மகிழ்ச்சிகரமாக
கடற்காகம் (sea gull) ஒன்று, தன்னுடைய உடைந்து போன காலைச் சுகப்படுத்த உதவிய மனிதனை, பன்னிரண்டு ஆண்டுகளாக அனுதினமும் சந்தித்து வருகின்றது. காலுடைந்த அந்தப் பறவைக்கு நாய் பிஸ்கெட்டுகளைக் கொடுத்து, தன்னிடம் வரவழைத்து, சிகிச்சையளித்து, அதன் காலைச் சரியாக்கினார், அதனைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தார், ஜாண். இந்தப் பட்டணத்தின் சிறிய கடற்கரைக்கு, இப்பறவை கோடைகாலத்தில் மட்டுமே வந்தாலும், அது ஜாணை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடும். ஒவ்வொரு நாளும் ஜாண் கடற்கரைக்கு வந்ததும், அப்பறவை அவனிடம் வந்துவிடும், சாதாரணமாக அது வேறு எவரிடமும் செல்வதில்லை. அது ஒரு வினோதமான உறவை ஜாணிடம் காட்டியது.
இந்த கடற்பறவைக்கும் ஜாணுக்கும் இருந்த இந்த உறவு, மனிதனுக்கும் பறவைக்கும் இடையேயிருந்த மற்றொரு விசித்திர உறவை எனக்கு நினைவுபடுத்துகின்றது. தேவனுடைய தீர்க்கதரிசியான எலியா, ஒரு பஞ்சத்தின் போது, வனாந்தரத்தில், கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிருந்த போது, தேவன் அவனிடம், “அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன்” (1 இரா. 17:3-4). என்றார். கடினமான சுற்றுப் புறமும், சூழல்களும் இருந்தபோதும் எலியாவிற்குத் தேவையான தண்ணீரையும் ஆகாரத்தையும் தேவன் கொடுத்தார். காகங்களுக்கு உணவைக் கொடுக்கக் கூடிய பழக்கம் கிடையாது, அவை தனக்குக் கிடைத்தவற்றை ஒளித்து வைத்து தின்னக்கூடியன, ஆயினும் அவை எலியாவிற்கு முழு உணவைக் கொண்டு வந்து கொடுத்தன.
ஒரு மனிதன் பறவைக்கு உதவியது நம்மை ஆச்சரியப்படுத்த மாட்டாது. ஆனால் பறவைகள் ஒரு மனிதனுக்கு “விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது” எனின், அது தேவனுடைய வல்லமையாலும் பாதுகாப்பால் மட்டுமே முடியும் (வ.6). எலியாவை போல நாமும் நம்முடைய அனுதின தேவைகளுக்கு தேவனையே நம்பி வாழக் கற்றுக் கொள்வோம்.
அண்டைவீட்டார்
அநேக வசிப்பிடங்களைப்போன்று, நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலுள்ளவர்களும் ஒரு வலைதளத்தை உருவாக்கி, அண்டைவீட்டார் அனைவரையும் இணைத்து பயன் படுத்திவருகின்றனர். எங்கள் சமுதாயத்தினர், எங்கள் பகுதியில் தென்படும் காட்டுச் சிங்கங்களைக் குறித்தும், காட்டுத் தீ காரணமாக இடத்தைக் காலி செய்யும்படியான கட்டளை போன்றவற்றை ஒருவருக்கொருவர் தெரிவித்தனர். குழந்தை பராமரிப்பு தேவைபட்டபோது, ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளவும் பயன் படுத்தினர். காணாமல் போன செல்லப் பிராணிகளை கண்டுபிடிப்பதற்கும், இது முக்கியமான மூலமாகச் செயல்படுகிறது. வலைதளத்தின் ஆற்றலால் எங்கள் பகுதியிலுள்ள அனைவரும் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்சமயம், உலகக் காரியங்களில் வேகமாக ஈடுபட்டு வரும் காரணத்தினால், இந்த பயன்பாடும் வெகுவாகக் குறைந்து வருகிறது.
அநேக ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாலமோன் அரசன் காலத்திலும் அருகிலுள்ள ஜனங்களோடு நல்ல உறவு வைத்துக்கொள்வதை முக்கியமாகக் கருதினர். குடும்பங்களோடு நல் உறவு வைத்துக்கொள்வது என்பது ஒருவரையொருவர் தாங்கிப் கொள்ளும் முக்கிய மூலமாகக் கருதப்பட்டது. “ஆபத்துக்காலத்தில்” ஒரு நண்பனின் முக்கியமான பங்கினைக் குறித்து சாலமோன் ராஜா விளக்குகிறார் (நீதி. 27:10). உறவினர்கள் தங்கள் குடும்ப நபர்களின் மீது மிகுந்த கரிசனை கொண்டு, அப்படிப்பட்ட சூழல்களில் உண்மையாய் உதவும்படி எண்ணுவர். ஆனால் அவர்கள் தூரத்தில் இருந்தால், ஆபத்து நேரிடும் காலத்தில் அவர்களால் உதவ முடியாது. சமீபத்திலிருக்கும் அயலானே, அந்நேரத்தின் தேவை என்ன என்பதை வேகமாக உணர்ந்து, உடனடியாக உதவ முடியும்.
உலகெங்கும் பரம்பியிருக்கும் நம்முடைய நேச உறவினர்களோடு தொடர்பு கொள்வதை, நவீன தொழில் நுட்பம் இலகுவாக்கிவிட்ட காரணத்தால் அருகிலிருப்பவர்களோடுள்ள தொடர்பை நாம் தவிர்க்கும்படி தோன்றலாம். இயேசுவே, எங்களுக்கு அருகிலிருக்கும் படி நீர் தந்துள்ள மக்களோடு நாங்கள் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள எங்களுக்கு உதவியருளும்.
இது உனக்கு நல்லது
2016 ஆம் ஆண்டு, உலகெங்குமுள்ள மக்கள் ஏறத்தாள 9800 கோடி ரூபாய்களை சாக்லேட்டுகளுக்காகச் செலவிட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டது. இத்தனை பெரும் தொகை அதிர்ச்சியைத் தருவதாக இருந்தாலும், ஆச்சரியப்படவேண்டாம். சாக்லேட் ஒரு சுவை மிகுந்த பொருள், அதனை நாம் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறோம். அதன் இனிமையை உலகம் முழுமையும் அநுபவித்துள்ளது. இந்த இனிப்பிற்கு, குறிப்பிடத்தக்க சுகாதார நன்மைகளும் உள்ளன. சாக்லேட்டுகளில் ஃபிளாவனாய்டு என்ற பொருள் உள்ளது. இது, உடல் வயதாகுவதைத் தடுக்கிறது, இருதய நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. ஆனால் இதனை மருந்தாக பயன் படுத்தியதாக எங்குமே கேட்டதில்லை. (சிறிதளவு கூட!)
நாம் முதலீடு செய்வதற்கு தகுதி பெற்ற மற்றொரு இனிப்பைக் குறித்து சாலமோன் கூறுகின்றார். அது, ஞானம். அவர் தன்னுடைய மகனிடம், “தேனைச் சாப்பிடு, அது நல்லது.” (நீதி 24:13) என்கின்றார். அதனுடைய இனிமையை ஞானத்திற்கு ஒப்பிடுகின்றார். வேத வாக்கியங்களாகிய ஞானத்தை ஒருவன் உட்கொள்ளும் போது, அது அவனுடைய ஆன்மாவிற்கு இனிமையைத் தருவதோடு, உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் பயன் படுவதோடு, “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும்” ஆக்க உதவுகிறது. அதை நம் வாழ்வில் எப்படியாகிலும் அடைந்து விட வேண்டும். (2 தீமோ 3:16-17)
ஞானம், நம்மை சரியான தீர்மானங்கள் எடுக்க வழிநடத்துவதோடு, நம்மைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இதனை நாம் கண்டடையும்படி, நம் முழு முயற்சியையும் செலவளிக்கத் தகுதியானது. சாலமோன் தன்னுடைய மகனுக்கு கூறுவதைப் போன்று, நாம் நேசிப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் உகந்தது. ஞானம் நிறைந்த வேத வார்த்தைகளை நாம் உட்கொள்ளும் போது, நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது, நம் இருதயத்திற்குத் தெவிட்டாத இனிய விருந்தாக இருக்கிறது, உண்மையில், அது நமக்கு உற்சாகமளிக்கிறது! தேவனே, உம்முடைய வேதம் தரும் இனிமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.
தள்ளப் பட்ட கடன்கள்
2009 ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சலஸ் தேசம், பிள்ளைகளின் சிறையிருப்பிற்கான செலவுத் தொகையை அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து வசூலிப்பதை நிறுத்தியது. புதிதாக கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்றாலும், இந்த கொள்கை மாற்றம் வருவதற்கு முன்பிருந்தே செலுத்தாத தொகை, கடனாகவே இருந்தது. 2018 ஆம் ஆண்டு, அத்தேசம், எல்லா கடன் தொகைகளையும் ரத்து செய்தது.
இவ்வாறு, கடனை ரத்து செய்தது, பிழைப்பதற்குப் போராடிக் கொண்டிருந்த சில குடும்பங்கள் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. அவர்களின் சொத்துக்கள் அல்லது கூலியின் மீதிருந்த கடன் சுமை நீக்கப்பட்டதால், அவர்களின் அனுதின சாப்பாட்டிற்கு ஒரு வழி பிறந்தது. இத்தகைய கஷ்டங்களினாலேயே, தேவனாகிய கர்த்தர், ஏழாம் வருஷத்தின் முடிவில் கடன் யாவையும் விடுதலை பண்ணும் படி சொல்கின்றார். (உபா. 15:2). கடன் சுமையால் ஜனங்கள் குறுகிப் போவதை தேவன் விரும்பவில்லை.
தன் ஜனங்களில் சிறுமைப் பட்டிருந்த ஒருவனுக்குப் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், அவனிடத்தில் வட்டி வாங்க வேண்டாம் என (யாத்திராகமம் 22:25) கூறுகின்றது. தனக்கு சரியான விளைச்சல் இல்லாததினால், கஷ்டத்தை அநுபவிக்கின்ற தன்னுடைய அயலானுக்கு உதவும் படி கொடுக்கின்ற கடன் தொகையில், லாபம் சம்பாதிக்க எண்ண வேண்டாம். ஒவ்வொரு ஏழு ஆண்டுகளிலும் கடனை முற்றிலும் விட்டு விடுவாயாக, எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும் படியாக இப்படிச் செய்ய வேண்டும் என்கின்றார். (உபா. 15:4).
இந்நாட்களில், இயேசுவின் விசுவாசிகள் கூட இந்த கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. கடன் நிமித்தம் போராடிக்கொண்டிருப்பவர்களும் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழும்படி, அவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்யும் படி, தேவன் அவ்வப்போது நம்மை தூண்டிக்கொண்டேயிருக்கின்றார். நாம் இத்தகைய கருணையையும், தாராள குணத்தையும் மற்றவர்களுக்கு காண்பிக்கும் போது, நாமும் தேவனுடைய குணத்தைப் பிரதிபலித்து, மற்றவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பவர்களாகின்றோம்.
பந்தயப் பொருளைக் குறிவைத்தல்
1994 ஆம் வருடம் வெளியான “ஃபோரெஸ்ட் கம்ப்” என்ற துப்பறியும் திரைப்படத்தில் வரும், ஃபோரெஸ்ட் ஒட்டத்தின் மூலம் பிரபல்லமானார். அவர் சிறிய ஓட்டத்தைத் துவக்கினார், நாளடைவில் 3 வருடங்கள், 2 மாதங்கள், 14 நாட்கள், 16 மணி நேரம் தொடர்ந்து ”சாலையின் கடைசிவரை” ஓடி முடித்தார். ஒவ்வொரு முறையும் அவர் இலக்கினை அடையும் போது, மற்றொரு இலக்கினை நிர்ணயித்து, தொடர்ந்து ஓடுவார். அமெரிக்கா தேசத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓடி, இதுவரை நினையாத அளவு ஓடினார். ‘ஏதோ செய்ய வேண்டும் “ என்பதாக ஆரம்பித்தது அந்த ஓட்டம். “அன்றைய தினம், எந்தவொரு நோக்கமும் இல்லாமல், ஒரு சிறிய தொலைவு ஓட ஆரம்பித்தேன் “ என்றார் ஃபோரெஸ்ட்.
எந்த நோக்கமும் இல்லாமல் ஓடிய ஃபோரெஸ்ட்டைப் போல்லல்லாமல், அப்போஸ்தலனாகிய பவுல் “பந்தயப் பொருளை பெற்றுக்கொள்ளத் தக்கதாக ஓடுங்கள்” (1 கொரி. 9:24) என்று வாசகர்களை, தன்னை மாதிரியாகப் பின் பற்றச் சொல்கின்றார். பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களைப் போன்று ஓட்டத்தில், அதாவது வாழ்க்கையாகிய ஓட்டத்தில், நாமும் சில உலக சிற்றின்பங்களை வேண்டாம் என ஒதுக்கி விட வேண்டும். நம்முடைய உரிமைகளை விட்டுக் கொடுக்க நாம் முன் வரும் போது, அது, நாம் மற்றவர்களுக்கு பாவத்திலிருந்து மீட்பு, நித்திய வாழ்வு ஆகிய நற்செய்திகளை கொடுக்க உதவியாயிருக்கும்.
இந்த இலக்கை நோக்கி நம்மோடு ஓட , நாம் மற்றவர்களையும் அழைக்கும் படி நம் இருதயத்தையும், மனதையும் ஆயத்தப்படுத்தும் போது, நமக்கும் அந்த பந்தயப்பொருள் நிச்சயமாகக் கிடைக்கும். நாம் தேவனோடு, நித்திய காலமாக வாழுவோம். நம் ஓட்டத்தை முடிக்கும் போது, தேவன் நமக்கு வழங்கும் கிரீடம் என்றென்றும் அழியாதது. அவரை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு அவர் தரும் பெலத்தோடே நாம் ஓடும் போது, பந்தயப் பரிசை பெற்றுக்கொள்வோம். இது, ஓடுவதற்கு என்ன அருமையான காரணம் !
தெருப் பணியாளர்களோடு சேர்ந்து கொள்
சான் பிரான்ஸிஸ்கோ நகரின் சுகாதார பணியாளர்கள், போதை மருந்துக்கு அடிமையாகி, வீடற்று, தெருக்களில் வசிப்போருக்கு, மருத்துவ உதவியளித்து அவர்கள், தங்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபட உதவினர். வீடற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இது ஆரம்பிக்கப்பட்டது. சாதாரணமாக நோயாளிகளைச் சந்திக்கும்படி, மருத்துவர்கள், தங்கள் மருத்துவ மனையில் காத்திருப்பர். ஆனால் இங்கு, நோயாளிகள் மருத்துவரைத் தேடிச் செல்லத் தேவையில்லை, அவரைச் சந்திக்கும் நேரத்தை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டிய அவசியமுமில்லை. மருத்துவ உதவி, பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வரும்.
இந்த சுகாதார பணியாளர்கள், விருப்பத்தோடு பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வரும் காட்சி, இயேசு கிறிஸ்துவும் நம்முடைய தேவைகளில் நம்மைத் தேடி வந்ததை நினைவுப்படுத்துகின்றது. அந்நாட்களில் மதத் தலைவர்கள் யாரைப் புறக்கணித்தார்களோ, அவர்களையே, இயேசு தம் பணிக்காலத்தில் தேடி வந்தார், “அவர் ஆயக்காரரோடும், பாவிகளோடும்’’ உணவருந்தினார், (வச. 16) அவர் ஏன் இப்படிச் செய்கிறாரெனக் கேட்டபோது, “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ள வர்களுக்கு வேண்டியதில்லை” என்றார். (வச. 17) மேலும் அவர், நீதிமான் களையல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன், என்றார்
நாம் சுகவீனராக, நமக்கொரு மருத்துவர் தேவையென உணரும்போது, (ரோம. 3:10) இயேசு விருப்பத்தோடு “ஆயக்காரோடும், பாவிகளோடும்” போஜனம் பண்ணினதையும், அவர் நம்மையும் சந்திக்க ஆர்வமாயிருப்பதையும் ஏற்றுக்கொள்வோம். அந்த சான் பிரான்சிஸ்கோ நகரின் சுகாதாரப் பணியாளர்களைப் போன்று, தேவன் நம்மையும் தெரு பணியாளர்களாக நியமித்துள்ளார். நாம், அவர் தரும் மீட்பின் செய்தியை தேவையிருப்போருக்கு எடுத்துச்செல்வோம்.
உண்மை: கசப்பா? அல்லது இனிப்பா?
என்னுடைய மூக்கின் மேல்பகுதியில் அநேக மாதங்களாக ஒரு கட்டி இருந்தது. நான் மருத்துவரை அணுகினேன். அந்தப் பகுதியின் திசு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு சில நாட்களில் கிடைத்தது. அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது தோல் புற்றுநோய். அந்த நோயை குணப்படுத்த முடியுமென்றாலும், அதனால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லையென்றாலும் அந்தச் செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
தேவன் எசேக்கியேலிடம் ஒரு கசப்பான மருந்தை, அதாவது புலம்பல்களும், தவிப்பும் நிறைந்த வார்த்தைகள் அடங்கிய ஒரு புத்தகச் சுருளை விழுங்கச் சொல்கின்றார் (எசே. 2:10; 3:1-2). அவன் அதை உட்கொண்டு, வயிற்றை நிரப்பி, பின்னர் அந்த வார்த்தைகளை கடின முகமும், முரட்டாட்ட இருதயமும் (2:4) உள்ள இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசும்படி சொல்கின்றார். கர்த்தருடைய வார்த்தைகளடங்கிய ஒரு புத்தகச் சுருள் சாப்பிடுவதற்கு கசப்பான மருந்து போல இருக்கும் என்று தான் யாரும் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் எசேக்கியேல், “அது என் வாய்க்கு தேனைப்போல் தித்திப்பாயிருந்தது” என்கின்றார் (3:3).
தேவன் தரும் எச்சரிப்பு எசேக்கியேலுக்கு இனிமையாக இருந்தது. அவருடைய கடிந்துகொள்ளுதலை அவன் வெறுப்போடு பார்க்காமல், அதனை தன் ஆன்மாவுக்கு “இனிமை”யானதாக எடுத்துக்கொண்டான். தேவன் நமக்கு அன்போடும், கருணையோடும் எச்சரிப்பைக் கொடுத்து நம்மைத் திருத்திக் கொண்டு, அவரை கனப்படுத்தி, பிரியப்படுத்தி வாழ உதவி செய்கின்றார்.
சில உண்மைகள், விழுங்குவதற்கு கசப்பான மருந்தாகத் தோன்றும். சில நமக்கு தேனைப்போல இனிமையாயிருக்கும். தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால், அவருடைய உண்மை நமக்கு தேனைப்போல இனிமையாயிருக்கும். அவருடைய வார்த்தைகள் நமது நலனுக்காக கொடுக்கப்படுகின்றன. அவை நமக்கு ஞானத்தையும், பிறரை மன்னிக்க பெலனையும் தந்து ,வீண் பேச்சுகளிலிருந்து நம்மை விலக்கிக் காக்கும். சோதனையைச் சகிக்க பெலன் தரும். தேவனே, உம்முடைய ஞானம், இனிமையான ஆலோசனை என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியருளும்.
நீலக் கோடுகள்
கீழ் நோக்கிய பனிச் சறுக்கலில், பாதையைக் குறிப்பிட நீல வண்ணப் பட்டைகள் வெண்மையான பனியின் மீது தீட்டப்படும். விகற்பமான வளைவுகள் கவனச் சிதறலை ஏற்படுதுவது போல பார்வையாளர்களுக்குத் தோன்றினாலும், பங்கு பெறும் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கும், வெற்றிக்கும் அது முக்கியமானதாக அமைகின்றது. வீரர்கள் வேகமாக மலையடிவாரத்தையடைய அந்த வண்ணப் பட்டை ஒரு வழிகாட்டியாக செயல்படுகின்றது. வெண்பனியில் வரையப்பட்ட தெளிவான கோடுகள் வீரர்கள் சரியான பாதையைக் காண உதவுகின்றது. மிக வேகமாகச் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பிற்கும், மேடு பள்ளங்களைச் சரியாகக் கவனித்து, பாதுகாப்பாகச் செல்லவும் இத்தகைய வண்ணக் கோடுகள் உதவுகின்றன.
வாழ்க்கையாகிய ஓட்டத்தில், பாதுகாப்பாக ஓடுவதற்கு ஞானத்தைத் தேடும்படி தன் மகன்களை சாலமோன் வற்புறுத்துகின்றார். நீலக் கோடுகளைப் போல் ஞானம் அவர்களின் வாழ்வை நேரானப் பாதையில் அழைத்துச் செல்லும். அவர்கள் தடுமாறி விழாதபடி காத்துக் கொள்ளும் என்கின்றார் (நீதி. 4:11-12) தேவன் தரும் ஞானத்தை விட்டு விலகாமல் வாழ்ந்தால், அவர்கள் செல்வ வாழ்வை அநுபவிக்கலாம் என்பது அவர்களின் தந்தையின் ஆழ்ந்த நம்பிக்கை.
நம்முடைய அன்புத் தந்தையாகிய தேவன் நமக்கு “நீலக் கோடு” வழிகாட்டியாக வேதாகமத்தைத் தந்துள்ளார். இவ்வுலகில் நாம் எங்கு வேண்டுமானாலும் சறுக்கி விளையாட உரிமையைத் தந்துள்ளார். வேதத்தின் வழியாக அவர் தரும் ஞானம் சறுக்குதலுக்கு வழிகாட்டியாக செயல் படுகின்றது அதைக் கண்டுபிடிப்பவர்கள் வாழ்வடைவர். (வச. 22). நாம் தீமையை விட்டு விலகி, தேவனோடு நடப்போமாகில் அவருடைய நீதி, நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டும். நம் கால்கள் வழுவாதபடி அவை நம்மை காத்து ஒவ்வொரு நாளும் நாம் முன்னேறிச் செல்ல, அவை நம்மை வழி நடத்தும் (வச. 12,18)
ஒன்றினை சொந்தமாக்கிக்கொண்ட மனிதனைக் கேளுங்கள்
1900களின் ஆரம்பத்தில் பேக்கார்ட் மோட்டார் கார் கம்பெனி ஒரு வாக்கியத்தை உருவாக்கி, வாங்குபவர்களை ஊக்குவித்தது. அது என்னவெனில், 'ஒன்றினை சொந்தமாகக்கொண்ட மனிதனைக் கேளுங்கள்" என்பதே. இது ஒரு வல்லமையான வாக்கியமாக அந்நாளில் திகழ்ந்தது. அது அந்தக் கார் கம்பெனியின் நன்மதிப்பை அதிகரித்து, அந்தக் காலகட்டத்தில் மிக உயர்ந்த, மற்றும் விலையுயர்ந்த காரினை உருவாக்குகின்ற கம்பெனியாய் உயர்த்தியது. இந்த பேக்கார்ட் கார் கம்பெனியின் எண்ணம் என்னவென்றால், கார் வாங்கின தனிப்பட்ட மனிதனின் சாட்சியானது கேட்பவர்களை உற்சாகமூட்டும் எனவும், தன்னுடைய நண்பன் தான் வாங்கின ஒருபொருளைக் குறித்த திருப்தியானது, ஒரு சக்தி மிகுந்த ஆதரவு என்று நினைத்தது.
தேவனோடு நமக்கு உள்ள நெருக்கமான உறவினை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது என்பது மற்றவர்கள் மீது நல்லதொரு தாக்கத்தை உருவாக்குகிறது. தேவன், நம்முடைய நன்றிகளையும் மகிழ்ச்சியையும் அவரோடு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். (சங். 66:1) சங்கீதக்காரன், தன் சங்கீதத்தில், தன் பாவத்திலிருந்து முற்றிலுமாக திரும்பினபோது, தேவன் தனக்கு அளித்த மன்னிப்பினைக் குறித்து மிகவும் வாஞ்சையோடு பகிர்ந்து கொள்ளுகிறார் (வச. 18-20).
வரலாற்றிலே தேவன் மகத்துவமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். உதாரணமாக, செங்கடலை இரண்டாகப் பிளந்தது (வச. 6). அவர் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் மகத்துவமான காரியங்களைச் செய்கிறார். அதன்மூலம் நம் பாடுகளின் மத்தியில் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவரை நமக்குக் கொடுத்து, அவருடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார். நம்முடைய அன்றாடத் தேவைகளையும் அவர் சந்திக்கிறார். நாம் இப்படிப்பட்ட சொந்த அனுபவங்களில் தேவனுடைய இடைப்படுதலைக் குறித்து, மற்றவர்களிடம் கூறும் பொழுது, நாம் மற்றெல்லா காரியங்களையும் விட விலையுயர்ந்த காரியத்தினை அவர்களுக்கு கொடுக்கிறோம் - நாம் தேவனுடைய நன்மைகளை உணர்ந்தவர்களாய் மற்றவர்களையும் அவர்களுடைய வாழ்விற்கான பயணத்தில் அவர்களை உற்சாகப்படுத்துகிறவர்களாயும் காணப்படுவோம்.