Archives: ஆகஸ்ட் 2024

ஞானமான கரிசனை

அந்தக் காட்சி மனதைக் கனக்கச் செய்தது. ஐம்பத்தைந்து பைலட் திமிங்கிலங்கள் ஸ்காட்லாந்தின் கடற்கரையில் சிக்கித் தவித்தன. ஆர்வலர்கள் அவற்றைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் இறுதியில் அவை இறந்தன. இதுபோன்ற திரளான மரணங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் இது திமிங்கிலங்களின் வலுவான சமூக பிணைப்பு காரணமாகக் கூட இருக்கலாம். ஒன்று சிக்கலில் சிக்கும்போது, ​​மீதமுள்ளவை உதவிக்கு வரும், ஒரு அக்கறையுள்ள உள்ளுணர்வு தான் ஆனாலும் முரண்பாடாகத் தீங்கு விளைவிக்கிறது.

பிறருக்கு உதவும்படி வேதாகமம் தெளிவாக நம்மை அழைக்கிறது, ஆனால் நாம் எப்படிச் செய்கிறோம் என்பதில் ஞானமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பாவத்தில் சிக்கிய ஒருவரை மீட்டெடுக்க நாம் உதவும்போது, ​​​​அந்த பாவத்தால் நாமே இழுக்கப்படாமல் கவனமாக இருக்க வேண்டும் (கலாத்தியர் 6:1), மேலும் நாம் நம் அண்டை வீட்டாரை நேசிக்கும்போது, ​​​​நாம் நம்மையும் நேசிக்க வேண்டும் (மத்தேயு 22:39). நீதிமொழிகள் 22:3, “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்" என்கிறது,  பிறருக்கு உதவுகையில் நமக்குத் தீங்கு உண்டாகலாம் என்ற எச்சரிப்பான நினைவூட்டல் இது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் தேவையோடிருந்த இருவர் எங்கள் சபைக்கு வரத் தொடங்கினர். விரைவில், கரிசனைகொண்ட சபையார் அவர்களுக்கு உதவியதால் நோந்துகொண்டனர். தீர்வாக அந்த  தம்பதியரை ஒதுக்காமல், ஆனால் உதவி செய்பவர்கள் பாதிக்கப்படாத வகையில் எல்லைகளை வகுத்துக் கொள்வதென்று முடிவானது. ஆதிகாரண உதவியாளரான இயேசுவும் இளைப்பாற நேரம் ஒதுக்கிக் கொண்டார் (மாற்கு 4:38) மேலும் தம் சீடர்களின் தேவைகள் பிறரின் தேவைகளால் மறைக்கப்படாமல் பார்த்துக் கொண்டார் (6:31). ஞானமான அக்கறைக்கு அவரே  முன்மாதிரி. நமது சொந்த ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு நாம் அதிக அக்கறை செலுத்த முடியும்.

 

உன் கரத்திலிருப்பது என்ன?

நான் இரட்சிக்கப்பட்டு , என் வாழ்வைத் தேவனுக்கு அர்ப்பணித்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் என் பத்திரிகைத் துறை வேலையைக்  கைவிடும்படி என்னை வழிநடத்துவதை உணர்ந்தேன். நான் என் பேனாவைக் கீழே போட்டு, என் எழுத்து காணாமல் போனதால், ஒரு நாள் தேவன் தனது மகிமைக்காக எழுத என்னை அழைப்பார் என்று என்னால் உணர முடியவில்லை. எனது தனிப்பட்ட வனாந்தரத்தில் நான் அலைந்து திரிந்த ஆண்டுகளில், யாத்திராகமம் 4 இல் உள்ள மோசே மற்றும் அவரது கோலின் கதையால் நான் உற்சாகமடைந்தேன்.

பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டு, பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருந்த மோசே, எகிப்தை விட்டு ஓடிப்போய், தேவன் அவனை அழைத்தபோது ஒரு மேய்ப்பனாக இருளில் வாழ்ந்து கொண்டிருந்தான். தேவனுக்குக் கொடுக்க தன்னிடம் எதுவும் இல்லை என்று மோசே நினைத்திருக்க வேண்டும், ஆனால் அவருடைய மகிமைக்காக யாரையும் எதையும் பயன்படுத்த முடியும் என்பதை அவன் கற்றுக்கொண்டான்.

"கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். அதைத் தரையிலே போடு என்றார்" (யாத்திராகமம் 4:2-3). மோசேயின் சாதாரண கோல் சர்ப்பமாக மாறியது. அவர் சர்ப்பத்தைப் பிடித்தபோது, ​​தேவன் அதை மீண்டும் கோலாக மாற்றினார் (வ. 3-4). இஸ்ரவேலர்கள், "ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்" (வ. 5). மோசே தனது கோலை கீழே எறிந்துவிட்டு, அதை மீண்டும் கையில் எடுத்தது போல, ​​தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஒரு பத்திரிகையாளராக நான் எனது வேலையை விட்டேன். பின்னர், எனது பேனாவை மீண்டும் எடுக்க அவர் என்னை வழிநடத்தினார், இப்போது நான் அவருக்காக எழுதுகிறேன்.

தேவனால் பயன்படுத்தப்பட நம்மிடம் அதிகம் இருக்க வேண்டுமென்றில்லை. அவர் நமக்குக் கொடுத்த தாலந்துகளை கொண்டே நாம் அவருக்குச் சேவை செய்யலாம். எவ்வாறு ஆரம்பிப்பது என்று தெரியவில்லையா? உங்கள் கையில் என்ன இருக்கிறது?

நியாயத்தின் தேவன்

ஒரு வாலிபனாக, விஜய் தனது தாயைப் புற்றுநோயால் இழந்தார். அவர் வீட்டையும் இழந்து, விரைவில் பள்ளியை விட்டும் வெளியேறினார். அவர் நம்பிக்கையற்றவராக உணர்ந்தார் மற்றும் அடிக்கடி பசியுடன் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவினார், அது மற்றவர்களுக்கு, குறிப்பாகச் சிறுவர்கள் தோட்டத்தில் வளர்க்கப்படும் உணவைத் தாங்களே நடவும், அறுவடை செய்யவும் மற்றும் தயாரிக்கவும் அவர்களுக்கு உதவுகிறது. உணவு இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது, ஏதாவது இருப்பவர்கள் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறர் மீதான விஜய்யின் அக்கறை, நீதி மற்றும் கருணைக் குறித்த தேவனின் இதயத்தை எதிரொலிக்கிறது.

நாம் எதிர்கொள்ளும் வலிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி தேவன் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார். அவர் இஸ்ரவேலில் பயங்கரமான அநீதியைக் கண்டபோது, ​​அவர்களுடைய மாய்மாலத்தைக் கண்டிக்க ஆமோஸ் தீர்க்கதரிசியை அனுப்பினார். ஒரு காலத்தில் எகிப்தின் அடக்குமுறையிலிருந்து தேவன் காப்பாற்றிய மக்கள் இப்போது ஒரு ஜோடு பாதரட்சைக்கு தங்கள் அண்டை வீட்டாரை அடிமைகளாக விற்கிறார்கள் (ஆமோஸ் 2:6). அவர்கள் அப்பாவி ஜனங்களுக்குத் துரோகம் செய்தார்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுத்தார்கள், தரித்திரருடைய "தலையின்மேல்" மிதித்தார்கள் (வ. 6-7), இவை அனைத்தினுடே காணிக்கைகள் மற்றும் விசேஷித்த நாட்களுடன் தேவனைப் பணிவது போல் பாசாங்கு செய்தனர் (4:4-5).

"நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்" (5:14) என்று ஆமோஸ் மக்களிடம் கெஞ்சினார். விஜய்யைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் பிறருடன் பழகுவதற்கும் உதவி செய்வதற்கும் போதுமான வலியையும் அநீதியையும் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறோம். "நன்மையைத் தேட" மற்றும் அணைத்து வகையான நீதியையும் விதைப்பதில் அவருடன் இணைவதற்கான நேரம் கனிந்துள்ளது.

ஏற்ற காத்திருத்தல்

புதிய பயணத்திற்கு முன்னானக் காதிருப்பைப் பற்றிப் பேசுவோமென்றால்; இடியுடன் கூடிய மழையால் தாமதமான விமானத்தில் ஏறுவதற்கு அருண் பதினெட்டு மணிநேரம் காத்திருந்தார். இருப்பினும் அவரது பொறுமையும் விடாமுயற்சியும் பலனளித்தன. அவர் செல்ல வேண்டிய இடத்திற்குப் பறந்து சென்று முக்கியமான வியாபார கூட்டங்களுக்குச் சரியான நேரத்தில் சென்றது மட்டுமல்லாமல், விமானத்தின் ஒரே பயணியும் அவர் மட்டுமே. மற்ற பயணிகள் அனைவரும் பின்வாங்கினர் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர். விமானப் பணிப்பெண்கள் அவர் விரும்பிய உணவுப் பொருட்களை அவருக்குக் கொடுத்தனர், மேலும் அருண், "நான் நிச்சயமாக முன் வரிசையில் தான் அமர்ந்தேன். முழு விமானமும் உங்களுக்காக இருக்கும்போது தடையென்ன? " என்கிறார். மதிப்புமிக்க காத்திருப்பாக முடிவில் விளங்கியது.

ஆபிரகாமும் நீண்ட தாமதமாகத் தோன்றின ஒன்றைச் சகித்துக்கொண்டார். அவர் ஆபிராம் என்று அறியப்பட்டபோது, ​​தேவன் அவரை  "பெரிய ஜாதியாக்கி", " பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" என்று கூறினார் (ஆதியாகமம் 12:2-3). எழுபத்தைந்து வயது முதியவருக்கு ஒரே ஒரு பிரச்சனை (வ. 4): வாரிசு இல்லாமல் அவர் எப்படி பெரிய தேசமாக மாற முடியும்? அவருடைய காத்திருப்பு சில சமயங்களில் தேவையற்றதாக இருந்தபோதிலும் (அவரும், மனைவி சாராயும் தேவனின் வாக்கை சில தவறான யோசனைகளின் மூலம் நிறைவேற்ற "உதவி" செய்ய முயன்றனர்; பார்க்க 15:2-3; 16:1-2), அவர் "தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்” (21:5). அவரது விசுவாசம் பின்னர் எபிரேய ஆக்கியோனால்  போற்றப்பட்டது (11:8-12).

காத்திருப்பது கடினமாகத் தோன்றலாம். மேலும், ஆபிரகாமைப் போல நாம் அதைச் சரியாகச் செய்யாமல் போகலாம். ஆனால் நாம் ஜெபித்து, தேவனின் திட்டங்களில் இளைப்பாறுகையில், ​​விடாமுயற்சியுடன் இருக்க அவர் நமக்கு உதவுவார். அவரில், காத்திருப்பு எப்போதும் பலனளிக்கும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.