அவள் கதவை வேகமாக அடைத்தாள். மீண்டும் அதையே செய்தாள். நான் சுத்தியலையும் ஸ்கூருட்ரைவரையும் எடுத்துக்கொண்டு என் மகளுடைய அறைக்கு சென்று, “செல்லமே, நீ உன் கோபத்தை கட்டுப்படுத்தப் பழகவேண்டும்” என்று மென்மையாக சொன்னேன். சொல்லிவிட்டு அவளுடைய அறைக் கதவை கழட்டி கொண்டுபோய்விட்டேன். கதவை தற்காலிகமாக கழட்டிக் கொண்டுபோவதின் மூலம் சுயக்கட்டுப்பாட்டின் அவசியத்தை அவள் அறிந்துகொள்வாள் என நம்பினேன். 

நீதிமொழிகள் 3:11-12இல் ஞானி, கர்த்தருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ளும்படிக்கு அறைகூவல் விடுக்கிறார். “சிட்சை” என்கிற வார்த்தையை “திருத்தம்” என்று மொழிபெயர்க்கக்கூடும். அன்பான நல்ல தேவன், அவருடைய ஆவியின் மூலமும் வசனத்தின் மூலமும் நம்மை பாதிக்கும் சுபாவங்களை திருத்தும்படிக்கு பேசுகிறார். தேவனுடைய திருத்துதல் என்பது உறவுரீதியாய் அவருடைய அன்பில் ஊன்றப்பட்டதும் நமக்கு நன்மை செய்யவேண்டும் என்னும் அவருடைய எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது. சில நேரம் அது நம் செய்கையின் விளைவுபோல் தோன்றும். சிலவேளைகளில் வேறொரு நபரைக் கொண்டு நம்முடைய பிழைகளை தேவன் திருத்துவார். அது நமக்கு எப்போதும் சாதகமாய் இல்லாததுபோல் தோன்றும். ஆனால் தேவனுடைய திருத்துதல் ஒரு வரப்பிரசாதம். 

ஆனால் அதை நாம் எல்லா வேளைகளிலும் அப்படி பார்ப்பதில்லை. “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே” என்று ஞானி சொல்லுகிறான் (வச. 11). தேவனுடைய சிட்சையைக் கண்டு சிலவேளைகளில் நாம் பயப்படுகிறோம். சிலவேளைகளில் தவறாய் சம்பவிக்கிற காரியங்களை கர்த்தருடைய சிட்சை என்று தவறாய் கருதிவிடுகிறோம். ஆனால் நம்மை நேசிக்கும் தகப்பனுடைய இருதயத்திற்கு அது தூரமாயுள்ளது. அவர் நம்மை நேசிப்பதினால் நம்மை திருத்துகிறார். 

தேவனுடைய சிட்சைக்கு பயப்படாமல் அதை ஏற்றுக்கொள்ளப் பழகுவோம். நம்மைத் திருத்தும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டாலோ அல்லது வேதத்தை படித்து குற்றவுணர்வடைந்தாலோ நம்மில் வாழுகிற தேவன் நமக்கு நன்மையையே செய்வார் என்று நன்றி சொல்லுவோம்.