சமீபத்தில் பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்து வந்த என் நண்பர், இவ்வாறு எழுதினார், “கடந்த இரண்டு ஆண்டுகளை நான் எண்ணிப்பார்க்கையில் மிகவும் பயமாக இருக்கின்றது, என் கல்லூரி வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன… எதுவுமே நிலையானதல்ல.”

ஆம், பணிமாற்றம், புதிய நட்பு, வியாதி, சாவு போன்ற பல காரியங்களை இரண்டு வருடத்திற்குள் சந்திக்க நேரிடலாம். நல்லதோ கெட்டதோ, வாழ்க்கையையே புரட்டிப்போடக் கூடிய எதாவது ஓர் சம்பவம் நம்மீது பாயக் காத்துக்கொண்டிருக்கலாம்! அதைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், நமது அன்பான பரமபிதா மாறாதவராக இருகின்றார் என்பதை நினைக்கும்பொழுது எவ்வளவு ஆறுதலாக இருக்கின்றது!

“நீரோ மாறாதவராயிருக்கிறீர்: உமது ஆண்டுகள் முடிந்து போவதில்லை,” என்று சங்கீதக்காரன் கூறுகிறான் (சங். 102:27). எவ்வளவு மகத்தான சத்தியம் இது. தேவன் எப்பொழுதும் அன்பும், நீதியும், ஞானமும் நிறைந்தவராகவே இருக்கின்றார் என்று இந்த வசனம் நமக்கு சொல்கின்றது. “இந்த பிரபஞ்சத்தை உருவாக்கும் முன்னர் தேவனுடைய பண்புகள் எப்படி நிலையானதாக இருந்ததோ, அப்படியே இன்றும் அது என்றென்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்” என்று வேதாகம ஆசிரியர் ஆர்தர்.W.பிங்க் (Arthur.W. Pink) தேவனின் குணாதிசயத்தை அற்புதமாக விளக்குகின்றார்.

புதிய ஏற்பாட்டில், “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” (யாக். 1:17) என்று யாக்கோபு எழுதியுள்ளார். நமது நல்ல தேவன் மாத்திரம் தனது குணத்தை மாற்றிக்கொள்ளாமல் உறுதியுடன் இருப்பதே, நிலையற்ற நம் வாழ்வில் நம்பிக்கையூட்டும் ஒரே விஷயமா யிருக்கிறது. நன்மையான அனைத்திற்கும் அவரே ஆதாரமாக இருகின்றார். அவருடைய செயல்கள் அனைத்தும் நன்மையானைவைகளே. 

எதுவுமே நிலைத்து நிற்காதது போல் தோன்றலாம், ஆனால் நம் தேவன் தம்முடைய பிள்ளைகள் மீது எப்போதும் நன்மை செய்பவராகவே திகழ்கின்றார்.