“நீ ஒரு உதவாக்கரை. உன்னால் குடும்பத்திற்கு அவமானம்தான்,” என்று ரவியின் தந்தை அவனைப் பார்த்து கூறிய வார்த்தைகள் அவன் இருதயத்தை ஊடுருவிக்குத்தியது. அவனுடைய உடன் பிறப்போடு ஒப்பிடும்பொழுது, அவனை இழிவாகவே கருதினார். அவன் விளையாட்டுத் துறையில் சிறந்திருக்க முயற்சித்து முன்னேறிய பொழுதும், தோல்வியுற்றவனாகவே உணர்ந்தான். “என் எதிர்காலம் எப்படி இருக்கும்? நான் முற்றிலும் தோல்வியுற்றவனா? ஏதாவது ஒரு வழியில் வலியில்லாமல், ஜீவனை விட முடியுமா?” என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தான். இவ்வெண்ணங்கள் அவனை தொடர்ந்து தொந்தரவு செய்தன. ஆனாலும் அதைக் குறித்து அவன் யாரிடமும் பேசவில்லை. ஏனென்றால் அவன் கலாச்சாரத்தில் அப்படி பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இல்லை. “தனிப்பட்ட வேதனையை உன்னுடனேயே வைத்துக்கொள்; சிதைந்து கொண்டிருக்கும் உன் வாழ்வை நீயாகவே தூக்கி நிறுத்து,” என்றுதான் அவனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன.

ஆகவே ரவி தனியாகவே போராடினான். பின்பு அவன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து தோல்வியடைந்து, மருத்துவமனையில் குணமடைந்து கொண்டிருந்த பொழுது, அவனைச் சந்திக்க வந்த ஒருவர், ஒரு வேதாகமத்தை கொண்டுவந்து யோவான் 14ஆம் அதிகாரத்தை அவன் தாயாரிடத்தில் வாசிக்கக் கொடுத்தார். “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” (வச. 19) என அவன் தாயார் வாசித்தார். அதைக் கேட்டபொழுது “இதுதான் என்னுடைய ஒரே நம்பிக்கையாக இருக்கக்கூடும். ஜீவனின் அதிபதியினால் வகுக்கப்பட்ட ஒரு புதிய ஜீவவழி” என எண்ணி, “இயேசுவே நீர் கூறியது போல, நீரே ஜீவன் அளிக்கும் ஜீவ ஊற்றாக இருப்பின், எனக்கு அந்த ஜீவனைத் தாரும்” என் ஜெபித்தான்.

விரக்தியான தருணங்களை நம் வாழ்வில் நாம் காணக்கூடும். ஆனால் ரவியை போல நாமும் “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிற” இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோம் (வச. 6). வளமிக்க திருப்திகரமான வாழ்வை நமக்களிக்க தேவன் வாஞ்சிக்கிறார்.