எங்கள் சபையில், புதிய தலைவர்களை நியமிக்க வேண்டிய நேரம் வந்தது. தலைவர்களாயினும், பணிவிடைக்காரர்களைப் போல பணி செய்வதே அவர்களுடைய பங்கு என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக, ஒரு விசேஷ ‘பாதம் கழுவும்’ விழாவில் சபை மூப்பர் அனைவரும் பங்கேற்றனர். சபையார் கவனித்துக்கொண்டிருக்க, சபைபோதகர் உட்பட தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்கள் பாதங்களை கழுவினர்.

அன்று அவர்கள் செய்ததை இயேசு கிறிஸ்துதாமே நமக்கு மாதிரியாக செய்து காட்டினார் என்பதை யோவான் 13ஆம் அதிகாரத்தில் காணலாம். ‘கடைசி இராபோஜனம்’ என அழைக்கப்படும் அச்சம்பவத்தின்போது இயேசு, “போஜனத்தை விட்டெழுந்து,…  பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களை கழுவ…   தொடங்கினார்” (யோ. 13:4-5). பின்பு இயேசு தன் சீஷர்களிடம் தான் செய்த செயலுக்குரிய விளக்கத்தை விளக்கிய போது, “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல” எனக் கூறினார் (வச. 16). மேலும், “நான் உங்கள் நடுவே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறேன்,” என்றும் கூறினார் (லூக். 22:27).

ஒப்பற்ற கனம்பொருந்திய இயேசுவே மிகத் தாழ்மையான ஒரு பணியை செய்வாரானால், பணிவிடை செய்வது நம் ஒருவருக்கும் தாழ்வானதன்று. நமக்கு எப்பேர்பட்ட அற்புதமான தொரு மாதிரியை அவர் வைத்துள்ளார்! உண்மையாகவே, அவர் “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய,” வந்தார் (மா:1௦:45). ஒரு தலைவனாகவும் பணிவிடைக்காரனாகவும் இருப்பதென்றால் என்னவென்பதை அவர் வாழ்ந்து காட்டினார். அவர் தாமே இயேசு, பணிவிடை செய்யும் ஒப்பற்றவர்.