இலக்கண ஆசிரியர் இலக்கண வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வகுப்பிற்கு முன் வந்து நின்று, ஒரு வாக்கியத்தை இலக்கண ரீதியில் விளக்கும்படி கேத்தலீனிடம் கூறினார். அவள் மிகவும் பயந்து விட்டாள். அவள் சமீப காலத்தில் தான் அந்தப் பள்ளியில் வந்து சேர்ந்திருந்தாள். ஆகவே மேற்கூறப்பட்ட இலக்கணத்தை கற்றது கிடையாது. அந்த வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.

உடனே, அவளைத் தற்காக்க ஆசிரியர் முன் வந்தார். “விரைவில் எதிர்காலத்தில் அவள் உங்கள் எல்லாரையும்விட மிகவும் தலைசிறந்தவளாகி விடுவாள்” என்று விளக்கினார். அநேக ஆண்டுகளுக்குப் பின்பு அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து “எனது ஆசிரியர் என்னால் செய்யமுடியும் என்று கூறினபடியே, நான் நன்றாக எழுதுவதற்கு முயற்சி செய்ய ஆரம்பித்தேன்” என்று கேத்தலீன் கூறினாள். நாட்கள் கடந்தபின் கேத்தலீன் பார்க்கர் எழுத்தாளர்களுக்கான தலைசிறந்த பரிசான புலிட்சார் பரிசை வென்றாள்.

கேத்தலீனின் ஆசிரியர் செய்ததுபோல, இயேசுவும் பாதுகாப்பற்ற எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டார். அவருடைய சீஷர்கள், சிறுபிள்ளைகளை அவரிடம் வராமல் தடுத்தபொழுது, “சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்” (மாற்கு 10:14) என்று கூறினார். யூதர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரு மனிதனை அவரது உவமையில் முக்கியப்படுத்தி அவனை நல்ல சமாரியனாக்கினார் (லூக். 10:25–37). வாஞ்சையுள்ள ஒரு சமாரியப் பெண்ணுக்கு யாக்கோபின் கிணற்றண்டை உண்மையான நம்பிக்கையை அருளினார் (யோவா 4:1–26). விபச்சாரத்தில் கையும், மெய்யுமாக பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அவளைக் குற்றப்படுத்தினவர்களிடமிருந்து பாதுகாத்து அவளுக்கு மன்னிப்பு அருளினார் (யோவா 8:1–11). நாம் முற்றிலும் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும் கிறிஸ்து நமக்காக அவரது ஜீவனை அளித்து நம்மை மீட்டார் (ரோம 5:6).

எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் நாம் பாதுகாக்கும்பொழுது, நாம் அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமையைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறோம். அவர்களிடம் உண்மையான அன்பை நாம் காட்டும்பொழுது இயேசுவின் உள்ளத்தை சிறப்பான முறையில் சிறிய அளவில் பிரதிபலிக்கிறோம்.