தேவன் நம் பாவத்தை மூடுகிறார்
1950களில் ஒரு ஒற்றைத் தாய் தனது குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேலை தேட வேண்டியிருந்தபோது, அவருக்கு தட்டச்சு வேலை கிடைத்தது. ஒரே பிரச்சினை என்னவென்றால், அவள் நேர்த்தியாய் தட்டச்சு செய்பவள் அல்ல; தொடர்ந்து தவறுகளைச் செய்தாள். அவள் தனது பிழைகளை மறைப்பதற்கான வழிகளைத் தேடினாள். இறுதியில் தட்டச்சுப் பிழைகளை மறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வெள்ளைத் திருத்த திரவமான, திரவக் காகிதம் என்று அழைக்கப்படும் ஒன்றை கண்டுபிடித்தாள். அது காய்ந்ததும், பிழைகள் இல்லாதது போல் வெண்மையான பின்பு, மீண்டும் அதின் மீது புதிதாய் தட்டச்சு செய்யமுடியும்.
நம்முடைய பாவத்தை சமாளிக்க நேர்த்தியான சக்திவாய்ந்த வழியை இயேசு நமக்கு கொடுக்கிறார். மூடிமறைத்தல் இல்லை, அது முழுமையான மன்னிப்பு. இதற்கு ஒரு நல்ல உதாரணம் யோவான் 8 ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில் விபச்சார பாவத்தில் சிக்கிய ஒரு ஸ்திரீயின் சம்பவத்திலிருந்து காட்டப்படுகிறது (வச. 3-4). அந்த ஸ்திரீக்கும் அவள் செய்த பாவங்களுக்கும் இயேசு ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அங்கிருந்த நியாயதிபதிகள் விரும்பினர். அவள் கல்லெறியப்பட வேண்டும் என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. ஆனால் இயேசு நியாயப்பிரமாணம் என்ன சொல்லுகிறது என்பதைக் குறித்து சற்றும் யோசிக்கவில்லை. மாறாக, எல்லாரும் பாவம் செய்தவர்கள் தான் என்று (ரோமர் 3:23ஐப் பார்க்கவும்), உங்களில் பாவமில்லாதவன் அந்த ஸ்திரீயின் மீது கல்லெறியக்கடவன் (யோவான் 8:7) என்று சொல்லுகிறார். ஒரு கல்லும் எறியப்படவில்லை.
இயேசு அவளுக்கு ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்தினார். அவளை அவர் குற்றவாளியாய் தீர்க்கவில்லை என்று சொல்லி, “இனிப் பாவஞ்செய்யாதே” (வச. 11) என்று சொல்லுகிறார். அவளுடைய பாவ வாழ்க்கைக்கான் தீர்வையும், இனி அவள் பாவம் செய்யாமல் வாழும் வாழ்க்கைக்கான புதிய துவக்கத்தையும் இயேசு அருளுகிறார். அவருடைய கிருபையினாலே அந்த வாய்ப்பை தேவன் நமக்கும் அருளுகிறார்.

நம் காலில் நாமே சுடுதல்
2021 ஆம் ஆண்டில், வரலாற்றில் இதுவரை அம்பு எய்தவர்களைவிட அதிக தொலைவில் அம்பு எய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒரு பொறியாளர் 2,028 அடி சாதனையை இலக்காகக் கொண்டார். ஒரு உப்புத் தட்டில் படுத்துக்கொண்டு, அவர் பிரத்யேகமாய் வடிவமைத்த கால் வில்லின் நாண்களை இழுத்து, ஒரு மைலுக்கும் (5,280 அடி) புதிய சாதனைத் தூரம் இருக்கும் என்று அவர் நம்பும் அளவிற்கு அம்பை ஏவத் தயார் செய்தார். ஆழமாக மூச்சை இழுத்து அம்பை எய்தார். அது ஒரு மைல் கூட பயணிக்கவில்லை. உண்மையில், அது ஒரு அடிக்கும் குறைவாகவே பயணித்தது. அவரது காலில் பட்டு, கணிசமான சேதத்தை ஏற்படுத்தியது. ஐயோ!
சில சமயங்களில் தவறான லட்சியத்துடன் நம்முடைய காலில் நாமே காயத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம். யாக்கோபுக்கும் யோவானுக்கும் நல்லதை லட்சியமாக தேடுவது என்றால் என்ன என்று தெரியும். ஆனால் தவறான காரணங்களுக்காக. “உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும்” (மாற்கு 10:37) என்று இயேசுவிடம் கேட்டார்கள். அவர்களுக்கு இயேசு “இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்” (மத்தேயு 19:28) என்று பதிலளிப்பதின் மூலம் அவர்கள் ஏன் இந்த கேள்வியை கேட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பிரச்சனை என்ன? அவர்கள் கிறிஸ்துவின் மகிமையில் தங்களுடைய சுயநலமான பதவியின் ஸ்தானத்தை ஸ்தாபிக்க முயற்சித்தனர். மேலும் இயேசு அவர்களிடம் நீங்கள் கேட்கிறது இன்னதென்று உங்களுக்கு தெரியவில்லை என்றும் (மாற்கு 10:38), “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” (வச. 43) என்றும் சொல்லுகிறார்.
நான் கிறிஸ்துவுக்காய் நன்மையும் மேன்மையுமான காரியங்களை செய்வதற்கு பிரயாசப்படும்போது, இயேசு செய்ததுபோல மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு சேவை செய்யும் ஞானத்தையும் வழிநடத்துதலையும் நாடமுடியும்.
உண்மையுள்ளவன், ஆனால் மறக்கப்படவில்லை
சீன், வளர்ந்தபோது குடும்பம் என்றால் என்ன என்பதைக் குறித்து குறைவாகவே அறிந்திருந்தான். அவனுடைய தாயார் மரித்துவிட்டார். அப்பாவும் எப்போதும் வீடு தங்குவதில்லை. அவன் எப்போதும் தனிமையாகவும் ஒதுக்கப்பட்டவனாகவும் உணர்ந்தான். அவனுக்கு அருகாமையில் வசித்த ஒரு தம்பதியினர் அவனை சந்தித்தனர். அவனை தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, தங்களுடைய பிள்ளைகளை அண்ணன் என்றும் அக்கா என்றும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அது அவன் மற்றவர்களால் நேசிக்கப்படுகிறான் என்னும் உணர்வை அவனுக்கு தந்தது. அவனை அவர்கள் திருச்சபைக்கு அழைத்துச் சென்றனர். சீன் தற்போது, ஒரு உறுதியான இளைஞனாகவும், வாலிபர் கூட்டத் தலைவனாகவும் செயல்படுகிறான்.
இந்த தம்பதியினர் தங்களை சுற்றியிருக்கும் இளம் வாலிபர்களின் வாழ்க்கையை மாற்றும் முக்கியமான கருவியாய் செயல்பட்டாலும், அவர்கள் செய்த அந்த மேன்மையான செயல் அவர்களின் திருச்சபையில் இருந்த பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. ஆனால் விசுவாச வீரர்களின் விசுவாசத்தை கனப்படுத்திய தேவன், அவர்களையும் நிச்சயமாய் ஒரு நாளில் கனப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். எபிரெயர் 11ஆம் அதிகாரம் நமக்கு நன்றாய் தெரிந்த பிரபல விசுவாச வீரர்களை பட்டியலிடுவதில் துவங்கி, நம் அறிவிற்குட்படாத பலரை “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்(றவர்கள்)” (வச. 39) என்று வரிசைப்படுத்துகிறது. “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை” (வச. 38) என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
நம்முடைய கிரியைகளை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றாலும், தேவன் அதைப் பார்க்கிறார். அதை அறிவார். நாம் சொன்ன சில ஆறுதலான வார்த்தைகளோ அல்லது கிரியைகளோ சிறியதாயிருக்கலாம்; ஆனால் தேவன் அதை குறித்த காலத்தில் தன்னுடைய நாமத்திற்கு மகிமையாய் பயன்படுத்துவார். யாருக்கும் தெரியவில்லையென்றாலும், உன்னையும் உன் கிரியைகளையும் தேவன் அறிவார்.
சிவப்பு ஆடை திட்டம்
சிவப்பு ஆடைத்திட்டம் பிரிட்டிஷ் கலைஞரான கிர்ஸ்டி மேக்லியோட் என்பவரால் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சியகங்களில் ஒரு முக்கிய அங்கமாய் மாறியுள்ளது. பதின்மூன்று ஆண்டுகளாக, எண்பத்து நான்கு பர்கண்டி பட்டுத் துண்டுகள் உலகம் முழுவதும் பயணம் செய்து முந்நூறுக்கும் மேற்பட்ட பெண்களால் (மற்றும் ஒரு சில ஆண்களால்) எம்ப்ராய்டரி செய்யப்பட்டன. அந்த துண்டுகள், அந்த திட்டத்தில் பங்கேற்ற, அடையாளம் தெரியாமல் ஒதுக்கப்பட்டிருந்த பல கலைஞர்களின் கதைகளைச் சொல்லும்வண்ணம் ஒன்றாகக் கோர்க்கப்பட்டது.
இந்த சிவப்பு ஆடையைப் போலவே ஆரோனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்பட்ட வஸ்திரம் “விவேகமான இருதயமுள்ள” (யாத்திராகமம் 28:3) பலரால் வடிவமைக்கப்பட்டது. ஆசாரியர்களின் அந்த பிரத்யேகமான வஸ்திரத்தில், இஸ்ரவேலின் வாழ்க்கை சரிதைகள், அதிலுள்ள கற்களில் கோத்திரங்களின் பெயர்கள் ஆகியவைகள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். அதை ஆரோன் “கர்த்தருக்கு முன்பாக… ஞாபகக்குறியாகச் சுமந்துவர” (வச. 12) அறிவுறுத்தப்படுகிறார். அங்கிகள், இடைக்கச்சைகள் மற்றும் குல்லாக்கள் ஆகியவைகள் தேவனை சேவித்து மக்களை ஆராதிக்க தகுதிப்படுத்திய ஆசாரியர்களுக்கு மகிமையும் அலங்காரமுமாயிருக்கும்பொருட்டு கொடுக்கப்படுகிறது (வச. 40).
கிறிஸ்துவின் மூலம் உடன்படிக்கை உறவில் அங்கத்தினராய் சேர்க்கப்பட்ட நாம், ஆசாரியக்கூட்டமாய் அழைப்பைப் பெற்று, ஒருவரையொருவர் தேவனை ஆராதிக்க ஊக்கப்படுத்துவோம் (1 பேதுரு 2:4-5,9). இயேசுவே நமது பிரதான ஆசாரியர் (எபிரெயர் 4:14). ஆசாரியர்களாக நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள எந்த ஒரு பிரத்யேகமான ஆடையையும் நாம் அணியாவிட்டாலும், அவருடைய கிருபையால், “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” வாழ்கிறோம் (கொலோசெயர் 3:12).

ஏதாகிலும் கேள்வி?
ஆன், பல ஆண்டுகளாக அறிந்திருந்த வாய்வழி அறுவை சிகிச்சை நிபுணரை ஆரம்ப பரிசோதனைக்காக சந்தித்தார். அவர் அவளிடம், “உனக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா?” என்று கேட்டார். அவள், “ஆம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் சென்றீர்களா?” என்று கேட்டாள். அவளுடைய கேள்வி அவரை குற்றப்படுத்தும் நோக்குடன் கேட்கப்பட்டதில்லை, மாறாக, விசுவாசத்தைக் குறித்த உரையாடலைத் துவக்குவதற்காக கேட்கப்பட்ட கேள்வியாயிருந்தது.
அந்த மருத்துவரின் திருச்சபை அனுபவங்கள் அந்த அளவிற்கு சொல்லும்படியாக இருக்கவில்லை. ஆனின் உரையாடலுக்கு பின்னர், அவருடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் பங்களிப்பையும் திருச்சபையின் முக்கியத்துவத்தையும் அறிய நேரிட்டது. அதன் பின்பு, அந்த மருத்துவரின் பெயர் பதிக்கப்பட்ட வேதாகமத்தை ஆன் அவருக்கு பரிசாகக் கொடுத்தபோது, அவர் கண்கலங்கினார்.
சில நேரங்களில் நாம் விவாதிக்கவோ அல்லது நம் விசுவாசத்தை ஆக்ரோஷமாக பகிர்ந்து கொள்வதையோ விரும்புவதில்லை. ஆனால் இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கு ஒரு நேர்த்தியான வழி இருக்கிறது – கேள்வி கேட்டு உரையாடலைத் துவக்குங்கள்.
அனைத்தும் அறிந்த தேவனாய் இருந்த ஒரு மனிதனாய் இயேசு அநேக கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அவருடைய நோக்கங்கள் நமக்குத் தெரியாவிட்டாலும், அவருடைய கேள்விகள் மற்றவர்களை பதிலளிக்கத் தூண்டியது என்பது தெளிவாகிறது. அவர் தனது சீஷனான அந்திரேயாவிடம், “என்ன தேடுகிறீர்கள்” (யோவான் 1:38) என்று கேட்கிறார். பார்வையற்ற பர்திமேயுவிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (மாற்கு 10:51; லூக்கா 18:41) என்று கேட்கிறார். அவர் வியாதியஸ்தனிடம், “சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா” (யோவான் 5:6) என்று கேட்கிறார். இயேசு இந்த ஆரம்ப கேள்விகளைக் கேட்ட அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது.
யாரிடத்தில் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்? சரியான கேள்விகளை அவர்களிடத்தில் கேட்கும் ஞானத்தை தேவனிடம் கேளுங்கள்.

இயேசுவைப் போல
2014 ஆம் ஆண்டில், உயிரியலாளர்கள் பிலிப்பைன்ஸில் ஒரு ஜோடி ஆரஞ்சு பிக்மி கடல் குதிரைகளை கைப்பற்றினர். அவர்கள் கடல்வாழ் உயிரினங்களையும், ஆரஞ்சு பவள கடல் விசிறி என்னும் ஒரு உயிரினத்தையும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸ{க்கு அழைத்துச் சென்றனர். பிக்மி கடல் குதிரைகள் தங்கள் பெற்றோரின் நிறத்துடனோ அல்லது அவற்றின் சுற்றுச்சூழலுடனும் ஒன்றிணைகிறதா என்று கண்டறிய விரும்பினர். பிக்மி கடல் குதிரைகள் மந்தமான பழுப்பு நிறக் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, விஞ்ஞானிகள் ஒரு ஊதா நிற பவளக் கடல் விசிறி உயிரினத்தை தொட்டியில் விட்டனர். ஆரஞ்சு நிற பெற்றோரின் குழந்தைகள், ஊதா நிற கடல் விசிறிக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக்கொண்டது. அவைகளுக்கு இயல்பாகவே இருக்கும் பெலவீனமான சுபாவத்தை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறமாற்றிக்கொள்ளும் தேவன் கொடுத்த திறனைக்கொண்டு மாற்றியமைத்துக்கொண்டது.
சூழ்நிலையோடு ஒத்துப்போவது என்பது அவசியப்படக்கூடிய ஒரு சுபாவம். இருப்பினும், இரட்சிப்பைப் பெறவும், நாம் எப்படி வாழ்கிறோம் என்பதன் மூலம் உலகில் தனித்து நிற்கவும் தேவன் நம் அனைவருக்கம் அழைப்புக் கொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவனை கனப்படுத்தும்படிக்கு கிறிஸ்தவ விசுவாசிகளை அப்போஸ்தலர் பவுல் வலியுறுத்துகிறார். நம்முடைய சரீரத்தை “ஜீவபலியாக” (ரோமர் 12:1) செலுத்துவதின் மூலம் அவருக்கு நாம் ஆராதனை செய்யமுடியும். பாவத்தால் நம்முடைய சரீரம் பெலவீனமடைந்ததால், நம்முடைய சிந்தையை புதுப்பித்து, “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” தேவனை மறுதலித்து பாவத்தை மகிமைப்படுத்தாமல் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆவியானவர் எடுத்துக்கொள்கிறார் (வச. 2).
இவ்வுலகத்திற்கு ஒத்த வாழ்க்கை வாழுவது என்பது வேதத்திற்கு புறம்பாய் வாழும் வாழ்க்கையாகும். ஆகிலும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நாம் இயேசுவைப்போல பார்க்கவும் ஜீவிக்கவும் முடியும்.