Archives: ஜனவரி 2024

புத்துணர்ச்சியூட்டும் வார்த்தைகள்

சமையலறையில் நின்றுகொண்டிருந்த என் மகள், “அம்மா, தேனில் ஒரு ஈ இருக்கிறது!” என்றாள். “வினிகரை விட தேனில் எப்பொழுதும் அதிக ஈக்களை நீ கண்டெடுப்பாய்” என்ற வழக்கமான பழமொழியைச் சொல்லி நான் அவளை கேலி செய்தேன். நான் தேனில் ஒரு ஈயை காண்பது இதுவே முதல்முறை என்றாலும், ஞானத்தைக் கற்றுத்தரும் நோக்கத்தோடு இந்த பழமொழியை மேற்கோள் காண்பித்தேன். அதின் நியதி என்னவென்றால், கசப்பான அணுகுமுறையை விட அன்பான கோரிக்கைகள் மற்றவர்களை எளிமையாய் வசப்படச் செய்யும். 

நீதிமொழிகள் புத்தகம் தேவனுடைய ஆவியால் ஈர்க்கப்பட்ட ஞானமான பழமொழிகள் மற்றும் சொற்களின் தொகுப்பை நமக்கு வழங்குகிறது. இந்த வெளிப்படுத்தப்பட்ட வசனங்கள் நம்மை வழிநடத்தவும், தேவனை கனப்படுத்தும் விதங்களில் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய முக்கியமான உண்மைகளை கற்பிக்கவும் உதவுகின்றன. பல பழமொழிகள், நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தை உள்ளடக்கி, ஒருவரோடு ஒருவருக்கு இருக்கவேண்டிய உறவுகளில் அதிக கவனம் செலுத்துகின்றன. 

சாலெமோன் ராஜாவின் பழமொழி தொகுப்பின் ஒரு பகுதியில், அண்டை வீட்டாருக்கு எதிராகப் பொய்யாகப் பேசுவதால் ஏற்படும் தீமைக்கு எதிராக அவர் எச்சரிப்பை பதிவுசெய்கிறார் (நீதிமொழிகள் 25:18). “புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்” (வச. 23) என்று ஆலோசனை கூறுகிறார். தொடர்ந்த சண்டையிட்டுக்கொண்டேயிருப்பதினால் ஏற்படும் விளைவுகளையும் சாலெமோன் தொடர்ந்து பதிவிடுகிறார் (வச. 24). நன்மையை அறிவிக்கும் நம்முடைய வார்த்தைகள் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரக்கூடியது என்று ராஜா வலியுறுத்துகிறார் (வச. 25).

இந்த சத்தியங்களைப் பிரயோகிக்க நாம் முற்படுகையில், நம்முடைய நாவிலிருந்து “திவ்ய வாக்கு” பிறக்கக்கூடும் (16:10). அவரிடத்திலிருந்து ஊக்கத்தைப் பெறும்போது, நமது வார்த்தைகள் இனிமையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

இனி பாரபட்சம் இல்லை

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலி லேண்ட்ஸ்மேன் நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் ஓபரா ஆர்கெஸ்ட்ரா என்னும் இசைக்குழுவில் முக்கிய டிரம்பெட் வாசிப்பாளர் பாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டார். அவளை தேர்வுசெய்த நீதிபதி குழுவினரின் பாரபட்சங்களை தவிர்ப்பதற்காக, தேர்வானது, முகத்தை மறைத்து திரைமறைவில் நடைபெற்றது. லேண்ட்ஸ்மேன் தனது தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு போட்டியில் வெற்றிபெற்றார். ஆனால் அவள் திரைக்குப் பின்னால் இருந்து வெளியேறியதும், சில ஆண் நீதிபதிகள் அறையின் பின்புறம் சென்று அவளைப் புறக்கணித்தனர். அவர்கள் வேறு யாரையோ தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இஸ்ரவேலர்கள் ஒரு ராஜாவைக் கேட்டபோது, மக்களின் விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து, மற்ற தேசங்களுக்கு இருப்பதுபோலவே ஒரு ராஜாவை ஏற்படுத்தினார் (1 சாமுவேல் 8:5; 9:2). ஆனால் சவுலின் ஆட்சி கீழ்படியாமையினாலும் உண்மையற்ற தன்மையினாலும் அடையாளப்படுத்தப்பட்டதால், ஒரு புதிய ராஜாவை அபிஷேகம் செய்ய தேவன் சாமுவேலை பெத்லகேமுக்கு அனுப்பினார் (16:1-13). சாமுவேல் மூத்த மகனான எலியாப்பைப் பார்த்தபோது,அவன் சரீரப்பிரகாரமாக திடகாத்திரமான இளைஞனாயிருந்ததினால் அவனை ராஜாவாக ஏற்படுத்த தீர்மானித்தார். ஆனால் தேவன் சாமுவேலின் தீர்மானத்தை விமர்சித்து, “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமுவேல் 16:7) என்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை வழிநடத்த தாவீதைத் தேர்ந்தெடுத்தார் (வச. 12).

மக்களின் திறன் மற்றும் அவரது நோக்கங்களுக்கான பொருத்தத்தை மதிப்பிடும்போது, தேவன் அவர்களது சுபாவங்கள், சித்தம் மற்றும் எண்ணங்களைப் பார்க்கிறார். உலகத்தையும் மக்களையும் அவர் பார்ப்பது போல் பார்க்க அவர் நம்மை அழைக்கிறார். தேவன் மக்களின் வெளிப்புற தோற்றங்களையும் அங்கீகாரங்களையும் பார்;க்கிறவரல்ல, அவர் இருதயத்தைப் பார்க்கிறவர்.

விசித்திரமான இடங்கள்

தேவனே, ஏன் இப்படி நடக்கிறது? இது உண்மையில் எங்களைக் குறித்த உம்முடைய சித்தமா?

ஒரு கணவனாகவும், சிறு குழந்தைகளின் அப்பாவாகவும், தீவிரமான புற்றுநோய் கண்டறிதலுடன் நான் மல்யுத்தம் செய்தபோது, இந்த கேள்வி எனக்குள் அடிக்கடி எழுந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அநேக சிறுபிள்ளைகளை ஆண்டவருக்குள் வழிநடத்தும் ஒரு கிறிஸ்தவ மிஷன் குழுவோடு சேர்ந்து நாங்கள் குடும்பமாய் ஊழியம் செய்துகொண்டிருந்தோம். தேவனுக்காய் கனிகொடுக்கிற குடும்பமாய் நாங்கள் இருந்தோம். அது எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது இப்படியொரு இக்கட்டான சூழ்நிலை?  

எஸ்தர் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்திலிருந்து எடுக்கப்பட்டு விசித்திரமான ஒரு தேசத்திற்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டதும், தேவ சமூகத்தில் கேள்விகளையும் ஜெபங்களையும் முன்வைத்திருந்திருக்கக்கூடும் (எஸ்தர் 2:8). அவள் அனாதையான பிறகு அவளுடைய உறவினர் மொர்தெகாய் அவளை தனது சொந்த மகளாக வளர்த்தார் (வச. 7). ஆனால் பின்னர் அவள் ஒரு ராஜாவின் அரண்மனையில் வைக்கப்பட்டாள். இறுதியில் அவனுடைய ராணியாக பணியாற்ற உயர்த்தப்பட்டாள் (வச. 17). மொர்தெகாய் எஸ்தருக்கு என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து கவலையுற்றான் (வச. 11). ஆனால் காலப்போக்கில், தேவன் அவளை இப்படிப்பட்ட காலத்துக்கு” (4:14) உதவியாயிருக்கும்படிக்கு அழைப்புக் கொடுத்திருக்கிறார் என்பதை இருவரும் உணர்ந்தனர். இது அவர்களுடைய சொந்த ஜனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற அவர்களுக்கு ஏதுவாயிருந்தது (அதி. 7-8).

தேவன் தனது நேர்த்தியான திட்டத்தின் ஒரு பகுதியாக எஸ்தரை ஒரு விசித்திரமான இடத்தில் வைத்தார் என்பது தெளிவாகிறது. என்னிடமும் அவ்வாறே செய்தார். புற்றுநோயுடன் ஒரு நீண்ட போரை நான் சகித்திருந்ததால், பல நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் என் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் உங்களை எந்த விசித்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லுகிறார்? அவனை நம்புங்கள். அவர் நல்லவர், அவருடைய திட்டங்களும் நன்மையானவைகளே (ரோமர் 11:33-36).

கேட்பதற்கு தீவிரமாய்

ஒரு அன்பான நண்பர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டை மறுப்பதற்காக நான் வாயைத் திறந்தபோது என் இதயத்துடிப்பு அதிகரித்ததை உணர்ந்தேன். நான் ஆன்லைனில் பதிவிட்டதற்கும், அவள் சொன்னது போல அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நான் பதிலளிக்கும் முன், நான் ஒரு ஜெபம் செய்தேன். நான் மௌனமாயிருந்தேன், அவள் சொல்வதையும் அவள் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள காயத்தையும் கேட்டேன். என்னுடைய பதிவு வரம்பை மீறியது என்பதை உணர்ந்துகொண்டேன். என் தோழி வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய வலியை நிவர்த்தி செய்ய நான் அவளுக்கு உதவ தீர்மானித்ததால், என்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நான் தொலைக்க நேரிட்டது.

இந்த உரையாடலின் போது, யாக்கோபு தன்னுடைய நிருபத்தில் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை நான் கற்றுக்கொண்டேன், “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்” (1:19). கேட்பது என்பது அவர்களின் வார்த்தைகளுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க நமக்கு உதவக்கூடும். மேலும், “மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” (வச. 20) என்பதை புரிந்துகொள்ள வழிவகுக்கும். பேசுபவரின் இருதயத்தை புரிந்துகொள்ள உதவுகிறது. அவ்வேளையில் மறுத்து பேசுவதற்கு பதிலாக, நான் மனதிற்குள் ஜெபித்தது எனக்கு பெரிதும் உதவியது என்று நினைக்கிறேன். நான் என்னுடைய குற்றத்தைக் குறித்து வருந்துவதைக் காட்டிலும் அவளுடைய வேதனையை மிகவும் பொருட்படுத்த நேரிட்டது. ஒருவேளை நான் ஜெபிப்பதை நிறுத்தாமல் இருந்திருந்தால், என்னுடைய செய்கை மாறியிருக்கக்கூடும், என்னுடைய தரப்பில் நான் எவ்வளவு புண்படுத்தப்பட்டேன் என்பதை பதிலளிக்கு நானும் சொல்லியிருக்கக்கூடும். 

யாக்கோபு கோடிட்டுக் காட்டும் அறிவுரையை நான் எப்போதும் சரியாக கடைபிடித்ததில்லை என்றாலும், அந்த நாளில் அதை நான் செய்தேன் என்று நினைக்கிறேன். கோபப்படுவதற்கு முன்னர் நான் நின்று ஜெபிக்க முடிவுசெய்தது, கேட்பதற்கு தீவிரமாயும் பேசுகிறதற்கு பொறுமையாயும் செயல்பட என்னை அனுமதித்து. இதை அடிக்கடி செய்ய தேவன் எனக்கு ஞானத்தைத் தருவார் (நீதிமொழிகள் 19:11) என்று ஜெபிக்கிறேன்.

ஆயுதங்களிலிருந்து அணிகலன்கள்

என் மனைவி மிஸ்காவிடம் எத்தியோப்பியாவின் நெக்லஸ் மற்றும் காதணிகள் உள்ளன. அவர்களின் நேர்த்தியான எளிமை, அவர்களின் மெய்யான கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இந்த துண்டுகளைப் பற்றி மிகவும் வியக்கத்தக்கது அவர்களின் கதை. பல தசாப்தங்களாக கடுமையான மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போரின் காரணமாக, எத்தியோப்பியாவின் புவியியல் அமைப்பானது பீரங்கி குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் சிதறடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் ஒரு செயலாக, எத்தியோப்பியர்கள் எரிக்கப்பட்ட பூமியைத் துடைத்து, குப்பைகளை சுத்தம் செய்கிறார்கள். மேலும் எஞ்சியிருக்கும் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில் இருந்து கைவினைஞர்கள் நகைகளை உருவாக்குகிறார்கள்.

இந்தக் கதையைக் கேட்டபோது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை தைரியமாக அறிவிக்கும் மீகாவின் எதிரொலிகளைக் கேட்டேன். அவர் மக்களைக் குறித்து, ஒரு நாள் “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்” (மீகா 4:3) என்று சொல்லுகிறார். தேவனுடைய வல்லமையான கிரியையினிமித்தம், கொல்ல மற்றும் ஊனப்படுத்துவதற்கான பயங்கரமான கருவிகள், வாழ்க்கையை வளர்ப்பதற்கான கருவிகளாக மாற்றப்படுகிறது. வரவிருக்கிற கர்த்தருடைய நாளில், “ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” (வச. 3) என்றும் சொல்லுகிறார். 

மீகாவின் காலகட்டத்தைக் காட்டிலும் அதை நம்முடைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போலவே பார்க்கத் தோன்றுகிறது. பண்டைய காலத்தின் இஸ்ரவேல் தேசத்தைப் போலவே நாமும் வன்முறைகள் மற்றும் யுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலை எப்போதும் மாறாது என்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் தேவன் கிருபையோடும் குணமாக்கும் வல்லமையோடும் இந்த அதிர்ச்சியூட்டும் நாள் வரப்போகிறது என்று நமக்கு வாக்களிக்கிறார். அப்படியானால், இந்த உண்மையை இப்போதே நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். காயப்படுத்தும் ஆயுதங்களை ஆச்சரியப்படுத்தும் அணிகலன்களாய் மாற்றி, அவருடைய செயல்களை இப்போதிருந்தே செய்ய தேவன் நமக்கு உதவிசெய்வாராக.