Kevin Williams | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெவின் எம். வில்லியம்ஸ்கட்டுரைகள்

பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாா்

விமானப் பணிப்பெண் ஒருவர் உள்நாட்டு விமானத்திற்கான தனது முன்னோட்டச் சோதனைகளை மேற்கொண்டபோது, ​​ஒரு பயணி ஒருவர், பயணத்தைப் பற்றி கவலையுடனும் பயத்துடனும் இருப்பதைக் கண்டார். அவளுக்கு அருகே அமர்ந்து, அவள் கையைப் பிடித்து, விமானச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கி, அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று அவளைச் சமாதானப்படுத்தினார். "நீங்கள் ஒரு விமானத்தில் ஏறினால், அதின் காரியம் எங்களைப் பற்றியது அல்ல, அது உங்களைப் பற்றியது. உங்களுக்குச் சௌகரியமாக இல்லை என்றால்,  'என்னவாயிற்று? என்னால் ஏதாவது செய்ய முடியுமா?’ என்று நான் உதவ விரும்புகிறேன்” என்றார்.  இந்த கரிசனையான அக்கறை, தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகப் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்று இயேசு சொன்னதைப் பற்றிய ஒரு சித்திரமாக இருக்கலாம்.

கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவை ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது, ஆனால் அது சீடர்களின் இதயங்களில் உணர்ச்சி பெருக்கத்தையும் ஆழ்ந்த துக்கத்தையும் உருவாக்கும் (யோவான் 14:1). எனவே உலகில் தனது பணியை நிறைவேற்ற அவர்கள் தனித்து விடப்பட மாட்டார்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை” (வ. 16), அவர் அவர்களுடன் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். ஆவியானவர் இயேசுவை குறித்து சாட்சி கொடுத்து, கிறிஸ்து செய்த மற்றும் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுவார் (வ. 26). கடினமான காலங்களில் அவர்கள் அவரால் "ஆறுதல்" (அப்போஸ்தலர் 9:31) அடைவர்.

இந்த வாழ்க்கையில் அனைவரும் (கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் உட்பட) கவலை, பயம் மற்றும் துக்கத்தின் கொந்தளிப்பை அனுபவிப்பார்கள். ஆனால் அவர் இல்லாத நிலையில், நமக்கு ஆறுதல் அளிக்கப் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று அவர் வாக்களித்துள்ளார்.

கசக்கும் திருடப்பட்ட இனிப்பு

ஜெர்மானிய தேசத்தில் இருபது டன்களுக்கும் அதிகமான சாக்லேட் நிரப்பப்பட்ட டிரக்கின் குளிரூட்டப்பட்ட டிரெய்லரை திருடர்கள் திருடிச் சென்றனர். திருடப்பட்ட இனிப்பின் மதிப்பிடப்பட்ட  தொகை 80,000 டாலர்கள் (சுமார் 66 லட்சம்). வழக்கத்திற்கு மாறாக யாராவது அதிகப்படியான சாக்லேட்டுகளை விநியோகிப்பது தெரிந்தால், உடனடியாக அதைப் புகாரளிக்க உள்ளுர் காவல்திறையினர் கேட்டுக்கொண்டனர். பெரிய அளவிலான இனிப்புகளைத் திருடியவர்கள் பிடிபட்டு வழக்குத் தொடரப்பட்டால் அவர்கள் கசப்பான மற்றும் திருப்தியற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

நீதிமொழிகள் இந்தக் கொள்கையை உறுதிப்படுத்துகின்றன: “வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்” (20:17). வஞ்சகமாகவோ அல்லது தவறாகவோ நாம் பெற்றுக்கொண்ட விஷயங்கள் முதலில் தற்காலிக இன்பத்தையளிக்கும் வகையில் இனிமையாகத் தோன்றலாம். ஆனால் சுவையானது இறுதியில் மாறிவிடும். மேலும் நம்முடைய தவறான செய்கை நம்மை சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். குற்ற உணர்வு, பயம், பாவம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகள், நம் வாழ்க்கையையும் நற்பெயரையும் அழித்துவிடும். “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” (வச. 11). நம்முடைய வார்த்தை மற்றும் செயல்கள் நமது சுயநல ஆசைகளை வெளிப்படுத்தாமல், தூய்மையான தேவனுடையஇருதயத்தை பிரதிபலிக்கட்டும். 

நாம் சோதிக்கப்படும்போது, அவருக்கு உண்மையாய் செயல்படுவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துபடிக்கு அவரிடத்தில் விண்ணப்பிக்கலாம். நம்முடைய தற்காலிக இன்பத்திற்கு நம்மை அடிபணியச் செய்யாமல், நிரந்திர மகிமைக்கு நம்மை நடத்திச்செல்லும்படிக்கு அவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கலாம். 

 

தேவன் கறைகளைக் கழுவுகிறார்

நாம் குடிக்கும் பானங்கள் சிந்தி கறைபடியும் நம்முடைய துணியானது அதுவாகவே தன்னை சுத்தப்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும்? பிபிசி செய்தியின்படி, சீன ஆய்வளார்கள் துணியின் மீது பூசப்படும் ஒருவிதமான பூச்சை கண்டுபிடித்தனர், “புறஊதா விளக்குகளில் காண்பிக்கும்போது, பருத்தி உடைகள், கறைகளையும், துர்நாற்றத்தையும் தானே சுத்திகரித்துக் கொள்ளுமாம்.” தானே சுத்திகரித்துக் கொள்ளும் துணிகளின் பாதிப்புகள் உங்களுக்குத் தெரிகிறதா?

தானே சுத்திகரித்துக் கொள்ளும் மேற்பூச்சு, கறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், கறைபடிந்த உள்ளத்தை தேவனால் மட்டுமே சுத்திகரிக்க முடியும். பண்டைய யூதேயா ஜனங்கள் கறை படிந்தவர்களாய், விக்கிரக ஆராதனைக்கு தங்களை உட்படுத்தி, தேவனுக்கு புறமுதுகைக் காட்டினதினால் தேவன் அவர்கள் மீது கோபங்கொள்ளுகிறார் (ஏசாயா 1:2-4). அத்துடன் அவர்கள் தங்களை சுத்திகரித்துக் கொள்வதற்கு பலிகளை செலுத்தி, தூபங்காட்டி, பல்வேறு ஜெபங்களை ஏறெடுத்து, சபைக்கூடி வருதலையும் ஆசரித்து, நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றனர் (வச.12-13). அதற்கு தீர்வு, அவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி, தங்கள் உள்ளத்தில் இருக்கும் பாவகறைகளை பரிசுத்தமும் அன்புமான தேவனிடத்தில் கொண்டு வரவேண்டும். அவருடைய கிருபை அவைகளை சுத்திகரிக்கும். அவைகள் “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” (வச.18). 

நாம் பாவம் செய்யும்போது, அதுதானாகவே தன்னை சுத்திகரித்துக்கொள்ளாது. மனந்திரும்புதலின் இருதயத்தோடும், தாழ்மையோடும் நம்முடைய பாவத்தை நாம் அறிக்கையிட்டு அவற்றை சுத்திகரிக்கும் தேவனுடைய பரிசுத்த ஒளியிடத்தில் சமர்பிக்க வேண்டும். அவைகளிலிருந்து விடுபட்டு தேவனிடத்திற்கு திரும்ப வேண்டும். நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கும் வல்லமை கொண்ட ஒரே தேவன், நமக்கு மன்னிப்பை அருளி, அவரோடு ஒப்புவரவாகும்படி செய்வார். 

பழிவாங்காதீர்கள்

2011ல் நடந்த விளம்பர நிகழ்வின்போது, இரண்டு 73 ஆண்டுகள் கடந்த முன்னாள் கனடியன் கால்பந்தாட்ட லீக் ஆட்டக்காரர்கள், மேடையிலேயே சண்டைபோட்டுக் கொண்டனர். 1963ல் அவர்கள் விளையாடிய ஆட்டத்திற்கான மதிப்பெண் விவகாரத்தில் அவர்களுக்குள் திருப்தியில்லை. ஆட்டக்காரர் ஒருவர் மேடையிலே அடுத்தவரை இடித்தபோது, கூட்டத்தினர் “விட்டுவிடுங்கள் போகட்டும்” என்று கூறினர். பழிவாங்குகிற எண்ணங்களை விட்டுவிடுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். 

பழிவாங்குகிற எண்ணம் கொண்ட பலரைக் குறித்து வேதம் சொல்லுகிறது. தேவன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக் கொண்டதால், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலின் மீது எரிச்சலுற்றான் (ஆதியாகமம் 4:5). இந்த வெறுப்பு அதிகமாகி அது கொலையில் போய் முடிந்தது. “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி அவனைக் கொலை செய்தான்” (வச. 8). “ஏசா யாக்கோபைப் பகைத்து...” ஏனென்றால் யாக்கோபு ஏசாவுக்கு உரிய சேஷ்டபுத்திர பாகத்தை திருடிக்கொண்டான். இந்த வெறுப்பு மிகவும் ஆழமாக இருந்ததால் யாக்கோபு தன் உயிருக்கு பயந்து ஓடினான்.

வேதாகமம் பழிவாங்குதலை செயல்படுத்திய பல உதாரணங்களை முன்வைத்தாலும், அந்த வெறுப்பை அழிக்கும் வழிகளையும், மன்னிப்பையும், ஒப்புரவாகும் வழிமுறைகளையும் அறிவுறுத்துகிறது. பிறரிடம் அன்புகூர தேவன் நம்மை அழைக்கிறார் (லேவியராகமம் 19:18). நம்மை அவமானப்படுத்துபவரையும் காயப்படுத்துபவரையும் மன்னிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும், அனைவரிடமும் சமாதானத்தோடு வாழவும், பழிவாங்குதலை தேவனிடம் விட்டுவிடவும், தீமையை நன்மையால் மேற்கொள்ளவும் (ரோமர் 12:18-21) தேவன் நமக்கு அறிவுறுத்துகிறார். அவருடைய வல்லமையால் இன்றே நாம் பழிவாங்குகிற எண்ணத்தையும் பகையையும் அழிப்போமாக. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

வசன பயிற்சி

1800 களின் பிற்பகுதியில், வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ஊழியத்திற்கான யுக்திகளை உருவாக்கினர். முதலாவது 1877 இல் கனடாவின் மாண்ட்ரீலில். பின்னர் 1898 இல், நியூயார்க் நகரில் மற்றொரு கருப்பொருளில் யுக்திகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1922 வாக்கில், வட அமெரிக்காவில் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் இதுபோன்ற சுமார் ஐயாயிரம் நிகழிச்சிகள் செயல்பாட்டில் இருந்தது.

இவ்வாறுதான் கோடை விடுமுறை வேதாகம பள்ளியின் ஆரம்பக்கால வரலாறு தொடங்கியது. வாலிபர்களும் வேதாகமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் அந்த விபிஎஸ் முன்னோடிகளின் பேரார்வத்தைத் தூண்டியது.

பவுல் தனது இளம் சீடரான தீமோத்தேயு மீது இதேபோன்ற ஆர்வத்தை கொண்டிருந்தார். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" நாம் "எந்த நற்கிரியையுஞ் செய்ய.. பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" என்றெழுதினார் (2தீமோத்தேயு 3:16-17). இது ஏதோ, 'வேதத்தைப் படிப்பது உனக்கு நல்லது' என்பது போன்ற மேலோட்டமான ஆலோசனையல்ல. பவுல் "ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற" வ.7) கள்ள போதகர்கள் எழும்பும் “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று" (வச.1) கடுமையாய் எச்சரித்தார். வேதாகமத்தின் மூலம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது (வ. 15).

வேதத்தை படிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது பெரியவர்களுக்கும்தான். அது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல; அது ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார், "பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்று" (வச.15), இதனால் நாமும் சிறுவயது துவங்கியே வேதம் கற்கவேண்டும் என்றல்ல. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், வேத ஞானம் நம்மை இயேசுவோடு இணைக்கிறது. இது நம் அனைவருக்குமான தேவனின் விபிஎஸ் பாடம்.

தேவன் முன் அமர்ந்திருத்தல்

உயிருள்ள ஒரு நபரின் முதல் புகைப்படம் 1838 இல் லூயிஸ் டாகுரே என்பவரால் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் ஒரு மதிய நேரத்தில் பாரீஸில் உள்ள ஒரு வெற்று நுழைவாயிலிருந்த ஒரு உருவத்தைச் சித்தரிக்கிறது. ஆனால் அதில் ஒரு தெளிவான மர்மம் இருக்கிறது; அந்த நேரத்தில் தெரு, நடைபாதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்தால் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தில் அவ்வாறாக இல்லை

அந்த மனிதன் தனியாக இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமான பகுதியான "புலவர்ட் டு டெம்பிள்" இல் மக்கள் இருப்பார்கள். குதிரைகள் இருக்கும். அந்தப் படத்தில் அவ்வாறாகக் காட்டப்படவில்லை. புகைப்படத்தைச் செயலாக்குவதற்கான ஒளிப்படப்பிடிப்பு நேரம் (டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும்) ஒரு படத்தைப் பிடிக்க ஏழு நிமிடங்கள் எடுக்கும். அந்த நேரத்தில் அசைவில்லாமல் இருக்க வேண்டும். நடைபாதையில் இருந்த ஒரே நபர் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் மட்டுமே அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவர் தனது காலணிகளை சுத்தப்படுத்திக்  கொண்டிருந்தார்..

சில நேரங்களில் நிலைத்திருத்தல் என்பது செயலாலும் மற்றும் முயற்சியாலும் செய்ய முடியாததைச் செய்து முடிக்கிறது. சங்கீதம் 46:10ல், தேவன் தம்முடைய மக்களிடம், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிடுகிறார். "ஜாதிகள் கொந்தளிக்கும்போது" (வச.6), "பூமி நிலைமாறினாலும்” (வச.2), அமைதியாக அவரை நம்புபவர்கள், "ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணை" யை  அவரில் கண்டடைவார்கள் (வச. 1).

"அமைதியாக இரு" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வினைச்சொல் "முயற்சியை நிறுத்து" என்றும் குறிப்பிடுகிறது. நமது வரம்புக்குட்பட்ட முயற்சிகளில் நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் நாம் தேவனில் இளைப்பாறும் போது, அவரே நம் அசைக்க முடியாத “அடைக்கலமும் பெலனும்" (வச. 1) என்று காண்கிறோம்.

மாற்றத்தின் விளையாட்டு

1963 ஆம் ஆண்டு மார்ச் இரவில், இரண்டு கல்லூரி கூடைப்பந்து வீரர்கள் கருப்பு வெள்ளை பிரிவினைவாதத்தின் வெறுப்பை மீறிக் கைகுலுக்கி, மிசிசிப்பி மாநில வரலாற்றில் முதல் முறையாக முழு வெள்ளை ஆண்கள், ஒருங்கிணைந்த அணிக்கு எதிராக விளையாடியது. லயோலா பல்கலைக்கழகம் சிகாகோவிற்கு எதிராக  "மாற்றத்தின் விளையாட்டு" என்றழைக்கப்பட்ட அந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அவர்களின் மாநிலத்தை விட்டு வெளியேற வீரர்களைத் தடுக்க மிசிசிப்பி மாகாண குழு முயன்றது. அதேபோல லயோலாவின் கறுப்பின வீரர்கள் இதற்கிடையில், அனைத்து போட்டிகளிலும் இன அவதூறுகளை அனுபவித்தனர். நொறுக்குத்தீனிகளையும், பனிக்கட்டிகளையும் அவர்கள் மீது மற்றவர்கள் வீசினார்கள், மேலும் பயணத்தின் போது பல எதிர்ப்புகளையும் எதிர்கொண்டனர்.

ஆனாலும் இளைஞர்கள் விளையாடினார்கள். லயோலா அணியினர், மிசிசிப்பி அணியினரை 61-51 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தனர், மேலும் லயோலா இறுதியில் தேசிய பட்டத்தையும் வென்றது. ஆனால் அந்த இரவில் உண்மையில் வென்றது எது? வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி நகர்தலே வென்றது. இயேசு போதித்தது போல், "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" (லூக்கா 6:27) என்ற தேவனுடைய அறிவுரை வாழ்க்கையை மாற்றும் கருத்தாக இருந்தது.

கிறிஸ்து கற்பித்தபடி நம் எதிரிகளை நேசிக்க, மாற்றத்திற்கான அவரது புரட்சிகரமான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பவுல், "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்றது போல, நம்மில் உள்ள பழையதை அவருடைய புதிய வழி எப்படித் தோற்கடிக்கிறது? அன்பினால்தான்.  ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதின் மூலம் இறுதியாக அவரைக் காணலாம்.