எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Guest Authorகட்டுரைகள்

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

சார்லா இறந்து கொண்டிருந்தாள், அவளுக்கு அது தெரியும். அவள் மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தபோது, அறுவை சிகிச்சை நிபுணரும் இளம் பயிற்சியாளர்களும் அறைக்குள் நுழைந்தனர். அடுத்த சில நிமிடங்களுக்கு, மருத்துவர் சார்லாவை கவனிப்பதை நிறுத்திவிட்டு, அங்கு இருந்த இளம் பயிற்சியாளர்களுக்கு அவளது முடிவு நிலையைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார். இறுதியாக, அவர் அவளை நோக்கி, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார். சார்லா பலவீனமாகச் சிரித்து, இயேசுவின் மீதான நம்பிக்கையையும் அமைதியையும் பற்றி அந்த குழுவினரிடம் அன்புடன் பகிர்ந்துகொண்டார்.

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவின் காயப்பட்ட, நிர்வாண சரீரமானது வழிப்போக்கர்களின் பார்வைக்கு முன்பாக தொங்கிக்கொண்டிருந்தது. அவரைத் துன்புறுத்துபவர்களை அவர் கடிந்துகொள்வாரா? இல்லை. மாறாக, 'பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்றார் (லூக்கா 23:34). பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டாலும், அவர் தமது சத்துருக்களுக்காக ஜெபித்தார். மேலும் அவரோடு கூட அவமானப்படுத்தப்பட்ட இன்னொரு கள்ளனிடம், அவனுடைய விசுவாசத்தினிமித்தம், “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” (வச. 43) என்று வாக்களிக்கிறார். அவருடைய அவமானத்திலும் வேதனையிலும் கூட, மற்றவர்கள் மீதான அன்பினிமித்தம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் வார்த்தைகளை இயேசு பேசினார்.

சார்லா அங்கேயிருந்த இளம் பயிற்சியாளர்களுக்கு ஆண்டவரைக் குறித்து சொல்லி முடித்தவுடன், டாக்டரின் கண்ணீர் ததும்பும் கண்களை பார்த்து, “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று மென்மையாக விசாரித்தாள். கிறிஸ்துவின் கிருபையினாலும் பெலத்தினாலும் ஜீவனுக்கேதுவான வார்த்தைகளை பகிர்ந்துகொண்டு, அவர்கள் மீதான தன்னுடைய அன்பை பிரதிபலித்தாள். இப்போதோ அல்லது வரவிருக்கிற நாட்களிலோ நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும், ஜீவ வார்த்தைகளை அன்புடன் பேசுவதற்கு தேவன் நமக்கு தைரியத்தை கொடுப்பார் என்று நம்புவோம்.

பெருமையும் வஞ்சித்தலும்

“அன்பான தேவனே, உம்முடைய மென்மையான திருத்தத்திற்கு நன்றி,” என் தோள்கள் சரிந்த நிலையில், அந்தக் கடினமான வார்த்தைகளை முனுமுனுத்தேன். நான் மிகவும் திமிர்பிடித்தவனாக இருந்தேன். எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும் என்று எண்ணினேன். மாதக்கணக்கில், என்னுடைய தொழிலில் வெற்றியடைந்து வந்தேன். இதினால் குவிந்த பாராட்டுகள் எனது திறமைகளை நம்புவதற்கும் தேவனின் வழிநடத்துதலை நிராகரிப்பதற்கும் என்னைத் தூண்டின. நான் நினைத்தது போல் நான் புத்திசாலி இல்லை என்பதை உணர எனக்கு ஒரு சவாலான சூழ்நிலை அவசியப்பட்டது. தேவனுடைய உதவி எனக்கு தேவையில்லை என்று என்னை நம்பவைத்து, என்னுடைய பெருமை மிக்க இருதயம் என்னை ஏமாற்றிவிட்டது.

ஏதோம் என்ற பலம்வாய்ந்த ராஜ்யம் அதன் பெருமைக்காக தேவனுடைய சிட்சையை அனுபவித்தது. மலைப்பாங்கான தேசத்தில் அமைந்திருக்கும் இந்த ஏதோம் தேசத்தின் நிலப்பரப்பு, இயல்பாகவே ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்திருந்தது (ஒபதியா 1:3). அதே நேரத்தில் ஏதோம் செல்வ செழிப்பு மிகுந்த தேசமாகவும், முக்கிய வர்த்தக சாலையிலும் அமைந்திருந்தது. அத்துடன் பண்டைய உலகத்தின் அரிய பொக்கிஷமாய் கருதப்பட்ட தாமிரம் அதிகம் கிடைக்கும் இடமாகவும் இருந்தது. நன்மைகள் அதிகம் நிறைந்த தேசமாய் இருந்ததினால், பெருமையும் அதிகமாகவே இருந்தது. ஏதோம் இஸ்ரவேலை ஒடுக்கினாலும், தங்களுடைய இராஜ்யம் வெல்ல முடியாதது என்று அதின் குடிமக்கள் நம்பினர் (வச. 10-14). ஆனால் தேவன் ஒபதியா தீர்க்கதரிசியின் மூலம் ஏதோம் மீதான தன் நியாயத்தீர்ப்பை அறிவிக்கிறார். ஏதோமுக்கு விரோதமாக புறஜாதி தேசங்கள் எழும்பும். ஒரு காலத்தில் பலம்வாய்ந்த இராஜ்யமாய் இருந்த ஏதோம், பாதுகாப்பற்றதாகவும் தாழ்த்தப்படவும் போகிறது (வச. 1-2).

தேவனில்லாமல் நம்முடைய கண்போன போக்கில் நம் வாழ்க்கையை வாழலாம் என்று நம் பெருமை நம்மைத் தூண்டுகிறது. அது நம்மை அதிகாரம், திருத்தம், மற்றும் பெலவீனம் ஆகியவற்றிற்கு செவிகொடுக்காமல் இருக்கச் செய்கிறது. ஆனால் தேவன் அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும்படி அழைக்கிறார் (1 பேதுரு 5:6). நாம் பெருமையிலிருந்து விலகி மனந்திரும்புதலைத் தேர்ந்தெடுக்கும்போது, தேவன் அவரை முழுமையாக நம்புவதற்கு நமக்கு வழிகாட்டுவார்.

கழுதையின்மேல் ஒரு ராஜா

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாம் வழக்கமாக குருத்தோலை ஞாயிறு என்றழைக்கும் நாள். சந்தேகமேயில்லை, இயேசு எருசலேமுக்கு வருவது இது முதல்முறை அல்ல. ஒரு பக்தியுள்ள யூதனாக எல்லா வருடமும் மூன்று பெரிய பண்டிகைகளுக்கு தவறாமல் அங்கே சென்றிருப்பார் (லூக்கா 2:41–42; யோவான் 2:13; 5:1). கடந்த மூன்று வருடங்களாக கிறிஸ்து எருசலேமில் போதித்து, ஊழியமும் செய்தார். ஆனால் இந்த ஞாயிறு அப்பட்டணத்தில் அவர் வருகை முற்றிலும் வித்தியாசமாயிருந்தது.

ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் பட்டணத்திற்குள் வந்துகொண்டிருக்கும் வேளையில், கழுதையின்மேல் ஏறி எருசலேமுக்கு வந்த இயேசுவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் (மத்தேயு 21:9–11). கடந்த மூன்று வருடங்களாக வேண்டுமென்றே தன்னை தாழ்த்திக்கொண்டவர், இப்போது ஆயிரக்கணக்கானவர்கள் முன்பில் பிரதான இடத்தை ஏன் எடுத்துக்கொண்டார்? தான் மரிக்கப்போகும் வெறும் ஐந்து நாட்களுக்கு முன்பு, அவரை ராஜா என்று அறிவித்த ஜனங்களின் கூற்றை ஏன் அங்கீகரித்துக்கொண்டார்?

ஐநூறு ஆண்டுகள் வயதான தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகவே இச்சம்பவம் நடந்ததாக மத்தேயு கூறுகிறார் (மத்தேயு 21:4–5). அதாவது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ராஜா எருசலேமுக்குள் “நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்” (சகரியா 9:9; மேலும் ஆதியாகமம் 49:10–11) என்பதே அத்தீர்க்கதரிசனம்.
வெற்றிகொண்ட ராஜா ஒரு நகரத்தினுள் பிரவேசிக்க இது முற்றிலும் வித்தியாசமான வழி. வெற்றிபெறும் அரசர்கள் பொதுவாக பராக்கிரமமான குதிரைகளில் தான் பவனி வருவார்கள். அனால் இயேசு யுத்த குதிரையில் ஏறி வரவில்லை. இதுவே இயேசு எப்படிப்பட்ட ராஜா என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் தாழ்மையாகவும், சாந்தமாகவும் வந்தார். இயேசு யுத்தத்திற்கு வரவில்லை; மாறாக, சமாதானத்திற்கு வந்தார். நமக்கும் தேவனுக்குமிடையே சமாதானம் உண்டாக்க வந்தார் (அப்போஸ்தலர் 10:36; கொலோசெயர் 1:20).

மெய்யான உபசரிப்பு

“சாப்பிட்டீங்களா?” இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள விருந்தினர்களை உபசரிக்க முதலில் கேட்கப்படும் கேள்வி இது. விருந்தினர்களிடம் அன்பையும், கரிசனையையும் காட்டும் தமிழர்களின் வழக்கம் இது. இதற்கு நீங்கள் என்ன பதில் கூறினாலும், அந்த வீட்டினர் உங்களுக்கு சாப்பிட ஏதாவது சமைத்து விடுவார்கள். குறைந்தபட்சம், குடிக்க தண்ணீராவது தருவார்கள். உண்மையான அன்பு என்பது வெறும் வார்த்தையில் வாழ்த்து சொல்வது மட்டுமல்ல; மாறாக, உபசரிப்பில் காண்பிக்கப்படவேண்டும் என தமிழர்கள் நம்புகின்றனர்.

தயவு காட்டுவதைக் குறித்து ரெபேக்காள் நன்கு அறிந்திருந்தாள். பட்டணத்தின் வெளியேயிருந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதும், கனமான அந்த குடத்தை வீட்டிற்கு கொண்டுசெல்வதுமே அவளின் அன்றாட வாடிக்கை. ஆபிரகாமின் வேலைக்காரன், தன் பிரயாணத்தால் மிகவும் தாகமுற்று, அவளிடத்திலிருந்த தண்ணீரை கொஞ்சம் கேட்க, அவள் சற்றும் தயங்காமல் அதைக் கொடுத்து உதவுகிறாள் (ஆதியாகமம் 24:17–18).

அத்தோடு ரெபேக்காள் நிறுத்தவில்லை. தன் விருந்தாளியின் ஒட்டகங்கள் தாகமாய் இருப்பதைப் பார்த்து, உடனே அவைகளுக்கும் தண்ணீர் வார்க்க திரும்பிச் செல்கிறாள் (வச. 19–20). அந்த கனமான குடத்தைத் தூக்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் நடந்து, உதவி செய்ய அவள் தயங்கவில்லை.

அநேகருக்கு வாழ்க்கையே கடினமாயிருப்பதால், செயலில் காட்டப்படும் சிறிதளவு அன்பு கூட அவர்களை ஊக்கப்படுத்தி, புத்துயிரூட்டும். வல்லமையான பிரசங்கத்தை செய்வதும் திருச்சபையை நாட்டுவதும் மட்டும் தெய்வீக அன்பின் அடையாளமன்று; மாறாக, தேவையில் உள்ளோருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுப்பதும் தெய்வீக அன்பின் அடையாளமே.

நற்கிரியை

சார்லஸ் ஸ்பர்ஜன் தன் பதின் பருவத்தில் தேவனோடு போராடினார். சபையிலேயே வளர்ந்தபோதும், பிரசங்கங்கள் அவருக்கு பயனற்றதும், அர்த்தமற்றதுமாய் தோன்றின. தேவனை நம்புவதென்பது பெரும்பாடாகவே இருந்தது. “தேவனை எதிர்த்து கலகம் செய்தேன்” என்று அவரே கூறுகிறார். ஒரு இரவின் கடும்பனிக்காற்று, தொடர்ந்து நடக்க பயணிக்க முடியாத பதினாறு வயது ஸ்பர்ஜன், அங்கிருந்த சிறிய மெத்தடிஸ்ட் ஆலயம் ஒன்றிற்குள் அடைக்கலம் புகுந்தார். அந்த போதகரின் பிரசங்கம் இவரையே குறிவைத்தது போலிந்தது. அத்தருவாயில், தேவன் அந்த போராட்டத்தில் வெற்றிபெற, சார்லஸ் தன்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தார்.

ஸ்பர்ஜன் பின்னர், “நான் கிறிஸ்துவோடு வாழ ஆரம்பிக்கும் முன்னரே, அவர் என்னோடு வாழ ஆரம்பித்துவிட்டார்" என்றெழுதுகிறார். மெய்யாகவே நாம் தேவனோடு வாழும் வாழ்க்கை என்பது நாம் இரட்சிக்கப்பட்ட நொடிலியிலிருந்து துவங்குவதில்லை. சங்கீதக்காரன், “தேவன் நம் உள்ளார்ந்த மனிதனை படைத்து, தாயின் கருவில் வைத்து உருவாக்குகிறார்” (சங்கீதம் 139:13) என குறிப்பிடுகிறார். அப்போஸ்தலன் பவுல், “நான் பிறவாததற்கு முன்னரே, தேவன் என்னை தெரிந்துகொண்டு, தம்முடைய ஆச்சரியமான கிருபையால் அழைத்தார்” (கலாத்தியர் 1:15) என்கிறார். நாம் இரட்சிக்கப்பட்ட உடனே தேவன் நம்மில் தம் கிரியையை நிறுத்திக்கொள்வதில்லை. “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்” (பிலிப்பியர் 1:6)

நாம் அனைவருமே ஒரு அன்பான தேவனின் கரங்களில் முடிவடையா கிரியைகளாய் இருக்கிறோம். நம் முரட்டாட்டத்திலிருந்து, தம்முடைய இதமான அரவணைப்புக்குள் அவர் நம்மை நடத்துகிறார். ஆனால் நம்மேல் அவர் கொண்டிருக்கும் நோக்கம் வெறும் ஆரம்பமே. “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). நாம் எந்த பருவத்தினராய் இருந்தாலும், வாழ்வில் எந்த நிலையிலிருந்தாலும், நாம் அவருடைய நல்ல கிரியையாய் இருக்கிறோம் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

சேவைக்கென ஒன்றாகக் கட்டப்பட்டோம்

கிராமங்களில், களஞ்சியம் கட்டுதல் என்பது ஒரு கூட்டுமுயற்சி. விவசாயி தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்தோ அதைக் கட்ட பல மாதங்கள் ஆகும். ஆனால் கிராம மக்கள் ஒன்றாய் கூடும்போது, வேலை விரைவாக முடியும். முன்னரே மரச்சாமான்களை ஆயத்தப்படுத்தி, கருவிகளை தயார் செய்துகொள்வார்கள். குறிப்பிட்ட ஒரு நாளில், மொத்த கிராம மக்களும் காலமே இணைந்து வந்து, வேலைகளை பிரித்துக்கொண்டு, ஒரு களஞ்சியத்தைக் கட்டியெழுப்ப முழுவீச்சில் செயல்படுவர். சிலசமயம் ஒரே நாளில் வேலை முடிந்துவிடும்.
திருச்சபையைக் குறித்தும், அதில் நம்முடைய பங்களிப்பைக் குறித்தும் தேவனுடைய பார்வையை விளக்க இது ஒரு நல்ல உதாரணம். “நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 12:27) என வேதம் கூறுகிறது. குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை செயல்படுத்துவதற்கு, தேவன் நம் எல்லாரையும் தனித்தனியே தெரிந்துகொண்டு, நம்முடைய விசேஷமான திறமைகளில் நம்மை ஈடுபடச் செய்து, ஒன்றாய் இசைந்திருக்கும் சரீரத்தின் (எபேசியர் 4:16) பாகங்களாக வடிவமைக்கிறார். சமுதாயத்தில், நாம் “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க” (கலாத்தியர் 6:2) ஊக்குவிக்கப்படுகிறோம்.

இருப்பினும் நாம் பெரும்பாலும் தனித்தே செயல்படுகிறோம். நமக்கு தேவையானவைகளை நாமே வைத்துக்கொள்கிறோம், சூழ்நிலைகளை நாமே கையாளப் பார்க்கிறோம். அல்லது பாரத்தோடு இருக்கும் மற்றவரின் தேவையை சந்தித்து தோள் கொடுக்கத் தவறுகிறோம். ஆனால் நாம் மற்றவர்களோடு இணைந்திருப்பதையே தேவன் விரும்புகிறார். நாம் பிறர் உதவியை கேட்கும்போதும், பிறர் தேவைக்காக ஜெபிக்கும்போதும் அற்புதமான காரியங்கள் நடக்குமென தேவன் அறிந்துள்ளார்.
நாம் ஒருவரையொருவர் சார்ந்துகொள்ளும்போதே நமக்கென தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதத்தை அனுபவிக்க முடியும். மேலும் ஒரே நாளில் களஞ்சியத்தைக் கட்டுவதுபோல, நம்முடைய வாழ்க்கையைக் குறித்த அவருடைய ஆச்சரியமான திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

அவருடைய சமாதானம்

என்னுடைய பணியிடத்தில் ஏற்பட்ட சூழ்ச்சிகளை, பல மாதங்களாய் என்னால் சமாளிக்க முடிந்தது. கவலைப்படுவது என்பது எனக்கு இரண்டாம் பட்சம். நான் ஆச்சரியப்படும் வகையில் சமாதானமாய் உணர்ந்தேன். கவலைப்படுவதற்கு மாறாக, என்னுடைய எண்ணமும், மனமும் அமைதலாக இருந்தது. இந்த சமாதானம் தேவனிடத்திலிருந்தே வந்திருக்கும் என்பதை நான் அறிவேன். 

அதற்கு முற்றிலும் முரணாய், என்னுடைய வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எல்லாம் நன்றாக நடந்துகொண்டிருந்த போதும் என் இருதயம் மிகவும் அமைதலற்று இருந்தது. நான் தேவனையும், அவர் நடத்துதலையும் நம்புவதை விட்டுவிட்டு, என் சுயதிறமையின் மீது நம்பிக்கை வைத்ததே அதற்கான காரணம் என்பதையும் நான் அறிவேன். என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, மெய்யான தேவசமாதானம் என்பது சூழ்நிலைகள் தீர்மானிப்பது அல்ல; மாறாக, அது தேவனை நம்புவதாலே உண்டாகும் என உணர்ந்தேன்.

நம் சிந்தை உறுதியாயிருக்கையில், தேவசமாதானம் நமக்கு கிடைக்கும் (ஏசாயா 26:3). ‘உறுதி’ என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம், “சாய்ந்து கொள்வது” என்பதாகும். நாம் அவர்மீது சாய்ந்து கொள்ளும்போது, அவருடைய மெய்யான இளைப்பாறுதலை நாம் அனுபவிக்கலாம். அவர் அகந்தையுள்ளவர்களையும் துன்மார்க்கரையும் தாழ்த்தி, அவரை நேசிக்கிறவர்களின் வழிகளை செம்மையாக்குகிறவர் என்பதை நினைவுகூர்ந்து தேவனை நாம் நம்பலாம் (வச. 5-7). 

என் கடினமான வேளைகளில் நான் சமாதானத்தை அனுபவிக்கையில், தேவசமாதானம் என்பது துன்பங்களே இல்லாத நிலை அல்ல என்றும், துன்பங்களின் நடுவிலும் நம்மை மிக பாதுகாப்பாய் உணரச்செய்வதே தேவசமாதானம் என்பதை நான் கண்டுபிடித்தேன். மிகவும் கடினமான வாழ்க்கைச் சூழல்களிலும் நம் அறிவையும், புரிதலையும் கடந்து நம் இருதயத்தை இந்த தேவசமாதானம் ஆளுகைச் செய்கிறது (பிலிப்பியர் 4:6-7).

தொடர்ந்து போகமுடியாத போது

எனது தந்தைக்கு 2006ஆம் ஆண்டு நரம்பியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதினால் அவருடைய நினைவுகள், பேச்சு மற்றும் உடல் அசைவுகளின் கட்டுப்பாடு ஆகியவற்றை இழந்தார். 2011ல் அவர் படுத்தபடுக்கையானார். என் தாயார் அவரை வீட்டில் வைத்து பராமரித்துக்கொண்டார்கள். அந்த நோயின் ஆரம்பகட்டம் இருண்டதாயிருந்தது. நான் மிகவும் பயந்தேன். ஒரு நோயாளியை வீட்டில் வைத்துப் பராமரிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பணத்தேவைக்குறித்தும், எனது தாயாரின் உடல் ஆரோக்கியத்தைக் குறித்தும் நான் கவலைப்பட்டேன். 

ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்திருக்கும்போது, என் இருதயத்தைப்போன்றே இருள் சூழ்ந்த அந்த அனுபவத்திலிருந்து வெளிவருவதற்கு புலம்பல் 3:22 எனக்கு உதவியது: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே.” “நிர்மூலமாதல்” என்ற வார்த்தைக்கான எபிரெய பதம், “முற்றிலும் அழிக்கப்பட்ட” அல்லது “முடிவுக்கு வருதல்” என்று அர்த்தங்கொள்கிறது. 

ஒவ்வொரு நாளையும் நாம் கடந்துசெல்வதற்கு தேவனுடைய கிருபை நம்மை ஊக்குவிக்கிறது. நம்முடைய சோதனைகள் நம்மை மேற்கொள்வதாக தெரியலாம், ஆனால் அது நம்மை சேதப்படுத்தாது, ஏனென்றால் நம்மிடம் இருக்கும் தேவனுடைய கிருபை அதைக்காட்டிலும் மேலானது.

என்னுடைய குடும்பத்திற்கு தேவன் பல விதங்களில் தன்னுடைய உண்மைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் நல் ஆலோசனைகள், பொருளாதார உதவிகள் ஆகியவற்றின் மூலமாய் தேவனுடைய கிருபையை நான் பார்க்க நேர்ந்தது. இவைகள் அனைத்தும், என் தந்தையை ஒரு நாள் பரலோகத்தில் சந்திப்பேன் என்று எனக்கு நினைவுபடுத்தியது. 

நீங்கள் இருளான பாதையில் பயணிக்கிறவர்கள் என்றால், உங்கள் நம்பிக்கையை இழக்கவேண்டாம். நீங்கள் சந்திக்கிற பிரச்சனைகள் உங்களை ஒருபோதும் மேற்கொள்வதில்லை. தேவனுடைய மெய்யான அன்பிற்காகவும் அவருடைய கிருபைக்காகவும் அவரைத் தொடர்ந்து நம்புவோம். 

யாராலும் பிரிக்கமுடியாது

பிரிஸ்ஸின் தகப்பனார் ஒரு போதகர். அவர் தேவனுடைய அழைப்பை ஏற்று இந்தோனேஷியாவின் சிறிய தீவு ஒன்றில் ஊழியம் செய்யப் புறப்பட்டார். பிரிஸ்ஸின் குடும்பம் ஒரு காலத்தில் விலங்குகளின் தங்குமிடமாயிருந்த ஒரு குடிசையில் தங்க நேரிட்டது. குடிசையில் மழைத்தண்ணீர் ஒழுக, பிரிஸ்ஸின் குடும்பம் தரையில் அமர்ந்து கிறிஸ்மஸைக் கொண்டாடிய தருணத்தை பிரிஸ் நினைவுகூருகிறாள். ஆனால் அவளுடைய தகப்பனார், “பிரிஸ், நாம் ஏழையாய் இருப்பதினால், நம் தேவன் நம்மை நேசிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது” என்று அவளுக்கு நினைவுபடுத்தினாராம். 

ஐசுவரியம், ஆரோக்கியம் மற்றும் நீடித்த ஆயுள் ஆகியவைகள் மட்டுமே தேவனுடைய ஆசீர்வாதத்திற்கான அடையாளம் என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பாடுகள் வரும்போது, தேவன் நம்மை நேசிக்கிறாரா என்று அவர்கள் கேள்வியெழுப்பக்கூடும். ஆனால் ரோமர் 8:31-39ல், உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்கமுடியாது என்கிறார் (வச. 36). இதுவே மெய்யாய் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையின் அடித்தளம்: தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து தன்னுடைய அன்பை பிரதிபலித்துள்ளார் (வச. 32). கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து நமக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார் (வச. 34). 

நம்முடைய உபத்திரவத்தின் நாட்களில், கிறிஸ்து நமக்காக செய்த தியாகத்தைக் குறித்த ஆறுதலான சத்தியத்தில் நாம் நம்மை பலமாய் ஸ்தாபித்துக்கொள்வோம். “மரணமானாலும், ஜீவனானாலும்... வேறெந்தச் சிருஷ்டியானாலும்” கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க மாட்டாது (வச. 38-39). நம்முடைய சூழ்நிலைகள் எதுவாயினும், நம்முடைய பாடுகள் எதுவாயினும், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதையும், அவருடைய அன்பிலிருந்து நாம் பிரிக்கப்படுவதில்லை என்பதையும் நினைவில்கொள்வோம். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.