லண்டன் விலங்கியல் பூங்காவினரின் கணிப்பின்படி மனிதகுலம் ஒரு சிறப்பான படைப்பல்ல என்கின்றனர். 2005ஆம் ஆண்டு அந்த விலங்கியல் பூங்கா “மனிதகுலம் அதன் இயற்கை சூழலில்” என்ற தலைப்பில் நான்கு நாள் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இதற்குத் தேவையான “மனித சிறைக்கைதிகளை” வலைதள நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுத்தனர். அந்த மனிதர்களைக் காணும் பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும்படி பூங்காவினர் ஆங்காங்கே அவர்களுடைய உணவுப்பழக்கம், வசிப்பிடம், அச்சுறுத்தும் காரியங்களென, அவற்றை விளக்கும் அட்டைகளை வைத்திருந்தனர். அந்த விலங்கியல் பூங்கா நடத்துனர் இந்த கண்காட்சியின் இலக்கு மனிதகுலத்தின் தனித்துவத்தை வெளிக் காட்டவே என்று தெரிவித்தார். இதில் பங்கு பெற்ற ஒரு மனிதர், “மனிதர்களை விலங்குகளைப் போன்று இங்கு பார்த்தபோது, இவர்கள் விலங்குகளைப் போன்று தனிச் சிறப்பு வாய்ந்தவர்களல்ல” என்றே தங்களைக் கருதியதாகத் தெரிவித்தார்.

வேதாகமம் மனிதனைக் குறித்துச் சொல்லும் கருத்துக்கு இது நேர்மாறாக உள்ளது. தேவன் நம்மை “பிரமிக்கத்தக்க அதிசமாய் உண்டாக்கினார்” தேவன் தம்முடைய சாயலின்படி நம்மை உருவாக்கினார் (சங். 139:14, ஆதி. 1:26-29). சங்கீதம் 139 ஐ, தாவீது தேவன் தன்னை எவ்வளவு நுணுக்கமாய் அறிந்து வைத்திருக்கின்றார் என்று அவரைப் போற்ற ஆரம்பிக்கின்றார் (வச. 1-6). அவருடைய பிரசன்னம் எப்போதும் தாவீதைச் சூழ்ந்திருக்கின்றது என்கின்றார் (வச. 7-12). ஒரு திறமையான நெசவாளியைப் போன்று தேவன் அவருடைய உள் உறுப்புக்களையும், வெளிப்புறத்தையும் அமைத்திருக்கின்றார் (வச. 13-14). அவர் நமக்குள்ளே ஆன்மாவைத் தந்து, ஆவியில் ஜீவனைத் தந்து தேவனோடு நெருக்கமாக உறவாடவும் பெலன் தந்துள்ளார். தேவனுடைய கிரியைகளை ஆராயும் போது தாவீது ஆச்சரியத்தோடும், வியப்போடும் அவரைப் போற்றுகின்றார் (வச. 14).

மனித குலம் எப்பொழுதுமே தனிச்சிறப்பு வாய்ந்தது. தேவன் நம்மை பிரமிக்கத்தக்க தனித்துவத்தோடு படைத்துள்ளளார். நாம் தேவனோடு உறவாடும்படி அதிசயமான திறனைக் கொடுத்துள்ளார். நாம் தேவனுடைய கரத்தின் கிரியைகளாயிருப்பதினால், நாமும் தாவீதோடு சேர்ந்து தேவனைப் போற்றுவோம்.