‘தேவன் நல்லவர் என்று நான் எண்ணவில்லை’ என்று என் சிநேகிதி என்னிடம் கூறினாள். சில கடினமான பிரச்சனைகளுக்காக அநேக ஆண்டுகள் அவள் தொடர்ந்து ஜெபம்பண்ணி வந்தும், எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. தேவனுடைய அமைதியைக் குறித்து, அவளது கோபமும் மனக்கசப்பும் அதிகரித்தது. அவளை நான் நன்கு அறிந்திருந்தபடியினால் அவளது உள்ளத்தின் ஆழத்தில் தேவன் நல்லவர் என்பதை அவள் விசுவாசிக்கிறாள் என்பதை உணர்ந்தேன். ஆனால், அவளது உள்ளத்தில் உள்ள நீங்கா வேதனையும், அதைக்குறித்து தேவனுடைய கரிசனையற்ற தன்மையும் அவளுக்குச் சந்தேகத்தை உண்டாக்கின. அவளது வருத்தத்தை தாங்குவதைவிட, தேவன்மேல் கோபப்படுவது அவளுக்கு எளிதாக இருந்தது.

ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தே தேவனது உண்மைத்தன்மையை சந்தேகிப்பது இருந்து வருகிறது (ஆதி. 3). “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” (ஆதி. 3:5) என்பதினால்தான் அந்த மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாது என்று கட்டளை இட்டார் என்ற எண்ணத்தை ஏவாளின் மனதில் அந்த சர்ப்பம் உண்டாக்கியது. ஆதாமும், ஏவாளும் பெருமை கொண்டு அவர்களுக்கு நன்மை எதுவென்று, அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டியதே அல்லாமல் தேவன் அதைக்குறித்து தீர்மானிக்கக் கூடாது என்று எண்ணினார்கள்.

ஜேம்ஸ் பிரையன் சுமித், அவரது மகள் மரணம் அடைந்து அநேக ஆண்டுகளுக்குப்பின்பு தான், தேவனின் சிறந்த, உயர்ந்த குணங்களைக் குறித்து நிச்சயமாக அறிந்துகொள்ள முடிந்தது. “சிறந்த குணங்களையுடைய அழகான கடவுள்” என்ற புத்தகத்தில் “தேவனுடைய சிறந்த உண்மைத் தன்மை, நானாக, சுயமாக தீர்மானிக்கக் கூடியதல்ல. குறைந்த அறிவுடைய சாதாரண மனிதன் நான்” என்று சுமித் எழுதினார். சுமித்தின் ஆழமான, உண்மையான இந்த விமர்சனம் அனுபவமற்ற ஒருவர் கூறுவது அல்ல. அது அநேக ஆண்டுகளாக அவருடைய உள்ளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த துன்பத்திலிருந்து வெளிப்பட்டதுமல்லாமல், அத்துன்பத்தின் ஊடாக தேவனுடைய உள்ளத்தைக்காண முயன்ற உள்ளத்திலிருந்து வெளிப்பட்டது ஆகும்.

மனச்சோர்வான நேரங்களில் ஒருவர் கூறுவதை ஒருவர் கவனித்து, ஒருவருக்கொருவர் உதவிசெய்து, தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்ற உண்மையை அறிந்து கொள்வோம்.