“தேவனே, என்னுடைய ஆன்மாவை உம்மிடம் வைத்துக் கொள்ளும், நான் இப்பொழுது படுத்து உறங்குவேன்” என்பது நான் சிறுவனாக இருந்தபோது கற்றுக் கொண்ட முதல் ஜெபம். என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்த ஜெபம். நான் இதனை என்னுடைய மகனும், மகளும் சிறியவர்களாயிருக்கும் போதே கற்றுக் கொடுத்தேன். நான் குழந்தையாயிருந்த போது நான் தூங்குவதற்கு முன்பு என்னை தேவனுடைய கரத்தில் கொடுப்பது மிகவும் ஆறுதலாக இருக்கும்.

இதேப் போன்று மற்றொரு அருமையான ஜெபம் வேதாகமத்திலுள்ள “ஜெப புத்தகம்” என்றழைக்கப்படும் சங்கீதங்களின் புத்தகத்தில் காணப்படுகிறது. “உமது கையில் என் ஆவியை ஒப்பிவிக்கிறேன்” (சங். 31:5) என்ற வாக்கியம் ஒரு படுக்கை நேர ஜெபம். இது இயேசுவின் காலத்தில் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட ஜெபம் என சில வேத வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த ஜெபத்தையே இயேசுவும் சிலுவையில் கடைசியாகச் சொன்னார் என்பதை நாமறிவோம். ஆனால், இயேசு அதனோடு “பிதாவே” என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறினார் (லூக். 23:46) இந்த வார்த்தைகளை, இயேசு மரிக்குமுன் ஜெபித்தார். இயேசு, தனக்கும் பிதாவுக்குமுள்ள நெருங்கிய உறவை இந்த வார்த்தைகளால் நமக்குக் காண்பித்து, அவரை விசுவாசிக்கின்ற நமக்கு பிதாவின் வீட்டையடைய வழியையும் காண்பித்தார் (யோவா. 14:3).

இயேசு சிலுவையில் மரித்ததின் மூலம், நாமும் நம்முடைய பரலோகத் தந்தையாம் பிதாவோடுள்ள அற்புதமான உறவில் வாழும்படி செய்தார். இயேசு நமக்காகச் செய்த தியாக அன்பினாலேயே நாம் தேவனுடைய பராமரிப்பில் அவருடைய பிள்ளைகளாக அமர்ந்திருக்கின்றோம், என்பது எத்தனை ஆறுதலாக இருக்கின்றது. நாம் நம் கண்களை பயமின்றி மூடித் தூங்கலாம், ஏனெனில்ஸ்ர, நம் தந்தை நம்மை விழிப்போடு கவனிக்கின்றார். அவரோடுகூட நாம் வாழும்படி ஒரு நாள் நம்மை எழுப்புவேன் என வாக்களித்துள்ளார்
(1 தெச. 4:14).