கண்ணாமூச்சி விளையாடினோம். நான் ஒளிந்துகொண்டேன். என்னுடைய ஐந்து வயது மாமா மகன் என்னை நெருங்கி வந்து கேட்டது. ‘இப்போது கண்டுபிடித்துவிடுவான்’ என்று நினைக்கும்போதே என்னுடைய இருதயம் படபடவென அடித்துக்கொண்டது. மிகவும் நெருங்கிவிட்டான். இன்னும் ஐந்து எட்டுதான். “கண்டுபிடித்து விட்டேன்!” என்றான்.

கண்ணாமூச்சி விளையாட்டு, சிறுவயதில் எல்லாருமே இந்த விளையாட்டை விளையாடியிருப் போம். கண்டுபிடிக்கப்படுவது என்பது வாழ்க்கையில் சிலசமயம் விளையாட்டான அனுபவமாக இருக்காது, எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்கிற உள்ளுணர்வுதான் மேலோங்கி இருக்கும். தங்களுடைய நிலையை மக்கள் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கிறவர்கள் அவ்வாறு ஓடுவார்கள்.

விழுந்துபோன உலகின் பிள்ளைகளாகிய நாமும் கண்ணாமூச்சி விளையாடுகிற நிலையில்தான் இருக்கிறோம். என்னுடைய நண்பன் அதை நமக்கும் தேவனுக்கும் இடையிலான “ஒரு வகையான கண்ணாமூச்சி விளையாட்டு” என்று சொல்லுவான்.  அதில் ஒளிந்துகொள்வதுபோல நாம் நடிக்கத்தான் முடியும். ஏனெனில் நம்முடைய சகல எண்ணங்களையும் தவறான தீர்மானங்களையும் அவர் நன்றாகவே அறிவார். அது நமக்கும் தெரியும், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியாததுபோல நாமும் நடந்துகொள்கிறோம்.

ஆனாலும் தேவன் தொடர்ந்து நம்மைத் தேடிவருகிறார். “வெளியே வா. உன்னுடைய அவலட்சணமிக்க பகுதியைக்கூட நான் பார்க்க விரும்புகிறேன்” என்று தேவன் அழைக்கிறார். இதே சத்தம்தான் நம்முடைய முதல் பெற்றோரையும், அவர்கள் பயத்தால் ஒளிந்திருந்த போதும் அழைத்தது: “நீ எங்கே இருக்கிறாய்?” (ஆதி. 3:9). அது ஓர் அன்பான அழைப்புதான், ஆனாலும் அந்தக் கேள்வி அவர்களுக்கு குத்தலாக இருந்திருக்கவேண்டும். “அன்பு பிள்ளையே, நீ ஒளிந்திருக்கிற இடத்தைவிட்டு வெளியே வா. மீண்டும் என்னோடு உறவுவைத்துக்கொள்.”

இது மிகவும் அபாயகரமானதாகவும், ஆபத்தானதாகவும்கூட தோன்றலாம். ஆனால் நாம் யாரானாலும், எப்படிப்பட்ட தவறைச் செய்திருந்தாலும் அல்லது செய்யவேண்டியதைச் செய்யத் தவறியிருந்தாலும், நம்முடைய பிதாவின் அரவணைப்பில், அவருடைய அன்பையும் பாதுகாப்பையும் பெறலாம்.