Archives: நவம்பர் 2020

நீதியான காணிக்கை

வீடற்றவர்களுக்கு உறைவிடம் தந்த ஒரு இல்லத்திற்கு உதவும்படி எங்கள் வாலிப குழுவை ஒரு நாள் அழைத்திருந்தார்கள். அங்கே உள்ளே நுழையும் போது அங்கு குவிக்கப்பட்ட அநேக காலணிகளை கண்டோம். அவை அனைத்தும் நன்கொடையாக வழங்கப்பட்டவைகள். அந்த காலை முழுவதும் எல்லா காலணிகளையும் அதனுடைய மற்றொரு காலனியுடன் சேர்க்கும்படி எங்கள் நேரத்தை செலவழித்தோம். அவையனைத்தையும் கண்டுபிடித்து அதை தரையிலே வரிசைப்படுத்தினோம். இறுதியில் பாதிக்கும் மேற்பட்ட காலணிகளை நிராகரித்தோம். ஏனென்றால் அவைகள் மிகவும் பழையதாகவும், சேதமடைந்தும், உபயோகிக்க முடியாததாய் இருந்தது. அநேக நேரம் இதை போல் உபயோகிக்க முடியாத பொருட்களை நன்கொடையாக பலர் கொடுப்பார்கள். ஆனால்  அவைகளை யாருக்கும் அந்த காப்பகம் விநியோகம் செய்வதில்லை .

இஸ்ரவேலரும் இதைபோல் சேதமான மிருங்கங்களை தேவனுக்கு பலியாக செலுத்தினார்கள். அவர்களிடம் பலமுள்ள நல்ல மிருகங்கள் இருந்தும், குருடும், சப்பாணியும், பாதிக்கப்பட்ட மிருகங்களை பலியாக செலுத்தினார்கள். அதினால் தேவன் மல்கியா தீர்க்கதரிசி மூலம் அவர்களோடு பேசினார். அவர்களின் கனவீனத்தின் காரணமாக அவருடைய அதிருப்தியை அவர்களுக்கு தெரியப்படுத்தினார் (வச. 10). சிறந்தவைகளை அவர்களுக்கென்று வைத்துக் கொண்டு  தேவனுக்கு பாதிக்கப்பட்டதை பலியாக கொடுத்ததினால்  அவர்களை கண்டித்தார் (வ. 14). அதே சமயம் தேவன் அவர்களுக்கென்று வரப்போகும் மேசியாவை குறித்தும்  அறிவித்தார். மேசியாவின் அன்பும் இரக்கமும் அவர்கள் இருதயத்தை மாற்றி நீதியான காணிக்கைகளை கொடுக்கும்படி செய்யும் என்று வாக்குத்தத்தம் உரைத்தார்.

சில வேளைகளில் தேவனுக்கு மீதம் இருப்பதை நாம் காணிக்கையாக கொடுக்கும்படி தூண்டப்படுகிறோம். ஆனால் அவரிடமிருந்து அநேகம் எதிர்பார்த்து அதை பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி கூறிக் கொண்டு வருகிறோம். இருப்பினும் அவருக்கு ஒதுக்கப்பட்டவைகளை கொடுக்கிறோம். தேவன் நமக்கு அருளியதை நினைத்து, அவருக்கு நன்றி சொல்லி, அவரை கனப்படுத்தி, நம்மால் முடிந்த மட்டும் சிறந்ததை அவருக்கு கொடுப்போம்.

திரும்பும் இனிமை

ரஷ்ய நாட்டு திருமணங்கள் மிகவும் அழகுள்ளதாய் தனித்துவம் வாய்ந்ததாய் நடைபெறும். அதிலும் குறிப்பிட்ட ஒரு வழக்கமுறை என்னவென்றால் - நலம் பாராட்டுபவர் எழுந்திருந்து தம்பதியினரின் நலன்களை கூறி முடித்த பின்பு அனைவரும் தங்கள் கையில் இருக்கும் பானத்தை குடித்து "கசப்பு!! கசப்பு !!" என்று கூறுவார்கள். புது தம்பதியினர் எழுந்து ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அந்த பானத்தை மறுபடியும் இனிமையாக்குவார்கள்.

ஏசாயா 24ல் தீர்க்கதரிசனம் உரைத்தது போல் கசப்பு நிறைந்த இப்பூமியில் மேல் விழுந்த சாபமும், அழிவும் இனி நமக்கு வரவிருக்கும் இனிமையுள்ள நம்பிக்கையான புதிய வானமும் புதிய பூமிக்கும் வழி திறக்கிறது (அதி 25). தேவன் நமக்கு அருமையான விருந்தையும், இனிமையான பானத்தையும் ஆயத்தம் பண்ணி கொண்டிருக்கிறார். அவருடைய இராஜ்ஜியத்தில் இடைவிடாத ஆசிர்வாதங்களும், கனி நிறைந்த வாழ்க்கையும் குறைவில்லாமல் எல்லோர்க்கும் வழங்கப்படும். சேனைகளின் கர்த்தரின் அரசாட்சியில் மரணம் ஜெயிக்கப்படும், கண்ணீர் துடைக்கப்படும், நிந்தைகள் நீக்கப்படும் (வ. 7-8). அவர் பிள்ளைகளோ "இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்" என்று களிகூறுவார்கள் (வச. 9).

ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் தேவனோடு நாம் ஒரு நாள் வாசம்பண்ணுவோம். சபையாகிய மணவாட்டியை அவர் சேர்த்துக் கொள்ளும்போது ஏசாயா 25 நிறைவேறுகிறது. கசப்பு நிறைந்த நம் வாழ்வும் மதுரமாகும்.

சுவாசமும் அதின் சுருக்கமும்

மரண படுக்கையில் படுத்திருக்கும் எனது தந்தையின் சுவாச காற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. இறுதியில் ஒரு நாள் அது நின்று போவதை நானும் என் சகோதரியும் அம்மாவும் அழுகையுடன் பார்த்தோம். அவருடைய மரணம் எங்கள் வாழ்க்கையை வெறுமையாக்கினது. எங்களோடு கூட எப்போதும் இருந்த அவர் இப்போது அவருடைய நினைவுகளை மட்டுமே வைத்து சென்றுவிட்டார். இருப்பினும் அவரோடு மறுபடியும் ஒன்றிணைக்க படுவோம் என்கிற விசுவாசம் எங்களுக்கு இருக்கிறது.

அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனென்றால் அவர் தேவனை அறிந்தவரும் தேவன் மேல் அன்புவைத்தவராகவும் இருந்தார். என் தந்தையின் முதல் சுவாசத்தை தேவன் அவர் நாசியிலே ஊதினார். அவர் முதல் சுவாசத்திலிருந்து அதை தொடர்ந்து எல்லா சுவாசத்திலும் தேவனுடைய நெருக்கமான ஈடுபாடு அவரோடு இருந்தது. அதைப்போல் தான் அவர் நம் வாழ்விலும் எல்லா சுவாசத்திலும் ஈடுபட்டு வருகிறார். தேவனே நாம் கருவிலிருக்கும் போது பிரமிக்கத்தக்க அதிசயமாய் நம்மை உருவாக்கினார் (வச. 14). அதுமுதல் இருந்து என் தந்தை போல் நம் இறுதி சுவாசம் வரையில் தேவனே நம்மோடு இருந்து நம்மை அன்போடும் அரவணைப்போடும் மறுபடி அவரோடு சேர்த்துக் கொள்வார்.

எல்லா தேவ பிள்ளைகளுக்கும்  இது உண்மையாக இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். ஆகையால் சுவாசமுள்ள யாவும் தேவனை துதிப்பதாக என்கிற வசனத்தின்படி, நமக்கு மீதமுள்ள ஒவ்வொரு நாளும் அவரை துதிப்போம்.

எதிர்கொள்ளும் சவால்கள்

சமீபத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு நாள் சந்தித்து  பேசிக்கொண்டிருக்கையில் அவரவர் தாங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களையும் பாடுகளையும் குறித்து பகிர்ந்து கொண்டோம். பார்க்கப்போனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சவால்களை எதிர் கொண்டிருந்தார்கள். நானும் இன்னொரு நண்பனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எங்கள் பெற்றோர்களை கவனித்துக் கொண்டிருந்தோம், மற்றவரின் குழந்தை ஒன்று ஆகாரம் கட்டுப்பாடு இல்லாமையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது, ஒருவர் நீண்ட கால உடல் வலியால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார், கடைசியாக ஒருவருக்கு அறுவை சிகுச்சை ஒன்று நடைபெற இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் எங்கள் சவால்களை சந்தித்து கொண்டு வந்தோம்.

தாவீதின் ஊராகிய எருசலேமிலே தேவனுடைய பெட்டி கொண்டுவரப்பட்டதை 1 நாளாகமம் 16ஆம் அதிகாரம் விவரிக்கிறது. போர்களின் மத்தியில் நடந்த சமாதான உடன்படிக்கை என்று  இச்சம்பவம் சாமுவேல் குறிப்பிடுகிறார் (2 சாமு. 7:1). அப்போது தாவீது மக்களை ஒரு பாடலின் மூலம் வழிநடத்தினார் (16 :8-36). ஒன்றிணைந்து தேவனுடைய வல்லமையையும், நிறைவேற்றின வாக்குத்தத்தங்களுக்காகவும், கடந்த நாட்கள் முழுவதும் காத்த அவர் தயவுக்காகவும் நன்றி செலுத்தி பாடினார்கள் (வச. 12-22). "கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்"(வ.16) என்று அழுதார்கள். ஏனெனில் வரப்போகும் அநேக யுத்தங்களுக்கு அவர் சமூகம் மிகவும் அவசியமாக இருந்தது.

“கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்.” குடும்ப பிரச்சனைகளோ, வியாதியோ, பாடுகளோ நமக்கு நேரிடும்போது இதுவே நமக்கு  சரியான ஆலோசனையாக இருக்கிறது. நம்மை அவர் தனியாக போராட விடவில்லை. எப்போதும் நம்மோடு இருந்து நம்மை தொடர்ந்து பாதுகாப்பார். 

நம் தேவன் நம்மை கடக்க செய்வார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் கட்டுப்படுத்துகிறார்

அது ஏன் ஒரே நேரத்தில் எல்லாம் சம்பவிக்கிறது என்று விமலாவுக்கு புரியவில்லை. நிகழ்ந்தது போதாதென்று, அவளது மகளுக்குப் பள்ளியில் கால் முறிந்தது, மேலும் அவளும் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இவ்வாறு நிகழ நான் என்ன செய்தேன்? விமலா வியந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் தேவனிடம் பெலனைக் கேட்பதுதான்.

விமலா அனுபவித்ததை காட்டிலும் வலியும் இழப்பும் மிக அதிகமான பேரழிவும் தன்னை ஏன் தாக்கியது என்று யோபுக்கு தெரியவில்லை. அவரது ஆத்துமாவுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தை அவர் அறிந்திருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. சாத்தான் யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினான், அவர் எல்லாவற்றையும் இழந்தால் அவர் தேவனை விட்டு விலகுவார் என்றான் (யோபு 1:6-12). பேரழிவு ஏற்பட்டபோது, யோபின் நண்பர்கள் அவர் செய்த பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்படுகிறார் என்று வலியுறுத்தினார்கள். அது உண்மையல்ல, ஆனால் அவர் “ஏன் நான்?” என்று ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தேவன் அதை அனுமதித்தார் என்பது அவருக்குத் தெரியாது.

யோபின் கதை துன்பத்தையும் விசுவாசத்தையும் பற்றி ஒரு ஆற்றல்மிகு படிப்பினையை வழங்குகிறது. நம் வலிக்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க முயலலாம், ஆனால் நம் வாழ்நாளில் நாம் புரிந்து கொள்ளாத வகையில் திரைக்குப் பின்பாக ஒரு பெரிய சம்பவம் இருக்கலாம்.

யோபுவைப் போலவே, தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று நமக்குத் தெரிந்தவற்றைப் பற்றிக்கொள்ளலாம். அவ்வாறு சொல்வது எளிதான காரியம் அல்ல, ஆனால் அவருடைய வேதனையின் மத்தியில், யோபு தேவனை நோக்கி, அவருடைய சர்வ வல்லமையில் நம்பிக்கை வைத்தார்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (வ. 21). என்ன நடந்தாலும், நமக்குப் புரியாதபோதும் நாமும் தேவன் மீது நம்பிக்கை வைப்போமாக. 

 

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. 

 

நான் ஓட்டுநர் மட்டுமே

“அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?” பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். “கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்” என்றேன்.

“நான் ஓட்டுநர் மட்டுமே” என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு “வாகன ஓட்டுநராக” இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் “வெறும் ஓட்டுநர்” என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது.