டெப்பியின் புதிய வீட்டின் சமையலறையில் இருண்ட ஒரு மூலையில் யாராலும் கவனிக்கப்படாத ஒரு செடியைக் கண்டுபிடித்தாள். தூசுபடிந்த கிழிந்து அதன் இலைகளைப் பார்த்தபொழுது, அச்செடி மாத் ஆர்க்கிட் வகையைச் சேர்ந்தது போல இருந்தது. புதிய பூக்கும் தண்டு, அச்செடியில் வளர்ந்தால் அச்செடி பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்குமென்று அவள் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அந்தச் செடியை ஜன்னலின் அருகில் கொண்டு போய் வைத்து, அதின் காய்ந்த இலைகளெல்லாம் எடுத்துப்போட்டு, அச்செடிக்கு தண்ணீர் ஊற்றி அதற்கு வேண்டிய உரத்தை வாங்கிப்போட்டாள். வாரா வாரம் அச்செடியை கண்காணித்து வந்தாள். ஆனால், அதில் புதிய துளிர் ஏதும் தோன்றவில்லை. “இன்னமும் ஒரு மாதம் கவனிப்பேன். அதற்குள்ளாக அந்தச் செடியில் புதிய துளிர் ஏதும் தோன்றாவிட்டால், அதை வெளியே எறிந்து விடுவேன்” என்று அவளது கணவரிடம் கூறினாள்.

குறிக்கப்பட்ட அந்த நாள் வந்தபொழுது, அவளது கண்களை அவளால் நம்பவே இயலவில்லை. இலைகளின் மத்தியிலிருந்து இரண்டு புதிய சிறிய தண்டுகள் எட்டிப் பார்த்தன! ஏறக்குறைய அவளால் கைவிடப்பட்ட அந்தச்செடிக்கு இன்னமும் உயிர் இருந்தது.

உங்களது ஆவிக்கேற்ற வாழ்க்கையில் வெளிப்படையான வளர்ச்சி காணப்படவில்லையே என்று மனம் சோர்வடைந்துள்ளீர்களா? ஒருவேளை நீங்கள் அடிக்கடி கோபமடையலாம்; அல்லது பிறரைப்பற்றி நீங்கள் கேட்ட வம்புபேச்சுக்களை மற்ற யாரிடமாவது கூறுவதை உங்களால் தடுக்க இயலாமல் இருக்கலாம். அல்லது காலையில் எழுந்து வேதம் வாசித்து ஜெபிப்பதற்கு அலாரம் வைத்து எழுந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எடுத்த தீர்மானத்தை செயல்படுத்த இயலாமல் தாமதமாக படுக்கையைவிட்டு எழுந்திருக்கலாம்.

உங்களது நம்பிக்கைக்கு உரிய சிநேகிதர் ஒருவரிடம், உங்களது ஆவிக்கேற்ற வாழ்க்கையில் வளர நினைக்கும் பகுதி எதுவென்று அவர்களோடு பகிர்ந்து கொண்டு, அதைக்குறித்து நீங்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளும்படி அவர்களை உங்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்ளலாம் அல்லவா? பொறுமையுடன் இருங்கள். பரிசுத்தாவி உங்களில் கிரியை செய்ய நீங்கள் அனுமதிக்கும்பொழுது, ஆவிக்கேற்ற வாழ்க்கையில் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள்.