நான் அந்த வினைல் பொதிந்த விரிப்பில் அசையாமல் படுத்துக்கொண்டு, என் மூச்சை அடக்கி கொண்டேன். அந்த இயந்திரம் சுழன்று முடித்து ‘கிளிக்” என்ற ஒலியுடன் நின்றது. எம்.ஆர்.ஐ எடுத்துக் கொண்ட அநேகரை எனக்குத் தெரியும். தனியறையில் அடைக்கப்படும் போது, என்னைப் போன்று பயப்படுபவர்களுக்கு, நம்மை விடப் பெரிய ஒரு பொருளின் மீது அல்லது ஒரு நபரின் மீது தனிக்கவனம் செலுத்த அனுபவம் தேவை.

அப்பொழுது வேதாகமத்திலுள்ள ஒரு வாசகம் என் மனதில் வந்தது. “கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து…” (எபே. 3:18) என்ற வார்த்தைகளை எண்ணியவாறே அந்த இயந்திரம் எழுப்பியதாளத்தோடு அசைந்தேன். எபேசு சபையினருக்காக பவுல் ஜெபிக்கும் போது, தேவனுடைய அன்பினையும், பிரசன்னத்தையும் விளக்க நான்கு பரிமாணங்களைப் பயன்படுத்துகின்றார். தேவனுடைய அன்பின் முடிவில்லாத அளவுகளை வலியுறுத்தும்படி அவ்வாறு விளக்குகின்றார்.

நான் அந்த எம்.ஆர்.ஐக்காக படுத்திருந்த போது என்னுடைய நிலை எனக்கு ஒரு புதிய புரிந்து கொள்ளலைத் தந்தது. அகலம்: அந்தக் குழாயினுள்ளே உடலோடு இறுக பிணைக்கப்பட்ட புயங்களிலிருந்து ஒவ்வொரு புறமும் ஆறு அங்குலம்; நீளம்: அந்த உருளையின் இரு திறப்புகளுக்கிடையேயுள்ள தொலைவு – என் தலையிலிருந்து பாதங்கள் வரை, உயரம்: என் மூக்கிலிருந்து அந்தக் குழாயின் உட்புறம் வரை 6 அங்குலம், ஆழம்: தரையிலிருந்து அந்தக் குழாயின் தாங்கிகளின் உயரம் – எனக்குக் கீழே என்னைத் தாங்கியுள்ளது வரை. தேவனுடைய பிரசன்னம் நான்கு பரிமாணங்களிலும் என்னைச் சூழ்ந்திருந்து அந்த எம்.ஆர்.ஐ குழாயினுள் என்னைத் தாங்கிக் கொண்டது. அத்தோடு மட்டுமல்ல, என் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்னைத் தாங்கிவருகிறது.

தேவனுடைய அன்பு எல்லாவிடமும் நம்மைச் சூழ்ந்துள்ளது. அகலம்: அவர்தம் புயங்களை விரித்து எவ்விடத்திலுமுள்ள அனைவரையும் அணைத்துக் கொள்கின்றார். நீளம்: அவருடைய அன்பிற்கு முடிவேயில்லை. உயரம்: அவர் நம்மை உயர்த்துகின்றார். ஆழம்: அவர் நம்மைத் தம் கரங்களில் தாங்கியவாரே எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை மூழ்கச் செய்கின்றார். அவரிடமிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது (ரோம. 8:38-39).