தேவனிடமிருந்து ஒளித்துக்கொள்ளுதல்
நான் கண்ணாமூச்சி விளையாடியபோது என் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தேன். என் சிநேகிதிகள் ஒளிந்துகொள்ள இடத்தைத் தேடி சென்றனர். மணிக்கணக்காய் அலமாரி, டிரங்க் பெட்டி, குளியலறை என்று தேடியும் ஒரு சிநேகிதியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவள், கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த செடியின் பின்னாலிருந்து குதித்தபோது நான் சற்று முட்டாள்தனமாய் உணர்ந்தேன். அவள் ஒளிந்துகொண்டபோது, அவளின் தலையை மட்டுமே அந்த செடி மறைத்திருந்தது, அவள் உடல் முழுவதும் பார்க்கக்கூடிய வகையில் வெளியரங்கமாகவே இருந்தது.
தேவன் அனைத்தும் அறிந்தவர். ஆதலால் ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் ஒளித்துக்கொண்டபோதும், அவர்கள் அவரின் தெளிவான பார்வையில் (ஆதியாகமம் 3:8) இருந்தனர். அவர்கள் திடீரென்று ஏற்பட்ட விழிப்புணர்வாலும், அவமானத்தாலும், தாங்கள் செய்த தவறான செயலுக்காகவும், தேவன் உண்ணக்கூடாது என்று விலக்கி வைத்த மரத்தின் கனியைப் புசித்ததினாலும் தங்களை ஒளித்துக்கொண்டனர்.
ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அவரை விட்டு விலகினர். கோபத்தில் அவர்களை விட்டுவிடாமல் “நீ எங்கே இருக்கிறாய்” என்று அவர் வெளியே கொண்டுவர முயன்றார். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அவருக்கு தெரியாது என்று அர்த்தமில்லை; அவர் தாம் அவர்கள் மீது கொண்டிருக்கிற அக்கறையை அவர்கள் அறியவேண்டும் என நினைத்தார் (வச. 9).
என் சிநேகிதி மறைந்திருந்ததை நான் காணவில்லை; ஆனால் தேவன் எப்போதும் நம்மைக் காண்கிறார். நாம் அவருடைய தெளிவான பார்வையில் இருக்கிறோம். அவர் ஆதாம் ஏவாளை பின்தொடர்ந்தது போல, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). நாம் இனி ஒளிந்துகொள்ளத் தேவையில்லை.
நெருக்கமாகிறோம்
கொரோனா வைரஸ் வந்த பிறகு வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து ஒன்றை எடுக்க முன்பைவிட அநேக விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கி பெட்டகத்திற்குள் நுழைவதற்கு முன்னால், ஏற்கனவே முன் அனுமதி வாங்கி, என்னுடைய அடையாள அட்டை மற்றும் கையெழுத்தை பரிசோதித்து, வங்கி ஊழியர் ஒருவர் காவலுக்கு வந்து பெட்டகத்திற்கு அழைத்துச் செல்லும் வரை நான் காத்திருக்க வேண்டியுள்ளது. உள்ளே நுழைந்ததும், எனக்குத் தேவையானவற்றை என் பெட்டகத்திலிருந்து நான் எடுக்கும் வரைக்கும் அந்த உறுதியான கதவுகள் பூட்டியிருக்கும். இந்த ஒழுங்கை நான் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே என்னால் வங்கியில் நுழைய முடியும்.
பழைய ஏற்பாட்டில் தேவன், உடன்படிக்கைப் பெட்டி வைத்திருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே நுழைய சில ஒழுங்குமுறைகளை வைத்திருந்தார் (யாத்திராகமம் 26:33). பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும் அந்த சிறப்பான திரைக்குப் பின்னே பிரதான ஆசாரியன் மாத்திரம் வருஷத்துக்கு ஒரு தரம் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார் (எபிரெயர் 9:7). ஆரோனும் பிரதான ஆசாரியர்களும் ஜலத்திலே ஸ்நானம் பண்ணி, பரிசுத்த வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு பலிகளுடன் உட்பிரவேசிக்க வேண்டும் (லேவியராகமம் 16:3-4). தேவனுடைய கட்டளைகள் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்குமான வழிமுறைகள் அல்ல; மாறாக, நம்முடைய பாவ மன்னிப்பின் தேவையுடன் பரிசுத்த தேவனை எவ்வாறு நெருங்குவது என்பதை வலியுறுத்துவதற்காக கொடுக்கப்பட்டது.
இயேசுவின் மரணம் அந்த திரைச்சீலையை இரண்டாகக் கிழியச் செய்தது (மத்தேயு 27-51), இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என விசுவாசிக்கிறவர்கள் எவரும் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழையலாம் என்பதை அது வெளிப்படுத்தியது. உடன்படிக்கைப் பெட்டியின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்த அந்த நிகழ்வு நம்முடைய நித்திய மகிழ்ச்சிக்கு காரணமாகியது. நான் எப்போது வேண்டுமானாலும் தேவனிடத்தில் நெருங்கலாம் என்பதை இயேசு சாத்தியமாக்கினார்.
நிஜமான பிரசன்னம்
கொரோனா வைரஸ் உலகமெங்கிலும் பரவிக்கொண்டிருக்கும்போது, அதின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மக்களிடையே இடைவெளியை கடைபிடிக்கும்படிக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அநேக நாடுகள் மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக்கொள்ளுதலை கடைபிடிக்கும்படி அறிவுறுத்துகிறது. ஒருபுறம் அலுவலகங்கள் முடிந்தவரை தங்கள் அலுவலர்களை வீடுகளிலிருந்து வேலைசெய்யும்படிக்கு உற்சாகப்படுத்த, மறுபுறம் பலர் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் என்னுடைய சபை ஆராதனைகளிலும் பராமரிப்புக் குழுக்களிலும் ஆன்லைன் மூலமாகவே கலந்துகொள்ள நேர்ந்தது. சரீரப்பிரகாரமாக ஒன்று கூடுவதைத் தவிர்த்து, தற்போது உலகம் ஒன்றுகூடுவதற்கு புதிய முறையை தத்தெடுத்துக்கொண்டுள்ளது.
இணையதளம் நம்மிடையே ஐக்கிய சிந்தையை ஏற்படுத்துவதில்லை. நாமெல்லாரும் தேவனுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாய் ஆவியில் இணைக்கப்பட்டுள்ளோம். கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பவுல் இக்கருத்தை பதிவுசெய்துள்ளார். அந்த சபை அவரால் ஸ்தாபிக்கப்படவில்லை என்றாலும், அவர்களைக் குறித்தும் அவர்களின் விசுவாசத்தைக் குறித்தும் பவுல் தன் ஆழமான அக்கறையை வெளிப்படுத்தினார். பவுல் அவர்கள் மத்தியில் இருக்கமுடியவில்லை என்றாலும், “ஆவியின்படி உங்களுடனேகூட” இருக்கிறேன் என்று அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார் (கொலோசெயர் 2:5).
நம்முடைய பொருளாதார, சுகாதார மற்றும் பல நடைமுறைத் தேவைகளுக்காக நாம் நேசிக்கிறவர்களோடு எல்லாவேளைகளிலும் சரீரப்பிரகாரமாய் இருக்கமுடியாது. தொழில்நுட்பம் அந்த இடைவெளியை பூர்த்திசெய்யும். கிறிஸ்துவின் சரீரத்தின் அவயங்களாய் நாம் நம்மை பார்க்கும்போது, கண்ணிற்கு புலப்படாத ஒரு ஐக்கியத்திற்கு நாம் உட்படுத்தப்படுகிறோம் (1 கொரி. 12:27). அத்தகைய தருணங்களில், நாமும் பவுலைப்போல, ஒவ்வொருவருடைய விசுவாச உறுதியினாலும், ஜெபத்தினாலும் “கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்(ள)” உற்சாகப்படுத்தப்படுகிறோம் (கொலோ. 2:2).
உம் பிரசன்னத்தில் தங்கியிருக்க!
அவர்கள் தங்களுடைய காரில் ஏறிப்போனபோது, தன் தாயாரின் கைகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தர்ஷன் ஆலயத்தின் கதவை நோக்கி ஓடினான். அவன் அங்கிருந்து வருவதை விரும்பவில்லை. அவனுடைய தாயார் அவன் பின்னாக ஓடி, அவனை தன் கைகளினால் அணைத்து மீண்டும் புறப்படுவதற்கு தயாரானாள். தர்ஷனை அணைத்து, அவனுடைய தாயார் அவனை வெளியே கூட்டிச்செல்லும்போது, அவன் ஆலயத்தை நோக்கி தன் கைகளை நீட்டியவாறு அடம்பிடித்துக்கொண்டே வெளியே சென்றான்.
தர்ஷன், ஆலயத்தில் தனக்கிருக்கும் நண்பர்களை விட்டுப் பிரிய மனதில்லாமல் அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவனுடைய அந்த ஆர்வம், தாவீது தேவனை ஆராதிக்க காண்பித்த ஆர்வத்திற்கு ஒத்திருக்கிறது. தன்னுடைய நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன்னுடைய சத்துருக்களை அழிக்கும்படிக்கு தேவனிடத்தில் கெஞ்சினாலும், அவன் சமாதானமாயிருப்பதற்கு, “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” என்கிறார் (27:4). அவர்; எங்கேயிருந்தாலும் தேவ பிரசன்னத்தை அனுவித்து தேவனோடு இருப்பதையே நாடினான். இஸ்ரவேலின் சிறந்த கதாநாயகனும் படைத்தலைவனுமான தாவீது, “கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்” என்று தன் விருப்பத்தை பிரதிபலிக்கிறான் (வச. 6).
அவர் விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள் வாசம்பண்ணுகிறார் என்பதினால், நாம் அவரை எங்கு வேண்டுமானாலும் ஆராதிக்கமுடியும் (1 கொரிந்தியர் 3:16; எபேசியர் 3:17). தேவ பிரசன்னத்தில் நம்முடைய நாட்களை கழிக்கவும், மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து அவரை ஆராதிக்கவும் முற்படுவோம். கட்டடத்தின் சுவரில் அல்ல, தேவனில் நம்முடைய பாதுகாப்பையும் நம்முடைய அதிகப்படியான மகிழ்ச்சியையும் நாம் அடைகிறோம்.
உம் பிரசன்னத்தில் தங்கியிருக்க!
அவர்கள் தங்களுடைய காரில் ஏறிப்போனபோது, தன் தாயாரின் கைகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தர்ஷன் ஆலயத்தின் கதவை நோக்கி ஓடினான். அவன் அங்கிருந்து வருவதை விரும்பவில்லை. அவனுடைய தாயார் அவன் பின்னாக ஓடி, அவனை தன் கைகளினால் அணைத்து மீண்டும் புறப்படுவதற்கு தயாரானாள். தர்ஷனை அணைத்து, அவனுடைய தாயார் அவனை வெளியே கூட்டிச்செல்லும்போது, அவன் ஆலயத்தை நோக்கி தன் கைகளை நீட்டியவாறு அடம்பிடித்துக்கொண்டே வெளியே சென்றான்.
தர்ஷன், ஆலயத்தில் தனக்கிருக்கும் நண்பர்களை விட்டுப் பிரிய மனதில்லாமல் அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவனுடைய அந்த ஆர்வம், தாவீது தேவனை ஆராதிக்க காண்பித்த ஆர்வத்திற்கு ஒத்திருக்கிறது. தன்னுடைய நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன்னுடைய சத்துருக்களை அழிக்கும்படிக்கு தேவனிடத்தில் கெஞ்சினாலும், அவன் சமாதானமாயிருப்பதற்கு, “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” என்கிறார் (27:4). அவர்; எங்கேயிருந்தாலும் தேவ பிரசன்னத்தை அனுவித்து தேவனோடு இருப்பதையே நாடினான். இஸ்ரவேலின் சிறந்த கதாநாயகனும் படைத்தலைவனுமான தாவீது, “கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்” என்று தன் விருப்பத்தை பிரதிபலிக்கிறான் (வச. 6).
அவர் விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள் வாசம்பண்ணுகிறார் என்பதினால், நாம் அவரை எங்கு வேண்டுமானாலும் ஆராதிக்கமுடியும் (1 கொரிந்தியர் 3:16; எபேசியர் 3:17). தேவ பிரசன்னத்தில் நம்முடைய நாட்களை கழிக்கவும், மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து அவரை ஆராதிக்கவும் முற்படுவோம். கட்டடத்தின் சுவரில் அல்ல, தேவனில் நம்முடைய பாதுகாப்பையும் நம்முடைய அதிகப்படியான மகிழ்ச்சியையும் நாம் அடைகிறோம்.
மணியை அடி
முப்பது முறை கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பின், ரீமா புற்றுநோயிலிருந்து விடுபட்டார். அந்த மருத்துவமனை வழக்கப்படி, புற்றுநோயிலிருந்து விடுபட்டவர்கள் அங்கிருக்கும் “புற்றுநோயில்லா மணி” என்ற ஒன்றை ஒலிக்கச் செய்து, தன்னுடைய சிகிச்சையின் முடிவையும், தன்னுடை பூரண சுகத்தையும் தெரிவிக்கவேண்டும். சுகம்பெற்ற ரீமா, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்பொருட்டு மிகுந்த ஆர்வத்துடனும் அந்த மணியை தாங்கியிருந்த கயிறு அறுந்துவிழும் வரைக்கும் அந்த மணியை அடித்து தன் மிகுந்த மகிழ்ச்சியைப் பிரதிபலித்தார்.
ரீமாவின் இந்த சம்பவம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தேவனின் மகத்துவமான கிரியைகளை பார்க்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அழைப்பு விடுக்கும் சங்கீதக்காரனின் எண்ணத்தையும் பார்க்க உதவியது. தேவன் அவர்களின் சத்துருக்களை விரட்டியடித்து தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியை தன்னுடைய ஜனமாய் ஏற்றுக்கொண்டதற்காக அவர்களை, “கைகொட்டி,” “கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்” என்று உற்சாகப்படுத்துகிறார் (சங்கீதம் 47:1,6).
நம்முடைய வாழ்க்கையில் சரீரப்பிரகாரமான, பொருளாதார அல்லது உறவு ரீதியான குழப்பங்களுக்கு தேவன் எல்லா நேரத்திலும் உடனடியாய் தீர்வு கொடுப்பதில்லை. அதுபோன்ற சூழ்நிலைகளிலும், அவர் “தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்” என்பதினால் அவர் துதிகளுக்கு பாத்திரரே (வச. 8). நாம் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் தேவன் நமக்கு சுகத்தைக் கொடுத்தால், அது அளவில்லாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்போது நாம் மணியை அடித்து கொண்டாடவேண்டும் என்று அவசியமில்லை; ஆனால் ரீமா கொண்டாடியதுபோல தேவன் செய்த நன்மையைக் குறித்து நம்முடைய அளவில்லாத மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கலாம்.
இளவயது விசுவாசம்
இளமைப்பருவம் என்பது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இக்கட்டான ஒரு பருவம். என்னுடைய இளமைப் பருவத்தில் என் தாயாரிடத்திலிருந்து என்னை தனியே அடையாளப்படுத்த எண்ணிய நான், அவர்களுடைய கருத்துகள், விதிமுறைகள், நோக்கங்கள் ஆகியவைகள் என்னை தவறாய் நடத்துகிறது என்று புறக்கணித்தேன். அவைகள் நல்லது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்துகொள்ள நேரிட்டாலும், அந்த பருவத்தில் அதை என்னால் செய்யமுடியவில்லை. அதை மீறுவது எனக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்த என் தாய் என்னுடைய மீறுதல்களைக் குறித்து புலம்பினார்.
தேவனும் அவருடைய பிள்ளைகளான இஸ்ரவேலைக் குறித்து இதேபோன்று எண்ணினார். தேவன் தன்னுடைய ஞானத்தை பத்து கற்பனைகளாய் கொடுத்துள்ளார் (உபாகமம் 5:7-21). அவைகள் விதிமுறைகளை உள்ளடக்கிய பட்டியல் போல் தெரிந்தாலும், “அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி..” (வச.29) என்று தேவன் அதை கொடுத்ததற்கான சித்தத்தை மோசேக்கு வெளிப்படுத்துகிறார். கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதின் மூலம் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தேவ பிரசன்னத்தை இஸ்ரவேலர்கள் அனுபவிக்க முடியும் என்ற தேவனுடைய இருதயத்தை மோசே அறிந்திருந்தார் (வச.33).
கர்த்தருடைய கற்பனைகள் நன்மையானவைகள் என்பதை உணராமல் தேவனோடு ஒரு இளமைப்பருவ அனுபவத்திற்குள் கடந்துசெல்கிறோம். நமக்கு எது நல்லது, எது ஞானத்திற்கேதுவானது என்று தேவன் வைத்துள்ளவைகளை உணர்ந்து அதை கவனமாய் கைக்கொள்ள பிரயாசப்படுவோம். நாம் இயேசுவைப் போல மாறுவதற்கும், ஆவிக்குரிய முதிர்ச்சி நம்மில் ஏற்படுத்துவதுமே அவருடைய வழிநடத்துதல்களின் நோக்கமாயிருக்கிறது (சங். 119:97-104; எபேசியர் 4:15; 2 பேதுரு 3:18).
வேதாகமத்தின் மாபெரும் கதை
கோலின், தான் வாங்கின கறைபடிந்த கண்ணாடித்துண்டுகளின் பெட்டியைத் திறந்தபோது, அதில், தான் ஒரு செயல்திட்டத்திற்காக ஆர்டர் செய்த கண்ணாடித் துண்டுகளுக்குப் பதிலாக முழு ஜன்னல் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் அந்த ஜன்னல்களின் தோற்றத்தை ஆராய்ந்தபோது, இரண்டாம் உலகப்போரின் போது குண்டுவீச்சிலிருந்து அவைகளைப் பாதுகாக்க ஒரு தேவாலயத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள் என்று அறிந்துக்கொண்டார். அந்த ஜன்னல்களின் வேலைப்பாடுகளையும் அந்தத் “துண்டுகள்” எவ்வாறு ஒரு அழகான சித்திரமாக்கப்பட்டிருந்ததையும் கண்டு ஆச்சரியப்பட்டார்.
நான் நேர்மையானவனாக இருந்தால், அநேக நேரங்களில் நான் வேதாகமத்தில் குறிப்பிட்ட பகுதிகளை வாசிக்கும்போது, அதாவது வம்சவரலாற்றுப் பட்டியல்கள் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள், அவைகள் இவ்வளவு பெரிய வேதாகம சித்திரத்தில் எவ்வாறு பொருந்தும் என்பதை நான் உடனடியாக அறிந்துகொள்ளவில்லை. அதேபோன்று தான் ஆதியாகமம் 11 – சேம், சேலா, ஏபேர், நாகோர் மற்றும் தேராகு போன்ற அறிமுகமில்லாதவர்களின் பெயர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு அதிகாரம் (வச. 10-32). நான் அவ்வப்போது இப்படிப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து நன்கு அறிமுகமான வேதப் பகுதிகளை, எனக்கு எளிதில் விளங்கக்கூடிய வேதப்பகுதிகளை வாசிக்க ஆசைப்படுகிறேன்.
“வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டும் அவைகள் பிரயோஜனமுள்ளவைகளாய்” (2 தீமோத்தேயு 3:15) இருப்பதால், ஒரு சிறிய துண்டு எப்படி ஒரு முழுமையானதில் பொருந்த முடியும் என்பதை புரிந்துக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கண்களைத் திறப்பார். உதாரணமாக, சேலா, எவ்வாறு தாவீதின் மூதாதையரான ஆபிராகாமுக்கு, முக்கியமாக இயேசுவுக்கு தொடர்புடையவர் என்பதை நன்கு புரிந்துக்கொள்ள நமக்கு உதவி செய்வார் (மத் 1:2,6,16). சிறிய பகுதிகள் கூட வேதாகமம் முழுவதிலும் உள்ள தேவனுடைய பணிகளை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான சாளரம் என்னும் பொக்கிஷத்தினால் நம்மை ஆச்சரியப்படுத்தி மகிழ்விக்கிறார்.
மற்றவர்களுக்கு கைகொடுப்போம்
எங்களுடைய மகனை நாங்கள் தத்தெடுப்பதற்கு முன்பு அவனுடைய ஆரம்பநாட்களை அவன் சிறுவர் விடுதியில் கழித்தான். அந்த விடுதியை விட்டு எங்களோடு அவனை கூட்டிவருவதற்கு முன், அவனுடைய பொருட்களையெல்லாம் எடுத்துவரும்படி கூறினோம். ஆனால் பொருட்கள் என்று அவனிடத்தில் எதுவுமில்லை. அவனுக்காய் நாங்கள் வாங்கிச் சென்றிருந்த புத்தாடையை மாற்றச்செய்தோம். அங்கிருந்த சில பிள்ளைகளுக்கும் ஆடைகள் வாங்கிச் சென்றிருந்தோம். அவனுடைய நிலைமையை நினைத்து நாங்கள் பரிதாபப்பட்டாலும் அவனுடைய சரீரப்பிரகாரமான தேவைகளையும் உணர்வு ரீதியான தேவைகளையும் தற்போது எங்களால் சந்திக்க முடிந்ததை எண்ணி மகிழ்ந்தேன்.
சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய குடும்பத்தின் தேவைக்காய் நன்கொடை சேகரித்த ஒரு நபரை நாங்கள் பார்த்தோம். என்னுடைய மகன் அவருக்கு தன்னுடைய பொம்மைகளையும், சில நாணயங்களையும் கொடுத்து உதவினான். அவனுடைய பொருட்களை அவன் தனக்கென்று கெட்டியாய் பிடித்து வைத்திருந்திருக்க முடியும்.
அவனுடைய அந்த தாராள குணத்திற்கான காரணமே ஆதித்திருச்சபையின் காரணமாயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் குறைவுள்ளவர்கள் யாருமில்லை. “அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது” (அப்போஸ்தலர் 4:33-34). ஜனங்கள் தங்கள் ஆஸ்திகளை விற்று மற்றவர்களின் தேவைகளை சந்தித்துக்கொண்டனர்.
பொருளோ அல்லது புலப்படாத ஏதோ ஒரு தேவையோடிருக்கிறவர்களின் தேவையை நாம் உணர்ந்தால், தேவையுள்ளவர்களின் தேவையை முழுமனதுடன் சந்தித்த ஆதித்திருச்சபை விசுவாசிகளைப் போன்று நம்மையும் உதவசெய்வதற்கு தேவன் கிருபை செய்வார். அது நம்மை “ஒரே இருதயமும் ஒரே மனதும்” (வச. 32) கொண்ட கிருபையின் பாத்திரங்களாய் மாற்றுகிறது.