17ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவத் துறவி சகோதரர் லாரன்ஸ், தன் சமூகத்தின் மடத்து சமையற்காரர். ஓவ்வொரு நாளும் வேலையை ஆரம்பிக்குமுன் “என் அண்டவரே உம்முடைய பிரசன்னத்திலேயே தங்கியிருக்கும் கிருபையைத்தாரும். என்னுடைய வேலையில் எனக்கு உதவும் எனது முழு அன்பையும் நீரே ஆக்கிரமித்துக்கொள்ளும்” என்று ஜெபிப்பார். அவர் வேலை செய்யும்போதும் தேவனோடு பேசிக்கொண்டேயிருப்பார். தன்னுடைய வேலையை அவருக்கு அர்ப்பணித்து, அவருடைய வழிநடத்துதலைக் கேட்கக் கவனமாயிருப்பார். வேலையில் மிக மும்முரமாயிருக்கும் போது கூட, கிடைக்கும் சிறுசிறு இடைவேளைகளிலும் தேவகிருபைக்காக மன்றாடுவார். என்ன நடந்து கொண்டிருந்தாலும், அவர் தன் சிருஷ்டிகரின் அன்பை நாடி அதை உணர்ந்துகொள்வார்.

எல்லாவற்றையும் சிருஷ்டித்து, சமுத்திரங்களை ஆள்பவரும் தூதர்களால் வணங்கப்படுகிறவருமானவருக்கு நாம் செய்யத் தகுதியானது என்னவென்றால் சங்கீதம் 89 சொல்வதுபோல், நமது வாழ்வை, முழு வாழ்வையும் அவரிடத்தில் உயர்த்த வேண்டும். தேவன் யார் என்ற அழகான உண்மையை அறியும்பொழது, ஆராதிக்க அழைக்கும் கெம்பிர சத்தத்தை நாம் எங்கேயும், எப்பொழுதும் நாள் முழுவதும் கேட்க முடியும் (வச. 15-16).

ஒரு கடையில் நின்றுகொண்டிருந்தாலும், விமானத்தில் ஏற வரிசையில் நின்றாலும், பல நிமிடங்களாகக் காத்திருங்கள் என்று தொலைபேசியில் கேட்டாலும் நமக்கு எரிச்சல் உண்டாகிறது. வாழ்க்கை முழுவதும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்துகொண்டேயிருக்கிறது. எரிச்சலடையாமல், நாம் கொஞ்சம் நின்று இந்தக் காலதாமத இடைவேளைகளைத் தேவனுடைய முகத்தின் வெளிச்சத்தில் நடக்கப்பழகும் வாய்ப்புகளாகக் கொள்ளலாம். நம் வாழ்க்கையின் வீணான நேரங்கள், காத்திருக்கும் சமயங்கள், வியாதிப் படுக்கையிலிருக்கும் நாட்கள், அல்லது எதுவுமே செய்யத் தோன்றாத நேரங்கள் எல்லாமே நமது வாழ்க்கையை தேவனுடைய வெளிச்சத்தில் காண உதவும் இடைவேளைகளாகும்.