ஸ்டீபன், தன் பெற்றோரிடம், தான் ஒவ்வொரு நாள் காலையும் சீக்கிரமாக பள்ளிக்குச் செல்ல வேண்டுமென கூறினான். ஆனால், அது ஏன் அத்தனை முக்கியமானது என அவன் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவனுடைய பெற்றோர், ஒவ்வொரு நாளும் அவனைப் பள்ளிக்கு, காலை 7:15 க்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்டீபன், ஜுனியர் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு நாள், பனிபடர்ந்த நாளில் ஒரு கார் விபத்தில் மரித்துப் போனான். இதன் பின்னர், அவனுடைய பெற்றோர், ஸ்டீபன் ஏன் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு சீக்கிரமாகச் சென்றான் என்பதைக் கண்டு பிடித்தனர். ஒவ்வொரு காலையும், ஸ்டீபனும் அவனுடைய நண்பர்களும் பள்ளியின் நுழை வாயிலில் நின்று கொண்டு, அங்கு வரும் அனைத்து மாணவர்களையும் புன்சிரிப்போடும், கரங்களை அசைத்தும், அன்பான வார்த்தைகளாலும் வரவேற்றனர். இது அனைத்து மாணவர்களுக்கும், சிறப்பாக பிரபலமற்ற மாணவர்களுக்கும், தங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர் என்கின்ற ஓர் உற்சாகத்தைக் கொடுத்தது.

இயேசுவின் விசுவாசியான ஸ்டீபன், தன்னுடைய மகிழ்ச்சியை மற்றவர்களோடும், சிறப்பாக மிகவும் தேவையிலிருப்போரோடும் பகிர்ந்துகொள்ள விரும்பினான். தன்னுடைய  வரவேற்கும் எண்ணத்தோடு கூடிய அன்பின் செயலால், மிகச் சிறந்த முறையில், கிறிஸ்துவின் அன்பாகிய ஒளியைப் பிரகாசிக்கச் செய்தான்.

மத்தேயு 5:14-16 ல், இயேசு நம்மைக் குறித்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” எனவும், “மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” எனவும் வெளிப்படுத்துகின்றார். (வ.14). முற்காலத்தில், அநேகப் பட்டணங்கள் வெள்ளை சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டிருக்கும், அவை சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் போது, பிரகாசமாகக் காணப்படும். அது போன்று, நாமும் மறைந்து விடாமல், வீட்டிலுள்ள அனைவருக்கும் கிறிஸ்துவின் ஒளியைக் காட்டுவோம். (வ.15).

நாம் நம்முடைய ஒளியை பிறர் முன்பாக பிரகாசிக்கச் செய்யும் போது, (வ.16), அவர்களும் கிறிஸ்துவின் வரவேற்கும் அன்பை அநுபவிப்பார்கள்.