“ஜெபங்கள் சாவில்லாதவை” என்பவை இ.எம். பவுண்ட்ஸ் (1835-1913) என்பவர் ஜெபத்தை குறித்து எழுதிய தனிச்சிறப்பு வாய்ந்த, பல தலைமுறையினரின் கவனத்தையீர்த்த வார்த்தைகள். என்றும் நிலைத்திருக்கும் வல்லமை பெற்ற நம்முடைய ஜெபங்களைப் பற்றி அவர், “ ஜெபத்தை உச்சரித்த உதடுகளும் சாவில் மூடப்பட்டு விடலாம், ஜெபத்தை உணர்ந்த இருதயமும் துடிப்பை நிறுத்தி விடலாம், ஆனால், ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளவைகளாய் நிற்கின்றன. அவை தேவனுடைய இருதயத்தில் இடம் பெறுகின்றன. ஜெபங்கள் அவற்றை உச்சரித்தவர்களின் வாழ் நாட்களையும், அவர்களின் தலைமுறையையும், ஒரு யுகத்தையும், இந்த உலகையும் விட தாண்டி வாழ்பவை” என்று எழுதியுள்ளார்.

உன்னுடைய துன்பங்கள், வேதனைகள், துயரங்களின் மத்தியில் நீ ஏறெடுத்த ஜெபங்கள் தேவனை அடைந்தனவா என்று எப்பொழுதாகிலும் நினைத்ததுண்டா? பவுண்ட்ஸ்ஸின் வார்த்தைகளின் உட்கருத்தும், வெளிப்படுத்தல் 8:1-5ல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளும் நம்முடைய ஜெபங்களின் முக்கியத்துவத்தை நினைப்பூட்டுகின்றன. பரலோகத்தில் தேவன் வீற்றிருக்கும் சிங்காசனம், (7:17) உள்ளது, அந்த இடம் தான் இவ்வுலகத்தை கட்டுப்படுத்தும் அறை. தேவனுக்கு முன்பாக அவருக்கு பணி செய்யும் தூதர்கள் நிற்கின்றார்கள் (வச. 2) ஒரு தூதன் பழைய ஏற்பாட்டு ஆசாரியரைப் போன்று, தூபம் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துக்கொண்டு, சகல பரிசுத்தவான்களின் ஜெபங்களோடு தூபவர்க்கத்தை செலுத்துகின்றான்.(வச. 3,4) புவியில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் பரலோகத்தின் தேவனிடம் கொடுக்கப்படுகின்ற இக்காட்சி, நம் கண்களைத் திறந்து, நமக்கு ஊக்கத்தை தருகிறதல்லவா? நம்முடைய ஜெபங்கள் வழியில் தொலைந்திருக்கலாம் அல்லது மறக்கப்பட்டிருக்கலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நாம் இங்கே பார்க்கும் காட்சி நமக்கு ஆறுதலாகவும், நாம் ஜெபத்தில் உறுதியாய் இருக்கவும் நம்மை கட்டாயப்படுத்துகின்றது. நம்முடைய ஜெபங்கள் தேவனுக்கு விலையேறப் பெற்றவை!