Archives: டிசம்பர் 2024

தேவனின் கரம்

1939 ஆம் ஆண்டில், பிரிட்டன் சமீபத்திய போரில் ஈடுபடுகையில், அரசர் ஆறாம் ஜார்ஜ் தனது கிறிஸ்துமஸ் தின வானொலி ஒலிபரப்புரையில் ஐக்கிய இராச்சியம் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் குடிகள் தேவன் மீது நம்பிக்கை வைக்குமாறு ஊக்குவிக்க முயன்றார். அவரது தாயார் விலைமதிப்பற்றதாகக் கண்ட ஒரு கவிதையை மேற்கோள் காட்டி, அவர் கூறினார்: “இருளை எதிர்கொண்டு, தேவனின் கரத்தில் உன் கரத்தை ஒப்புவி. அதுவே உனக்கு வெளிச்சத்தைக் காட்டிலும் சிறந்ததும், நீ அறிந்த பாதையைக் காட்டிலும் பாதுகாப்பாகவும் இருக்கும்". புத்தாண்டில் என்ன நடக்கும் என்பதை அவர் அறியார், ஆனால் வரப்போகும் துக்கமான நாட்களில் அவர்களை "வழிகாட்டி, நிலைநிறுத்த" அவர் தேவனையே நம்பினார்.

ஏசாயா புத்தகம் உட்பட வேதாகமத்தில் பல இடங்களில் தேவனின் கரம் காணப்படுகிறது. இந்த தீர்க்கதரிசி மூலம், தேவன் தம்முடைய ஜனங்களை அவர்களுடைய சிருஷ்டிகராக, “முந்தினவரும்.. பிந்தினவருமா(க)மே” (ஏசாயா 48:12) இருப்பவர் அவர்களுடன் தொடர்ந்து இடைப்படுவார் என்று நம்பும்படிக்கு அழைத்தார். அவர் சொல்வது போல், "என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது" (வ.13). அவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், திராணியற்றவர்களை நோக்கக் கூடாது. அனைத்திற்கும் மேலாக, அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர்" (வ.17).

புத்தாண்டை எதிர்நோக்கி இருக்கும் நாம் எதை எதிர்கொண்டாலும், அரசர் ஜார்ஜ் மற்றும் ஏசாயா தீர்க்கதரிசி அளித்த ஊக்கத்தைப் பின்பற்றி, தேவன் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைக்கலாம். அப்போது, ​​நமக்கும், நமது சமாதானம் நதியைப் போலும், நமது சுகவாழ்வு சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும் (வ.18).

தேவனே, ஏன் என்னை?

ஜிம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒருவகையான இயக்க நரம்பணு நோயுடன் போராடி வருகிறார். அவரது தசைகளில் உள்ள நரம்பணுக்கள் சிதைவதால் அவரது தசைகள் வீணாகின்றன. அவர் தனது சிறந்த இயக்க திறன்களை இழந்துவிட்டார் மற்றும் அவரது கைகால்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிட்டார். அவரால் இனி சட்டை பொத்தான் போடவோ அல்லது காலணி அணியவோ முடியாது. மேலும் கைகளால் கரண்டியைப் பிடிப்பதும்  சாத்தியமற்றதாகிவிட்டது. ஜிம் தனது சூழ்நிலையோடு போராடி, தேவன் ஏன் இப்படி நடக்க அனுமதிக்கிறார்? ஏன் எனக்கு? எனக் கேட்கிறார்.

தேவனிடம் தங்கள் கேள்விகளைக் கொண்டு வந்த இயேசுவின் பல விசுவாசிகளின் கூட்டத்தில் இவரும் ஒருவர். சங்கீதம் 13 இல், “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்” (வ.1-2) என்று தாவீது கூக்குரலிடுகிறார்.

நாமும் நம் குழப்பங்களையும் கேள்விகளையும் தேவனிடம் எடுத்துச் செல்லலாம். “எவ்வளவு காலம்?” என்றும் "ஏன்?" என்றும்  நாம் அழும்போது அவருக்குப் புரியும். அவருடைய ஆகச்சிறந்த பதில் இயேசுவிலும், பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியிலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் சிலுவையையும் காலியான கல்லறையையும் பார்க்கும்போது, ​​தேவனின் "கிருபையின்மேல்" நம்பிக்கை வைத்து, அவருடைய இரட்சிப்பில் களிகூர (வ. 5) நாம் தன்னம்பிக்கை பெறுகிறோம். வாழ்வின் இருண்ட நேரங்களிலும், நாம் "கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்" (வ. 6) எனலாம். கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலம், அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார், மேலும் அவருடைய நித்தியமான நல்ல நோக்கத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுகிறார்.

நிலைத்திருக்கும் கட்டிடம்

நான் ஓஹியோவில் சிறுவனாக இருந்தபோது, ​​எங்கள் வீட்டருகே பல கட்டுமானப் பகுதிகள் இருந்தன. அவைகளால் ஈர்க்கப்பட்டு, மீந்த பொருட்களைக் கொண்டு நானும் எனது நண்பர்களும் ஒரு கோட்டை கட்ட எத்தனித்தோம். எங்கள் பெற்றோரிடமிருந்து கருவிகளைக் கடன் வாங்கி, நாங்கள் மரத்தை அறுத்து, எங்களைப் பொருட்களால் எங்கள் நோக்கத்தை நிறைவேற்றப் பல நாட்கள் முயன்றோம். அது வேடிக்கையாக இருந்தது, ஆனால் எங்கள் முயற்சிகள் எங்களைச் சுற்றி நன்கு கட்டப்பட்ட கட்டிடங்களின் மோசமான பிரதிபலிப்பாக இருந்தன. அவை நீண்ட காலம் நீடிக்கவில்லை.

ஆதியாகமம் 11ல், ஒரு பெரிய கட்டுமான திட்டத்தை நாம் வாசிக்கிறோம். "வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி" (வ. 4) என்று ஜனங்கள் சொன்னார்கள். இந்த முயற்சியிலிருந்த ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், "நமக்குப் பேர் உண்டாக" (வ. 4) ஜனங்கள் அதைச் செய்தார்கள்.

இது மனிதர்களுக்கு ஒரு தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது; நமக்கும் நமது சாதனைகளுக்கும் நினைவுச்சின்னங்களை உருவாக்குகிறோம். பின்னர் வேதாகம நடையில், இந்தக் கதை தேவனின் ஆலயத்தைக் கட்டுவதற்கான சாலொமோனின் நோக்கத்துடன் முற்றிலுமாக முரண்படுகிறது: "என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்" (1 இராஜாக்கள் 5:5).

தான் கட்டுகிறவை தன்னை அல்ல தேவனையே சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை சாலொமோன் புரிந்துகொண்டார். இதைப் பற்றி அவர் ஒரு சங்கீதம் கூட எழுதும் அளவிற்கு இது ஒரு முக்கியமான பாடமாக இருந்தது. "கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா" (வ. 1) என்று சங்கீதம் 127 தொடங்குகிறது. என்னுடைய சிறுவயதுக் கோட்டைக் கட்டுவது போல், நாம் கட்டுவதெல்லாம் நிலைக்காது, ஆனால் தேவனின் நாமமும், அவருக்காக நாம் செய்வதும் நிலையான முக்கியத்துவம் வாய்ந்தது.

விசுவாச படிகள்

ஜான் தனது வேலையை இழந்ததால் நிலைகுலைந்து போனார். ஆரம்ப நாட்களைக் காட்டிலும், வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலகட்டத்தில் புதிதாக எங்காவது வேலைக்குச் சேருவது கடினம் என்பதை அவர் அறிந்திருந்தார். சரியான வேலைக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். பின்னர் ஜான் வேலைக்கான தனது தற்குறிப்பைப் புதுப்பித்து, நேர்காணல் பயிற்சி குறிப்புகளையும் படித்தார், மேலும் தொலைப்பேசியில் நிறையப் பேரிடம் பேசினார். விண்ணப்பித்த பல வாரங்களுக்குப் பிறகு, அவர் ஒரு சிறந்த பனி நேரம் மற்றும் எளிதான பயணத்துடன் புதிய வேலையை ஏற்றுக்கொண்டார். அவருடைய உண்மையுள்ள கீழ்ப்படிதலும் தேவனின் போஷிப்பும் சரியான நேரத்தில் சந்தித்தன.

எகிப்தில் இஸ்ரவேலர் அடிமைப்பட்டிருந்த காலத்தில் யோகெபேத் (யாத்திராகமம் 6:20)  மற்றும் அவரது குடும்பத்தினர் இதைவிட வியத்தகு நிகழ்வைச் சந்தித்தனர். புதிதாகப் பிறந்த அனைத்து எபிரேய மகன்களும் நைல் நதியில் போடப்பட வேண்டும் என்று பார்வோன் கட்டளையிட்டபோது (1:22), யோகெபெத் பயந்திருக்க வேண்டும். அவளால் சட்டத்தை மாற்ற முடியவில்லை, ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிந்து தன் மகனைக் காப்பாற்ற முயலும்படி அவள் சில படிகளை எடுக்கலாம். விசுவாசத்தால், அவள் அவனை எகிப்தியர்களிடமிருந்து மறைத்தாள். " ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்" (2:3). தேவன் அவனுடைய உயிரை அற்புதமாகப் பாதுகாக்க அடியெடுத்து வைத்தார் (வவ. 5-10) பின்னர் இஸ்ரவேலர் அனைவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அவனைப் பயன்படுத்தினார் (3:10).

ஜானும், யோகெபேத்தும் மிகவும் வித்தியாசமான அடியெடுத்தனர், ஆனால் இரண்டு சம்பவங்களும் விசுவாசம் நிறைந்த செயல்களால் அடையாளப் படுத்தப்படுகின்றன. பயம் நம்மை முடக்கிவிடும். நாம் நினைத்தது அல்லது எதிர்பார்த்தது போன்ற பலன் இல்லாவிட்டாலும், அதன் விளைவைப் பொருட்படுத்தாமல் தேவனின் நற்குணத்தில் நம்பிக்கை வைக்க விசுவாசம் நமக்குப் பெலன் அளிக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். 

 

கிறிஸ்துவில் ஒன்றாக இருப்பது சிறந்தது

டாக்டர் டிஃப்பனி கோல்சன் தனது சிறிய அமெரிக்க நகரமான இல்லினாய்ஸில் இருக்கும் ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் பல வழிகளில் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் கண்டார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், நகரம் கொலைகளில் 31 சதவிகிதம் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த குற்றங்களில் 37 சதவிகித வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. என்ன நடந்தது? ஒரு கூட்டு முயற்சி. நகரின் பொதுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவானது, மாநில மற்றும் நகர காவல்துறை, நகரப் பள்ளி மாவட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பு உட்பட அனைத்தும் குடிமக்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட ஆரம்பித்ததே அதற்கு காரணம்.

“இது ஒரு திருமணம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று டாக்டர் கோல்சன் கூறினார். நகர கூட்டாளிகளின் அனைத்து உறுப்பினர்களும் குடிமக்களுக்கு உதவ ஒன்றாக இணைந்தனர். அவர் வழிநடத்தும் பள்ளியின் ரேபரவுண்ட் வெல்னஸ் சென்டர், குற்றம் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பள்ளி சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியது. மற்ற ஏஜென்சிகள் தங்கள் தோ்ச்சிப் பெற்ற உதவியை பகிர்ந்து கொள்கின்றன. தெருவில் உள்ளவர்களுடன் அதிகம் பேசவும், கேட்கவும் காவல்துறை உறுதியளிக்கிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) என்கிறார். மேலும் ஒருமித்து வாசம்பண்ணுவது “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வச. 3) என்று ஒப்பிடுகிறார். தேவன் மீது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களை தாவீது குறிப்பிடுகிறார். கொள்கைகள் அல்லது அரசியலால் பிரிக்கப்பட்டாலும் நாம் ஒன்று தான். இது குழப்பமாய் தெரியலாம், ஆனால் ஆசீர்வாதமான ஒன்று. கிறிஸ்தவ அன்பு தேவைப்படும் நாம் வாழும் ஊர்களில், ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கவேண்டியது விசுவாசிகளின் அழகான இலக்காய் அமைந்திருக்கிறது.