ஒருமுறை ஒரு குறிப்பிட்ட சூழலில், கலிபோர்னியாவின் அவசர உதவி குழுவினர், ஆஸ்திரேலிய உச்சரிப்புடன் பேசும் ஒரு பெண்ணை மீட்டெடுத்தார்கள். அவளுக்கு அம்னீசியா என்னப்படும் மறதி நோய் இருந்ததாலும், எந்தவொரு அடையாள அட்டையும் அவளிடம் இல்லாத காரணத்தாலும், அவளால் தன்னுடைய பெயரையோ தான் எங்கிருந்து வந்தோம் என்கின்ற விவரத்தையோ சொல்லமுடியவில்லை. மருத்துவர்கள் மற்றும் சர்வதேச ஊடகத்தினர், இருவரும் இணைந்து இவளை இயல்புக்கு கொண்டுவந்தபின், இவளுடைய கதையை கேட்டறிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

பாபிலோனிய தேசத்து ராஜா நேபுகாத்நேச்சாரும் தான் யார் என்பதையும், எங்கே இருந்து வருகிறோம் என்பதையும் மறந்துபோனான். அவனுடைய ‘அம்னீசியா’ ஒரு ஆவிக்குரிய மறதி. அவனுக்கு கொடுக்கப்பட்ட ராஜ்ஜியத்தின் மேல் பெருமிதம் கொண்டு கர்த்தர் ராஜாதி ராஜா என்பதையும், அவனிடம் இருப்பதெல்லாம் ஆண்டவரால் வந்தது (தானி. 4:17, 28-30) என்பதையும் அவன் மறந்துபோனான் (தானி. 4:17, 28-30).

ராஜாவின் மனநிலையை படம்பிடிக்கும் வண்ணம் ஆண்டவர் அவனை மனுஷரினின்று தள்ளி, வெளியின் மிருகங்களோடு சஞ்சரிக்கப் பண்ணி மாடுகளைப்போல் புல்லை மேயச் செய்தார் (வச. 32-33). கடைசியாக, ஏழு ஆண்டுகளுக்கு பின், நேபுகாத்நேச்சார் தன் கண்களை வானத்துக்கு நேராக ஏறெடுத்துபோது, தான் யார் என்கின்ற நினைவையும், இந்த ராஜ்ஜியம் அவனுக்கு யார் தந்தது என்கின்ற அறிவையும் அவன் திரும்பப் பெற்றுக்கொண்டான். அவனுடைய உணர்வுகள் திரும்பினதும் அவன், “ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன் …(வச. 37) என்று அறிக்கை செய்தான்.

நாம் எப்படி இருக்கிறோம்? நம்மை யார் என்று எண்ணுகிறோம்? மறந்துபோகக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதால், ராஜாதி ராஜாவை நமக்கு நினைவுபடுத்த யார் நமக்கு உதவக்கூடும்?