ஜெர்மானிய நாசிகளின் பேரழிவில் தப்பிப் பிழைத்த காரி டென் பூம் என்பவள் மன்னிப்பின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். மன்னிக்கப்பட்ட பாவங்கள், கடலின் அடியில் எறியப்பட்டன என்ற காட்சியையே அவள் மனதில் பிரதானமாக வைத்திருப்பதாக அவளுடைய புத்தகத்தில் எழுதுகின்றாள். “நாம் பாவங்களை அறிக்கையிட்டால், தேவன் அவற்றை கடலின் ஆழத்தில் எறிந்து விடுவதால் அவை நிரந்தரமாக போய் விட்டன……பின்னர் தேவன், இங்கு மீன் பிடிக்க அனுமதியில்லை என்ற ஓர் அடையாளத்தையும் அங்கு வைக்கின்றார்” என்பதாக எழுதியுள்ளாள்.

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் சில வேளைகளில் கவனிக்கத் தவறிய முக்கியமான உண்மையை குறிப்பிட்டுக் காண்பிக்கின்றாள். தேவன் நம்முடைய தவறுகளை மன்னிக்கும் போது, நாம் முற்றிலுமாக மன்னிக்கப் படுகின்றோம்!  நாம் நம்முடைய வெட்கத்திற்குரிய செயல்களை தோண்டி எடுக்கத் தேவையில்லை, நம்முடைய அழுக்கான உணர்வுகளில் உழலத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவருடைய கிருபையையும் மன்னிப்பையும் ஏற்றுக் கொண்டு, விடுதலையோடு அவரைப் பின்பற்றுவோம்.

“இங்கு மீன் பிடிக்க அனுமதியில்லை” என்ற ஒரு கருத்தினை சங்கீதம் 130 ல் காண்கின்றோம். தேவன் நேர்மையானவராய் இருக்கின்றார், அவர் மனம் வருந்துகின்றவர்களின் பாவத்தை மன்னிக்கின்றார், “உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” (வ.4) என்கின்றார் சங்கீதக்காரன். தேவன் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு காத்திருக்கின்றான் (வ.5). “அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக் கொள்வார்” (வ.8) என்று நம்பிக்கையோடு தெரிவிக்கின்றான். அவரை நம்பியிருப்பவர்கள் “முழுமையான மீட்பை பெற்றுக் கொள்வர்” (வ.7) என்கின்றான்.

நாம் வெட்கத்தாலும், உதவாதவர்கள் என்ற எண்ணத்தாலும் பிடிக்கப்படும் போது, நம்முடைய முழு இருதயத்தோடும் தேவனுக்குப் பணிசெய்ய முடியாது. நம்முடைய கடந்த கால எண்ணங்கள் நம்மைத் தடைசெய்துவிடும். நீ செய்த தவறுகளை எண்ணி கஷ்டமான சூழலில், இருப்பாயானால், தேவனிடம் உதவி கேள், அவருடைய ஈவாகிய மன்னிப்பிலும், புதிய வாழ்விலும் முழு நம்பிக்கையையும் வை. அவர் உன்னுடைய பாவங்களை சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டுவிட்டார்!