எந்த திசை, எந்த இடம் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடிய திசையறியும் திறனுடையவர் என் தந்தை. சில வேளைகளில் நான் பொறாமைப்படக் கூடிய அளவிற்கு அவருடைய உள்ளுணர்வு அவருக்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளைச் சரியாகக் காட்டும். ஒருவேளை, அவர் பிறக்கும்போதே இத்தகைய உள்ளுணர்வோடு பிறந்திருப்பார் போலும். எப்பொழுதும் சரியாகவே சொல்லும் அவரும் ஒரு நாள் இரவு பாதை தெரியாமல் தடுமாறினார்.

அந்த இரவு என் தந்தை தன்னுடைய பாதையை தவறவிட்டார். அவரும் என்னுடைய தாயாரும் எங்களுக்கு அறிமுகம் இல்லாத ஓரிடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்வு முடிந்து, இரவு திரும்பினர். நெடுஞ்சாலையை அடைவதற்கான வழியைத் தான் கண்டுபிடித்து விடமுடியும் என்ற எண்ணத்தோடு அவர்கள் திரும்பினர். ஆனால், முடியவில்லை. அவ்விடத்திலேயே சுற்றி வந்து, குழப்பமுற்று, விரக்தியடைந்தனர்.

“அது கடினமானது தான். ஆனால், உங்களுடைய செல்போனின் உதவியால் திசையைக் கண்டு பிடித்துவிடலாம். எல்லாம் சரியாகிவிடும்” என என்னுடைய தாயார் ஊக்கமளித்துள்ளார். எனக்குத் தெரிந்த அளவில், என்னுடைய எழுபத்தாறு வயது தந்தை, அவருடைய வாழ்வில் முதல் முறையாக செல்போனில் கேட்டு திசையைத் தெரிந்துகொள்ள முயற்சித்திருக்கின்றார்.

சங்கீதக்காரன் நிறைய அனுபவங்கள் கொண்ட ஒரு மனிதன். ஆனாலும், தாவீது தனது ஆவியிலும் சிந்தையிலும் கலங்கியிருந்த வேளைகளைக் குறித்துச் சில சங்கீதங்கள் விளக்குகின்றன. சங்கீதம் 143 அத்தகைய வேளைகளில் எழுதப்பட்டது. அந்தப் பெரிய அரசனின் உள்ளம் பயத்தால் சோர்ந்து விட்டதைக் காட்டுகின்றது (வச. 4). அவர் பிரச்சனைகளுக்குள் இருக்கின்றார் (வச. 11) எனவே அவர் காத்திருந்து ஜெபிக்கின்றார். “நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும் (வச. 8) என்று கேட்கின்றார். ஒரு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளக் கூடிய நாட்களுக்கு வெகுமுன்னர், சங்கீதக்காரன் தேவனை நோக்கிக் கதறுகின்றார். “உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்” (வச. 8) என ஜெபிக்கின்றார்.

கர்த்தர், “என்னுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷன்” என்று தாவீதைக் குறித்து (1 சாமு. 13:14) சொல்லியுள்ளார். அவரே சிலவேளைகளில் கைவிடப்பட்டவராக எண்ணும்போது, நாம் தேவனை நோக்கி ஒவ்வொரு நாளும் அவருடைய வழிநடத்துதலுக்காக கெஞ்சவேண்டியது எத்தனை அவசியம்.