எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிரிஸ்டன் ஹொம்பெர்க்கட்டுரைகள்

இங்கே உனக்காக

உபவாசத்தின் உட்கருத்து

வாழ்விற்கான சிறந்த யுக்தி

வந்து பெற்றுக் கொள்ளுங்கள்

சமாதானத்தால் நிறைந்த இருதயங்கள்

நாற்பத்தைந்து ஆண்டுகளாக, விளையாட்டையே தன் தொழிலாகக் கொண்டு, வாழ்ந்த வீரர் ஜெரி கிரேமர், விடுபட்டபோது, தன்னுடைய விளையாட்டுத் துறையில் (புகழின் உச்சநிலை மரியாதையை) அடையவில்லை. ஆனால், அநேக வேறுவகையான சாதனைகளையும், புகழ்ச்சியையும் அவர் பெற்றிருந்தார். இந்த துறையின் உச்ச விருது அவருக்குக் கிடைக்காமல் போய்விட்டது. அந்த மரியாதைக்கு அவர் பத்துமுறை சிபாரிசு செய்யப்பட்டும், அது அவருக்கு வாய்க்கவேயில்லை. அவருடைய நம்பிக்கை அநேக முறை உடைக்கப்பட்ட போதும் கிரேமர், “தேசிய கால்பந்து கழகம் என்னுடைய வாழ்வில் நூறு பரிசுகளை வழங்கியுள்ளது. ஆனால், எனக்குத் தரப்படாத ஒன்றினைத் குறித்து நான் கோபப்படுவதும் மனம் வருந்துவதும் முட்டாள்தனம்” என்றார்.

யாராயிருந்தாலும், இத்தனை அதிக முறை தனக்குச் சேர வேண்டிய மரியாதையை மற்ற விளையாட்டு வீரருக்குச் சாதகமாக வழங்கிய போது தனக்குள் கசப்பையும், வெறுப்பையும் வளர்த்துக் கொள்ளக் கூடும். ஆனால், கிரேமர் அவ்வாறில்லை. அவர் நடந்து கொண்ட விதம், நாம் எவ்வாறு நம்முடைய இருதயத்தை பொறாமையான எண்ணங்களால் கறைபடாதபடி பாதுகாப்பது என்பதை விளக்குகின்றது. “பொறாமையோ எலும்புருக்கி” (நீதி. 14:30) என வேதாகமம் கூறுகின்றது. நமக்குச் சொந்தமல்லாத ஒன்றின்மீது அதிக நாட்டம் உடையவராய், அதனையே சிந்தித்துக் கொண்டு, நாம் பெற்றுள்ள பல நன்மைகளை உணராதிருப்போமாயின் தேவன் தரும் சமாதானத்தை இழந்து விடுவோம்.

பதினொன்றாவது முறை ஜெரி கிரேமர் தேர்வு செய்யப்பட்டபோது, தேசிய கால்பந்து கழகத்தின் மிக உயர்ந்த மரியாதையை பிப்ரவரி 2018ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். நம்முடைய உலக ஆசைகளும் இறுதிவரை நிறைவேற்றப்படாமலிருக்கலாம். தேவன் நமக்கு தாராளமாகத் தந்துள்ள அநேகக் காரியங்களில் நாம் கவனத்தைச் செலுத்துவோமாயின் தேவன் நமக்குத் தரும் அமைதியான இருதயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் எதை அடைய விரும்பினோம், எதை அடையவில்லை என்பது காரியமல்ல, தேவன் நம் வாழ்வில் கொண்டு வரும் சமாதானத்தைப் பெற்று அதில் மகிழ்ச்சியாயிருப்பதே சிறந்த வாழ்வு.

கடினமான இடங்களில் மகிழ்ச்சி

அவளால் எப்பொழுதெல்லாம் தொலைபேசியை எடுக்கமுடியவில்லையோ, அப்பொழுதெல்லாம் என்னுடைய சிநேகிதியின் ஒலிப்பதிவு செய்தி என்னை ஒரு செய்தியை பதிவு செய்யும்படி அழைக்கும். அந்த அழைப்பின் முடிவில் 'இது ஒரு சிறப்பான நாளாக அமையட்டும்' என முடிக்கும். நான் அந்த வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்க்கும்போது, நம்முடைய நாட்களைச் சிறப்பானதாக்கிக் கொள்ளும் வல்லமை நம்மிடமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உண்மையிலேயே சில சந்தர்ப்பங்கள் நம்மை அழிவுக்குள்ளாக்குவதாக இருக்கின்றன. ஆனால், சற்று ஆழமாகப் பார்க்கும்போது, நம்முடைய காரியங்கள் நன்றாகவோ மோசமானதாகவோ போனாலும், ஏதோவொரு விடுவிக்கும் வல்லமை நம்முடைய நாட்களை அழகானதாக்கி விடுகிறது என உணர்கின்றேன்.

ஆபகூக் இலகுவான சூழல்களை மட்டும் சந்திக்கவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசியாகையால் தேவன் வரும்நாட்களில், ஜனங்கள் சார்ந்து வாழ்கின்ற விளைச்சலிலும், கால்நடைகளிலும் பலனில்லாமல் போகும் காலங்களைக் காட்டுகின்றார் (3:17). இக்காலங்களின் கொடுமையைத் தாங்குவதற்கு நம்பிக்கை மட்டுமே உதவமுடியும். ஒரு ஜனக்கூட்டமான இஸ்ரவேலர் கொடுமையான வறுமையை சந்திப்பர் என்பதைக் கேட்ட ஆபகூக்கின் இருதயம் வேதனையடைந்தது. உதடுகள் துடித்தன, கால்கள் பயத்தால் நடுங்கின (வச. 16).

இவையனைத்தும் இருந்தபோதும் ஆபகூக், 'நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்; என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" (வச. 18) என்கின்றார். அவர் தேவன் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். கர்த்தர் தன்னை பெலப்படுத்தி, உயரமான ஸ்தலங்களில் தன்னை நடக்கப்பண்ணுவார் என நம்பிக்கையோடிருக்கின்றார் (வச. 9).

சில வேளைகளில் நாமும் ஆழ்ந்த வேதனைகளையும், கடின வேளைகளையும் கடக்க நேரிடும். ஆனால், எதை இழந்திருந்தாலும், எதை அடையாமற்போனாலும், ஆபகூக்கைப் போன்று நம்முடைய அன்பு தேவனில் களிகூருவோம். நமக்கு ஒன்றுமேயில்லாமல் போனாலும் அவர் நம்மைக் கைவிடுவதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை (எபி. 13:5). அவரே துயரப்படுகிறவர்களுக்கு நன்மையைத் தருபவர், அவரே நம்முடைய மகிழ்ச்சியின் காரணர்
(எபி. 61:3).

நம்முடைய முதலீட்டின் பிரதிபலன்

1995 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பங்கு சந்தையின் முதலீட்டாளர்கள் மிக அதிகமான பலனைப் பெற்றனர். சராசரியாக 37:6 சதவீத அபார பலனைத் தந்தது. 2008 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் அதே அளவு இழப்பைச் சந்தித்தனர். அதாவது 37.0 சதவீதம் இழப்பு. இவற்றிற்கிடையேயுள்ள வருடங்களில் மாறுபட்ட பலன் கிடைத்தது. சந்தையில் பணத்தோடுள்ளவர்கள் சிலவேளைகளில் அதிசயிக்கும் வண்ணமும், சிலவேளை பயப்படும் வகையிலும் இருந்தது.

தங்களுடைய வாழ்வை இயேசுவுக்காக முதலீடு செய்பவர்களுக்கு நம்பமுடியாத அளவு பிரதிபலன் கிடைக்குமென, இயேசு தம் சீடர்களுக்கு உறுதியளித்துள்ளார். அவர்கள், 'எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே" (வச. 28) என்று சொல்லத் தொடங்கினர். தங்கள் வீட்டையும், வேலையையும் அந்தஸ்தையும், குடும்பத்தையும் விட்டுத் தங்கள் வாழ்வை இயேசுவுக்காக முதலீடு செய்தனர் (வச.28). செல்வந்தனான ஒருவன் உலக ஆஸ்தியின் மீதுள்ள பற்றுதலை விட்டுவிட மனதில்லாதிருந்ததைக் கண்டபோது, தங்களுடைய முதலீடும் பலனற்றதாகிவிடுமோ என எண்ணத் தொடங்கினர். இயேசு அவர்களை நோக்கி, யாராகிலும் இயேசுவுக்காக தியாகம் செய்ய தயாராக இருந்தால் அவன், 'இம்மையிலே துன்பங்களோடே கூட நூறத்தனையாக வீடுகளையும் சகோதர சகோதரிகளையும்... மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்" (வச. 30) என்று சொன்னார். இந்த பிரதிபலன் எந்த பங்குச் சந்தையாலும் கொடுக்கக்கூடாத மிகப் பெரிய பலனாகும்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் நம்முடைய முதலீட்டின் வட்டி விகிதத்தைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டாம். தேவன் எதனோடும் ஒப்பிடமுடியாத உறுதியைத் தருகின்றார். பணத்தைக் கொண்டு மிக அதிகமான பொருளாதார லாபத்தைப் பெற நாம் முயற்சிக்கின்றோம். ஆனால், தேவன் நமக்குத் திருப்பித்தருவதோ டாலர் மதிப்புகளால் அளவிட முடியாதவை. அவரை அறிந்து கொள்வதால் வரும் மகிழ்ச்சி இப்பொழுதும், எப்பொழுதும் நிலையானது. அதனை நாம் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியும்.

முற்றிலும் பிரம்மிக்கச் செய்கிறது

என்னுடைய வாழ்வில் அடிக்கடி பரபரப்பையும், வெறித்தனத்தையும் உணருகின்றேன். நான் ஒரு வேலையிலிருந்து மற்றொன்றிற்கு வேகமாக மாறுகிறேன், அவசரமாக அலைபேசி அழைப்புகளில் பேசுவதும், போகின்ற வழியிலேயே. அன்று முடிக்கப்படவேண்டிய வேலைகளின் நீண்டபட்டியலை சரிபார்ப்பதுமாக இருப்பேன். மிகவும் சோர்வடைந்த நிலையில் ஒரு ஞாயிறு, எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள ஊஞ்சல் படுக்கையில் சாய்ந்தேன். என்னுடைய கைப்பேசி வீட்டிலிருந்தது, என்னுடைய குழந்தைகளும் கணவரும் வீட்டிலிருந்தனர். நான் ஒருசில நிமிடங்கள் மட்டுமே உட்கார்ந்து விட்டு செல்லலாம் என்று அங்கு வந்தேன். ஆனால், அங்கிருந்த தடையில்லாத அமைதி, நான் அங்கு கண்ட காட்சிகளை மேலும் மேலும் பார்க்கத் தூண்டியது. என்னுடைய ஊஞ்சல் படுக்கையின் அசைவினால் ஏற்பட்ட மெல்லிய சத்தத்தையும், அருகிலுள்ள லாவண்டர் மலர்களைச் சுற்றிக் கொண்டிருந்த தேனீக்களின் ரீங்காரத்தையும், எனக்கு மேலே பறந்த பறவைகளின் இறக்கையொலியையும் என்னால் கேட்க முடிந்தது. பிரகாசமான நீல வானில், காற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேகங்களையும் கண்டு வியந்தேன்.

தேவன் படைத்த அனைத்தையும் பார்த்தபோது என் கண்கள் கண்ணீரால் நிரம்பிற்று. என் கண்களின் வழியேயும், செவியின் வழியேயும் இத்தனை அதிசயமான காரியங்களைப் பார்க்கவும், கேட்கவும் நான் அதிக நேரத்தைக் கொடுத்தபோது, நன்றி நிறைந்த உள்ளத்தோடு, தேவனுடைய படைப்பின் வல்லமையை வியந்து, ஆராதிக்க ஆரம்பித்தேன். சங்கீதம் 104ஐ எழுதியவரும், தேவனுடைய கரத்தின் கிரியைகளைக் கண்டு வியந்து, தன்னைத் தாழ்த்தி, 'உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது" என்கின்றார் (வச. 13).

ஓர் அவசரமான வாழ்வின் நடுவில், ஓர் அமைதியான நேரம் தேவனுடைய வல்லமையுள்ள படைப்பாற்றலை நம்முடைய நினைவில் கொண்டு வருகிறது. அவருடைய வல்லமையான படைப்பும், அவருடைய மென்மையும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றது. அவரே உயர்ந்த பர்வதங்களையும் பறவைகள் தங்கும் மரக்கிளைகளையும் படைத்தார். 'அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர்" (வச. 24).

மீட்கப்பட்டது

2003 ஆம் ஆண்டு வந்த மோர்மார் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பால் 25 மில்லியன் டாலர் பயிரிழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. ஜனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் 25 மில்லியன் டாலர் பயிரிழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. ஜனங்கள் வெட்டுக்கிளிகளின் மேல் கால்வைக்காமல் ஓர் எட்டு கூட நடக்கக் கூடாதபடி அதன் எண்ணிக்கை மிகவும் பெரியதாயிருந்தது. 1848 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த பச்சை வெட்டுக்கிளிகள் பவுஞ்சுகளாக வந்தபோது, ஒவ்வொரு வெட்டுக்கிளியும் தன் வாழ்நாளில் 38 பவுண்டு தாவரங்களை உண்கின்றன என கணக்கிடப்பட்டது. இவற்றின் படையெடுப்பின் விளைவாக ஒரு விவசாயியின் வாழ்விலும், ஒரு மாநிலம் மற்றும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் பேரழிவு ஏற்பட்டது.

யூதா ஜனங்கள் அனைவரும் கீழ்படியாமற் போனபடியால், இத்தகைய ஒரு பெருங்கூட்டமான பூச்சிகள் யூதா தேசம் முழுவதிலும் இதுவரைக் கண்டிராத அளவு பெரிய நாசத்தை ஏற்படுத்தின என பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி யோவேல் விளக்குகின்றார். அவர் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் குறித்து முன்னறிவித்தார் (வேத வல்லுனர்கள் இதனை ஓர் அந்நிய இராணுவப் படையினருக்குச் சமமானதாகக் குறிப்பிடுகின்றனர்) (யோவேல் 1:2). அந்த வெட்டுக்கிளிகள் தாங்கள் காண்கின்ற யாவற்றையும் நாசமாக்கி, ஜனங்களை பஞ்சத்திற்கும் வறுமைக்கும் உள்ளாக்கின. எனினும் ஜனங்கள் தங்களுடைய பாவ வழியை விட்டுத் திரும்பி தேவனிடம் மன்னிப்பு கேட்கும் போது 'வெட்டுக்கிளிகளும்... பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்" என தேவன் கூறுவதாகத் தெரிவிக்கின்றார்.

யூதாவிடமிருந்து நாமும் ஒரு பாடத்தை கற்றுக் கொள்ளலாம். இந்தப் பூச்சிகளைப் போன்று நம்முடைய தவறுகள் தேவன் நமக்கு வைத்திருக்கின்ற நன்மைகளையும் தேவனுடைய வாசனை வீசும் வாழ்வையும் இழக்கச் செய்கின்றன. நம்முடைய பழைய வாழ்வை விட்டுவிட்டு நாம் தேவனிடம் திரும்பும் போது, தேவன் நம்முடைய வெட்கத்தை மாற்றி அவருக்குள் ஒரு நிறைவான வாழ்வை மீண்டும் தருகின்றார்.

இறுக மூடப்பட்ட கண்கள்

தான் அதனைச் செய்திருக்கக் கூடாதென்று என்னுடைய சகோதரனின் மகனுக்குத் தெளிவாகக் தெரியும். தான் செய்தது தவறு என்பதை அவன் நன்கு புரிந்த கொண்டானென நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அது அவனுடைய முகத்திலேயே தெரிந்தது. அவன் செய்த காரியத்தைக் குறித்து அவனோடு விவாதிக்க அமர்ந்தபோது, அவன் தன் கண்களை மூடிக்கொண்டு, கசக்க ஆரம்பித்தான். அவன் சிறுபிள்ளைத்தனமாகச் செயல்பட்டான். தன் கண்களை மூடிக் கொண்டதால் என்னைக் காண முடியவில்லை, ஆகையால் நானும் அவனைக் காண முடியாதென எண்ணினான். அவன் தன்னை மறைத்துக் கொண்டால், எங்களுடைய விவாதத்தையும் அதன் விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என எண்ணினான்.

நான் அவனை அந்தக் கணத்தில் பார்க்க முடிந்ததால் மகிழ்ச்சியடைந்தேன். அவனுடைய செயலை நான் காணாதது போல விட்டு விட முடியாதாகையால், நாங்கள் அதனைக் குறித்தப் பேசியேயாக வேண்டும். எனவே, எங்களுக்கிடையே எந்த தடையும் வர நான் விரும்பவில்லை. நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன், நான் அவனை முற்றிலும் மன்னிக்க ஆவலாயிருக்கிறேன் என்பதை, அவன் என் முகத்தை முழுவதும் பார்த்து தெரிந்துகொள்ள விரும்பினேன். அப்பொழுதுதான் எனக்குள் அந்த சிந்தனை வந்தது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் தேவனுடைய நம்பிக்கையை இழந்தபோது தேவன் எப்படி உணர்ந்திருப்பார் என்பதைக் குறித்து சிறிது நினைக்கத் தோன்றியது. தங்கள் தவற்றை உணர்ந்து அவர்கள் தேவனுடைய சமூகத்தினின்று விலகி ஒளிந்து கொண்டனர் (ஆதி. 3:10) நான் எனது சகோதரனின் மகனைக் கண்டது போல தேவனும் அவர்களைத் தெளிவாகக் கண்டார்.

நாமும் சில தவறுகளைச் செய்துவிட்டோமென உணரும் போது அதனால் வரும் விளைவுகளைச் சந்திக்க விரும்புவதில்லை. நாமும் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவோ, அதனை மறைத்து விடவோ அல்லது உண்மைக்கு நம் கண்களை மூடிக்கொள்ளவோ எண்ணுவதுண்டு. தேவன் தம்முடைய நீதிக்கு முன்பாக நம்மை கணக்குக் கொடுக்கும்படி நம்மைத் தேடுகின்றார். நம்மைக் காண்கின்றார். ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு மன்னிப்பைக் கொடுக்கின்றார்.

செழிப்பிலும் உபத்திரவங்களிலும்

ஆன் வோஸ்கேம்ப் எழுதிய “ஓராயிரம் கொடைகள்” என்ற புத்தகத்தில் வாசகர்களை தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் தேவன் அவர்களுக்குத் தந்துள்ள நன்மைகளை எண்ணிப் பார்க்குமாறு ஊக்கப்படுத்துவார். அதில் அவள் அநுதினமும் தேவன் அவளுக்குத் தாராளமாகத் தருகின்ற சிறியதும், பெரியதும் - பாத்திரம் கழுவும் தொட்டியில் தோன்றும் வண்ணமிகு நீர்க்குமிழிமுதல் தன்னைப் போன்ற பாவிகளுக்குத் (நமக்கும்!) தரப்பட்ட ஒப்பிடமுடியாத இரட்சிப்புவரையுள்ள வௌ;வேறு கொடைகளைக் குறிப்பிடுகின்றாள். நம் வாழ்வில் மிகவும் கஷ்டம் நிறைந்த நேரத்தில் தேவனைக் காண்பதற்குத் தேவையான திறவுகோல் நன்றியோடுள்ள உள்ளமேயென அவள் குறிப்பிடுகின்றாள்.

நாம் நன்கறிந்த யோபுவின் வாழ்வில் துன்பங்கள் நிறைந்த நேரம் அது. அவனுடைய இழப்புகள் துயரமிகுந்ததாகவும் ஏராளமாகவும் இருந்தன. தனக்கிருந்த எல்லா கால்நடைகளையும், வேலைக்காரரையும் இழந்து நிற்கும் போது, ஒரே நேரத்தில் அவனுடைய பத்து பிள்ளைகளும் மரித்துப்போனார்களென அறிகிறான். யோபுவினுடைய ஆழ்ந்த துயரம் அவனுடைய செயலில் தெரிகிறது. அவன் தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்துக் கொண்டான் (1:20) அந்த வேதனை நேரத்திலும் அவன் கூறிய வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது. அவன் நன்றியுணர்வை வெளிப்படுத்தினான். அவன் இழந்த யாவற்றையும் தேவன் தனக்குத் தந்தார் என தெரிவிக்கின்றான் (வச. 21) ஒன்றும் செய்ய இயலாத அத்தகைய துயரத்தின் மத்தியில் இவ்வாறன்றி, அவன் வேறே எப்படி தேவனை ஆராதிக்க முடியும்?

இழப்பின் காலத்தில் ஏற்படும் வேதனையின் அளவு, நம்முடைய அனுதின நன்றியறிதலால் ஒருபோதும் குறைக்கப்படுவதில்லை. யோபு புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, யோபு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே துயரத்தினூடே கடந்து சென்றான். நம் வாழ்வின் இருண்ட நேரங்களில் சர்வ வல்ல தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு, ஒவ்வொரு சிறிய காரியங்களிலும் தேவன் நமக்குச் செய்த நன்மைகளையெண்ணி, அவரை துதித்துப் போற்ற நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோம்.