அனுபவம் மிகுந்த செய்தி தொகுப்பாளரான ஸ்காட் பெல்லி, அவரது பணியின் நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்லும்பொழுது, ஒரு சிற்றலை ரேடியோ, காமெரா உடைக்க இயலாத கைப்பெட்டி, மடிக்கணினி, கைபேசி மேலும் அவசரகாலத்தில் எவ்விடத்தில் இருந்தாலும் அவரது இருப்பிடத்தை அறிவிக்கக்கூடிய ரேடியோ அலைகளை பரப்பும் கருவி ஆகியவைகள் இல்லாமல் எந்த ஒரு பயணத்தையும் மேற்கொள்ள மாட்டார். “இந்த ரேடியோ அலைகளை பரப்பும் கருவியின் அன்டனாவை இழுத்துவிட்டு, இரண்டு பொத்தான்களை அழுத்தினால் தேசியகடல் சார்ந்த, வளி மண்டலம் சார்ந்த காரியங்களை கவனிக்கும் நிர்வாகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையோடு இணைக்கப்பட்டுள்ள செயற்கை கோளுக்கு தகவலைத் தெரிவிக்கும். அது நான் யாரென்றும், எங்கே இருக்கிறேனென்றும் கட்டுப்பாட்டு அறையிலுள்ளவர்களுக்கு அறிவித்துவிடும். நீங்கள் இருக்கும் தேசத்தைப் பொருத்து, அவர்கள் மீட்புக் குழுவை அனுப்புவார்கள். சில இடங்களுக்கு அனுப்ப இயலாது” என்று பெல்லி கூறினார். இதுவரை ரேடியோ அலைகளை பரப்பும் கருவியை பெல்லி பயன்படுத்தினதே கிடையாது. ஆனால் அக்கருவி இல்லாமல் அவர் ஒருக்காலும் பயணம் செய்ய மாட்டார்.

ஆனால், தேவனோடு நமக்குள்ள உறவிற்கு, நமக்கு வானொலியோ, கைபேசியோ அல்லது அவசர கால தகவல் அறிவிக்கும் கருவியோ தேவை இல்லை. நமது சூழ்நிலை மிகவும் ஆபத்தான நிலையாக இருந்தாலும், நம்மை யார் என்றும், எங்கே இருக்கிறோமென்றும் தேவன் நன்கு அறிந்திருக்கிறார். “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்… என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்” சங். 139:1–3 என்று சங்கீதக்காரன் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறான். நமது தேவைகள், தேவனுக்கு ஒருக்காலும் மறைவாக இருக்கவில்லை. அவரது கண்காணிப்பிலிருந்து நாம் ஒருக்காலும் பிரிக்கப்படுவதில்லை.

இன்று நாம் நம்பிக்கையுடன் “நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த்தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (சங். 139:9–10) என்று கூறலாம்.