தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக்கோபு 5:20

“நான் சொல்வதைக் கேள், நான் உன் அண்ணன்”. எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு சிறுவன், தன்னைவிட்டு தூரமாக விலகிச் செல்லவிருந்த தன் தங்கையிடம் அக்கறையுடன் கூறினான். அந்தச் சூழ்நிலையில் எது சிறந்தது என்று அந்தச் சிறுவனால் அனுமானிக்க முடிந்தது.

நம்மில் எத்தனை பேர் நம் சகோதரன் அல்லது சகோதரியின் ஞானமான அறிவுரைகளை ஏற்க மறுத்திருக்கிறோம்? நல்ல அறிவுரையை ஏற்காததின் பின்விளைவுகளை நீங்கள் ஒருவேளை சந்தித்திருந்தால், உங்களைப்போல் நிறையபேர் இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

கிறிஸ்தவ விசுவாசிகளாக, நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய கொடைகளில் ஒன்றுதான் குடும்பம் – கர்த்தரில் நாம் அனைவரும் கொண்டிருக்கும் விசுவாசத்தினால் ஆவியில் இணைக்கப்பட்ட விசுவாசம், குடும்பம். கர்த்தரையும், ஒருவரை ஒருவர் நேசிக்கும் பண்பட்ட சகோதர சகோதரிகள் இந்தக் குடும்பத்தில் உண்டு. எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த அந்தச் சிறுவனைப்போல, ஒரு எச்சரிக்கும் வார்த்தை அல்லது திருத்துதல் நமக்கும் சில சமயங்களில் தேவைப்படுகிறது. நம்மை யாரோ புண்படுத்தும்போது அல்லது நாம் யாரையோ புண்படுத்தும்போது இது மிகவும் பொருந்தும். சரியான காரியத்தைச் செய்வது கடினம்தான். ஆனால் மத்தேயு 18:15-20ல் இயேசுவின் வார்த்தைகள் இதுபோன்ற ஆவிக்குள்ளான குடும்பங்களில் மனஸ்தாபம் ஏற்படும்போது என்ன செய்யவேண்டும் என்று எடுத்துக்கூறுகிறது.

அதிர்ஷ்டவசமாக, கிருபையின் பரம பிதா, கர்த்தரையும், மற்றவர்களையும் கனம்பண்ணுவதற்கு நமக்கு உதவி செய்ய நம் வாழ்க்கையில் சில மக்களை வைத்திருக்கிறார். அவர்கள் சொல்வதை நாம் கேட்கும்போது, குடும்பத்தில் எல்லாம் சுமூகமாக இருக்கும் (வச. 15).