Archives: ஆகஸ்ட் 2024

ஞானமான கரிசனை

அந்தக் காட்சி மனதைக் கனக்கச் செய்தது. ஐம்பத்தைந்து பைலட் திமிங்கிலங்கள் ஸ்காட்லாந்தின் கடற்கரையில் சிக்கித் தவித்தன. ஆர்வலர்கள் அவற்றைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் இறுதியில் அவை இறந்தன. இதுபோன்ற திரளான மரணங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் இது திமிங்கிலங்களின் வலுவான சமூக பிணைப்பு காரணமாகக் கூட இருக்கலாம். ஒன்று சிக்கலில் சிக்கும்போது, ​​மீதமுள்ளவை உதவிக்கு வரும், ஒரு அக்கறையுள்ள உள்ளுணர்வு தான் ஆனாலும் முரண்பாடாகத் தீங்கு விளைவிக்கிறது.

பிறருக்கு உதவும்படி வேதாகமம் தெளிவாக நம்மை அழைக்கிறது, ஆனால் நாம் எப்படிச் செய்கிறோம் என்பதில் ஞானமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பாவத்தில் சிக்கிய ஒருவரை மீட்டெடுக்க நாம் உதவும்போது, ​​​​அந்த பாவத்தால் நாமே இழுக்கப்படாமல் கவனமாக இருக்க வேண்டும் (கலாத்தியர் 6:1), மேலும் நாம் நம் அண்டை வீட்டாரை நேசிக்கும்போது, ​​​​நாம் நம்மையும் நேசிக்க வேண்டும் (மத்தேயு 22:39). நீதிமொழிகள் 22:3, “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்" என்கிறது,  பிறருக்கு உதவுகையில் நமக்குத் தீங்கு உண்டாகலாம் என்ற எச்சரிப்பான நினைவூட்டல் இது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் தேவையோடிருந்த இருவர் எங்கள் சபைக்கு வரத் தொடங்கினர். விரைவில், கரிசனைகொண்ட சபையார் அவர்களுக்கு உதவியதால் நோந்துகொண்டனர். தீர்வாக அந்த  தம்பதியரை ஒதுக்காமல், ஆனால் உதவி செய்பவர்கள் பாதிக்கப்படாத வகையில் எல்லைகளை வகுத்துக் கொள்வதென்று முடிவானது. ஆதிகாரண உதவியாளரான இயேசுவும் இளைப்பாற நேரம் ஒதுக்கிக் கொண்டார் (மாற்கு 4:38) மேலும் தம் சீடர்களின் தேவைகள் பிறரின் தேவைகளால் மறைக்கப்படாமல் பார்த்துக் கொண்டார் (6:31). ஞானமான அக்கறைக்கு அவரே  முன்மாதிரி. நமது சொந்த ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு நாம் அதிக அக்கறை செலுத்த முடியும்.

 

உன் கரத்திலிருப்பது என்ன?

நான் இரட்சிக்கப்பட்டு , என் வாழ்வைத் தேவனுக்கு அர்ப்பணித்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் என் பத்திரிகைத் துறை வேலையைக்  கைவிடும்படி என்னை வழிநடத்துவதை உணர்ந்தேன். நான் என் பேனாவைக் கீழே போட்டு, என் எழுத்து காணாமல் போனதால், ஒரு நாள் தேவன் தனது மகிமைக்காக எழுத என்னை அழைப்பார் என்று என்னால் உணர முடியவில்லை. எனது தனிப்பட்ட வனாந்தரத்தில் நான் அலைந்து திரிந்த ஆண்டுகளில், யாத்திராகமம் 4 இல் உள்ள மோசே மற்றும் அவரது கோலின் கதையால் நான் உற்சாகமடைந்தேன்.

பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டு, பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருந்த மோசே, எகிப்தை விட்டு ஓடிப்போய், தேவன் அவனை அழைத்தபோது ஒரு மேய்ப்பனாக இருளில் வாழ்ந்து கொண்டிருந்தான். தேவனுக்குக் கொடுக்க தன்னிடம் எதுவும் இல்லை என்று மோசே நினைத்திருக்க வேண்டும், ஆனால் அவருடைய மகிமைக்காக யாரையும் எதையும் பயன்படுத்த முடியும் என்பதை அவன் கற்றுக்கொண்டான்.

"கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். அதைத் தரையிலே போடு என்றார்" (யாத்திராகமம் 4:2-3). மோசேயின் சாதாரண கோல் சர்ப்பமாக மாறியது. அவர் சர்ப்பத்தைப் பிடித்தபோது, ​​தேவன் அதை மீண்டும் கோலாக மாற்றினார் (வ. 3-4). இஸ்ரவேலர்கள், "ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்" (வ. 5). மோசே தனது கோலை கீழே எறிந்துவிட்டு, அதை மீண்டும் கையில் எடுத்தது போல, ​​தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஒரு பத்திரிகையாளராக நான் எனது வேலையை விட்டேன். பின்னர், எனது பேனாவை மீண்டும் எடுக்க அவர் என்னை வழிநடத்தினார், இப்போது நான் அவருக்காக எழுதுகிறேன்.

தேவனால் பயன்படுத்தப்பட நம்மிடம் அதிகம் இருக்க வேண்டுமென்றில்லை. அவர் நமக்குக் கொடுத்த தாலந்துகளை கொண்டே நாம் அவருக்குச் சேவை செய்யலாம். எவ்வாறு ஆரம்பிப்பது என்று தெரியவில்லையா? உங்கள் கையில் என்ன இருக்கிறது?

நியாயத்தின் தேவன்

ஒரு வாலிபனாக, விஜய் தனது தாயைப் புற்றுநோயால் இழந்தார். அவர் வீட்டையும் இழந்து, விரைவில் பள்ளியை விட்டும் வெளியேறினார். அவர் நம்பிக்கையற்றவராக உணர்ந்தார் மற்றும் அடிக்கடி பசியுடன் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவினார், அது மற்றவர்களுக்கு, குறிப்பாகச் சிறுவர்கள் தோட்டத்தில் வளர்க்கப்படும் உணவைத் தாங்களே நடவும், அறுவடை செய்யவும் மற்றும் தயாரிக்கவும் அவர்களுக்கு உதவுகிறது. உணவு இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது, ஏதாவது இருப்பவர்கள் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறர் மீதான விஜய்யின் அக்கறை, நீதி மற்றும் கருணைக் குறித்த தேவனின் இதயத்தை எதிரொலிக்கிறது.

நாம் எதிர்கொள்ளும் வலிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி தேவன் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார். அவர் இஸ்ரவேலில் பயங்கரமான அநீதியைக் கண்டபோது, ​​அவர்களுடைய மாய்மாலத்தைக் கண்டிக்க ஆமோஸ் தீர்க்கதரிசியை அனுப்பினார். ஒரு காலத்தில் எகிப்தின் அடக்குமுறையிலிருந்து தேவன் காப்பாற்றிய மக்கள் இப்போது ஒரு ஜோடு பாதரட்சைக்கு தங்கள் அண்டை வீட்டாரை அடிமைகளாக விற்கிறார்கள் (ஆமோஸ் 2:6). அவர்கள் அப்பாவி ஜனங்களுக்குத் துரோகம் செய்தார்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுத்தார்கள், தரித்திரருடைய "தலையின்மேல்" மிதித்தார்கள் (வ. 6-7), இவை அனைத்தினுடே காணிக்கைகள் மற்றும் விசேஷித்த நாட்களுடன் தேவனைப் பணிவது போல் பாசாங்கு செய்தனர் (4:4-5).

"நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்" (5:14) என்று ஆமோஸ் மக்களிடம் கெஞ்சினார். விஜய்யைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் பிறருடன் பழகுவதற்கும் உதவி செய்வதற்கும் போதுமான வலியையும் அநீதியையும் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறோம். "நன்மையைத் தேட" மற்றும் அணைத்து வகையான நீதியையும் விதைப்பதில் அவருடன் இணைவதற்கான நேரம் கனிந்துள்ளது.

ஏற்ற காத்திருத்தல்

புதிய பயணத்திற்கு முன்னானக் காதிருப்பைப் பற்றிப் பேசுவோமென்றால்; இடியுடன் கூடிய மழையால் தாமதமான விமானத்தில் ஏறுவதற்கு அருண் பதினெட்டு மணிநேரம் காத்திருந்தார். இருப்பினும் அவரது பொறுமையும் விடாமுயற்சியும் பலனளித்தன. அவர் செல்ல வேண்டிய இடத்திற்குப் பறந்து சென்று முக்கியமான வியாபார கூட்டங்களுக்குச் சரியான நேரத்தில் சென்றது மட்டுமல்லாமல், விமானத்தின் ஒரே பயணியும் அவர் மட்டுமே. மற்ற பயணிகள் அனைவரும் பின்வாங்கினர் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர். விமானப் பணிப்பெண்கள் அவர் விரும்பிய உணவுப் பொருட்களை அவருக்குக் கொடுத்தனர், மேலும் அருண், "நான் நிச்சயமாக முன் வரிசையில் தான் அமர்ந்தேன். முழு விமானமும் உங்களுக்காக இருக்கும்போது தடையென்ன? " என்கிறார். மதிப்புமிக்க காத்திருப்பாக முடிவில் விளங்கியது.

ஆபிரகாமும் நீண்ட தாமதமாகத் தோன்றின ஒன்றைச் சகித்துக்கொண்டார். அவர் ஆபிராம் என்று அறியப்பட்டபோது, ​​தேவன் அவரை  "பெரிய ஜாதியாக்கி", " பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" என்று கூறினார் (ஆதியாகமம் 12:2-3). எழுபத்தைந்து வயது முதியவருக்கு ஒரே ஒரு பிரச்சனை (வ. 4): வாரிசு இல்லாமல் அவர் எப்படி பெரிய தேசமாக மாற முடியும்? அவருடைய காத்திருப்பு சில சமயங்களில் தேவையற்றதாக இருந்தபோதிலும் (அவரும், மனைவி சாராயும் தேவனின் வாக்கை சில தவறான யோசனைகளின் மூலம் நிறைவேற்ற "உதவி" செய்ய முயன்றனர்; பார்க்க 15:2-3; 16:1-2), அவர் "தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்” (21:5). அவரது விசுவாசம் பின்னர் எபிரேய ஆக்கியோனால்  போற்றப்பட்டது (11:8-12).

காத்திருப்பது கடினமாகத் தோன்றலாம். மேலும், ஆபிரகாமைப் போல நாம் அதைச் சரியாகச் செய்யாமல் போகலாம். ஆனால் நாம் ஜெபித்து, தேவனின் திட்டங்களில் இளைப்பாறுகையில், ​​விடாமுயற்சியுடன் இருக்க அவர் நமக்கு உதவுவார். அவரில், காத்திருப்பு எப்போதும் பலனளிக்கும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ

இயேசு நம் ராஜா

உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது.

ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார்.

ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார். 

 

- கேரன் பிம்போ