மிக அபூர்வமான நிலவின் காட்சி, நவம்பர் மாதம் 2016ல் தெரிந்தது. நிலா தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று பூமிக்கு மிக அருகில் வந்ததால் அது மிகப் பெரியதாகவும் மிகப் பிரகாசமானதாகவும் தோன்றியது. கடந்த அறுபது ஆண்டுகளுக்குப்பின் காணக் கிடைத்த ஓர் அரிய காட்சி. ஆனால், நான் இக்காட்சியைக் கரிய மேகங்களால் சூழப்பட்டதால் வானத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால், வேறு இடங்களிலிருந்து இக்காட்சியைக் கண்ட என்னுடைய நண்பர்களின் புகைப்படங்கள் மூலம் கண்டு கொண்டேன். நான் வானத்தை உற்று நோக்கினேன். மேகங்களுக்குப் பின்னால் இந்த மிகப் பெரிய நிலா இருக்கின்றது என்பதை நான் நம்பவேண்டியதாயிற்று.

கொரிந்து பட்டணத்தின் சபைகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது அவர்கள் அனுபவிக்கின்ற துன்பத்தின் மத்தியில் காணப்படாத நித்தியத்தைக் குறித்த நம்பிக்கையை விடாதிருக்கக் கேட்கின்றார். மேலும் ‘அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது” எனக் கூறுகின்றார் (2 கொரி. 4:17). எனவே அவர்கள் தங்கள் கண்களை, ”காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளையே நோக்கித்” திருப்புமாறும் ”காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (வச. 18) எனவும் கூறுகின்றார். கொரிந்து சபையினரின் விசுவாசம் வளர வேண்டுமென பவுல் வாஞ்சிக்கின்றார். அவர்கள் துயரத்தை அநுபவிப்பதால். தேவன் மீது நம்பிக்கையோடிருக்க விரும்புகின்றார். அவர்களால் தேவனைக் காண முடியாவிட்டாலும் தேவன் அவர்களை நாளுக்கு நாள் புதிதாக்குகின்றதை நம்பும்படி கேட்கின்றார் (வச. 16).

நான் அன்று அந்த மேகங்களினூடே பார்த்தபோது காணப்படாத ஒரு பெரிய நிலாவை எப்படி நம்பினேனோ, அப்படியே தேவன் காணப்படாதவராகவும் ஆனால் நித்தியமானவராகவும் இருக்கின்றார். தேவன் என்னை விட்டு மிக தூரத்தில் இருக்கின்றார் என்று நான் நினைக்கத் தோன்றும்போதெல்லாம் நான் என் கண்களை காணப்படாத நித்தியமானவைகளின் மீது வைத்துக் கொள்வேன்.