எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெப்ப் ஒல்சன்கட்டுரைகள்

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி விளையாடினோம். நான் ஒளிந்துகொண்டேன். என்னுடைய ஐந்து வயது மாமா மகன் என்னை நெருங்கி வந்து கேட்டது. ‘இப்போது கண்டுபிடித்துவிடுவான்’ என்று நினைக்கும்போதே என்னுடைய இருதயம் படபடவென அடித்துக்கொண்டது. மிகவும் நெருங்கிவிட்டான். இன்னும் ஐந்து எட்டுதான். “கண்டுபிடித்து விட்டேன்!” என்றான்.

கண்ணாமூச்சி விளையாட்டு, சிறுவயதில் எல்லாருமே இந்த விளையாட்டை விளையாடியிருப் போம். கண்டுபிடிக்கப்படுவது என்பது வாழ்க்கையில் சிலசமயம் விளையாட்டான அனுபவமாக இருக்காது, எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்கிற உள்ளுணர்வுதான் மேலோங்கி இருக்கும். தங்களுடைய நிலையை மக்கள் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கிறவர்கள் அவ்வாறு ஓடுவார்கள்.

விழுந்துபோன உலகின் பிள்ளைகளாகிய நாமும் கண்ணாமூச்சி விளையாடுகிற நிலையில்தான் இருக்கிறோம். என்னுடைய நண்பன் அதை நமக்கும் தேவனுக்கும் இடையிலான “ஒரு வகையான கண்ணாமூச்சி விளையாட்டு” என்று சொல்லுவான்.  அதில் ஒளிந்துகொள்வதுபோல நாம் நடிக்கத்தான் முடியும். ஏனெனில் நம்முடைய சகல எண்ணங்களையும் தவறான தீர்மானங்களையும் அவர் நன்றாகவே அறிவார். அது நமக்கும் தெரியும், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியாததுபோல நாமும் நடந்துகொள்கிறோம்.

ஆனாலும் தேவன் தொடர்ந்து நம்மைத் தேடிவருகிறார். “வெளியே வா. உன்னுடைய அவலட்சணமிக்க பகுதியைக்கூட நான் பார்க்க விரும்புகிறேன்” என்று தேவன் அழைக்கிறார். இதே சத்தம்தான் நம்முடைய முதல் பெற்றோரையும், அவர்கள் பயத்தால் ஒளிந்திருந்த போதும் அழைத்தது: “நீ எங்கே இருக்கிறாய்?” (ஆதி. 3:9). அது ஓர் அன்பான அழைப்புதான், ஆனாலும் அந்தக் கேள்வி அவர்களுக்கு குத்தலாக இருந்திருக்கவேண்டும். “அன்பு பிள்ளையே, நீ ஒளிந்திருக்கிற இடத்தைவிட்டு வெளியே வா. மீண்டும் என்னோடு உறவுவைத்துக்கொள்.”

இது மிகவும் அபாயகரமானதாகவும், ஆபத்தானதாகவும்கூட தோன்றலாம். ஆனால் நாம் யாரானாலும், எப்படிப்பட்ட தவறைச் செய்திருந்தாலும் அல்லது செய்யவேண்டியதைச் செய்யத் தவறியிருந்தாலும், நம்முடைய பிதாவின் அரவணைப்பில், அவருடைய அன்பையும் பாதுகாப்பையும் பெறலாம்.

சகிக்க முடியாத துயரங்களையும் தாங்கி வாழல்

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அனுபவ செயல் திட்டம் என்ற அலைவழித் தொடர்புடைய ஒரு மிகப் பெரிய சமுதாயம், அந்த இணையதளத்தில் பல கோடி மக்கள் தங்களுடைய ஆழமான வேதனை தரும் அனுபவங்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அந்த உள்ளம் உடைக்கும் அனுபவங்களை நான் வாசித்தபோது, தங்களுடைய வேதனைகளைப் புரிந்துகொண்டு தங்களைப் பார்க்கக்கூடியவர்கள் இருக்க மாட்டார்களா என ஏங்கிப் பரிதவிக்கும் இருதயங்களைக் குறித்துக் சிந்திக்கலானேன்.

இத்தகைய வாழ்வு தரும் கொடை எப்படி உதவ முடியும் என்பதை, ஆதியாகமத்தில் ஓர் இளம் பணிப்பெண் வெளிப்படுத்துகின்றாள். எகிப்தின் மன்னன் பார்வோன் ஆபிராமுக்கு கொடுத்த அடிமைப் பெண் ஆக ஆகார் இருக்கலாம். (ஆதி. 12:16,16:1). ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்கு பிள்ளையில்லாதிருந்தபடியால் அவள் ஆபிராமைத் தன்னுடைய அடிமைப் பெண் ஆகார் மூலம் தனக்கு பிள்ளை தரும்படி கேட்கின்றாள். இது நமக்கு ஏற்றுக் கொள்ள வருத்தமானதாக இறுப்பினும், அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது. ஆகார் கர்ப்பவதியானபோது, அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. சாராய் அவளைக் கடினமாக நடத்தினபடியால் அவள் தன் நாச்சியாரைவிட்டு வனாந்திரத்திற்குத் தப்பி ஓடினாள் (16:1-6).

ஆகார் சங்கடமான சூழலிலிருக்கின்றாள். கர்ப்பிணியாயிருக்கின்றாள், தனிமையில் கடினமான பாலைவனத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றாள். ஆனால். பரிசுத்தரின் கண்களுக்கு அவள் மறைவாயிருக்கவில்லை. கர்த்தருடைய தூதன் ஆகாரைப் பார்த்து அவளோடு பேசி, அவளை ஊக்குவிக்கிறார். (வச. 7-12). இப்பொழுது அவள், “நீர் என்னைக் காண்கிற தேவன்” (வச. 13) என வெளிப்படுத்துகின்றாள்.

ஆகார் தன்னைக் கண்டவரைப் போற்றுகின்றாள். அதே தேவன் இயேசுவின் மூலம் இவ்வுலகில் வெளிப்பட்டபோது, “அவர் திரளான ஜனங்களைக் கண்டு பொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்தவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள் மேல்; மனதுருகினார்” (மத். 9:36). ஆகார் தன்னைப் புரிந்துகொண்ட தேவனைச் சந்தித்தாள்.

ஆகாரைக் கண்டு, புரிந்துகொண்ட தேவன் நம்முடைய வேதனைகளையும் காண்கின்றார் (எபி. 15-16) பரத்திலிருந்து நாம் தேற்றப்படுவதால், நம்மால் தாங்கக் கூடாத வேதனைகளையும் அவர் தாங்கக்கூடியதாக மாற்றுகின்றார்.

வாழ்வு தரும் தேவன்

சில குளிர்காலங்களுக்கு முன்பு, என்னுடைய சொந்த பட்டணம் அசாதாரணமான, எலும்பையும் துளைக்கக் கூடிய குளிர்ந்த காலநிலையை நீண்ட நாட்கள் அனுபவித்தது. ஆனால், இறுதியாக அது ஒரு வெப்பமான வசந்த காலத்திற்கு வழிவகுத்தது. இரு வாரங்கள் தொடர்ச்சியாக வெளிப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே தள்ளப்பட்டது (-20°c;-5°).

அப்படியொரு மிகக் குளிர்ந்த நாள் காலையில் கிரீச்சிடும் பறவைகளின் ஓசை, இரவின் அமைதியைக் கலைத்தது. நூற்றுக்கணக்கான பறவைகள் தங்கள் இருதயத்தின் எண்ணங்களைப் பாடின. அந்த சிறிய உயிரினங்கள் தங்களைப் படைத்தவரை நோக்கி, தயவாய் அனைத்தையும் வெப்பமாக்கித் தாரும் என்று கதறுவதாக நான் உறுதியாகக் கூறமுடியும்.

பறவை நிபுணர்கள், பிந்தின குளிர்காலங்களில் நாம் கேட்கும், பறவையின் பாடல்களையெல்லாம் பாடுவது, அநேகமாக ஆண் பறவைகளே. அவை தங்கள் துணைகளை ஈர்ப்பதற்கும், தங்கள் எல்லைகளை உறுதிப்படுத்தவும் பாடுகின்றன என்கின்றார். தங்கள் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளவும், வளப்படுத்திக் கொள்ளவும் தேவன் தன் சிருஷ்டிப்புகளை நமக்கு சீர்ப்படுத்தியுள்ளார் என்பதை அவற்றின் குரல்கள் நினைப்பூட்டுகின்றன. ஏனெனில் அவர்தான் வாழ்வு தரும் தேவன்.

தேவன் படைத்த, வளங்கள் நிறைந்த பூமியை வியந்து சங்கீதக்காரன் “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர்” எனப் பாடுகிறார். மேலும் “அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்” (சங். 104:12) என பாடுகிறார்.

பாடுகின்ற கூடுகட்டி வாழ்கின்ற பறவைகள் முதல் பெரிதும் விஸ்தாரமான சமுத்திரம் வரை “அதிலே சஞ்சரிக்கும் எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வச. 25). அத்தனையும் படைத்தவரும், அவைகள் அத்தனையும் வாழ்வதற்கு உறுதியளிக்கின்றவருமாகிய நம்முடைய சிருஷ்டிகரே போற்றத் தகுந்தவர்.

காட்சியை ரசியுங்கள்

சூரிய அஸ்தமனம். தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு அதை காண்பார்கள்..... புகைப்படம் எடுப்பார்கள்.... அழகிய காட்சியை ரசித்து அனுபவிப்பார்கள். 

சமீபத்தில் நானும் எனது மனைவியும், மெக்ஸிகோ வளைகுடாவில் சூரியன் மறைவதைக் கண்டோம். தினமும் நடைபெறும் இந்த இரவுக்காட்சியை கண்டுகளிக்க எங்களைப்போல் பலர் அங்கு கூடியிருந்தனர். அடிவானத்தில் சூரியன் முழுவதுமாக மறைந்தவுடன் எல்லோரும் சத்தமாக ஆராவாரித்தனர். 

மக்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்தபொழுது சங்கீதங்களில் இதற்கான துப்பு கிடைத்தது. சூரியன் தன் சிருஷ்டிகரை துதிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டுள்ளார் என்று சங்கீதக்காரன் எழுதியுள்ளான் (சங். 148:3). அதனால்தான் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் படர்வதைக் கண்டவுடன், மக்கள் தன்னிலை மறந்து பரவசத்துடன் அதனோடு சேர்ந்து துதிக்க ஆரம்பிக்கின்றனர்.

ஓடிக்கொண்டேயிருக்கும் நம்மை, தேவனுடைய அற்புதமான படைப்பு நிதானிக்க வைத்து, வாழ்வில் மிகவும் முக்கியமான காரியம் எது என்பதனை எடுத்துரைக்கிறது. இறுதியில், பிரமிக்கத்தக்க உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் பின்னால் ஒரு சிருஷ்டிகர் உண்டு என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது. தாம் படைத்த பூமியையும் அதன் நிறைவையும் அளவற்ற அன்புடன் நேசித்தபடியால், சிருஷ்டிகரான அவர்தாமே அதற்குள் பிரவேசித்து அதனை மீட்டு புதுப்பித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பொய்களும் உண்மையும்

 

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32). 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

சரியாய் எதிர்வினையாற்றுங்கள்

கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. "அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்" என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.

கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை "அகற்ற" வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை " இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்" (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.

இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும் ரெபேக்கா விஜயன்