அநேக குழந்தைகள் புத்தகங்களை எழுதிய டாக்டர்.சியூஸ் கூறுகிறார்: “தூண்டிலில் எப்பொழுது மீன் அகப்படும்,? பட்டம் விட எப்பொழுது காற்றடிக்கும், ? அல்லது எப்பொழுது வெள்ளி இரவு வரும் ?….என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஏதோ ஒரு காரியம் நடக்க காத்திருக்கின்றனர்.”

வாழ்க்கையின் அதிகமான பகுதி காத்திருப்பதிலேயே கடந்துவிடுகிறது. ஆனாலும் தேவன் எவ்விதத்திலும் அவசரப்படுவதில்லை – அல்லது அவசரப்படாதவர் போல் காணப்படுகிறார். ‘தேவன் தமக்கென்று ஒரு நேரத்தையும், தாமதத்தையும் உடையவர்’ என்று ஒரு பழம்பெரும் கூற்று சொல்லுகிறது. ஆகையால் நாம் காத்திருக்கிறோம்.

காத்திருப்பது உண்மையில் கடினமானதே. கையை காலை பிசைவோம், அங்குமிங்கும் அலைவோம், பெருமூச்சு விடுவோம், விரக்தியின் உச்சத்தில் உள்ளே புழுங்குவோம். இந்த கொடூரமான மனுஷனோடு நான் ஏன் வாழனும்? இந்த கஷ்டமான வேலை, இந்த தகாத நடத்தை, இந்த வியாதிப்போராட்டம், இன்னும் எத்தனை காலம்தான் இதை சகிக்கனும்? ஏன் ஆண்டவர் பதிலளிக்காமல் உள்ளார்?

ஆண்டவருடைய பதில்: “சற்றே பொறுத்திருந்து நான் செய்யும் காரியத்தை பார்”

வாழ்க்கையை நமக்கு போதிக்கும் சிறந்த ஆசிரியர்களில் ‘காத்திருத்தலும்’ ஒன்று. அதன் மூலமாகவே நாம் ஆண்டவர் நமக்குள்ளும், நமக்காகவும் கிரியை செய்யும்வரை காத்திருப்பதினால் காத்திருத்தலின் பண்பைக் கற்றுக்கொள்கிறோம். காத்திருக்கும் அனுபவத்திலே தான் நாம் சகிப்புத்தன்மை, காரியங்கள் நமக்கு சாதகமில்லாது போனாலும் தேவனுடைய அன்பு , மற்றும் நன்மையின்மேல் நம்பிக்கை வைக்கும் திறன் (சங். 70:5) போன்றவைகளில் வளருகிறோம்.

ஆனாலும், காத்திருத்தல் ஒரு கொடுமையான, பல்லை கடிக்கும் அனுபவமாக இருக்க வேண்டியதில்லை. காத்திருப்பின் நாட்களில் நாம் அவருக்குள் “மகிழ்ந்து களிகூரலாம்” (வச. 4). இம்மையானாலும் மறுமையானலும், ஆண்டவர் நம்மை ஏற்ற நேரத்தில் விடுவிப்பார் என்கின்ற நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம். ஆண்டவர் எப்போதும் அவசரப்படுகிறவரல்ல, அவர் எப்போதும் சரியான நேரத்தில் வருவார்.