Archives: நவம்பர் 2020

நீதியான காணிக்கை

வீடற்றவர்களுக்கு உறைவிடம் தந்த ஒரு இல்லத்திற்கு உதவும்படி எங்கள் வாலிப குழுவை ஒரு நாள் அழைத்திருந்தார்கள். அங்கே உள்ளே நுழையும் போது அங்கு குவிக்கப்பட்ட அநேக காலணிகளை கண்டோம். அவை அனைத்தும் நன்கொடையாக வழங்கப்பட்டவைகள். அந்த காலை முழுவதும் எல்லா காலணிகளையும் அதனுடைய மற்றொரு காலனியுடன் சேர்க்கும்படி எங்கள் நேரத்தை செலவழித்தோம். அவையனைத்தையும் கண்டுபிடித்து அதை தரையிலே வரிசைப்படுத்தினோம். இறுதியில் பாதிக்கும் மேற்பட்ட காலணிகளை நிராகரித்தோம். ஏனென்றால் அவைகள் மிகவும் பழையதாகவும், சேதமடைந்தும், உபயோகிக்க முடியாததாய் இருந்தது. அநேக நேரம் இதை போல் உபயோகிக்க முடியாத பொருட்களை நன்கொடையாக பலர் கொடுப்பார்கள். ஆனால்  அவைகளை யாருக்கும் அந்த காப்பகம் விநியோகம் செய்வதில்லை .

இஸ்ரவேலரும் இதைபோல் சேதமான மிருங்கங்களை தேவனுக்கு பலியாக செலுத்தினார்கள். அவர்களிடம் பலமுள்ள நல்ல மிருகங்கள் இருந்தும், குருடும், சப்பாணியும், பாதிக்கப்பட்ட மிருகங்களை பலியாக செலுத்தினார்கள். அதினால் தேவன் மல்கியா தீர்க்கதரிசி மூலம் அவர்களோடு பேசினார். அவர்களின் கனவீனத்தின் காரணமாக அவருடைய அதிருப்தியை அவர்களுக்கு தெரியப்படுத்தினார் (வச. 10). சிறந்தவைகளை அவர்களுக்கென்று வைத்துக் கொண்டு  தேவனுக்கு பாதிக்கப்பட்டதை பலியாக கொடுத்ததினால்  அவர்களை கண்டித்தார் (வ. 14). அதே சமயம் தேவன் அவர்களுக்கென்று வரப்போகும் மேசியாவை குறித்தும்  அறிவித்தார். மேசியாவின் அன்பும் இரக்கமும் அவர்கள் இருதயத்தை மாற்றி நீதியான காணிக்கைகளை கொடுக்கும்படி செய்யும் என்று வாக்குத்தத்தம் உரைத்தார்.

சில வேளைகளில் தேவனுக்கு மீதம் இருப்பதை நாம் காணிக்கையாக கொடுக்கும்படி தூண்டப்படுகிறோம். ஆனால் அவரிடமிருந்து அநேகம் எதிர்பார்த்து அதை பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி கூறிக் கொண்டு வருகிறோம். இருப்பினும் அவருக்கு ஒதுக்கப்பட்டவைகளை கொடுக்கிறோம். தேவன் நமக்கு அருளியதை நினைத்து, அவருக்கு நன்றி சொல்லி, அவரை கனப்படுத்தி, நம்மால் முடிந்த மட்டும் சிறந்ததை அவருக்கு கொடுப்போம்.

திரும்பும் இனிமை

ரஷ்ய நாட்டு திருமணங்கள் மிகவும் அழகுள்ளதாய் தனித்துவம் வாய்ந்ததாய் நடைபெறும். அதிலும் குறிப்பிட்ட ஒரு வழக்கமுறை என்னவென்றால் - நலம் பாராட்டுபவர் எழுந்திருந்து தம்பதியினரின் நலன்களை கூறி முடித்த பின்பு அனைவரும் தங்கள் கையில் இருக்கும் பானத்தை குடித்து "கசப்பு!! கசப்பு !!" என்று கூறுவார்கள். புது தம்பதியினர் எழுந்து ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அந்த பானத்தை மறுபடியும் இனிமையாக்குவார்கள்.

ஏசாயா 24ல் தீர்க்கதரிசனம் உரைத்தது போல் கசப்பு நிறைந்த இப்பூமியில் மேல் விழுந்த சாபமும், அழிவும் இனி நமக்கு வரவிருக்கும் இனிமையுள்ள நம்பிக்கையான புதிய வானமும் புதிய பூமிக்கும் வழி திறக்கிறது (அதி 25). தேவன் நமக்கு அருமையான விருந்தையும், இனிமையான பானத்தையும் ஆயத்தம் பண்ணி கொண்டிருக்கிறார். அவருடைய இராஜ்ஜியத்தில் இடைவிடாத ஆசிர்வாதங்களும், கனி நிறைந்த வாழ்க்கையும் குறைவில்லாமல் எல்லோர்க்கும் வழங்கப்படும். சேனைகளின் கர்த்தரின் அரசாட்சியில் மரணம் ஜெயிக்கப்படும், கண்ணீர் துடைக்கப்படும், நிந்தைகள் நீக்கப்படும் (வ. 7-8). அவர் பிள்ளைகளோ "இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்" என்று களிகூறுவார்கள் (வச. 9).

ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் தேவனோடு நாம் ஒரு நாள் வாசம்பண்ணுவோம். சபையாகிய மணவாட்டியை அவர் சேர்த்துக் கொள்ளும்போது ஏசாயா 25 நிறைவேறுகிறது. கசப்பு நிறைந்த நம் வாழ்வும் மதுரமாகும்.

சுவாசமும் அதின் சுருக்கமும்

மரண படுக்கையில் படுத்திருக்கும் எனது தந்தையின் சுவாச காற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. இறுதியில் ஒரு நாள் அது நின்று போவதை நானும் என் சகோதரியும் அம்மாவும் அழுகையுடன் பார்த்தோம். அவருடைய மரணம் எங்கள் வாழ்க்கையை வெறுமையாக்கினது. எங்களோடு கூட எப்போதும் இருந்த அவர் இப்போது அவருடைய நினைவுகளை மட்டுமே வைத்து சென்றுவிட்டார். இருப்பினும் அவரோடு மறுபடியும் ஒன்றிணைக்க படுவோம் என்கிற விசுவாசம் எங்களுக்கு இருக்கிறது.

அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனென்றால் அவர் தேவனை அறிந்தவரும் தேவன் மேல் அன்புவைத்தவராகவும் இருந்தார். என் தந்தையின் முதல் சுவாசத்தை தேவன் அவர் நாசியிலே ஊதினார். அவர் முதல் சுவாசத்திலிருந்து அதை தொடர்ந்து எல்லா சுவாசத்திலும் தேவனுடைய நெருக்கமான ஈடுபாடு அவரோடு இருந்தது. அதைப்போல் தான் அவர் நம் வாழ்விலும் எல்லா சுவாசத்திலும் ஈடுபட்டு வருகிறார். தேவனே நாம் கருவிலிருக்கும் போது பிரமிக்கத்தக்க அதிசயமாய் நம்மை உருவாக்கினார் (வச. 14). அதுமுதல் இருந்து என் தந்தை போல் நம் இறுதி சுவாசம் வரையில் தேவனே நம்மோடு இருந்து நம்மை அன்போடும் அரவணைப்போடும் மறுபடி அவரோடு சேர்த்துக் கொள்வார்.

எல்லா தேவ பிள்ளைகளுக்கும்  இது உண்மையாக இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். ஆகையால் சுவாசமுள்ள யாவும் தேவனை துதிப்பதாக என்கிற வசனத்தின்படி, நமக்கு மீதமுள்ள ஒவ்வொரு நாளும் அவரை துதிப்போம்.

எதிர்கொள்ளும் சவால்கள்

சமீபத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு நாள் சந்தித்து  பேசிக்கொண்டிருக்கையில் அவரவர் தாங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களையும் பாடுகளையும் குறித்து பகிர்ந்து கொண்டோம். பார்க்கப்போனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சவால்களை எதிர் கொண்டிருந்தார்கள். நானும் இன்னொரு நண்பனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எங்கள் பெற்றோர்களை கவனித்துக் கொண்டிருந்தோம், மற்றவரின் குழந்தை ஒன்று ஆகாரம் கட்டுப்பாடு இல்லாமையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது, ஒருவர் நீண்ட கால உடல் வலியால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார், கடைசியாக ஒருவருக்கு அறுவை சிகுச்சை ஒன்று நடைபெற இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் எங்கள் சவால்களை சந்தித்து கொண்டு வந்தோம்.

தாவீதின் ஊராகிய எருசலேமிலே தேவனுடைய பெட்டி கொண்டுவரப்பட்டதை 1 நாளாகமம் 16ஆம் அதிகாரம் விவரிக்கிறது. போர்களின் மத்தியில் நடந்த சமாதான உடன்படிக்கை என்று  இச்சம்பவம் சாமுவேல் குறிப்பிடுகிறார் (2 சாமு. 7:1). அப்போது தாவீது மக்களை ஒரு பாடலின் மூலம் வழிநடத்தினார் (16 :8-36). ஒன்றிணைந்து தேவனுடைய வல்லமையையும், நிறைவேற்றின வாக்குத்தத்தங்களுக்காகவும், கடந்த நாட்கள் முழுவதும் காத்த அவர் தயவுக்காகவும் நன்றி செலுத்தி பாடினார்கள் (வச. 12-22). "கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்"(வ.16) என்று அழுதார்கள். ஏனெனில் வரப்போகும் அநேக யுத்தங்களுக்கு அவர் சமூகம் மிகவும் அவசியமாக இருந்தது.

“கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்.” குடும்ப பிரச்சனைகளோ, வியாதியோ, பாடுகளோ நமக்கு நேரிடும்போது இதுவே நமக்கு  சரியான ஆலோசனையாக இருக்கிறது. நம்மை அவர் தனியாக போராட விடவில்லை. எப்போதும் நம்மோடு இருந்து நம்மை தொடர்ந்து பாதுகாப்பார். 

நம் தேவன் நம்மை கடக்க செய்வார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தலைமுறை தலைமுறையாய்

டெக்சாஸைச் சேர்ந்த இரண்டு பாட்டிமார்கள், எண்பத்தொரு வயதில் எண்பது நாட்களில் உலகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணத்தை முடித்ததற்காக சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்பானார்கள். இருபத்தி மூன்று வருடங்களாக உலகை சுற்றிய இந்த சிறந்த நண்பர்கள் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்தனர். அவர்கள் அண்டார்டிகாவில் தொடங்கி, அர்ஜென்டினாவில் டேங்கோ, எகிப்தில் ஒட்டகங்களில் சவாரி, வட துருவத்தில் சறுக்கி ஓடும் சவாரி என்று பல அனுபவங்களை மேற்கொண்டனர். ஜாம்பியா, இந்தியா, நேபாளம், பாலி, ஜப்பான், ரோம் உள்ளிட்ட பதினெட்டு நாடுகளுக்குச் சென்று ஆஸ்திரேலியாவில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டனர். இருவரும் தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரை உலகப் பயணத்தை அனுபவிக்கத் தூண்டுவதாக நம்புவதாகக் கூறினார்கள்.

யாத்திராகமத்தில், வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு வகையான சாகசத்திற்காக தேவனால் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு ஆக்டோஜெனேரியன்களைப் பற்றி வாசிக்கிறோம். தேவன் மோசேயை பார்வோனிடம் சென்று, தேவனுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கட்டளை கொடுத்தாா். மோசேக்கு துணையாக தேவன் அவனுடைய சகோதரனாகிய ஆரோனை துணைக்கு அனுப்புகிறார். “அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது” (யாத்திராகமம் 7:7).

இந்தக் கோரிக்கை எந்த வயதிலும் பயமுறுத்துவதாக உணரலாம். ஆனால் தேவன் இந்தச் சகோதரர்களை இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். “மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள்” (வச. 10). நானூறு ஆண்டுகளுக்கும் மேலான அடிமைத்தனத்திலிருந்து தேவன் தம் மக்களை விடுவித்ததைக் கண்ட பெருமையை மோசேயும் ஆரோனும் பெற்றனர். எந்த வயதிலும் அவர் நம்மைப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த மனிதர்கள் நிரூபிக்கின்றனர். நாம் இளைஞராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, அவர் எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றுவோம். 

 

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.