எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெப்ப் ஒல்சன்கட்டுரைகள்

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி விளையாடினோம். நான் ஒளிந்துகொண்டேன். என்னுடைய ஐந்து வயது மாமா மகன் என்னை நெருங்கி வந்து கேட்டது. ‘இப்போது கண்டுபிடித்துவிடுவான்’ என்று நினைக்கும்போதே என்னுடைய இருதயம் படபடவென அடித்துக்கொண்டது. மிகவும் நெருங்கிவிட்டான். இன்னும் ஐந்து எட்டுதான். “கண்டுபிடித்து விட்டேன்!” என்றான்.

கண்ணாமூச்சி விளையாட்டு, சிறுவயதில் எல்லாருமே இந்த விளையாட்டை விளையாடியிருப் போம். கண்டுபிடிக்கப்படுவது என்பது வாழ்க்கையில் சிலசமயம் விளையாட்டான அனுபவமாக இருக்காது, எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்கிற உள்ளுணர்வுதான் மேலோங்கி இருக்கும். தங்களுடைய நிலையை மக்கள் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கிறவர்கள் அவ்வாறு ஓடுவார்கள்.

விழுந்துபோன உலகின் பிள்ளைகளாகிய நாமும் கண்ணாமூச்சி விளையாடுகிற நிலையில்தான் இருக்கிறோம். என்னுடைய நண்பன் அதை நமக்கும் தேவனுக்கும் இடையிலான “ஒரு வகையான கண்ணாமூச்சி விளையாட்டு” என்று சொல்லுவான்.  அதில் ஒளிந்துகொள்வதுபோல நாம் நடிக்கத்தான் முடியும். ஏனெனில் நம்முடைய சகல எண்ணங்களையும் தவறான தீர்மானங்களையும் அவர் நன்றாகவே அறிவார். அது நமக்கும் தெரியும், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியாததுபோல நாமும் நடந்துகொள்கிறோம்.

ஆனாலும் தேவன் தொடர்ந்து நம்மைத் தேடிவருகிறார். “வெளியே வா. உன்னுடைய அவலட்சணமிக்க பகுதியைக்கூட நான் பார்க்க விரும்புகிறேன்” என்று தேவன் அழைக்கிறார். இதே சத்தம்தான் நம்முடைய முதல் பெற்றோரையும், அவர்கள் பயத்தால் ஒளிந்திருந்த போதும் அழைத்தது: “நீ எங்கே இருக்கிறாய்?” (ஆதி. 3:9). அது ஓர் அன்பான அழைப்புதான், ஆனாலும் அந்தக் கேள்வி அவர்களுக்கு குத்தலாக இருந்திருக்கவேண்டும். “அன்பு பிள்ளையே, நீ ஒளிந்திருக்கிற இடத்தைவிட்டு வெளியே வா. மீண்டும் என்னோடு உறவுவைத்துக்கொள்.”

இது மிகவும் அபாயகரமானதாகவும், ஆபத்தானதாகவும்கூட தோன்றலாம். ஆனால் நாம் யாரானாலும், எப்படிப்பட்ட தவறைச் செய்திருந்தாலும் அல்லது செய்யவேண்டியதைச் செய்யத் தவறியிருந்தாலும், நம்முடைய பிதாவின் அரவணைப்பில், அவருடைய அன்பையும் பாதுகாப்பையும் பெறலாம்.

சகிக்க முடியாத துயரங்களையும் தாங்கி வாழல்

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அனுபவ செயல் திட்டம் என்ற அலைவழித் தொடர்புடைய ஒரு மிகப் பெரிய சமுதாயம், அந்த இணையதளத்தில் பல கோடி மக்கள் தங்களுடைய ஆழமான வேதனை தரும் அனுபவங்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அந்த உள்ளம் உடைக்கும் அனுபவங்களை நான் வாசித்தபோது, தங்களுடைய வேதனைகளைப் புரிந்துகொண்டு தங்களைப் பார்க்கக்கூடியவர்கள் இருக்க மாட்டார்களா என ஏங்கிப் பரிதவிக்கும் இருதயங்களைக் குறித்துக் சிந்திக்கலானேன்.

இத்தகைய வாழ்வு தரும் கொடை எப்படி உதவ முடியும் என்பதை, ஆதியாகமத்தில் ஓர் இளம் பணிப்பெண் வெளிப்படுத்துகின்றாள். எகிப்தின் மன்னன் பார்வோன் ஆபிராமுக்கு கொடுத்த அடிமைப் பெண் ஆக ஆகார் இருக்கலாம். (ஆதி. 12:16,16:1). ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்கு பிள்ளையில்லாதிருந்தபடியால் அவள் ஆபிராமைத் தன்னுடைய அடிமைப் பெண் ஆகார் மூலம் தனக்கு பிள்ளை தரும்படி கேட்கின்றாள். இது நமக்கு ஏற்றுக் கொள்ள வருத்தமானதாக இறுப்பினும், அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது. ஆகார் கர்ப்பவதியானபோது, அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. சாராய் அவளைக் கடினமாக நடத்தினபடியால் அவள் தன் நாச்சியாரைவிட்டு வனாந்திரத்திற்குத் தப்பி ஓடினாள் (16:1-6).

ஆகார் சங்கடமான சூழலிலிருக்கின்றாள். கர்ப்பிணியாயிருக்கின்றாள், தனிமையில் கடினமான பாலைவனத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றாள். ஆனால். பரிசுத்தரின் கண்களுக்கு அவள் மறைவாயிருக்கவில்லை. கர்த்தருடைய தூதன் ஆகாரைப் பார்த்து அவளோடு பேசி, அவளை ஊக்குவிக்கிறார். (வச. 7-12). இப்பொழுது அவள், “நீர் என்னைக் காண்கிற தேவன்” (வச. 13) என வெளிப்படுத்துகின்றாள்.

ஆகார் தன்னைக் கண்டவரைப் போற்றுகின்றாள். அதே தேவன் இயேசுவின் மூலம் இவ்வுலகில் வெளிப்பட்டபோது, “அவர் திரளான ஜனங்களைக் கண்டு பொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்தவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள் மேல்; மனதுருகினார்” (மத். 9:36). ஆகார் தன்னைப் புரிந்துகொண்ட தேவனைச் சந்தித்தாள்.

ஆகாரைக் கண்டு, புரிந்துகொண்ட தேவன் நம்முடைய வேதனைகளையும் காண்கின்றார் (எபி. 15-16) பரத்திலிருந்து நாம் தேற்றப்படுவதால், நம்மால் தாங்கக் கூடாத வேதனைகளையும் அவர் தாங்கக்கூடியதாக மாற்றுகின்றார்.

வாழ்வு தரும் தேவன்

சில குளிர்காலங்களுக்கு முன்பு, என்னுடைய சொந்த பட்டணம் அசாதாரணமான, எலும்பையும் துளைக்கக் கூடிய குளிர்ந்த காலநிலையை நீண்ட நாட்கள் அனுபவித்தது. ஆனால், இறுதியாக அது ஒரு வெப்பமான வசந்த காலத்திற்கு வழிவகுத்தது. இரு வாரங்கள் தொடர்ச்சியாக வெளிப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே தள்ளப்பட்டது (-20°c;-5°).

அப்படியொரு மிகக் குளிர்ந்த நாள் காலையில் கிரீச்சிடும் பறவைகளின் ஓசை, இரவின் அமைதியைக் கலைத்தது. நூற்றுக்கணக்கான பறவைகள் தங்கள் இருதயத்தின் எண்ணங்களைப் பாடின. அந்த சிறிய உயிரினங்கள் தங்களைப் படைத்தவரை நோக்கி, தயவாய் அனைத்தையும் வெப்பமாக்கித் தாரும் என்று கதறுவதாக நான் உறுதியாகக் கூறமுடியும்.

பறவை நிபுணர்கள், பிந்தின குளிர்காலங்களில் நாம் கேட்கும், பறவையின் பாடல்களையெல்லாம் பாடுவது, அநேகமாக ஆண் பறவைகளே. அவை தங்கள் துணைகளை ஈர்ப்பதற்கும், தங்கள் எல்லைகளை உறுதிப்படுத்தவும் பாடுகின்றன என்கின்றார். தங்கள் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளவும், வளப்படுத்திக் கொள்ளவும் தேவன் தன் சிருஷ்டிப்புகளை நமக்கு சீர்ப்படுத்தியுள்ளார் என்பதை அவற்றின் குரல்கள் நினைப்பூட்டுகின்றன. ஏனெனில் அவர்தான் வாழ்வு தரும் தேவன்.

தேவன் படைத்த, வளங்கள் நிறைந்த பூமியை வியந்து சங்கீதக்காரன் “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர்” எனப் பாடுகிறார். மேலும் “அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்” (சங். 104:12) என பாடுகிறார்.

பாடுகின்ற கூடுகட்டி வாழ்கின்ற பறவைகள் முதல் பெரிதும் விஸ்தாரமான சமுத்திரம் வரை “அதிலே சஞ்சரிக்கும் எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வச. 25). அத்தனையும் படைத்தவரும், அவைகள் அத்தனையும் வாழ்வதற்கு உறுதியளிக்கின்றவருமாகிய நம்முடைய சிருஷ்டிகரே போற்றத் தகுந்தவர்.

காட்சியை ரசியுங்கள்

சூரிய அஸ்தமனம். தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு அதை காண்பார்கள்..... புகைப்படம் எடுப்பார்கள்.... அழகிய காட்சியை ரசித்து அனுபவிப்பார்கள். 

சமீபத்தில் நானும் எனது மனைவியும், மெக்ஸிகோ வளைகுடாவில் சூரியன் மறைவதைக் கண்டோம். தினமும் நடைபெறும் இந்த இரவுக்காட்சியை கண்டுகளிக்க எங்களைப்போல் பலர் அங்கு கூடியிருந்தனர். அடிவானத்தில் சூரியன் முழுவதுமாக மறைந்தவுடன் எல்லோரும் சத்தமாக ஆராவாரித்தனர். 

மக்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்தபொழுது சங்கீதங்களில் இதற்கான துப்பு கிடைத்தது. சூரியன் தன் சிருஷ்டிகரை துதிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டுள்ளார் என்று சங்கீதக்காரன் எழுதியுள்ளான் (சங். 148:3). அதனால்தான் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் படர்வதைக் கண்டவுடன், மக்கள் தன்னிலை மறந்து பரவசத்துடன் அதனோடு சேர்ந்து துதிக்க ஆரம்பிக்கின்றனர்.

ஓடிக்கொண்டேயிருக்கும் நம்மை, தேவனுடைய அற்புதமான படைப்பு நிதானிக்க வைத்து, வாழ்வில் மிகவும் முக்கியமான காரியம் எது என்பதனை எடுத்துரைக்கிறது. இறுதியில், பிரமிக்கத்தக்க உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் பின்னால் ஒரு சிருஷ்டிகர் உண்டு என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது. தாம் படைத்த பூமியையும் அதன் நிறைவையும் அளவற்ற அன்புடன் நேசித்தபடியால், சிருஷ்டிகரான அவர்தாமே அதற்குள் பிரவேசித்து அதனை மீட்டு புதுப்பித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.