தேவனுக்கு விலையேறப்பெற்றது
சிறுவனாக இருந்தபோது, ஜீவன் தனது தந்தையை மிகவும் கடுமையானவராகவும் தூரமாகவும் கண்டான். ஜீவன் உடல்நிலை சரியில்லாமல், குழந்தை மருத்துவரைப் பார்க்க நேரிட்டபோதும், அவனுடைய அப்பா, தொந்தரவாய் கருதி முணுமுணுத்தார். ஒருமுறை அவனுடைய பெற்றோர் சண்டையிடும்போது, அவனை கருக்கலைப்பு செய்ய தீர்மானித்ததை அவன் தகப்பன் சொல்ல கேட்டான். அவன் ஒதுக்கப்பட்ட குழந்தை என்னும் உணர்வு அவன் வளர்ந்த பிறகும் அவனை நெருக்கியது. ஜீவன் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, தேவனை தகப்பனாய் அடையாளப்படுத்துவதற்கு அவனுக்கு கடினமாகவே இருந்தது.
ஜீவனைப் போல, நம்முடைய மாம்ச தகப்பனை நாம் நேசிக்காவிடில், தேவனுடனான நம்முடைய உறவில் நமக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழக்கூடும். நான் அவருக்கு பாரமாயிருக்கிறேனா? அவர் என்னைப் பற்றி கவலைப்படுகிறாரா? என்று ஒருவேளை நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் நமது பூமிக்குரிய தகப்பன்மார்கள் மௌனமாகவும் தூரமாகவும் இருந்திருக்கையில், பரலோகத் தகப்பனாகிய தேவன் நம் அருகில் வந்து, “நானும் உன்னைச் சிநேகித்தேன்” (ஏசாயா 43:4) என்று கூறுகிறார்.
ஏசாயா 43இல், தேவன் நம்முடைய சிருஷ்டிகராகவும் தந்தையாகவும் பேசுகிறார். அவருடைய குடும்பத்தின் அங்கத்தினராய் நீங்கள் வாழவேண்டும் என்று அவர் விரும்புவாரோ என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவர் தன்னுடைய ஜனங்களைப் பார்த்து என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்: “தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்... கொண்டுவா என்பேன்.” எந்த விதத்தில் அவருடைய அழைப்பிற்கு நாம் தகுதியானவர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவருடைய உறுதிமொழியைக் கேளுங்கள்: “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்” (ஏசாயா 43:4).
தேவன் நம்மை அதிகமாய் நேசித்தபடியினால், அவருடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து, அவரை விசுவாசிக்கிற நாம் என்றென்றும் அவருடையவர்களாய் வாழ தயை செய்தார் (யோவான் 3:16). அவர் சொன்னதையும் அவர் நமக்காய் செய்ததையும் வைத்து, அவர் நம்மை விரும்பகிறார் என்று நாம் உறுதியாய் நம்பமுடியும்.
இயேசுவின் மீது நம் கண்களைப் பதித்தல்
வினிதாவின் கண்கள் அவள் அருகே இருந்த சாம்பல் நிற காரின் மீதே பதிந்திருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற அவள் பாதையை மாற்ற வேண்டியிருந்தது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது, மற்ற ஓட்டுநரும் வேகத்தைக் கூட்டியதாகத் தோன்றியது. இறுதியாக, அவள் முன்னால் முந்த முடிந்தது. தன் அற்பமான வெற்றியின் தருணத்தில், வினிதா பின் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தாள். அதே சமயம், அவள் செல்லவேண்டிய இடத்தை, தான் கடந்து செல்வதைக் கவனித்தாள்.
ஒரு கசப்பான புன்னகையுடன், அவள்: "நான் முந்திச் செல்வதிலேயே நோக்கமாய் இருந்தேன், ஆகவே நான் வெளியேறும் வழியைத் தவறவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டாள்.
தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும் என்ற நமது விருப்பத்திலும் இப்படிப்பட்ட சறுக்கல் ஏற்படலாம். யூத நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்காததற்காக மதத் தலைவர்கள் இயேசுவை நெருக்குகையில் (யோவான் 5:16), நியாயப்பிரமாணம் சுட்டிக்காட்டிய நபரைக் கவனிக்காமல், அவர்கள் நியாயப்பிரமாணத்தை படிப்பதிலும் செயல்படுத்துவதிலும் மிகவும் உறுதியாகிவிட்டனர் என்று எச்சரித்தார்: “என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (வ.39-40).
தேவனுக்கு முன்பாக நீதிபரராய் இருக்க முயன்றதில், மதத் தலைவர்கள் யூத நியாயப்பிரமணத்தை தாங்கள் பின்பற்றுவதுமின்றி, மற்றவர்களும் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தினர். அவ்வாறே, தேவனுக்கேற்ற வைராக்கியத்தில் சபை கூடுதல், வேத வாசிப்பு, சமூக சேவை போன்ற நல்ல காரியங்களை நாமும் செய்து, பிறரையும் நம்முடன் சேரச் செய்யலாம். ஆனால் நாம் அவைகளின் மீது அதிக கவனம் செலுத்தி, அவற்றை நாம் யாருக்காகச் செய்கிறோமோ, அந்த இயேசுவானவரையே கவனிக்கத் தவறக்கூடும்.
நாம் செய்யும் அனைத்திலும், கிறிஸ்துவின் மீதே நம் கண்களைப் பதிந்திருக்க உதவும்படி தேவனிடம் கேட்போம் (எபிரெயர் 12:2). அவர் ஒருவரே "வழியும் சத்தியமும் ஜீவனும்" (யோவான் 14:6) ஆனவர்.
என் இருதயத்தை கண்டுபிடியும் என் தேவனே
உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி, சிறிதளவு பாதிப்புள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. ஒரு வருடத்தில், இந்த முன்முயற்சியானது 850 டன்களுக்கும் (778,000 கிலோ) விளைபொருட்களை சேமித்தது. இது அழகியல் தரநிலைகளை பூர்த்தி செய்யாததால் தூக்கி எறியப்பட்டிருக்கக்கூடும். வெளிப்புற தோற்றங்கள்-வடுக்கள் மற்றும் நகைச்சுவையான வடிவங்கள் - சுவை மற்றும் ஊட்டச்சத்து அவைகளின் மதிப்பைப் பாதிக்காது என்பதை கடைக்காரர்கள் விரைவில் அறிந்து கொண்டனர். வெளிப்புற தோற்றங்கள் உள்ளே இருப்பதை எப்போதும் தீர்மானிப்பதில்லை.
இஸ்ரவேலின் அடுத்த ராஜாவை அபிஷேகம் செய்ய தேவனால் அனுப்பப்பட்ட சாமுவேல் தீர்க்கதரிசி இதேபோன்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார் (1 சாமுவேல் 16:1). ஈசாயின் மூத்த மகனான எலியாபைப் பார்த்தபோது, அவனே தெரிந்துகொள்ளப்பட்டவன் என்று சாமுவேல் நினைத்தார். ஆனால் “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்” (வச. 7). தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த (வச. 11), ஈசாயின் எட்டு மகன்களில், இளையவரான தாவீதை அடுத்த ராஜாவாக தேவன் தேர்ந்தெடுத்தார்.
நாம் எந்த பள்ளியில் படித்தோம், என்ன சம்பாதிக்கிறோம் அல்லது எவ்வளவு தன்னார்வத் தொண்டு செய்கிறோம் என்பதை விட, தேவன் நம் மீது கரிசணையுள்ளவராயிருக்கிறார். சுயநலம் மற்றும் தீய எண்ணங்களிலிருந்து தங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு இயேசு தம் சீஷர்களுக்குக் கற்பித்தார். ஏனெனில் “மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” (மாற்கு 7:20). சாமுவேல் வெளித்தோற்றத்தைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்று கற்றுக்கொண்டது போலவே, தேவனுடைய உதவியோடு, நாம் செய்யும் எல்லாவற்றிலும் நம்முடைய இருதயங்களை, நம் எண்ணங்களையும் நோக்கங்களையும் ஆராய்வோமாக.