ஒரு நாள், எனக்கு நெருங்கிய நபர் ஒருவரின் நலனைக்குறித்து ஆழ்ந்த கரிசனையோடிருந்த போது, பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, இஸ்ரவேலரின் ஞானமுள்ள தலைவன் சாமுவேலின் சரித்திரம் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது. தேவனுடைய ஜனங்கள் துன்பங்களைச் சந்தித்தபோது, சாமுவேல் அவர்களுக்காக எவ்விதம் தேவனிடம் பரிந்து பேசுகிறார் என்பதை வாசிக்கும் போது நானும், நான் நேசிக்கின்ற ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்ற மனநிலையை இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இஸ்ரவேலர் பெலிஸ்தரின் அச்சுறுத்தலை எதிர் நோக்கினர். இதற்கு முன்னர் பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தனர், ஏனெனில் இஸ்ரவேலர் தேவனை நம்பவில்லை (1 சாமு. 4). அவர்கள் தங்கள் பாவத்திற்காக மனம்வருந்திய போது, பெலிஸ்தியர் தங்களைத் தாக்க வருகிறார்கள் என கேள்விப்படுகின்றனர். இம்முறை அவர்கள் சாமுவேலிடம் அவர்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கும்படி கேட்கின்றனர் (7:8) தேவன் தெளிவாக பதிலளித்து, எதிரிகளிடையே குழப்பத்தை உருவாக்கினார் (வச. 10). பெலிஸ்தியர் இஸ்ரவேலரைக் காட்டிலும் வல்லவர்களாயிருந்தும், தேவன் அவர்களெல்லாரையும் விட பெலனுள்ளவராக இருந்தார்.

நாம் நேசிக்கின்றவர்கள் நிமித்தம் சவால்களைச் சந்தித்து வேதனையில் இருக்கும் போது, அந்த சூழ்நிலை மாறப்போவதில்லை என்ற பயம் நம்மை ஆட்கொண்டு தேவன் செயல்படமாட்டார் என்று அவநம்பிக்கைக் கொள்ள நாம் தள்ளப்படலாம். ஆனால், ஜெபத்தின் வல்லமையை ஒருபோதும் குறைவாக மதிப்பிட வேண்டாம். நம்மீது அன்புள்ள தேவன் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்கிறார். நம்முடைய மன்றாட்டுகளைக் கேட்கிற அவர் எவ்விதம் செயல்படுவார் என்பதை நாம் அறிவோம். ஆனால், நமக்குத் தெரியும், நம்முடைய பரமதந்தை, நாம் அவருடைய அன்பை ஏற்றுத் தழுவி, அவர் உண்மையுள்ளவர் என்பதில் நாம் நம்பிக்கையாயிருக்கும்படி அவர் ஏங்குகின்றார்.

இன்றைக்கு நீ ஜெபிக்க வேண்டியவர்கள் யாராவது உண்டா?