Archives: ஜூன் 2019

உங்களுடைய புகழ்ச்சி

உண்மையாக வாழ்ந்த ஒரு பெண்ணுடைய அடக்க ஆராதனைக்குச் சென்றிருந்தேன். ஏதோ மனதில் ஒரு நிறைவு. அந்தப் பெண் பிரபலமான நபர் அல்ல. சபையார், அக்கம்பக்கத்தார், நண்பர்கள் என்கிற வட்டத்திற்குள் வாழ்ந்தவர், அதைத் தாண்டி வேறு யாருக்கும் அவரைத் தெரியாது. ஆனால் இயேசுவையும், தன்னுடைய ஏழு பிள்ளைகளையும், இருபத்தைந்து பேரப்பிள்ளைகளையும் மிகவும் நேசித்தார். எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பார், எல்லாரையும் அன்பாக விசாரிப்பார், உடல் திடகாத்திராமா இருந்தார்.

“விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்” என்று பிரசங்கி சொல்கிறது. பிர 7:2. “ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்,” ஏனென்றால், வாழ்க்கையில் எது முக்கிய மென்பதை அங்கே அறிந்துகொள்ளலாம் (7:4). நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கட்டுரையாளரான டேவிட் புரூக்ஸ், இரண்டுவித நல்லதன்மைகள் இருப்பதாகக் கூறுகிறார். ஒன்று, சுயவிபரப் பட்டியலில் சொல்லப்படுவது, இரண்டாவது, ஒருவருடைய அடக்க ஆராதனையின்போது சொல்லப்படுவது. சிலசமயங்களில் சுயவிபரப்பட்டியலில் உள்ளதுபோலவே அடக்கஆராதனையில் சொல்லப்படும், சில சமயங்களில் எங்காவது ஓரிடத்தில்தான் அவ்வாறு சொல்லப்படும் சந்தேகப்படும் நேரத்தில். புகழைத்தருகிற நல்ல குணங்களைத்தான் தேர்ந்தெடுங்கள்.

அந்தப் பெண்ணுக்கு சுயவிபரப் பட்டியலெல்லாம் கிடையாது.  ஆனால் அவர் “நீதிமொழிகள் 31ன் ஸ்திரிபோல வாழ்ந்தவர்” என்று அவருடைய பிள்ளைகள் கூறினார்கள். தேவ பக்தியுள்ள ஒரு ஸ்திரியைப் பற்றி அங்கு சொல்லப்பட்டுள்ளது. பிள்ளைகள் இயேசுவிடம் அன்புகூரவும், மற்றவர்களை நேசிக்கவும் அவர் ஓர் ஊக்கசக்தியாக இருந்தார். “நான் கிறிஸ்துவைப்
பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று பவுல் சொன்னதுபோல, தங்களுடைய அம்மாவைப் போல ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்று சொன்னார்கள்.

உங்களுடைய அடக்க ஆராதனையில் என்ன சொல்லுவார்கள்? என்ன சொல்லப்பட விரும்புகிறீர்கள்? புகழ்தருகிற தன்மைகளை வளர்க்க காலம் பிந்தவில்லை. இயேசுவில் இளைப்பாறுங்கள். அவர் நமக்கு இலவசமாக இரட்சிப்பைத் தந்து நாம் எவ்வாறு வாழவேண்டும் என்று காட்டுகிறார்..

மாயைகளை எரிப்போம்

1497ம் ஆண்டு, கிரோலாமா ஸவனரோலா என்கிற ஒரு துறவி, நெருப்பு ஒன்றைத் துவக்கினார். பிறகு, மக்களை பாவம் செய்யத்தூண்டுவதாக அல்லது மதக்கடமைகளைப் புறக்கணிக்கச் செய்வதாக தாங்கள் கருதிய பொருட்களை எல்லாம் சேகரிப்பதில் அவரும் அவருடைய சீடர்களும் பல மாதங்கள் செலவிட்டார்கள். அவற்றில் கலைபடைப்புகள், அழகுசாதனங்கள், பிறசாதனங்கள், துணிமணிகள் போன்றவை அடங்கும். குறிப்பிட்ட ஒரு நாளில், ஆயிரக்கணக்கான மாயை பொருட்களை இத்தாலியின் ஃபிளாரன்ஸ் என்கிற இடத்திலுள்ள ஒரு பொது சதுக்கத்தில் குவித்து, தீக்கொளுத்தினார்கள். அந்த நிகழ்வுதான் மாயை பொருட்களின் எரிப்பு என்று அழைக்கப்படுகிறது.

மலைப்பிரசங்கத்தின் சில அதிர்ச்சி தரும் செய்திகளால் உந்தப்பட்டு, ஸவனரோலா இப்படிப்பட்ட தீவிரப்போக்கில் இறங்கியிருக்கலாம். “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு” என்று இயேசு சொன்னார். மத்தேயு 5:29-30. இயேசு சொன்னவற்றிற்கு மேற்போக்காக அர்த்தம் கண்டால் முக்கியமான செய்தியைக் காணத் தவறிவிடுவோம். மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக அர்த்தங்காணும்படிதான் மலைப்பிரசங்கம் முழுவதுமே அமைந்துள்ளது.  அதாவது நம்முடைய இருதயங்களின் நிலை எப்படியிருக்கிறது என்பது முக்கியம், ‘என் கவனம் சிதறியதால், பாவச்சோதனையால் அவ்வாறு செய்தேன்’ என்று சொல்வதில் பயனில்லை.

பொருட்களையும் கலைப்படைப்புகளையும் எரித்தது, காண்பதற்கு பிரமாண்டமான காட்சியாக இருந்திருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்த மக்களுடைய இருதயங்கள் மாறியிருக்குமா என்பது சந்தேகம்தான். தேவனால் மட்டுமே இருதயத்தை மாற்றமுடியும். அதனால்தான் சங்கீதக்காரன் இவ்வாறு ஜெபிக்கிறார்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” சங்கீதம் 51:10. நம்முடைய இருதயம் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

சந்தோஷமாக விளையாடுங்கள்

எங்களுடைய மகன்களில் ஒருவரான பிரையன் ஓர் உயர்நிலை பள்ளியில் கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கிறான். ஓர் ஆண்டு நடைபெற்ற வாஷிங்டன் மாகாண கூடைப்பந்து போட்டியில் அவனுடைய பள்ளி அணி தொடர் வெற்றியைக் குவித்தது. எனவே அங்கிருந்த நல்லெண்ணம் கொண்ட சிலர் வந்து, “இந்த வருட கோப்பையை வென்றுவிடுவீர்களா?” என்று கேட்டார்கள்.  அது விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களில் அழுத்தத்தை உண்டாக்கியது. அப்போது பிரையன் கையாண்ட ஒரு குறிக்கோள்:”சந்தோஷமாக விளையாடுங்கள்!”

எபேசுவின் மூப்பர்களுக்கு பவுல் எழுதின கடைசி வார்த்தைகளை எண்ணிப்பார்க்கிறேன்: “என் ஓட்டத்தை சந்தோஷமாக முடிக்க...  விரும்புகிறேன்” (அப் 20:24.) இயேசு தன்னிடம் ஒப்படைத்திருந்த பணிகளை முடிப்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. நானும் என்னுடைய குறிக்கோளாகவும் ஜெபமாகவும் வைத்திருக்கிற வார்த்தைகள் என்னவென்றால், “என் ஓட்டத்தை சந்தோஷமாக முடிக்க... விரும்புகிறேன்” அல்லது பிரையன் சொல்வதுபோல, “நான் சந்தோஷமாக விளையாடவேண்டும்” பிரையனின் அணியானது அந்த வருடத்தில், வெற்றிபெற்று அந்தக் கோப்பையைக் கைப்பற்றினார்கள்.

உலகு தரும் செய்திகள், அனுதின அழுத்தங்கள், உடல்நலப் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்கள் நம்முடைய நிம்மதியைப் பறிக்கலாம். ஆனாலும் நாம் தேவனிடம் கேட்டால், இவற்றையும் கடந்த மேலான ஒரு சந்தோஷத்தை அவர் தருவார். “என்னுடைய சந்தோஷம்” (யோவான் 15:11) என்று தேவன் சொல்லுகிறார் அல்லவா, அந்தச் சந்தோஷத்தைப் பெறலாம்.

இயேசுவினுடைய ஆவியின் கனிதான் சந்தோஷம். (கலா 5:22). எனவே ஒவ்வொரு நாள் காலையிலும், “நான் சந்தோஷமாக விளையாடவேண்டும், அதற்கு உதவும்” என்று அவரிடம் கேட்க மறக்கக் கூடாது. ஆசிரியரான ரிச்சர்ட் ஃபாஸ்டர் பின்வருமாறு சொல்கிறார்: “ஜெபிப்பது நம்மை மாற்றுகிறது. இது மிகப்பெரிய ஒரு கிருபை. நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிப்பதற்கான ஒரு பாதையை தேவன் தருகிறாரென்றால், அவர் எவ்வளவு நல்லவரென்பது தெரிகிறது.”

தேவன் சந்தோஷமாய் மகிழ்கிறார்

என்னுடைய பாட்டி சமீபத்தில் ஒரு கோப்பு நிறைய பழைய புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.  நான் இரண்டு வயது சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வீட்டில் நெருப்புமூட்டுகிற இடத்தில், ஓர் ஓரத்தில் நான் உட்கார்ந்திருக்கிறேன். மறுபக்கத்தில் என் அம்மாவின் தோள்களில் என் அப்பா கைபோட்டவாறு அமர்ந்திருக்கிறார். இருவரும் அன்போடும் சந்தோஷத்தோடும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை என் துணிமணிகள் இருந்த அலமாரியில் ஒட்டிவைத்தேன், தினமும் காலையில் அதைப் பார்ப்பேன். அவர்கள் என்மேல் வைத்திருந்த அன்புக்கு ஓர் அருமையான அடையாளம் அது. அந்தப் படத்தை நான் பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்கான காரணம்
என்னவென்றால், சிலசமயங்களில் மனிதர்களுடைய அன்பு தோற்றாலும்கூட தேவ அன்பு ஒருபோதும் மாறாதது என்பதை அது நினைவூட்டுவதால்தான். அந்தப் படத்தில் என் பெற்றோர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது போலவே தேவன் என்னைப் பார்ப்பதாக வேதாகமம் கூறுகிறது.

தேவனுடைய அன்பைப் பற்றி செப்பனியா தீர்க்கதரிசி விவரிக்கிற விதமானது என்னைப் பிரமிக்கச் செய்கிறது. தேவன் தம் மக்கள்மேல் களிகூர்ந்து, மகிழ்ச்சியுடன் பாடுவதாகக் கூறுகிறார். தேவ பிள்ளைகள் அந்த அன்பைச் சம்பாதித்து வாங்கவில்லை. அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியாமலும் ஒருவர்மேல் ஒருவர் மனதுருக்கமாக நடக்காமலும் இருந்தார்கள். ஆனால் இந்தத் தோல்விகளுக்கு மத்தியிலும் தேவ அன்பே இறுதியில் மேலானதாக விளங்குமென செப்பனியா வாக்குரைக்கிறார். தேவன் அவர்களுடைய தண்டனையை நீக்கி (செப்பனியா 3:15), அவர்கள்மேல் சந்தோஷப்பட்டுக் களிகூருவார். வசனம் 17.  தம் மக்களாகிய அவர்களை தம் கரங்களுக்குள் கூட்டிச்சேர்த்து, அவர்களை சொந்தத் தேசத்திற்கு வழிநடத்திச் சென்று, புது வாழ்வைக் கொடுப்பார். வசனம் 20.

ஒவ்வொரு நாள் காலையிலும் தியானிப்பதற்கு தகுதியான அன்பு அது.

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி விளையாடினோம். நான் ஒளிந்துகொண்டேன். என்னுடைய ஐந்து வயது மாமா மகன் என்னை நெருங்கி வந்து கேட்டது. ‘இப்போது கண்டுபிடித்துவிடுவான்’ என்று நினைக்கும்போதே என்னுடைய இருதயம் படபடவென அடித்துக்கொண்டது. மிகவும் நெருங்கிவிட்டான். இன்னும் ஐந்து எட்டுதான். “கண்டுபிடித்து விட்டேன்!” என்றான்.

கண்ணாமூச்சி விளையாட்டு, சிறுவயதில் எல்லாருமே இந்த விளையாட்டை விளையாடியிருப் போம். கண்டுபிடிக்கப்படுவது என்பது வாழ்க்கையில் சிலசமயம் விளையாட்டான அனுபவமாக இருக்காது, எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்கிற உள்ளுணர்வுதான் மேலோங்கி இருக்கும். தங்களுடைய நிலையை மக்கள் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கிறவர்கள் அவ்வாறு ஓடுவார்கள்.

விழுந்துபோன உலகின் பிள்ளைகளாகிய நாமும் கண்ணாமூச்சி விளையாடுகிற நிலையில்தான் இருக்கிறோம். என்னுடைய நண்பன் அதை நமக்கும் தேவனுக்கும் இடையிலான “ஒரு வகையான கண்ணாமூச்சி விளையாட்டு” என்று சொல்லுவான்.  அதில் ஒளிந்துகொள்வதுபோல நாம் நடிக்கத்தான் முடியும். ஏனெனில் நம்முடைய சகல எண்ணங்களையும் தவறான தீர்மானங்களையும் அவர் நன்றாகவே அறிவார். அது நமக்கும் தெரியும், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியாததுபோல நாமும் நடந்துகொள்கிறோம்.

ஆனாலும் தேவன் தொடர்ந்து நம்மைத் தேடிவருகிறார். “வெளியே வா. உன்னுடைய அவலட்சணமிக்க பகுதியைக்கூட நான் பார்க்க விரும்புகிறேன்” என்று தேவன் அழைக்கிறார். இதே சத்தம்தான் நம்முடைய முதல் பெற்றோரையும், அவர்கள் பயத்தால் ஒளிந்திருந்த போதும் அழைத்தது: “நீ எங்கே இருக்கிறாய்?” (ஆதி. 3:9). அது ஓர் அன்பான அழைப்புதான், ஆனாலும் அந்தக் கேள்வி அவர்களுக்கு குத்தலாக இருந்திருக்கவேண்டும். “அன்பு பிள்ளையே, நீ ஒளிந்திருக்கிற இடத்தைவிட்டு வெளியே வா. மீண்டும் என்னோடு உறவுவைத்துக்கொள்.”

இது மிகவும் அபாயகரமானதாகவும், ஆபத்தானதாகவும்கூட தோன்றலாம். ஆனால் நாம் யாரானாலும், எப்படிப்பட்ட தவறைச் செய்திருந்தாலும் அல்லது செய்யவேண்டியதைச் செய்யத் தவறியிருந்தாலும், நம்முடைய பிதாவின் அரவணைப்பில், அவருடைய அன்பையும் பாதுகாப்பையும் பெறலாம்.