நாம் சோர்வடையும்போது
சரியான காரியத்தைச் செய்ய முயல்வது சில சமயங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது. நல்லெண்ணத்தோடு நான் செய்யும் செயல்களும், பேசும் வார்த்தைகளும் யாருக்காவது பிரயோஜனமாயிருக்கிறதா என்று சில சமயங்களில் நாம் யோசிக்கலாம். ஒரு நண்பரை உற்சாகப்படுத்த, அதிகம் யோசித்து, ஜெபத்துடன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு கோபமாக பதில் வந்தபோது நானும் அப்படிதான் யோசித்தேன். அவரது பதில் எனக்கு கோபத்தையும், மன வருத்தத்தையும் தந்தது. எப்படி அவரால் என்னைத் தவறாக புரிந்துகொள்ள முடிந்தது?
நானும் அவருக்கு கோபமாக பதில் அனுப்பும் முன் சற்று யோசித்தேன். இயேசு உங்களை நேசிக்கிறார் என்று நாம் ஒருவருக்குக் கூறும்போது அதன் பலனை (குறிப்பாக நாம் விரும்பும் பலனை) நம்மால் எப்போதும் பார்க்க முடியாது என்பதை நினைவுகூர்ந்தேன். கர்த்தரை நோக்கி ஈர்க்கும் எண்ணத்தில் நாம் பிறருக்கு நல்லது செய்யும்போது, அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கலாம். ஒருவர் சரியான காரியத்தைச் செய்யத் தூண்டுவதற்கு நாம் எடுக்கும் முயற்சியை அவர்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.
கரிசனையோடு நாம் எடுக்கும் முயற்சிகளை, பிறர் ஏற்காததால் நாம் சோர்ந்துபோகும்போது, கலாத்தியர் 6 நாம் படிப்பதற்கு ஏற்ற பகுதியாகும். நம் உள்நோக்கத்தை ஆராயும்படி பவுல் கூறுகிறார் – நாம் பேசுவதையும், சொல்வதையும் ‘சோதித்துப் பார்க்கச்’ சொல்கிறார் (வச. 1-4). அப்படி நாம் செய்தபிறகு, விடாமல் முயற்சி செய்ய ஊக்கப்படுத்துகிறார். “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்” (வச. 9-10).
நாம் தொடர்ந்து தேவனுக்காக ஜீவிக்கவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார். இதுவே “நன்மை செய்வது” – அதாவது பிறருக்காக ஜெபிப்பதும், அவர்களுக்கு ஆண்டவரைக் குறித்து எடுத்துச் சொல்வதுமாகும். அதற்கான பலனை அவர் பார்த்துக்கொள்வார்.
தேவன் நம்மைப் பராமரிக்கின்றார்
என்னுடைய சிறிய பேரன்கள் தாங்களாகவே உடையணிந்து கொள்ள விரும்புவர். சில வேளைகளில் அவர்கள் சட்டையை பின்புறமாக போட்டுக்கொள்வர், இளையவன் அடிக்கடி தன்னுடைய ஷ_வை மாற்றி போட்டிருப்பான். நான் எப்பொழுதுமே அதனைச் சுட்டிக்காட்ட விரும்புவதில்லை. ஆனால். நான் அவர்களின் கபடமற்ற செயலை நேசிப்பேன்.
நான், அவர்களுடைய கண்களின் வழியே இவ்வுலகைக் காண விரும்புவேன். அவர்களுக்கு எல்லாமே வினோதமாகத் தெரியும். கீழே விழுந்த மரத்தின் மீது நடப்பதும், ஒரு கட்டையின் மீதமர்ந்து சூரியக் கதிரைப் பெறும் ஒரு ஆமையைக் கண்டுபிடிப்பதும், தீ அணைப்பு வாகனம் உறுமிக் கொண்டு செல்வதை ஆர்வத்தோடு கவனிப்பதும் அவர்களுக்கு வினோதமானவை. ஆனால், என்னுடைய சிறிய பேரன்கள் முற்றிலும் கபடற்றவர்களல்ல. அவர்கள் இரவில் தங்கள் படுக்கையிலிருந்து இறங்குவதற்கும், அடுத்தவனின் விளையாட்டுச் சாமானைப் பறித்துக் கொள்வதற்கும் ஒரு டஜன் காரணங்களைக் கூறுவர், ஆனாலும் நான் அவர்களை அதிகம் நேசிக்கின்றேன்.
தேவனுடைய முதல் மக்களான ஆதாமையும், ஏவாளையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களும் தேவனுக்கு என்னுடைய பேரப்பிள்ளைகளைப் போன்றேதான் இருந்திருப்பர். அவர்கள் தேவனோடு உலாவந்தபோது அந்தத் தோட்டத்தில் கண்ட ஒவ்வொன்றும் அவர்களுக்கு அதிசயமாகத்தான் தோன்றியிருக்கும். ஆனால், ஒரு நாள் அவர்கள் மனமறிய, தேவனுடைய வார்த்தையை மீறி கீழ்படியாதவராயினர். அவர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு மரத்தின் கனியை உண்டனர் (ஆதி. 2:15-17, 3:6). அந்த கீழ்படியாமை அவர்களைப் பொய்க்கும், மற்றவரைக் குற்றப்படுத்தவும் வழிவகுத்தது (3:8-13).
அப்படியிருந்தும் தேவன் அவர்களை நேசித்து, அவர்கள் மீது கரிசனை கொண்டார். அவர்களை உடுத்துவிப்பதற்காக மிருகங்களை பலியாக்கினார் (வச. 21). பின்னர், தன்னுடைய ஒரே மகனை பலியாகக் கொடுத்து அதன் மூலம் எல்லா பாவிகட்கும் ஒரு மீட்பின் வழியைக் கொடுத்தார் (யோவா. 3:16). அவர் நம்மை அவ்வளவு நேசிக்கின்றார்!
ஏனென்பது இயேசுவுக்குத் தெரியும்
என்னுடைய நண்பர்களில் சிலர் சிறிதளவு சுகம் பெற்றிருக்கின்றனர். ஆனால், இன்னமும் அந்த வியாதியின் வேதனையோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். வேறு சில நண்பர்கள் தங்களுடைய குடிபழக்கத்திலிருந்து விடுவிக்கப்படடிருந்தும், அந்த தூண்டுதலிலிருந்தும், உள் உணர்விலிருந்தும் முற்றிலும் விடுபடமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவன் ஏன் இவர்களை முற்றிலுமாக சுகப்படுத்தாமல் இருக்கின்றார்? என நினைத்து ஆச்சிரியப்பட்டதுண்டு.
மாற்கு 8:2-26ல் வாசிக்கும்போது இயேசு ஒரு பிறவிக் குருடனை சுகப்படுத்தின நிகழ்ச்சியை வாசிக்கின்றோம். முதலாவது இயேசு அவனை அந்த கிராமத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்கின்றார். பின்னர் அவனுடைய கண்களில் உமிழ்ந்து, அவன் மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா? எனக் கேட்டார். அவன், “நடக்கிற மனுஷரை மரங்களைப் போலக் காண்கின்றேன்” என்றான். இயேசு மறுபடியும் அவன் கண்களின் மேல் கைகளை வைத்தார். இப்பொழுது அவன் யாவரையும் தெளிவாகக் கண்டான்.
இயேசுவின் ஊழியகாலத்தில் இயேசுவின் வார்த்தைகளும், செயல்களும் மக்களையும், அவருடைய சீடர்களையும் அதிசயிக்கவும் குழப்பமடையவும் செய்தது (மத். 7:28, லூக். 8:10; 11:14) சிலரை அவரைவிட்டு ஓடும்படியும் செய்தது (யோவா. 6:66-66). இந்த இரு கட்ட அற்புதமும் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன் அவனை உடனடியாக சுகப்படுத்தவில்லை?
ஏனென்பது நமக்குத் தெரியாது. ஆனால், அந்த மனிதனுக்கும் அவனுடைய சுகத்தைக் கண்ட அவருடைய சீடர்களுக்கும் அந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அவர் அறிவார். நாம் தேவனோடு கொண்டுள்ள உறவில், இன்னும் நெருங்கி வர நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார். அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாதாயினும், நம் வாழ்விலும், நாம் நேசிக்கின்றவர்களின் வாழ்விலும் தேவன் செயல்படுகின்றார் என்பதை நம்புவோம். நாம் அவரைத் தொடர்ந்து பின்பற்ற நமக்குத் தேவையான பெலனையும், தைரியத்தையும், தெளிவையும் அவர் தருவார்.
நடக்காவிட்டாலும்
வாழ்க்கையில் சில வேளைகளில் அடிவிழுகிறது. சில வேளைகளில் அற்புதங்கள் நிகழுகின்றன. பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வாலிபர்கள், அத்தேசத்தின் பயப்படத்தக்க ராஜாவின் முன் நின்று தைரியமாக எந்த சூழ்நிலையிலும் அவர் நிறுத்திய பொற்சிலையை வணங்குவதில்லை என்று அறிவிக்கிறார்கள். அவர்கள் மூவரும் சேர்ந்து, ‘‘தேவன், எரிகிற அக்கினிச் சூளைக்கும் ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும் நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை. நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்து கொள்வதுமில்லை” எனக் கூறினர் (தானி. 3:17-18).
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபர்களையும் கட்டி எரிகிற அக்கினிச் சூளையிலே போட்டனர். ஆனால், தேவன் அற்புதமாக அவர்களை விடுவித்தார். அவர்களின் தலைமயிர் கருகாமலும் அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும் இருந்தன. (வச. 19-27). அவர்கள் சாகவும் தயாராயிருந்தனர். அவர்கள் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையில் தளரவில்லை. தேவன் எங்களை விடுவிக்காவிட்டாலும்... என்று உறுதியாயிருந்தனர்.
நாம் தேவனைப் பற்றிக்கொள்ள, அவர் விரும்புகிறார். ஒருவேளை நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை தேவன் குணப்படுத்தாவிடினும், நம் வேலையை இழந்தாலும், நாம் துன்புறுத்தப்பட்டாலும் தேவனைப் பற்றிக் கொள்வோம். சில வேளைகளில் தேவன் இவ்வாழ்வின் துன்பங்களிலிருந்து நம்மை விடுவித்து விடலாம் அல்லது விடுவிக்காமற்போகலாம். ஆனால், ‘‘நாம் ஆராதிக்கும் தேவன் எல்லாம் செய்ய வல்லவர்” என்பதை உறுதியாகப் பற்றிக் கொள்வோம். விடுவிக்காவிட்டாலும் நம்முடைய ஒவ்வொரு சோதனையின் மத்தியிலும் தேவன் நம்மோடிருக்கிறார். நம்மை நேசிக்கிறார்.
ஒரு சிறு குழந்தையைப் போல
அந்த சிறு பெண் மகிழ்ச்சியாகவும், நளினமாகவும் ஆராதனை இசைக்குத் தகுந்தாற்போல் அசைந்தாள். அவள் மட்டும் தான் இருக்கைகளுக்கிடையேயுள்ள நடைபாதையில் நின்றதால் அவள் சுழல்வதற்கும், புயங்களை அசைப்பதற்கும், பாதங்களை உயர்த்துவதற்கும் தடையில்லாமலிருந்தது அவளுடைய தாயின் முகத்தில் ஒரு புன்முறுவல், அவள் இந்த சிறு பெண்ணின் அசைவுகளை நிறுத்த முயற்சிக்கவில்லை.
இதைப் பார்த்தபோது, என்னுடைய இருதயமும் அவளோடு இணைந்து ஆட விரும்பியது. ஆனால் செய்யவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்னரே, குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியையும், வியப்பையும், கபடற்ற மனதுடன் தன் உணர்வற்று வெளிப்படுத்தும் குணத்தையும் இழந்துவிட்டேன். நாம் வளரும் போது முதிர்ச்சியடைந்து குழந்தை தன்மையை விட்டுவிட எதிர்பார்க்கப்படுகிறோம். ஆனால் நாம் தேவனோடுள்ள உறவுகளில் மகிழ்ச்சியையும், வியப்பையும் விட்டுவிட எதிர்பார்க்கப்படவில்லை.
இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் அவர் குழந்தைகளை வரவேற்றார். அடிக்கடி தன்னுடைய போதனைகளில் குழந்தைகளைக் குறிப்பிடுகின்றார் (மத். 11:25 ; 18:3; 21:6). ஒரு சமயத்தில், பெற்றோர் தம் குழந்தைகளை இயேசு ஆசிர்வதிக்கும்படி அவரிடம் கொண்டு வந்தபோது, இயேசுவின் சீடர்கள் அவர்களைத் தடை செய்தனர். சீடர்களை இயேசு கடிந்து கொண்டார். அவர், சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (மாற்கு 10:14) எனக் கூறினார். தேவன் குழந்தை போன்ற குணநலன்களையே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளத் தகுந்த குணம் எனக் குறிப்பிடுகிறார் - அவை மகிழ்ச்சி, வியப்பு, எளிமை, சார்ந்திருத்தல், நம்பிக்கை, மற்றும் தாழ்மை.
குழந்தையைப் போன்ற அதிசயித்தலும், மகிழ்தலும் அவரை வரவேற்கும்படி நம்முடைய இருதயங்களைத் திறந்து தரும். அவருடைய புயங்களுக்குள்ளே நாம் ஓடி வரும்படி அவர் நமக்காகக் காத்திருக்கின்றார்.
அவருடைய வழி நடத்துதலின்படி பின் தொடரல்
நான் குழந்தையாயிருந்த போது, ஞாயிறு மாலை ஆலய ஆராதனையை எதிர்பார்த்திருப்பேன். அது அத்துணை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஞாயிறு இரவுகளில் அடிக்கடி, மிஷனரிகள் அல்லது கௌரவ பேச்சாளர்கள் செய்தி தருவது வழக்கம். அவர்களுடைய செய்திகள் என்னை அதிகம் கவர்ந்ததற்குக் காரணம், அவர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள், தங்கள் வீடு, உடைமைகளை, எதிர்காலம் எல்லாவற்றையும் விட்டு விட மனமுவந்ததோடு, ஒன்றும் தெரியாத, புதுமையான, சில வேளைகளில் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்று தேவனுக்கு ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணித்ததேயாகும்.
அந்த மிஷனரிகளைப் போன்று, எலிசா அநேக காரியங்களை விட்டு விட்டு தேவனைப் பின் தொடர்ந்தார்.
(1 இரா. 19:19-21). எலியாவின் மூலம் தேவன் அவரைப் பணி செய்ய அழைக்கும் முன்னர், நமக்கு எலிசாவைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் ஒரு விவசாயி என்பது மட்டும் தான் தெரியும். எலியா, எலிசா தன்னுடைய வயல்களில் உழுது கொண்டிருக்கும் போது சந்தித்து, தன்னுடைய சால்வையை அவருடைய தோள் மீது போட்டு (அது தீர்க்கதரிசியாவதற்கு ஓர் அடையாளம்) தன்னைப் பின் தொடருமாறு அழைக்கின்றார். அவரும் தன் தாயையும், தந்தையையும் முத்தமிட்டு திரும்பி வர தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டதுடன், எலிசா தன்னுடைய ஏர் மாடுகளை அர்ப்பணித்து, அவற்றை அடித்து, ஏர் மரங்களால் அவற்றைச் சமைத்து, தன் பெற்றோரிடம் சொல்லி விட்டு எலியாவைப் பின் தொடர்ந்தான்.
நம்மில் அநேகர் குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு விட்டு தேவனுக்குப் பணி செய்யும்படி முழு நேர மிஷனரிகளாக அழைக்கப்படாவிட்டாலும், தேவன் நம் அனைவரையும் அவரைப் பின்பற்றும்படி விரும்புகின்றார். தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ அப்படியே அவனவன் நடக்கக்கடவன் (1 கொரி. 7:17).
என்னுடைய அனுபவத்திலிருந்து, நாம் நம்முடைய வீட்டை விட்டு வெளியே வராவிட்டாலும், நாம் எங்கிருந்தாலும் தேவனுக்குப் பணி செய்வதென்பது பரபரப்பாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும்.
அசாதாரண நண்பர்கள்
என்னுடைய முகநூல் நண்பர்கள் பதிக்கும் விருப்பமான படங்களில், விலங்கினங்களுக்கிடையேயான அசாதாரண நட்பினைக் குறித்தப் படம் அடிக்கடி இடம் பெறும். ஒரு நாய் குட்டியும் பன்றியும், ஒரு மானும் பூனையும், நண்பர்களாயிருப்பதைக் கவனித்தேன். மற்றொரு படத்தில் ஒரங்குட்டான் என்ற வாலில்லாத குரங்கு அநேக புலிக்குட்டிகளைத் தாயைப் போல அரவணைப்பதைப் பார்த்தேன்.
இத்தகைய, மனதிற்கு இதமான, அசாதாரண நட்பினைப் பார்க்கும் போது, அது எனக்கு ஏதேன் தோட்டத்தின் விளக்கத்தை நினைவுபடுத்தியது. அந்த தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் தேவனோடு ஒருமனதோடு வாழ்ந்தனர். தேவன் அவர்களுக்கு தாவரங்களை உணவாகக் கொடுத்தமையால், விலங்குகளும் அவர்களோடு ஒருமித்து வாசம் செய்தன என நான் எண்ணுகிறேன் (ஆதியாகமம் 1:30). ஆனால் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த போது, இந்த இனிமையான காட்சி கலைந்தது (3:21-23). இப்பொழுது மனிதரிடையேயும் படைப்புகளிடையேயும் தொடர்ந்து பகைகளும், போராட்டங்களும் இருப்பதைக் காணலாம்.
ஆனாலும் ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு நாள் ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும் ஒருமித்திருக்கும் (11:6) என்று உறுதியளிக்கின்றார். இயேசு மறுபடியும் வந்து அரசாட்சி செய்யும்போது இது நடக்கும் என அநேகர் விளக்கமளிக்கின்றனர். அவர் மீண்டும் வரும்போது பிரிவினைகள் கிடையாது. மரணமில்லை... வருத்தமில்லை. முந்தினவைகள் ஒழிந்து போயின (வெளி. 21:4). அந்த புதிய பூமியில் படைப்புகள் யாவும் முந்திய ஒற்றுமைக்குள் கொண்டு வரப்படும். வெவ்வேறு ஜாதி, நாடு, மொழி பேசும் ஜனங்கள் யாவரும் ஒருமித்து தேவனை ஆராதிப்பார்கள் (7:9-10 ; 22:1-5).
அதுவரையும் தேவன் நமக்கு உடைந்து போன உறவுகளைப் புதுப்பிக்கவும், புதிய எதிர்பாராத நட்புகளை உருவாக்கவும் உதவுவார்.
மகிழ்ச்சி
நான் ஒரு புதிய காலநிலையை அடைகிறேன். முதிர்வயதின் குளிர்காலம் இன்னும் அதற்குள் வரவில்லை. ஆனால், நான் இன்னமும் அதை அடையவில்லை. வருடங்கள் வேகமாக குதித்து ஓடிக்கொண்டிருந்தாலும், நான் அவற்றின் வேகத்தைச் சற்று குறைக்க விரும்பினேன். எனக்குள் என்னைத் தாங்குகின்ற மகிழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேவன் எனக்குத் தருகின்ற ஒரு புதியநாள். நானும் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “கர்த்தரைத் துதிப்பதும்… காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்” (சங். 92:1,3) என்று சொல்லுகிறேன்.
என் வாழ்வில் போராட்டங்களும் வேதனைகளும் இருந்த போதிலும், மற்றவர்களின் கஷ்டங்கள் சில வேளைகளில் என்னை மேற்கொள்கின்றன. தேவன் என்னையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து பாட பெலப்படுத்துகிறார்” உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன் (பாடுவேன்) (வச. 4). தேவன் தந்த ஆசிர்வாதங்களுக்காக, நமது குடும்பம், நண்பர்கள், மேலும் திருப்தியளிக்கக்கூடிய வேலை ஆகியவற்றினை அவருடைய எழுச்சியூட்டும் வார்த்தைகளுக்காகவும் மகிழ்ச்சியடைவோம். தேவன் நம்மை அதிகமாக நேசித்ததினால், நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார். நமக்கு மகிழ்ச்சியைத் தந்தார். மெய்யான மகிழ்ச்சியின் மூலக்காரணராகிய பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தார் (ரோம. 15:13). தேவனாகிய கர்த்தராலே “நீதிமான் பனையைப் போல் செழித்திருப்பான்… அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங். 92:12-15).
இந்த கனி என்பதென்ன? நம்முடைய வாழ்க்கைச் சூழல் அல்லது காலம் எப்படியிருந்தாலும், நம்முடைய வாழ்வினாலும் நாம் பேசும் வார்த்தையினாலும் அவருடைய அன்பிற்கு எடுத்துக்காட்டாயிருப்போம். நம் தேவனைத் தெரிந்துகொள்வதும், அவருக்காக வாழ்வதும் அவரைப் பற்றி பிறருக்குச் சொல்வதுமே உண்மையான மகிழ்ச்சி.
மேசெல்-லை இயேசு நேசிக்கிறார்
என்னுடைய சகோதரி மேசெல் சிறியவளாக இருந்தபோது யாவருமறிந்த ஒரு பாடல் “இயேசு என்னை நேசிக்கிறார் இது எனக்குத் தெரியும், ஏனெனில் வேதாகமம் மேசெல்லை நேசிக்கிறார் என்று சொல்லுகிறது” என்று தன் சொந்த வழியில் பாடும் போது அது எனக்கு அளவு கடந்த எரிச்சலைத் தந்தது! அவளுடைய புத்திசாலியான மூத்த சகோதரி இப்பாடலை ‘வேதாகமம் என்னையும் அவ்வாறுதான் நேசிக்கிறார்” என்று பாடுவாள். ஆனால், இவள் தன் சொந்த வழியில் பாடுவதில் உறுதியாக இருந்தாள்.
ஆனால், இப்பொழுது என் சகோதரி சரியாகத்தான் பாடியிருக்கிறாள் எனத் தோன்றுகிறது. இயேசு நம்மை நேசிக்கிறார் என்று வேதாகமம் சொல்லும் பொழுது, மே-செல்லுக்கு மட்டுமின்றி நம் அனைவரையும் நேசிக்கிறார் என்று சொல்லுகிறது. மீண்டும் மீண்டும் நாம் இந்த உண்மையை வேதத்தில் வாசிக்கிறோம். உதாரணமாக, அப்போஸ்தலனாகிய யோவான் ‘இயேசு மிகவும் நேசித்த சீஷன்’ (யோவா. 21:7,20). தேவன் நம்மீது வைத்துள்ள அன்பை மிகச் சிறந்த முறையில் வேத வசனம் யோவான் 3:16ல் “தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” எனக் கூறியுள்ளார்.
தேவனுடைய அன்பைக் குறித்து மீண்டும் யோவான் வலியுறுத்தி 1 யோவான் 4:10ல் நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது என்று கூறுகிறார். இயேசு தன்னை நேசிக்கிறாறென்று யோவான் கூறியது போல இயேசு நம்மையும் நேசிக்கிறார் என உறுதியாகக் கூறமுடியும். வேதாகமம் நம்மிடம் அதையே கூறுகிறது.