எங்களது சமையல் அறைக்கு வெளியே, தாழ்வாரத்தின் அடிப்பக்கம் ஒரு புறா கூடு அமைத்தது. அது புற்களைக் கொண்டு வந்து, கட்டையின் இடைவெளியில், ஒரு பாதுகாப்பான இடத்தில் திணித்து, கூடு அமைப்பதைக் கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பின்னர் அது முட்டையிட்டு அடைகாத்தது. ஒவ்வொரு காலையும் அதன் முன்னேற்றத்தைக் கவனிப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும் அதில் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லை. அந்த புறாவின் முட்டைகள் பொரிப்பதற்கு சில வாரங்கள் ஆயின.

இத்தகைய பொறுமை எனக்கொன்றும் புதியதல்ல. நான் ஜெபத்தில் காத்திருக்கப் பழக்கப் பட்டவள். நானும் என்னுடைய கணவனும் எங்களுடைய முதல் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும்படி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்தோம். இதேப் போன்று, பல ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் கேத்தரின் மார்ஷல்,  “அடைகாக்கப் படும் முட்டைகள் சில நாட்களிலேயே பொரித்து விடுவதைப் போல, ஜெபத்தைற்கான பதில் உடனே வந்து விடாது” என்றார்.

ஆபகூக் தீர்க்கதரிசியும் ஜெபத்தில் காத்திருப்பதை அனுபவித்தவர். யூதாவின் தெற்கு இராஜியத்தில், பாபிலோனியரின் வன்மையான நடத்துதலைக் குறித்து, தேவன் அமைதியாக இருப்பதால், விரக்தியடைந்த ஆபகூக் தீர்க்கதரிசி, “நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டு, அவர் எனக்கு என்ன சொல்வாரென்று………… கவனித்துப் பார்ப்பேன்” ( ஆப.2:1) என்கின்றார். குறித்த காலம் வரும் வரைக்கும் ஆபகூக் காத்திருக்க வேண்டும் என தேவன் பதிலளிக்கின்றார். அத்தோடு, தேவன், “நீ தீர்க்க தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை” (வ.2) என்று வழிகாட்டுகின்றார்.

பாபிலோனின் வீழ்ச்சிக்காக “குறித்த காலம்” இன்னும் அறுபது ஆண்டுகள் தள்ளி இருக்கின்றது என்பதை தேவன் குறிப்பிடவில்லை. அவருடைய வாக்குத் தத்தத்திற்கும் அதின் நிறைவேறலுக்கும் இடையே இருக்கின்ற நீண்ட இடைவெளியைப் பற்றி குறிப்பிடவில்லை. முட்டைகளைப் போன்று, ஜெபம் உடனடியாக பதில் கொண்டு வருவதில்லை, ஆனால் தேவன் இவ்வுலகிற்கும், நமக்கும்  நிறைவேற்றும்படி வைத்திருக்கும் திட்டத்தினுள், நம்முடைய ஜெபங்களும் பலனைத் தரும்படி காத்திருக்கும்.