எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெவின் எம். வில்லியம்ஸ்கட்டுரைகள்

பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாா்

விமானப் பணிப்பெண் ஒருவர் உள்நாட்டு விமானத்திற்கான தனது முன்னோட்டச் சோதனைகளை மேற்கொண்டபோது, ​​ஒரு பயணி ஒருவர், பயணத்தைப் பற்றி கவலையுடனும் பயத்துடனும் இருப்பதைக் கண்டார். அவளுக்கு அருகே அமர்ந்து, அவள் கையைப் பிடித்து, விமானச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கி, அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று அவளைச் சமாதானப்படுத்தினார். "நீங்கள் ஒரு விமானத்தில் ஏறினால், அதின் காரியம் எங்களைப் பற்றியது அல்ல, அது உங்களைப் பற்றியது. உங்களுக்குச் சௌகரியமாக இல்லை என்றால்,  'என்னவாயிற்று? என்னால் ஏதாவது செய்ய முடியுமா?’ என்று நான் உதவ விரும்புகிறேன்” என்றார்.  இந்த கரிசனையான அக்கறை, தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகப் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்று இயேசு சொன்னதைப் பற்றிய ஒரு சித்திரமாக இருக்கலாம்.

கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவை ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது, ஆனால் அது சீடர்களின் இதயங்களில் உணர்ச்சி பெருக்கத்தையும் ஆழ்ந்த துக்கத்தையும் உருவாக்கும் (யோவான் 14:1). எனவே உலகில் தனது பணியை நிறைவேற்ற அவர்கள் தனித்து விடப்பட மாட்டார்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை” (வ. 16), அவர் அவர்களுடன் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். ஆவியானவர் இயேசுவை குறித்து சாட்சி கொடுத்து, கிறிஸ்து செய்த மற்றும் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுவார் (வ. 26). கடினமான காலங்களில் அவர்கள் அவரால் "ஆறுதல்" (அப்போஸ்தலர் 9:31) அடைவர்.

இந்த வாழ்க்கையில் அனைவரும் (கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் உட்பட) கவலை, பயம் மற்றும் துக்கத்தின் கொந்தளிப்பை அனுபவிப்பார்கள். ஆனால் அவர் இல்லாத நிலையில், நமக்கு ஆறுதல் அளிக்கப் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று அவர் வாக்களித்துள்ளார்.

கசக்கும் திருடப்பட்ட இனிப்பு

ஜெர்மானிய தேசத்தில் இருபது டன்களுக்கும் அதிகமான சாக்லேட் நிரப்பப்பட்ட டிரக்கின் குளிரூட்டப்பட்ட டிரெய்லரை திருடர்கள் திருடிச் சென்றனர். திருடப்பட்ட இனிப்பின் மதிப்பிடப்பட்ட  தொகை 80,000 டாலர்கள் (சுமார் 66 லட்சம்). வழக்கத்திற்கு மாறாக யாராவது அதிகப்படியான சாக்லேட்டுகளை விநியோகிப்பது தெரிந்தால், உடனடியாக அதைப் புகாரளிக்க உள்ளுர் காவல்திறையினர் கேட்டுக்கொண்டனர். பெரிய அளவிலான இனிப்புகளைத் திருடியவர்கள் பிடிபட்டு வழக்குத் தொடரப்பட்டால் அவர்கள் கசப்பான மற்றும் திருப்தியற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

நீதிமொழிகள் இந்தக் கொள்கையை உறுதிப்படுத்துகின்றன: “வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்” (20:17). வஞ்சகமாகவோ அல்லது தவறாகவோ நாம் பெற்றுக்கொண்ட விஷயங்கள் முதலில் தற்காலிக இன்பத்தையளிக்கும் வகையில் இனிமையாகத் தோன்றலாம். ஆனால் சுவையானது இறுதியில் மாறிவிடும். மேலும் நம்முடைய தவறான செய்கை நம்மை சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். குற்ற உணர்வு, பயம், பாவம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகள், நம் வாழ்க்கையையும் நற்பெயரையும் அழித்துவிடும். “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” (வச. 11). நம்முடைய வார்த்தை மற்றும் செயல்கள் நமது சுயநல ஆசைகளை வெளிப்படுத்தாமல், தூய்மையான தேவனுடையஇருதயத்தை பிரதிபலிக்கட்டும். 

நாம் சோதிக்கப்படும்போது, அவருக்கு உண்மையாய் செயல்படுவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துபடிக்கு அவரிடத்தில் விண்ணப்பிக்கலாம். நம்முடைய தற்காலிக இன்பத்திற்கு நம்மை அடிபணியச் செய்யாமல், நிரந்திர மகிமைக்கு நம்மை நடத்திச்செல்லும்படிக்கு அவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கலாம். 

 

தேவன் கறைகளைக் கழுவுகிறார்

நாம் குடிக்கும் பானங்கள் சிந்தி கறைபடியும் நம்முடைய துணியானது அதுவாகவே தன்னை சுத்தப்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும்? பிபிசி செய்தியின்படி, சீன ஆய்வளார்கள் துணியின் மீது பூசப்படும் ஒருவிதமான பூச்சை கண்டுபிடித்தனர், “புறஊதா விளக்குகளில் காண்பிக்கும்போது, பருத்தி உடைகள், கறைகளையும், துர்நாற்றத்தையும் தானே சுத்திகரித்துக் கொள்ளுமாம்.” தானே சுத்திகரித்துக் கொள்ளும் துணிகளின் பாதிப்புகள் உங்களுக்குத் தெரிகிறதா?

தானே சுத்திகரித்துக் கொள்ளும் மேற்பூச்சு, கறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், கறைபடிந்த உள்ளத்தை தேவனால் மட்டுமே சுத்திகரிக்க முடியும். பண்டைய யூதேயா ஜனங்கள் கறை படிந்தவர்களாய், விக்கிரக ஆராதனைக்கு தங்களை உட்படுத்தி, தேவனுக்கு புறமுதுகைக் காட்டினதினால் தேவன் அவர்கள் மீது கோபங்கொள்ளுகிறார் (ஏசாயா 1:2-4). அத்துடன் அவர்கள் தங்களை சுத்திகரித்துக் கொள்வதற்கு பலிகளை செலுத்தி, தூபங்காட்டி, பல்வேறு ஜெபங்களை ஏறெடுத்து, சபைக்கூடி வருதலையும் ஆசரித்து, நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றனர் (வச.12-13). அதற்கு தீர்வு, அவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி, தங்கள் உள்ளத்தில் இருக்கும் பாவகறைகளை பரிசுத்தமும் அன்புமான தேவனிடத்தில் கொண்டு வரவேண்டும். அவருடைய கிருபை அவைகளை சுத்திகரிக்கும். அவைகள் “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” (வச.18). 

நாம் பாவம் செய்யும்போது, அதுதானாகவே தன்னை சுத்திகரித்துக்கொள்ளாது. மனந்திரும்புதலின் இருதயத்தோடும், தாழ்மையோடும் நம்முடைய பாவத்தை நாம் அறிக்கையிட்டு அவற்றை சுத்திகரிக்கும் தேவனுடைய பரிசுத்த ஒளியிடத்தில் சமர்பிக்க வேண்டும். அவைகளிலிருந்து விடுபட்டு தேவனிடத்திற்கு திரும்ப வேண்டும். நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கும் வல்லமை கொண்ட ஒரே தேவன், நமக்கு மன்னிப்பை அருளி, அவரோடு ஒப்புவரவாகும்படி செய்வார். 

பழிவாங்காதீர்கள்

2011ல் நடந்த விளம்பர நிகழ்வின்போது, இரண்டு 73 ஆண்டுகள் கடந்த முன்னாள் கனடியன் கால்பந்தாட்ட லீக் ஆட்டக்காரர்கள், மேடையிலேயே சண்டைபோட்டுக் கொண்டனர். 1963ல் அவர்கள் விளையாடிய ஆட்டத்திற்கான மதிப்பெண் விவகாரத்தில் அவர்களுக்குள் திருப்தியில்லை. ஆட்டக்காரர் ஒருவர் மேடையிலே அடுத்தவரை இடித்தபோது, கூட்டத்தினர் “விட்டுவிடுங்கள் போகட்டும்” என்று கூறினர். பழிவாங்குகிற எண்ணங்களை விட்டுவிடுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். 

பழிவாங்குகிற எண்ணம் கொண்ட பலரைக் குறித்து வேதம் சொல்லுகிறது. தேவன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக் கொண்டதால், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலின் மீது எரிச்சலுற்றான் (ஆதியாகமம் 4:5). இந்த வெறுப்பு அதிகமாகி அது கொலையில் போய் முடிந்தது. “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி அவனைக் கொலை செய்தான்” (வச. 8). “ஏசா யாக்கோபைப் பகைத்து...” ஏனென்றால் யாக்கோபு ஏசாவுக்கு உரிய சேஷ்டபுத்திர பாகத்தை திருடிக்கொண்டான். இந்த வெறுப்பு மிகவும் ஆழமாக இருந்ததால் யாக்கோபு தன் உயிருக்கு பயந்து ஓடினான்.

வேதாகமம் பழிவாங்குதலை செயல்படுத்திய பல உதாரணங்களை முன்வைத்தாலும், அந்த வெறுப்பை அழிக்கும் வழிகளையும், மன்னிப்பையும், ஒப்புரவாகும் வழிமுறைகளையும் அறிவுறுத்துகிறது. பிறரிடம் அன்புகூர தேவன் நம்மை அழைக்கிறார் (லேவியராகமம் 19:18). நம்மை அவமானப்படுத்துபவரையும் காயப்படுத்துபவரையும் மன்னிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும், அனைவரிடமும் சமாதானத்தோடு வாழவும், பழிவாங்குதலை தேவனிடம் விட்டுவிடவும், தீமையை நன்மையால் மேற்கொள்ளவும் (ரோமர் 12:18-21) தேவன் நமக்கு அறிவுறுத்துகிறார். அவருடைய வல்லமையால் இன்றே நாம் பழிவாங்குகிற எண்ணத்தையும் பகையையும் அழிப்போமாக. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் உன்னை மறப்பதில்லை

நான் சிறுவயதில் தபால் தலைகளை சேகரித்தேன். எனது பொழுதுபோக்கைப் பற்றி கேள்விப்பட்ட என் தாத்தா, தினமும் தனது அலுவலகத் தபாலில் இருந்து தபால் தலைகளைச் சேமிக்கத் தொடங்கினார். நான் என் தாத்தா பாட்டியை சந்திக்கும் போதெல்லாம், பலவிதமான அழகான முத்திரைகள் நிரப்பப்பட்ட ஒரு உறையை என்னிடம் கொடுப்பார். “நான் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன” என்று ஒருமுறை என்னிடம் கூறினார். 
பாசத்தை வெளிப்படையாய் காண்பிக்கும் திறன் தாத்தாக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் அவருடைய அன்பை ஆழமாக உணர்ந்தேன். எல்லையற்ற ஆழமான வழியில், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று சொன்னதினிமித்தம் தேவன் இஸ்ரவேலின் மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். விக்கிரகாராதனைக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாபிலோனில் துன்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள், “ஆண்டவர் என்னை மறந்தார்” (வச. 14) என்று புலம்பினர். ஆனால் தம்முடைய ஜனங்கள் மீதான கர்த்தருடைய அன்பு மாறவில்லை. அவர் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுசீரமைப்பையும் உறுதியளித்தார் (வச. 8-13). 
“என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இன்று நமக்கும் அப்படியே சொல்கிறார். அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்கையில், அது நம்மீதான அன்பையும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் விரிந்திருக்கும் இயேசுவின் ஆணியடிக்கப்பட்ட தழும்புகள் நிறைந்த கைகளை மிகவும் ஆழமாக நினைவூட்டுகிறது (யோவான் 20:24-27). என் தாத்தாவின் தபால் தலைகள் மற்றும் அவரது மென்மையான வார்த்தைகள் போல, தேவன் மன்னிக்கும் தனது கரத்தை அவரது அன்பின் நித்திய அடையாளமாக நீட்டினார். அவருடைய என்றும் மாறாத அன்பிற்காக அவருக்கு நன்றி சொல்வோம். அவர் நம்மை என்றும் மறக்கமாட்டார். 

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.  
எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.  
இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம். 

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை.