எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெப்ப் ஒல்சன்கட்டுரைகள்

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி விளையாடினோம். நான் ஒளிந்துகொண்டேன். என்னுடைய ஐந்து வயது மாமா மகன் என்னை நெருங்கி வந்து கேட்டது. ‘இப்போது கண்டுபிடித்துவிடுவான்’ என்று நினைக்கும்போதே என்னுடைய இருதயம் படபடவென அடித்துக்கொண்டது. மிகவும் நெருங்கிவிட்டான். இன்னும் ஐந்து எட்டுதான். “கண்டுபிடித்து விட்டேன்!” என்றான்.

கண்ணாமூச்சி விளையாட்டு, சிறுவயதில் எல்லாருமே இந்த விளையாட்டை விளையாடியிருப் போம். கண்டுபிடிக்கப்படுவது என்பது வாழ்க்கையில் சிலசமயம் விளையாட்டான அனுபவமாக இருக்காது, எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்கிற உள்ளுணர்வுதான் மேலோங்கி இருக்கும். தங்களுடைய நிலையை மக்கள் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கிறவர்கள் அவ்வாறு ஓடுவார்கள்.

விழுந்துபோன உலகின் பிள்ளைகளாகிய நாமும் கண்ணாமூச்சி விளையாடுகிற நிலையில்தான் இருக்கிறோம். என்னுடைய நண்பன் அதை நமக்கும் தேவனுக்கும் இடையிலான “ஒரு வகையான கண்ணாமூச்சி விளையாட்டு” என்று சொல்லுவான்.  அதில் ஒளிந்துகொள்வதுபோல நாம் நடிக்கத்தான் முடியும். ஏனெனில் நம்முடைய சகல எண்ணங்களையும் தவறான தீர்மானங்களையும் அவர் நன்றாகவே அறிவார். அது நமக்கும் தெரியும், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியாததுபோல நாமும் நடந்துகொள்கிறோம்.

ஆனாலும் தேவன் தொடர்ந்து நம்மைத் தேடிவருகிறார். “வெளியே வா. உன்னுடைய அவலட்சணமிக்க பகுதியைக்கூட நான் பார்க்க விரும்புகிறேன்” என்று தேவன் அழைக்கிறார். இதே சத்தம்தான் நம்முடைய முதல் பெற்றோரையும், அவர்கள் பயத்தால் ஒளிந்திருந்த போதும் அழைத்தது: “நீ எங்கே இருக்கிறாய்?” (ஆதி. 3:9). அது ஓர் அன்பான அழைப்புதான், ஆனாலும் அந்தக் கேள்வி அவர்களுக்கு குத்தலாக இருந்திருக்கவேண்டும். “அன்பு பிள்ளையே, நீ ஒளிந்திருக்கிற இடத்தைவிட்டு வெளியே வா. மீண்டும் என்னோடு உறவுவைத்துக்கொள்.”

இது மிகவும் அபாயகரமானதாகவும், ஆபத்தானதாகவும்கூட தோன்றலாம். ஆனால் நாம் யாரானாலும், எப்படிப்பட்ட தவறைச் செய்திருந்தாலும் அல்லது செய்யவேண்டியதைச் செய்யத் தவறியிருந்தாலும், நம்முடைய பிதாவின் அரவணைப்பில், அவருடைய அன்பையும் பாதுகாப்பையும் பெறலாம்.

சகிக்க முடியாத துயரங்களையும் தாங்கி வாழல்

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அனுபவ செயல் திட்டம் என்ற அலைவழித் தொடர்புடைய ஒரு மிகப் பெரிய சமுதாயம், அந்த இணையதளத்தில் பல கோடி மக்கள் தங்களுடைய ஆழமான வேதனை தரும் அனுபவங்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அந்த உள்ளம் உடைக்கும் அனுபவங்களை நான் வாசித்தபோது, தங்களுடைய வேதனைகளைப் புரிந்துகொண்டு தங்களைப் பார்க்கக்கூடியவர்கள் இருக்க மாட்டார்களா என ஏங்கிப் பரிதவிக்கும் இருதயங்களைக் குறித்துக் சிந்திக்கலானேன்.

இத்தகைய வாழ்வு தரும் கொடை எப்படி உதவ முடியும் என்பதை, ஆதியாகமத்தில் ஓர் இளம் பணிப்பெண் வெளிப்படுத்துகின்றாள். எகிப்தின் மன்னன் பார்வோன் ஆபிராமுக்கு கொடுத்த அடிமைப் பெண் ஆக ஆகார் இருக்கலாம். (ஆதி. 12:16,16:1). ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்கு பிள்ளையில்லாதிருந்தபடியால் அவள் ஆபிராமைத் தன்னுடைய அடிமைப் பெண் ஆகார் மூலம் தனக்கு பிள்ளை தரும்படி கேட்கின்றாள். இது நமக்கு ஏற்றுக் கொள்ள வருத்தமானதாக இறுப்பினும், அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது. ஆகார் கர்ப்பவதியானபோது, அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. சாராய் அவளைக் கடினமாக நடத்தினபடியால் அவள் தன் நாச்சியாரைவிட்டு வனாந்திரத்திற்குத் தப்பி ஓடினாள் (16:1-6).

ஆகார் சங்கடமான சூழலிலிருக்கின்றாள். கர்ப்பிணியாயிருக்கின்றாள், தனிமையில் கடினமான பாலைவனத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றாள். ஆனால். பரிசுத்தரின் கண்களுக்கு அவள் மறைவாயிருக்கவில்லை. கர்த்தருடைய தூதன் ஆகாரைப் பார்த்து அவளோடு பேசி, அவளை ஊக்குவிக்கிறார். (வச. 7-12). இப்பொழுது அவள், “நீர் என்னைக் காண்கிற தேவன்” (வச. 13) என வெளிப்படுத்துகின்றாள்.

ஆகார் தன்னைக் கண்டவரைப் போற்றுகின்றாள். அதே தேவன் இயேசுவின் மூலம் இவ்வுலகில் வெளிப்பட்டபோது, “அவர் திரளான ஜனங்களைக் கண்டு பொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்தவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள் மேல்; மனதுருகினார்” (மத். 9:36). ஆகார் தன்னைப் புரிந்துகொண்ட தேவனைச் சந்தித்தாள்.

ஆகாரைக் கண்டு, புரிந்துகொண்ட தேவன் நம்முடைய வேதனைகளையும் காண்கின்றார் (எபி. 15-16) பரத்திலிருந்து நாம் தேற்றப்படுவதால், நம்மால் தாங்கக் கூடாத வேதனைகளையும் அவர் தாங்கக்கூடியதாக மாற்றுகின்றார்.

வாழ்வு தரும் தேவன்

சில குளிர்காலங்களுக்கு முன்பு, என்னுடைய சொந்த பட்டணம் அசாதாரணமான, எலும்பையும் துளைக்கக் கூடிய குளிர்ந்த காலநிலையை நீண்ட நாட்கள் அனுபவித்தது. ஆனால், இறுதியாக அது ஒரு வெப்பமான வசந்த காலத்திற்கு வழிவகுத்தது. இரு வாரங்கள் தொடர்ச்சியாக வெளிப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே தள்ளப்பட்டது (-20°c;-5°).

அப்படியொரு மிகக் குளிர்ந்த நாள் காலையில் கிரீச்சிடும் பறவைகளின் ஓசை, இரவின் அமைதியைக் கலைத்தது. நூற்றுக்கணக்கான பறவைகள் தங்கள் இருதயத்தின் எண்ணங்களைப் பாடின. அந்த சிறிய உயிரினங்கள் தங்களைப் படைத்தவரை நோக்கி, தயவாய் அனைத்தையும் வெப்பமாக்கித் தாரும் என்று கதறுவதாக நான் உறுதியாகக் கூறமுடியும்.

பறவை நிபுணர்கள், பிந்தின குளிர்காலங்களில் நாம் கேட்கும், பறவையின் பாடல்களையெல்லாம் பாடுவது, அநேகமாக ஆண் பறவைகளே. அவை தங்கள் துணைகளை ஈர்ப்பதற்கும், தங்கள் எல்லைகளை உறுதிப்படுத்தவும் பாடுகின்றன என்கின்றார். தங்கள் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளவும், வளப்படுத்திக் கொள்ளவும் தேவன் தன் சிருஷ்டிப்புகளை நமக்கு சீர்ப்படுத்தியுள்ளார் என்பதை அவற்றின் குரல்கள் நினைப்பூட்டுகின்றன. ஏனெனில் அவர்தான் வாழ்வு தரும் தேவன்.

தேவன் படைத்த, வளங்கள் நிறைந்த பூமியை வியந்து சங்கீதக்காரன் “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர்” எனப் பாடுகிறார். மேலும் “அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்” (சங். 104:12) என பாடுகிறார்.

பாடுகின்ற கூடுகட்டி வாழ்கின்ற பறவைகள் முதல் பெரிதும் விஸ்தாரமான சமுத்திரம் வரை “அதிலே சஞ்சரிக்கும் எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வச. 25). அத்தனையும் படைத்தவரும், அவைகள் அத்தனையும் வாழ்வதற்கு உறுதியளிக்கின்றவருமாகிய நம்முடைய சிருஷ்டிகரே போற்றத் தகுந்தவர்.

காட்சியை ரசியுங்கள்

சூரிய அஸ்தமனம். தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு அதை காண்பார்கள்..... புகைப்படம் எடுப்பார்கள்.... அழகிய காட்சியை ரசித்து அனுபவிப்பார்கள். 

சமீபத்தில் நானும் எனது மனைவியும், மெக்ஸிகோ வளைகுடாவில் சூரியன் மறைவதைக் கண்டோம். தினமும் நடைபெறும் இந்த இரவுக்காட்சியை கண்டுகளிக்க எங்களைப்போல் பலர் அங்கு கூடியிருந்தனர். அடிவானத்தில் சூரியன் முழுவதுமாக மறைந்தவுடன் எல்லோரும் சத்தமாக ஆராவாரித்தனர். 

மக்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்தபொழுது சங்கீதங்களில் இதற்கான துப்பு கிடைத்தது. சூரியன் தன் சிருஷ்டிகரை துதிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டுள்ளார் என்று சங்கீதக்காரன் எழுதியுள்ளான் (சங். 148:3). அதனால்தான் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் படர்வதைக் கண்டவுடன், மக்கள் தன்னிலை மறந்து பரவசத்துடன் அதனோடு சேர்ந்து துதிக்க ஆரம்பிக்கின்றனர்.

ஓடிக்கொண்டேயிருக்கும் நம்மை, தேவனுடைய அற்புதமான படைப்பு நிதானிக்க வைத்து, வாழ்வில் மிகவும் முக்கியமான காரியம் எது என்பதனை எடுத்துரைக்கிறது. இறுதியில், பிரமிக்கத்தக்க உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் பின்னால் ஒரு சிருஷ்டிகர் உண்டு என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது. தாம் படைத்த பூமியையும் அதன் நிறைவையும் அளவற்ற அன்புடன் நேசித்தபடியால், சிருஷ்டிகரான அவர்தாமே அதற்குள் பிரவேசித்து அதனை மீட்டு புதுப்பித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. 

 

நான் ஓட்டுநர் மட்டுமே

“அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?” பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். “கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்” என்றேன்.

“நான் ஓட்டுநர் மட்டுமே” என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு “வாகன ஓட்டுநராக” இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் “வெறும் ஓட்டுநர்” என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது. 

 

கிறிஸ்துவில் முடிப்பவர்களாக இருத்தல்

கலாவதி தனது கொள்ளுப்பேரனான ராஜேஷுக்காக பின்னிக்கொண்டிருந்த கம்பளிச்சட்டையை முடிப்பதற்குள் இறந்துவிட்டார். அதை நிறைவுசெய்ய மற்றொரு ஆர்வமுள்ள பின்னல்காரரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. “நிறைவு செய்பவர்கள்” எனப்பட்ட தன்னார்வ கைவினைஞர்களையும், தங்கள் பணிகளை முடிப்பதற்கு முன்னரே இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறினவர்களின் அன்புக்குரியவர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனத்திற்கு நன்றி. “நிறைவு செய்பவர்கள்” துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு பணியை முடிக்க தங்கள் நேரத்தையும் திறமையையும் அன்புடன் செலவிடுகின்றனர்.

தேவன் எலியாவின் பணிக்காகவும்கூட ஒரு “நிறைவு செய்பவரை” நியமித்தார். இஸ்ரவேலர்கள் தேவனின் உடன்படிக்கையை நிராகரித்து தீர்க்கதரிசிகளைக் கொல்வதைக் கண்டு அந்தத் தீர்க்கதரிசி தனிமையாகவும் மனச்சோர்வுடனும் இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவன் எலியாவிடம் “எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (1 இராஜாக்கள் 19:16) என அறிவுறுத்தினார். தேவனுடைய சத்தியத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான பணியானது எலியாவின் மரணத்திற்குப் பின்னரும் தொடரும் என்பதை இது உறுதி செய்தது.

எலியாவுக்குப் பின் தேவனின் தீர்க்கதரிசியாகத் தொடரும்படி தேவன் அவரை அழைத்தார் என்று எலிசாவுக்கு காண்பிக்க, எலியா “அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்” (வ. 19). தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான தேவசெய்தியை அறிவிப்பவா் ஒருவரின் அதிகாரத்தைக் குறிக்க ஒரு தீர்க்கதரிசியின் சால்வை பயன்படுத்தப்பட்டதால் (பார்க்க 2 இராஜாக்கள் 2:8), இந்த செயல் எலிசாவின் தீர்க்கதரிசிக்கான அழைப்பைத் தெளிவாக்கியது. இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, தேவனின் அன்பைப் பிறருடன் பகிரவும், “[அவருடைய] புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்பணியானது நம் ஆயுளை விட அதிகமாக இருப்பினும், அவர் இப்பணியை ஆதரிப்பார் என்றும், அவரை அறிவிக்கும் உன்னதமான வேலைக்கு பிற “நிறைவு செய்பவர்களை” தொடர்ந்து அழைப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம்.