எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜாண் பிளேஸ்கட்டுரைகள்

எதைக் குறித்துப் பெருமைபாராட்டலாம்?

உண்மையாக இருப்பது என்றால் என்ன அர்த்தம்? முக்கியமான இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயல்கிறது, த வெல்வடீன் ரேபிட் என்கிற ஒரு சிறுவர் கதை. ஒரு சிறுவனுக்கு பல பொம்மைகள் இருக்கின்றன, அவற்றில் வெல்வெட் துணியால் செய்யப்பட்ட ஒரு முயல் பொம்மையும் உண்டு; அது அந்தச் சிறுவன் தன்னை நேசித்து, அதன் மூலம் தான் உண்மையான முயலாக மாறுவதற்கு முயற்சியெடுக்கிற பயணம்தான் அந்தக் கதை. அந்தப் பொம்மைகளில் துணியாலான ஒரு குதிரைபொம்மையும் இருக்கிறது. அதுதான் எல்லாவற்றிலும் பழையது, அறிவானது. அது “புதுப்புது எந்திரப் பொம்மைகள் வருவதையும், அவை பெருமையாகத் தம்பட்டம் அடித்து, பிறகு உடைந்து, தூரே எறியப்படுவதையும் பார்த்திருக்கிறது.”  அந்தப் பொம்மைகள் எல்லாம் பார்ப்பதற்கு அட்டகாசமாகத் தான் இருந்தன; ஆனால், அன்புக்கு எதிரே அவற்றின் பெருமையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

வீறாப்புடன் துவங்குகிற பெருமை போகப்போக ஆட்டம் கண்டுவிடும். மூன்று விஷயங்களில் இந்த உண்மையைக் காணமுடியுமென எரேமியா பட்டியலிடுகிறார். “ஞானம்... பராக்கிரமம்... ஐசுவரியம்.”
(எரே. 9:23). ஞானமுள்ள அந்த முதிய தீர்க்கதரிசி, தன்னுடைய காலத்திலேயே இவற்றில் ஒன்று இரண்டு உண்மைகளை தன் கண்ணாலேயே கண்டிருக்கலாம். அதனால்தான் அவ்வாறு பெருமைபாராட்டுவதற்கு பதிலாக ஆண்டவருடைய சத்தியத்தை அறிந்துகொள்ளும்படி கூறுகிறார்: “மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.” (வச. 24).

தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், நம்முடைய நல்ல பிதாவாகிய தேவனைப் பற்றியே பெருமைபாராட்டக்கடவோம். அவருடைய மாபெரும் அன்பு எவ்வளவுக்கு நம் அறிவுக்குப் புலப்படுகிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக உண்மையானவர்களாக நாம் வளரமுடியும்.

போதிப்பதின்படி நடப்போம்

பால் டூர்னியர் என்பவர் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மருத்துவர்; அதிகம் மதிக்கப்பட்ட போதக ஆலோசகர். அவருடைய விரிவுரை ஒன்றைக் கேட்கிற சிலாக்கியம் போதகரும் எழுத்தாளருமான யூஜீன் பீட்டர்சனுக்குக் கிடைத்தது. மருத்துவரின் பணிகள் பற்றி பீட்டர்சன் வாசித்திருக்கிறார், மேலும் குணப்படுத்துவதற்கு மருத்துவர் கையாள்கிற விதங்களை அறிந்து வியந்திருக்கிறார். அன்றைய கருத்துரை பீட்டர்சனின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. டூர்னியர் தான் பேசுகிறபடி வாழ்கிறார், தான் வாழ்கிறபடி பேசுகிறார் என்று உணரமுடிந்தது. மருத்துவரின் அனுபவம் பற்றிச் சொல்வதற்கு ‘கான்குரயன்ஸ்’ (congruence) என்கிற வார்த்தையை பீட்டர்சன் பயன்படுத்துகிறார். கான்குரயன்ஸ் என்றால் இணக்கம். “அவரைப் பற்றிச் சொல்வதற்கு இதுதான் சரியான வார்த்தை” என்கிறார்.

கான்குரயன்ஸ் – “போதிப்பதின்படி செய்வது” அல்லது “போதிப்பதின்படி வாழ்வது” என்று இதற்கு அர்த்தம் உண்டு. யாராவது தான் “ஒளியில்” இருப்பதாகச் சொல்லியும் தன் சதோதரனையோ சகோதரியையோ பகைத்தால் அவர் “இதுவரைக்கும் இருளிலே” இருப்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் வலியுறுத்துகிறார் (1 யோவா. 2:9). அப்படிப்பட்டவர் பேசுவதும் செய்வதும் இணக்கமாக இருக்காது. அப்படிப்பட்டவன் “தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்” என்று யோவான் சொல்கிறார். வச 11. பேச்சுக்குக்கும் செயலுக்கும் இணக்கமில்லாதவன் “இருளிலே” இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

தேவ வார்த்தையின் வெளிச்சம் நம் பாதையில் பிரகாசிக்கும்படி நாம் அவரோடு நெருங்கி வாழ்வதுதான், இருளில் வாழாமல் நம்மைப் பாதுகாக்கும். அதனால் தேவபக்தியான ஒரு பார்வை கிடைக்கும், அது நம் வாழ்க்கையில் தெளிவையும் இலக்கையும் கொடுக்கும். அப்போது நம் வார்த்தைகளைப் போலவே நம் செயல்கள் இருக்கும். இதை மற்றவர்கள் கவனிக்கும்போது, போகும் இடம் இன்னதென்று அறியாமல் செல்கிறவர்கள் என்று நம்மை பற்றி எண்ணாமல், போகும் இடத்தை தெளிவாக அறிந்திருப்பவர்கள் என்று புரிந்துகொள்வார்கள்.

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்

“உன் பிள்ளைகளுக்கு நிலாவைக் காட்டி வளர்க்கக் கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடாதே!” என்று சொன்னார் திருமதி வெப் அவர்கள். வாரத்தின் மத்திய நாள் ஒன்றில் ஆராதனைக்காகக் கூடியிருந்தோம். அப்போது அதற்கு முந்தின நாள் இரவில் தெரிந்த பௌர்ணமி நிலவு பற்றிப் பேச்சு எழுந்தது. பேசிக்கொண்டிருந்தவர்களில் மிகவும் மூத்தவர்தான் திருமதி வெப் அவர்கள். தேவனுடைய பிரம்மாண்ட படைப்பை எண்ணி எப்போதும் பிரமிப்பவர். என் மனைவிக்கு நன்றாகப் பழக்கமானவர். அப்போது நான் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன். பிள்ளை வளர்ப்புக்கு அவர் வழங்கிய மிகமுக்கிய ஆலோசனை அது.  உன் பிள்ளைகளுக்கு நிலாவைக் காட்டி வளர்க்கக் கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடாதே!

அருமையான சங்கீதங்களை எழுத அனைத்து தகுதிகளையும் பெற்றவர் திருமதி வெப் அவர்கள். அந்த அளவுக்கு இயற்கையை ஆராயக்கூடியவர். வானசேனைகள் பற்றி தாவீது விவரிப்பதிலும் அந்த அளவு ஆழத்தைக் காணலாம். “அவைகளுக்குப் பேச்சுமில்லை . . . ஆகிலும் அவைகளின் வசனங்கள் பூமியெங்கும், அவைகளின் சத்தம் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது” என்று சொல்லுகிறார். சங்கீதம் 19:3-4. அதற்காக தாவீதோ, திருமதி வெப் அவர்களோ சந்திரனை அல்லது நட்சத்திரங்களை வணங்குகிறவர்கள் கிடையாது. மாறாக, அவற்றைச் சிருஷ்டித்தவரை வணங்குகிறவர்கள். வானங்களும் ஆகாயவிரிவும் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன. வசனம் 1.

பிள்ளைகள், வாலிபர்கள், கணவன்-மனைவியர், அக்கம்பக்கத்தார் என நம்மைச் சுற்றிலுமுள்ளவர்களிடம், தேவனுடைய கிரியைகள் வெளிப்படுத்துகிறவற்றைப் பார்க்கச் சொல்லலாம், அவருடைய மகிமையை அறிவிக்கிறவற்றைக் கேட்கச் சொல்லலாம். அவருடைய கரத்தின் கிரியைகளைக் கவனிக்கும்போது, சிருஷ்டிகராகிய அவரை பயபக்தியுடன் தொழுதுகொள்ள வழிநடத்தப்படுவோம். அந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

மீட்கப்பட்ட நம்பிக்கை

சூரியன் கிழக்கில் உதிக்கிறதா? வானம் நீல நிறத்திலுள்ளதா? கடல் நீர் உப்பாயிருக்கின்றதா? கோபால்ட் கனிமத்தின் அணு எடை 58.9 தானே? சரி. நீ ஓர் அறிவியல் மேதை அல்லது எந்த ஒரு சிறிய காரியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவனாயின் இந்தக் கடைசி கேள்விக்கு பதில் தெரிந்து வைத்திருப்பாய். மற்ற கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்றே பதில் சொல்ல வேண்டும். ஆனால், இத்தகைய கேள்விகளெல்லாம் கிண்டல் கலந்த கேள்விகளென்றே சொல்ல வேண்டும்.

நாம் சற்று கவனித்தோமாயின், இந்த நவீன காலத்தில் பழகிப் போன நம் செவிகள், இந்த செயலற்ற நிலையிலிருக்கும் அந்த மனிதனிடம் இயேசு கேட்கும் கேள்வியிலும் கிண்டல் கலந்திருக்கின்றது என்றே சொல்லக் கூடும். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” (யோவா. 5:6). நாம் எதிர்பார்க்கும் பதில் என்னவெனில், “என்னைக் கேலி செய்கின்றாயா? முப்பத்தெட்டு வருடங்களாக நான் உதவிக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்!” என்பதே. ஆனால், இயேசுவின் கேள்வியில் எந்தக் கிண்டலும் இல்லை என்பதே உண்மை. இயேசுவின் வார்த்தைகள் எப்பொழுதும் கருணை நிறைந்தவை. அவருடைய கேள்விகள் எப்பொழுதும் நம்மை நன்மைக்கு நேராகவே வழிநடத்துகினன்றன.

அந்த மனிதன் சுகமடைய விரும்புகிறான் என்பதை இயேசு அறிவார். நீண்டகாலமாக ஒருவரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை என்பதையும் அவர் அறிவார். இந்த அற்புதத்திற்கு முன்பாக இயேசு இவனுக்குள் தணிந்து கிடந்த நம்பிக்கையை மீட்டுக் கொண்டு வர விரும்பினார். எனவே தான் அவர் இந்த வெளிப்படையான கேள்வியைக் கேட்கின்றார். பின்னர்  அவனுடைய நம்பிக்கையின்படி செயல்படத் தூண்டுகின்றார். “எழுந்திரு, உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நட” (வச. 8) என்கின்றார். இந்த செயலற்ற மனிதனைப் போலவேதான் நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றோம். தேவன் நம்மை கருணையோடு பார்க்கின்றார். அவர் மீதுள்ள நம்பிக்கையோடு வாழ நம்மை அழைக்கின்றார்.

சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வு

கிறிஸ்மஸ் விடுமுறையின் போது எங்கள் குடும்பத்தின் ஐந்து பேரும் ரோம் நகருக்குச் சென்றிருந்தோம். ஒரே இடத்தில் இத்தனை அதிகமான ஜனக்கூட்டம் நிரம்பியிருக்கும் காட்சியை நான் இதற்குமுன் கண்டதேயில்லை. கூட்டத்தினூடே நாங்கள் ஊர்ந்து சென்று வாட்டிக்கன், கொலிசியம் போன்ற இடங்களைப் பார்வையிட்டோம். நான் என்னுடைய குழந்தைகளிடம் சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வோடு இருக்குமாறு அடிக்கடி வலியுறுத்திக் கொண்டேயிருந்தேன். நீ எங்கிருக்கின்றாய்,

யார் உன்னைச் சுற்றியிருக்கின்றார்கள், உன்னைக் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பனவற்றின் மீது கவனமாயிருக்கும்படி கூறிக் கொண்டேயிருந்தேன். நாம் இருக்கின்ற இடமும், நம்மைச் சுற்றியுள்ள இடமும் பாதுகாப்பானவையல்ல எனக் கூறும்படியான ஓர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அலைபேசிகளையும் காதில் வைக்கும் மைக்ரோ போன்களையும் பயன்படத்திக் கொண்டிருப்பதால் பெரும்பாலான சிறியவர்கள் (பெரியவர்களும்) தன்னைச் சுற்றியிருப்பவற்றைக் குறித்து விழிப்போடிருக்க பழகிக்கொள்வதில்லை.

சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வு என்பதை பிலிப்பி பட்டணத்திலுள்ள விசுவாசிகளுக்காக பவுல் ஏறெடுத்த ஜெபத்தில் காணலாம். பிலிப்பியர் 1:9-11ல் உள்ளது. பவுல் அவர்களின் மீது கொண்டுள்ள ஆவல் என்னவெனில் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும், எங்கிருக்கின்றோம், எப்படிப்பட்ட சூழலிலிருக்கின்றோம் என்பதைக் குறித்த ஓர் எண்ணத்தை நாளுக்கு நாள்; அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே. தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்;காக ஓர் இலக்கினை ஏற்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் மேலான ஒரு நோக்கத்தோடு பவுல் ஜெபிக்கின்றார். தேவனுடைய அன்பைப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஜனங்கள் தங்களைப் பரிசுத்தமும் குற்றமற்றவர்களாகவும் காத்துக் கொண்டு தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி கிறிஸ்து இயேசுவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாக, இடறலற்றவர்களாக வாழும்படி ஜெபிக்கின்றார். தேவன் நம் வாழ்வில் இருக்கின்றார். நாம் அவரையே மேலும் மேலும் சார்ந்து வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் போதுதான் இத்தகைய வாழ்வு நமக்குள் துளிர்க்கும், நாம் தேவனையும் பிரியப்படுத்த முடியும். மேலும் நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையிலிருந்தாலும் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்தவர்களாய் அங்கு அவருடைய அன்பைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியும்.

சரியான நேரத்தில் நம்மோடிருப்பவர்

அவள் அந்த அலமாரியின் மேலடுக்கினையே நோக்கிக் கொண்டிருந்தாள். அங்குதான் கண்ணாடி ஜாடிகளில் பழக்கூழ் தயாரிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. நான் அவளருகில், அந்தப் பகுதியில் நின்று அலமாரியின் மேல் பகுதியைப் பார்த்தேன். எதை வாங்கலாமென யோசித்துக் கொண்டிருந்தேன். நான் நிற்பதை அவள் அறியாமல் தன் யோசனையிலேயே மூழ்கியிருந்தாள். எனக்கு மேலடுக்கிலிருந்து பொருட்களையெடுப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் நான் நல்ல உயரமான மனிதன். ஆனால், அவளோ மிகவும் குறைந்த உயரம். நான் அவளிடம் பேசி உதவ முன்வந்தேன். அதிர்ச்சியடைந்தவளாய், "நீங்கள் இங்கு நிற்பதை நான் கவனிக்கவில்லை. தயவுகூர்ந்து உதவுங்கள்" என்றாள்.

இயேசுவின் சீடரும் இத்தகைய ஒரு சூழலில் தான் இருந்தனர். பசியோடிருக்கும் ஒரு கூட்டத்தினர், தனிமையான இடம், நேரமும் கடந்து கொண்டிருந்தது. மிகவும் பிந்திய மாலைப்பொழுது, சீடர்கள் இயேசுவிடம், “ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்கு போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும்" என்கின்றனர் (மத். 14:15). ஆனால், இயேசு அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்" என்றார். அப்பொழுது அவர்கள், 'இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களுமேயல்லாமல் வேறொன்றும் இல்லை" என்றார்கள் (வச. 17). சீடர்கள் பார்த்ததெல்லாம் தங்களுடைய இயலாமையையே. ஆனால், அவர்களுக்கருகில் நிற்பவர் இயேசு. வெறுமனே அப்பங்களை பெருகச் செய்பவராக மட்டுமல்ல, அவரே நம் வாழ்வின் அப்பமாக நிற்கின்றார்.

நம்முடைய சவால்களை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் மூழ்கி நம்முடைய குறுகிய கண்ணோட்டத்தோடு நாம் நம்மோடிருக்கின்ற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சார்ந்துகொள்ள நாம் தவறிவிடுகின்றோம். தனித்த மலைப் பிரதேசத்திலிருந்து மளிகைக் கடை வரை எந்த இடமாயினும் தேவன் நம்மோடிருக்கின்றார். தேவன் நம்முடைய தேவையின் போது அவ்விடத்திலிருக்கின்றார். நம் துன்பத்தின் மத்தியில் தவறாது வந்திருந்து உதவும் தேவனவர்.

ஒரு கடிதத்தில் எழுதி அனுப்பு

அநேக நான்கு வயது சிறுமிகளைப் போன்று ரூபியும் ஓடவும், பாடவும், நடனமாடவும், விளையாடவும் விரும்புவாள். ஆனால், அவள் அவ்வப்போது தனது முழங்காலில் ஏற்படும் வலியைப் பற்றிக் கூறிக் கொண்டேயிருந்தாள். ரூபியின் பெற்றோர் அவளை மருத்துவ ஆய்வுக்கு கொண்டு சென்றனர். அதன் அறிக்கை மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகயிருந்தது. அந்த மருத்துவ ஆய்வறிக்கை அவளுக்கு புற்றுநோயிருப்பதைத் தெரிவித்தது. நரம்பில் ஏற்பட்டுள்ள புற்றுநோய், அதுவும் நான்காவது நிலை. ரூபி பிரச்சனைக்குள்ளாயினாள். வெகு சீக்கிரம் அவளை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

மருத்துவமனையில் ரூபியைப் பார்க்க அநேகர் வந்தனர். அது கிறிஸ்மஸ் காலமாகையால் வீட்டை விட்டு மருத்துவமனையில் இருப்பது கடினமாயிருந்தது. ரூபியின் செவிலியர் ஒரு யோசனையைக் கொடுத்தனர். அவளுடைய அறைக்கு வெளியே ஒரு தபால் பெட்டியை வைப்போம். அதில் உறவினரும் நண்பர்களும் கடிதங்களில் தங்கள் ஜெபங்களையும், உற்சாகப்படுத்தும் வாசகங்களையும் எழுதிப் போடலாம் என்றார்கள். அந்த வேண்டுதல் முக நூலில் தெரிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து நண்பர்கள், உறவினர்கள், மற்றும் அறியாத நபர்களிடமிருந்தும் கடிதங்கள் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. ரூபிக்கும் அது ஆச்சரியமாயிருந்தது. ஒவ்வொரு கடிதம் வந்த போதும் (மொத்தத்தில் 100,000க்கும் மேல்) ரூபி உற்சாகப்படுத்தப்பட்டாள். கடைசியாக அவளால் வீட்டிற்கு வர முடிந்தது.

பவுல் கொலோசெ சபையினருக்கு எழுதிய கடிதமும் இதேப் போன்றதே (கொலோ. 1:2). அந்தப் பக்கங்களில் எழுதப்பட்ட வார்த்தைகள் நம்பிக்கையைக் கொண்டு வந்தன. தொடர்ந்து கனிதரும் வாழ்க்கை வாழவும், தேவனை அறிகிற அறிவோடு வல்லமையையும், பொறுமையையும், நீடிய சாந்தத்தையும் பெற்றுக்கொள்ள நம்பிக்கை கொடுத்தது (வச. 10-11). கொலோசெ சபை விசுவாசிகளுக்கு வளர்ச்சியடைய நல்ல மருந்தாக அமைந்தது. நமக்காக ஒருவர் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி கொலோசெ சபை விசுவாசிகளை இயேசு கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தில் நிலைத்திருக்க, பெலப்படுத்தியது.

ஊக்கத்தைக் கொடுக்கும் நம்முடைய வார்த்தைகள், தேவையோடிருப்பவர்களிடம் அற்புதமாக வேலை செய்யும்.

கேட்பதற்கே செவிகள் உருவாக்கப்பட்டன

குடும்பத்தின் ஒரு நபராக நடிக்கும்படி நடிகை டயான் குருசெர்க்கு ஒரு பாத்திரம் கொடுக்கப்பட்டது. அவள் அதில் தன்னுடைய கணவனையும் குழந்தையையும் இழந்த ஓர் இளம் மனைவியாகவும், தாயாகவும் நடிக்க வேண்டும். ஆனால், நிஜ வாழ்வில் அவள் இந்த அளவுக்கு வேதனைகளை அநுபவித்ததேயில்லை. எனவே அவளால் அதனை நம்பக்கூடிய அளவுக்கு நடிக்க முடியும் என அவளுக்குத் தோன்றவில்லை. ஆனாலும் அவள் அதனை ஏற்றுக் கொண்டாள். அதற்குத் தன்னை தயாரிக்கும்படி, துயரத்தின் பள்ளத்தாக்கினை கடந்து கொண்டிருக்கும் அத்தகையோரினைக் தாங்கும்படி நடத்தப்பட்ட கூட்டங்களில் அவள் பங்கு பெற்றாள்.

அக்கூட்டத்தினர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது, ஆரம்பத்தில் அவள் அவர்களுக்கு ஆலோசனைகளையும் சிந்தனையையும் கொடுத்தாள். நம்மில் அநேகரைப் போன்று அவளும் அவர்களுக்கு உதவியாக இருக்க விரும்பினாள். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல அவள் பேசுவதை நிறுத்தினாள். அவர்களின் பகிர்தலைக் கேட்க ஆரம்பித்தாள். உண்மையில் அப்பொழுதுதான் அவர்களோடு கடினப் பாதையில் நடக்க ஆரம்பித்தாள். அவள் தன்னுடைய செவிகளைச் சாய்த்தபோதுதான் அவளால் உண்மையை உணர முடிந்தது.

இஸ்ரவேல் ஜனங்களின் மீது எரேமியாவின் குற்றச்சாட்டு என்னவெனின், அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படி தங்கள் செவிகளைத் திருப்புவதில்லை. எரேமியா அவர்களை அறிவில்லாத ஜனங்கள், முட்டாள்களென கடினமான வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார் (எரே. 5:21). தேவன் தம்முடைய அன்பான வார்த்தைகளையும், அறிவுரைகளையும், ஊக்கத்தையும், எச்சரிக்கையையும் தொடர்ந்து நம் வாழ்வில் கொடுப்பதன் மூலம் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார். நாம் கற்றுக் கொண்டு முதிர்ச்சி பெற வேண்டுமென்பதே நம் தந்தையின் ஆவல். நாம் கற்றுக்கொள்ள பயன்படுத்தவே செவிகளைத் தந்துள்ளார். இப்பொழுது கேள்வியென்னவெனில், தேவனுடைய இருதயத்தின் வாஞ்சையைத் தெரிந்துகொள்ள நம் செவிகளை நாம் பயன்படுத்துகின்றோமா? என்பதே.