எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெப்ப் ஒல்சன்கட்டுரைகள்

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி விளையாடினோம். நான் ஒளிந்துகொண்டேன். என்னுடைய ஐந்து வயது மாமா மகன் என்னை நெருங்கி வந்து கேட்டது. ‘இப்போது கண்டுபிடித்துவிடுவான்’ என்று நினைக்கும்போதே என்னுடைய இருதயம் படபடவென அடித்துக்கொண்டது. மிகவும் நெருங்கிவிட்டான். இன்னும் ஐந்து எட்டுதான். “கண்டுபிடித்து விட்டேன்!” என்றான்.

கண்ணாமூச்சி விளையாட்டு, சிறுவயதில் எல்லாருமே இந்த விளையாட்டை விளையாடியிருப் போம். கண்டுபிடிக்கப்படுவது என்பது வாழ்க்கையில் சிலசமயம் விளையாட்டான அனுபவமாக இருக்காது, எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்கிற உள்ளுணர்வுதான் மேலோங்கி இருக்கும். தங்களுடைய நிலையை மக்கள் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கிறவர்கள் அவ்வாறு ஓடுவார்கள்.

விழுந்துபோன உலகின் பிள்ளைகளாகிய நாமும் கண்ணாமூச்சி விளையாடுகிற நிலையில்தான் இருக்கிறோம். என்னுடைய நண்பன் அதை நமக்கும் தேவனுக்கும் இடையிலான “ஒரு வகையான கண்ணாமூச்சி விளையாட்டு” என்று சொல்லுவான்.  அதில் ஒளிந்துகொள்வதுபோல நாம் நடிக்கத்தான் முடியும். ஏனெனில் நம்முடைய சகல எண்ணங்களையும் தவறான தீர்மானங்களையும் அவர் நன்றாகவே அறிவார். அது நமக்கும் தெரியும், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியாததுபோல நாமும் நடந்துகொள்கிறோம்.

ஆனாலும் தேவன் தொடர்ந்து நம்மைத் தேடிவருகிறார். “வெளியே வா. உன்னுடைய அவலட்சணமிக்க பகுதியைக்கூட நான் பார்க்க விரும்புகிறேன்” என்று தேவன் அழைக்கிறார். இதே சத்தம்தான் நம்முடைய முதல் பெற்றோரையும், அவர்கள் பயத்தால் ஒளிந்திருந்த போதும் அழைத்தது: “நீ எங்கே இருக்கிறாய்?” (ஆதி. 3:9). அது ஓர் அன்பான அழைப்புதான், ஆனாலும் அந்தக் கேள்வி அவர்களுக்கு குத்தலாக இருந்திருக்கவேண்டும். “அன்பு பிள்ளையே, நீ ஒளிந்திருக்கிற இடத்தைவிட்டு வெளியே வா. மீண்டும் என்னோடு உறவுவைத்துக்கொள்.”

இது மிகவும் அபாயகரமானதாகவும், ஆபத்தானதாகவும்கூட தோன்றலாம். ஆனால் நாம் யாரானாலும், எப்படிப்பட்ட தவறைச் செய்திருந்தாலும் அல்லது செய்யவேண்டியதைச் செய்யத் தவறியிருந்தாலும், நம்முடைய பிதாவின் அரவணைப்பில், அவருடைய அன்பையும் பாதுகாப்பையும் பெறலாம்.

சகிக்க முடியாத துயரங்களையும் தாங்கி வாழல்

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அனுபவ செயல் திட்டம் என்ற அலைவழித் தொடர்புடைய ஒரு மிகப் பெரிய சமுதாயம், அந்த இணையதளத்தில் பல கோடி மக்கள் தங்களுடைய ஆழமான வேதனை தரும் அனுபவங்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அந்த உள்ளம் உடைக்கும் அனுபவங்களை நான் வாசித்தபோது, தங்களுடைய வேதனைகளைப் புரிந்துகொண்டு தங்களைப் பார்க்கக்கூடியவர்கள் இருக்க மாட்டார்களா என ஏங்கிப் பரிதவிக்கும் இருதயங்களைக் குறித்துக் சிந்திக்கலானேன்.

இத்தகைய வாழ்வு தரும் கொடை எப்படி உதவ முடியும் என்பதை, ஆதியாகமத்தில் ஓர் இளம் பணிப்பெண் வெளிப்படுத்துகின்றாள். எகிப்தின் மன்னன் பார்வோன் ஆபிராமுக்கு கொடுத்த அடிமைப் பெண் ஆக ஆகார் இருக்கலாம். (ஆதி. 12:16,16:1). ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்கு பிள்ளையில்லாதிருந்தபடியால் அவள் ஆபிராமைத் தன்னுடைய அடிமைப் பெண் ஆகார் மூலம் தனக்கு பிள்ளை தரும்படி கேட்கின்றாள். இது நமக்கு ஏற்றுக் கொள்ள வருத்தமானதாக இறுப்பினும், அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது. ஆகார் கர்ப்பவதியானபோது, அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. சாராய் அவளைக் கடினமாக நடத்தினபடியால் அவள் தன் நாச்சியாரைவிட்டு வனாந்திரத்திற்குத் தப்பி ஓடினாள் (16:1-6).

ஆகார் சங்கடமான சூழலிலிருக்கின்றாள். கர்ப்பிணியாயிருக்கின்றாள், தனிமையில் கடினமான பாலைவனத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றாள். ஆனால். பரிசுத்தரின் கண்களுக்கு அவள் மறைவாயிருக்கவில்லை. கர்த்தருடைய தூதன் ஆகாரைப் பார்த்து அவளோடு பேசி, அவளை ஊக்குவிக்கிறார். (வச. 7-12). இப்பொழுது அவள், “நீர் என்னைக் காண்கிற தேவன்” (வச. 13) என வெளிப்படுத்துகின்றாள்.

ஆகார் தன்னைக் கண்டவரைப் போற்றுகின்றாள். அதே தேவன் இயேசுவின் மூலம் இவ்வுலகில் வெளிப்பட்டபோது, “அவர் திரளான ஜனங்களைக் கண்டு பொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்தவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள் மேல்; மனதுருகினார்” (மத். 9:36). ஆகார் தன்னைப் புரிந்துகொண்ட தேவனைச் சந்தித்தாள்.

ஆகாரைக் கண்டு, புரிந்துகொண்ட தேவன் நம்முடைய வேதனைகளையும் காண்கின்றார் (எபி. 15-16) பரத்திலிருந்து நாம் தேற்றப்படுவதால், நம்மால் தாங்கக் கூடாத வேதனைகளையும் அவர் தாங்கக்கூடியதாக மாற்றுகின்றார்.

வாழ்வு தரும் தேவன்

சில குளிர்காலங்களுக்கு முன்பு, என்னுடைய சொந்த பட்டணம் அசாதாரணமான, எலும்பையும் துளைக்கக் கூடிய குளிர்ந்த காலநிலையை நீண்ட நாட்கள் அனுபவித்தது. ஆனால், இறுதியாக அது ஒரு வெப்பமான வசந்த காலத்திற்கு வழிவகுத்தது. இரு வாரங்கள் தொடர்ச்சியாக வெளிப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே தள்ளப்பட்டது (-20°c;-5°).

அப்படியொரு மிகக் குளிர்ந்த நாள் காலையில் கிரீச்சிடும் பறவைகளின் ஓசை, இரவின் அமைதியைக் கலைத்தது. நூற்றுக்கணக்கான பறவைகள் தங்கள் இருதயத்தின் எண்ணங்களைப் பாடின. அந்த சிறிய உயிரினங்கள் தங்களைப் படைத்தவரை நோக்கி, தயவாய் அனைத்தையும் வெப்பமாக்கித் தாரும் என்று கதறுவதாக நான் உறுதியாகக் கூறமுடியும்.

பறவை நிபுணர்கள், பிந்தின குளிர்காலங்களில் நாம் கேட்கும், பறவையின் பாடல்களையெல்லாம் பாடுவது, அநேகமாக ஆண் பறவைகளே. அவை தங்கள் துணைகளை ஈர்ப்பதற்கும், தங்கள் எல்லைகளை உறுதிப்படுத்தவும் பாடுகின்றன என்கின்றார். தங்கள் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளவும், வளப்படுத்திக் கொள்ளவும் தேவன் தன் சிருஷ்டிப்புகளை நமக்கு சீர்ப்படுத்தியுள்ளார் என்பதை அவற்றின் குரல்கள் நினைப்பூட்டுகின்றன. ஏனெனில் அவர்தான் வாழ்வு தரும் தேவன்.

தேவன் படைத்த, வளங்கள் நிறைந்த பூமியை வியந்து சங்கீதக்காரன் “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர்” எனப் பாடுகிறார். மேலும் “அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்” (சங். 104:12) என பாடுகிறார்.

பாடுகின்ற கூடுகட்டி வாழ்கின்ற பறவைகள் முதல் பெரிதும் விஸ்தாரமான சமுத்திரம் வரை “அதிலே சஞ்சரிக்கும் எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வச. 25). அத்தனையும் படைத்தவரும், அவைகள் அத்தனையும் வாழ்வதற்கு உறுதியளிக்கின்றவருமாகிய நம்முடைய சிருஷ்டிகரே போற்றத் தகுந்தவர்.

காட்சியை ரசியுங்கள்

சூரிய அஸ்தமனம். தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு அதை காண்பார்கள்..... புகைப்படம் எடுப்பார்கள்.... அழகிய காட்சியை ரசித்து அனுபவிப்பார்கள். 

சமீபத்தில் நானும் எனது மனைவியும், மெக்ஸிகோ வளைகுடாவில் சூரியன் மறைவதைக் கண்டோம். தினமும் நடைபெறும் இந்த இரவுக்காட்சியை கண்டுகளிக்க எங்களைப்போல் பலர் அங்கு கூடியிருந்தனர். அடிவானத்தில் சூரியன் முழுவதுமாக மறைந்தவுடன் எல்லோரும் சத்தமாக ஆராவாரித்தனர். 

மக்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்தபொழுது சங்கீதங்களில் இதற்கான துப்பு கிடைத்தது. சூரியன் தன் சிருஷ்டிகரை துதிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டுள்ளார் என்று சங்கீதக்காரன் எழுதியுள்ளான் (சங். 148:3). அதனால்தான் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் படர்வதைக் கண்டவுடன், மக்கள் தன்னிலை மறந்து பரவசத்துடன் அதனோடு சேர்ந்து துதிக்க ஆரம்பிக்கின்றனர்.

ஓடிக்கொண்டேயிருக்கும் நம்மை, தேவனுடைய அற்புதமான படைப்பு நிதானிக்க வைத்து, வாழ்வில் மிகவும் முக்கியமான காரியம் எது என்பதனை எடுத்துரைக்கிறது. இறுதியில், பிரமிக்கத்தக்க உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் பின்னால் ஒரு சிருஷ்டிகர் உண்டு என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது. தாம் படைத்த பூமியையும் அதன் நிறைவையும் அளவற்ற அன்புடன் நேசித்தபடியால், சிருஷ்டிகரான அவர்தாமே அதற்குள் பிரவேசித்து அதனை மீட்டு புதுப்பித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.