாக உழைத்து, ஓய்வெடுக்கவும் நேரம் எடுத்துக்கொள்ளலாம். அவர் நமக்கு அனைத்தையும் தருவதால், அவர் நம் தேவைகளை சந்திப்பவராக இருப்பதை நாம் நம்பலாம். “அவர் இல்லாமல் யாரால் உண்ணமுடியும் அல்லது இன்பம் காண முடியும்?” என்பதை சாலமோன் ஒப்புக்கொள்கிறார் (வச. 25). ஒருவேளை அந்த சத்தியத்தை நமக்கு நினைவூட்டுவதன் மூலம் நாம் அவருக்காக உத்தமமாய் பணியாற்றலாம் (கொலோசெயர் 3:23). மேலும் ஓய்வு நேரங்களுக்கு நம்மை நாம் அனுமதிக்கலாம்.