நான் அவனை முதல்முதலாகப் பார்த்தபொழுது அழுதுவிட்டேன். தன் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போலிருந்தான். ஆனால், அவன் இனி இயேசுவின் கைகளில் இருக்கும்வரை ஒருபோதும் கண்விழிக்கப் போவதில்லை என்று எங்களுக்குத் தெரியும்.

அவன் அநேக மாதங்களாக உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தான். பின்பு அவனுடைய தாயார் இருதயத்தைக் வேதனையடையச் செய்யும் ஒரு மின்னஞ்சல் மூலமாக அவன் மரணத்தை எனக்குத் தெரிவித்தாள். அவள் தனக்குள்ளே ஆழமாக, மிக ஆழமாக, முனகிக் கொண்டிருக்கும் வேதனையைக் குறித்து எழுதினாள். அதன்பின் அவள், அந்த சிறு குழந்தையின் குறுகிய வாழ்க்கையின்மூலம், தேவன் எங்கள் இருதயங்களில் எவ்வளவு ஆழமாகத் தம் அன்பின் கிரியையைப் பதித்திருக்கிறார்! அந்த வாழ்க்கை எவ்வளவு வல்லமையுள்ளதாயிருந்தது என்று சொன்னாள்!

வல்லமையா? அவள் எப்படி அதைச் சொல்ல முடியும்?

அந்தக் குடும்பத்தின் விசேஷித்த பையன் அவர்களுக்கும் – எங்களுக்கும் – எல்லாவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டினான். அதுவும், மிக மோசமான காரியங்கள் நேரிடும்போது! கடினமான ஆனால், ஆறுதலான சத்தியம் என்னவென்றால், தேவன்  நம்மை நம்முடைய வேதனைகளில் சந்திக்கிறார் என்பதே. ஒரு மகனை இழப்பதின் வேதனை அவருக்குத் தெரியும்.

நம்முடைய அழமான வேதனையின் நேரங்களில் நாம் தாவீதின் சங்கீதங்களை வாசிக்கிறோம்; ஏனென்றால் அவன் அவற்றை தன் சொந்த வேதனையின் அனுபவத்திலிருந்து எழுதியுள்ளான். “என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்?” என்று கேட்டான் (வச. 13:2). “நான் மரண நித்திரை அடையாதபடி என் கண்களைத் தெளிவாக்கும்” (வச. 3). ஆனாலும், தாவீது தன் மிகப்பெரிய கேள்விகளைக் தேவனிடத்தில் விட்டுவிட்டான். “நான் உம்முடைய கிருபையின் மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூறும்.

தேவனால் மட்டுமே நம் வாழ்வின் மிக துக்ககரமான நிகழ்வுகளுக்கு முடிவான அர்த்தம் கொடுக்க முடியும்.