நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும் … தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும்… வேண்டிக்கொள்கிறேன். எபேசியர் 3:16-19. எட்டுக்கால் பூச்சிகள் – எந்தவொரு குழந்தையும் இவற்றை விரும்புவதில்லை. அதுவும் அவர்கள் தூங்கப் போகும் நேரத்தில் அவர்கள் அறையில் இருப்பதை விரும்புவதில்லை. என்னுடைய மகள் தூங்குவதற்கு தயாராகும் போது அவளுடைய படுக்கைக்கு மிக அருகில் ஒன்றைக் கண்டுவிட்டாள். அப்பா… எட்டுக்கால் பூச்சி… எனக் கத்தினாள். எத்தனைத் தேடியும் அந்த எட்டுக்கால் பூச்சியைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அது உன்னைக் கடிக்காது என்று அவளுக்கு உறுதியளித்தேன். ஆனால் அவள் நம்பவில்லை. நான் அவளின் படுக்கைக்கு அருகிலேயே காவல் இருக்கிறேன் என்று சொன்ன பின்பு தான், ஏற்றுக் கொண்டாள். நான் அவள் படுக்கையினருகில் நின்று கொண்டிருக்க, அவள் தன் படுக்கைக்குச் சென்றாள்.

என்னுடைய மகள் படுத்தப்பின்பு நான் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு, நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். நான் உன்னருகிலேயே இருக்கின்றேன். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள். தேவன் உன்னை அம்மாவையும் அப்பாவையும் விட அதிகமாக நேசிக்கின்றார். அவர் உனக்கு மிக அருகில் இருக்கின்றார். நீ பயப்படும் போதெல்லாம் அவரிடம் ஜெபி என்றேன். அது அவளைத் தேற்றுவதாக இருந்தது. அவளும் சமாதானத்துடன் சீக்கிரத்தில் தூங்கி விட்டாள்.

தேவன் நம் அருகிலேயே இருக்கிறாரென வேதாகமம் திரும்பத் திரும்ப நமக்கு உறுதியளிக்கின்றது (சங். 145:18, ரோ. 8:38-39. யாக். 4:7-8). சில வேளைகளில் நாம் இதை நம்புவதற்குத் தடுமாறுகிறோம். எனவே தான் பவுல் எபேசு சபை விசுவாசிகள் உள்ளான மனுஷனில் வல்லமையாய் பெலப்பட்டு உண்மையை புரிந்து கொள்ளும்படி ஜெபம் செய்கிறார். நாம் பயந்தோமாகில் தேவனுடைய பாதையை விட்டு விலகி விடுவோம். நான் என் மகளின் கரத்தை அன்போடு பற்றியபோது அவள் அமைதியாக அன்றிரவு தூங்கிவிட்டதைப் போன்று ஜெபத்தின் மூலம் நம்முடைய பரலோகத் தந்தையும் நம் அருகில் வந்திருக்கின்றார்.