எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

பட்டணத்தில் மகிழ்ச்சி

 

2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-ம் அர்ஜென்டினாவும் மோதியபோது, அது “வரலாற்றில் மிகப் பெரிய உலகக் கோப்பைப் போட்டி” என்று பலர் அழைக்கும் ஓர் நம்பமுடியாத போட்டியாக இருந்தது. கூடுதல் நேரத்தின் இறுதி நொடிகள் நிறைவடைந்தபோது, கோல் 3-3 என சமநிலையில் இருந்ததனால் கால்பந்து அணிகள் பெனால்டி உதைக்கு அனுப்பப்பட்டன. அர்ஜென்டினா வெற்றி இலக்கை எட்டியதையடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான அர்ஜென்டினா மக்கள் புவெனஸ் அயர்ஸ் நகரில் கூட்டங்கூடினர். இந்த ஆரவாரமான, மகிழ்ச்சியான காட்சியைக் காட்டும் ட்ரோன் கேமரா காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. ஓர் பிபிசி செய்தியறிக்கை நகரம் மகிழ்ச்சியில் எவ்விதம் மூழ்கியது என்பதை விவரித்தது.

மகிழ்ச்சி எப்போதும் ஓர் அற்புதமான பரிசு. ஒரு நகரமும் அதிலுள்ள மக்களும் நீடித்த மகிழ்ச்சியை எவ்விதம் அனுபவிக்கக்கூடும் என்று நீதிமொழிகள் விவரிக்கிறது. “நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்” (நீதிமொழிகள் 11:10) என்று நீதிமொழிகள் கூறுகிறது. மனுஷீகத்தைக் குறித்த தேவனுடைய தெய்வீகத் திட்டத்தின்படி வாழ்கிறவர்கள், சமூகத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது தேவனுடைய நீதி ஆளுகை செய்கிறது என்கிற  நற்செய்தியை மக்கள் பெறுகின்றனர். பேராசை குறைகிறது. ஏழைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் தேவனுடைய திட்டத்திற்கேற்ற வாழ்க்கைமுறை செழித்தோங்குகிறதோ, அப்போது நகரத்தில் மகிழ்ச்சியும் “ஆசீர்வாதமும்” தங்கும் (வச. 11).

நாம் தேவனுடைய வழிகளை உண்மையாக பின்பற்றினால், அதன் விளைவு அனைவருக்கும் நன்மை அளிப்பதாய் இருக்கும். நாம் வாழும் முறை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை சிறப்பாகவும், முழுமையாகவும் மாற்றும். உலகை பண்படுத்துவதற்கான தெய்வீக முயற்சியில் ஓர் அங்கத்தினராய் செயல்படுவதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். நகரத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர் நம்மை அழைக்கிறார்.

அடிப்படையை தவறவிடுதல்

பல தசாப்தங்களாக, துரித உணவு வகையில் மெக்டொனால்ட் நிறுவனம் தனது குவார்ட்டர் பவுண்டர் பர்கர் கொண்டு ஆண்டது. 1980 களில் அதின் போட்டி நிறுவனம் தனது அற்புதமான திட்டத்தால் அதனை வீழ்த்த நினைத்தது. ஏ அண்ட் டபுள்யு நிறுவனம் மெக்டொனால்டை விட பெரிதான தர்ட் பவுண்ட் பர்கரை அதே விலைக்கு விற்றது. மேலும் அதின் ருசிக்காக பல விருதுகளையும் வென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதை வாங்க ஆளில்லை. இறுதியில், அவர்கள் அதை மெனுவிலிருந்து எடுத்துவிட்டனர். தர்ட் பவுண்ட் பர்கர் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை விட சிரியதென்று நுகர்வோர் தவறாய் புரிந்துகொண்டதே அதின் தோல்விக்கு காரணமென்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையிட்டது.

அடிப்படைகளை தவறவிடுவது எவ்வளவு எளிது என்று இயேசு எச்சரித்தார். மதத் தலைவர்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் அவரை இழிவுபடுத்த திட்டமிட்டனர், ஏழு முறை விதவையான ஒரு பெண்ணைப் பற்றி ஒரு விசித்திரமான, கற்பனையான காட்சியை முன்வைத்தனர் (மத்தேயு 22:23-28).  இந்த சிக்கலான தடுமாற்றம் ஒரு பிரச்சனையே இல்லை என்று இயேசு பதிலளித்தார். மாறாக, அவர்கள்  "வேதத்தையும் தேவனின் வல்லமையையும்" அறியவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்சனை (வச. 29). வேதவசனங்களின் நோக்கம் தர்க்கரீதியாகவும் தத்துவப் புதிர்களுக்கும் பதிலளிப்பதில்லை என்று இயேசு வலியுறுத்தினார். மாறாக, இயேசுவை அறியவும் நேசிக்கவும், அவரில் "நித்திய ஜீவனை" பெறவும் நம்மை வழிநடத்துவதே அவைகளின் முதன்மையான நோக்கம் (யோவான் 5:39). தலைவர்கள் தவறவிட்ட அடிப்படைகள் இவையே.

நாம் அடிக்கடி அடிப்படைகளையும் தவறவிடுகிறோம். உயிரோடிருக்கும் இயேசுவை கண்டுகொள்வதே வேதத்தின் முக்கிய நோக்கம். அதைத் தவறவிட்டால் மனவேதனையே மிஞ்சும்

மகிழ்ச்சியான நம்பிக்கை

கருணைக்கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூடியை ஒரு பெண், விலங்குகள் காப்பகத்திலிருந்து மீட்டார். அந்த நாய் அவளுக்கு துணையானது. பத்து ஆண்டுகளாக, ரூடி லிண்டாவின் படுக்கைக்கு அருகில் அமைதியாக தூங்கினது, ஆனால் அது திடீரென்று அவளுக்கு அருகில் குதித்து அவள் முகத்தை நக்க ஆரம்பித்தது. லிண்டா அதை திட்டினார், ஆனால் ஒவ்வொரு இரவும் ரூடி அதேபோல செய்தது. "விரைவில் அவர் என் மடியில் குதித்து, நான் அமரும் ஒவ்வொரு முறையும் என் முகத்தை நக்கியது" என்றார் லிண்டா.

ரூடியை பிராணிகள் நலமையத்திற்கு அழைத்துச் செல்ல அவள் திட்டமிட்டிருகையில்; ​​ரூடி எத்தனை பிடிவாதமாக இருக்கிறது என்பதையும், அது தன் தாடையில் அதே இடத்தில் தன்னை எப்படி நக்குகிறது என்பதையும் லிண்டா சிந்திக்க ஆரம்பித்தாள். தயங்கியவாறே, லிண்டா மருத்துவரை அணுகுகையில், அவர் ரூடியிடம் ஒரு நுண்ணிய கட்டி இருப்பதைக் (எலும்பு புற்றுநோய்) கண்டறிந்தார். டாக்டர் லிண்டாவிடம், அவள் தாமதித்திருந்தால், அது அவளைக் கொன்றிருக்கும் என்றார். லிண்டா ரூடியின் உள்ளுணர்வை நம்பினாள், அவ்வாறு செய்ததில் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

தேவனை நம்புவது ஜீவனுக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று வேதம் மீண்டும் மீண்டும் சொல்கிறது. சங்கீதக்காரன், "கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்" (40:4) என்கிறார். சில மொழிபெயர்ப்புகள் இதை இன்னும் மிகைப்படுத்தி, "கர்த்தரை தங்கள் நம்பிக்கையாக கொள்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள்" (வ. 4) என்கிறது. சங்கீதங்களில் குறிப்பிடப்படும் "மகிழ்ச்சி"; மிகுதியாகவும், பொங்குகிற, உற்சாகமான மகிழ்ச்சியாகும்.

நாம் தேவனை நம்புகையில், ​​ஆழமான, உண்மையான மகிழ்ச்சியே இறுதி முடிவு. இந்த நம்பிக்கை எளிதில் வராமல் இருக்கலாம், மேலும் முடிவுகள் நாம் எண்ணியது போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனை நம்பினால், நாம் நம்பியதற்காக மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்.

தேவன் தருவதை உபயோகித்தல்

1920களின் வியப்பூட்டும் திட்டம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சிட்டி ஹால் ஆகும். மைக்கேல் ஏஞ்சலோ தனது டேவிட் சிற்பத்திற்குப் பயன்படுத்திய அதே குவாரியில் எடுக்கப்பட்ட பளிங்குக் கற்கள் வெண்மையான படிக்கட்டுகளை  பெருமைப்படுத்தின. அதின் கோபுரம் வெனிஸின் தூய மாற்கு ஆலய கோபுரத்தின் பிரதி, மேலும் தாமிரத்திலான குவிமாடம் (உருண்டையான கோபுரம்) பூமியின் தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரியது. கட்டிடம் கட்டுபவர்கள் ஒரு பெரிய சமாதான தூதனின் சிலையால் உச்சியை அலங்கரிக்க நினைத்தனர், ஆனால் ஒரு சிக்கல் இருந்தது: பணம் எதுவும் இல்லை. குழாய்களை செப்பனிடும் ஃபிரெட் ஜான்சன் உதவிக்கு வந்தார். அவர் ஒரு கழிப்பறை தொட்டி, ஒரு பழைய விளக்கு கம்பம் மற்றும் பயனற்ற உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தி, கோபுரத்தை ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக அலங்கரிக்கும், மகுடம் சூடிய மணிமுடியை உருவாக்கினார்.

ஃபிரெட் ஜான்சன் மற்றும் அவரிடம் இருந்ததைப் பயன்படுத்தினதைப் போலவே, நம்மிடம் உள்ள பெரிய அல்லது சிறிய அனைத்தையும் கொடுத்து தேவனின் பணியை செய்யலாம். இஸ்ரவேலை தலைமைதாங்கி எகிப்திலிருந்து வெளியேற்றும்படி மோசேயிடம் கடவுள் கேட்டபோது, ​​மோசே "அவர்கள்.. என் வாக்குக்குச் செவிகொடார்கள்" (4:1) என்று தடுமாறினார். தேவன், "உன் கையில் இருக்கிறது என்ன" (வ. 2) என்று எளியமையான கேள்வியில் பதிலளித்தார். மோசேயிடம் கோலிருந்தது, வெறும் குச்சிதான். தேவன் அதைத் தரையிலே போடு என்றார், "அது சர்ப்பமாயிற்று" (வ. 3). பின்னர் அவர் சர்ப்பத்தை எடுக்க மோசேயிடம் அறிவுறுத்தினார், அது மீண்டும் ஒரு கோலாக மாறியது. மோசே செய்ய வேண்டியதெல்லாம், கோலை எடுத்துக்கொண்டு போவதும் மற்றதைச் செய்யம்படி அவரை நம்புவதுமே என்று தேவன் விளக்கினார். வியப்பூட்டும் வகையில், எகிப்தியர்களிடமிருந்து இஸ்ரவேலை மீட்க மோசேயின் கையில் இருந்த அந்த கோலை பயன்படுத்துவார் (7:10–12; 17:5–7).

நம்மிடம் இருப்பது நமக்கே பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் தேவனுக்கு நம்மிடம் இருப்பதே போதுமானதாக இருக்கும். நம்மிடம் உள்ள சாதாரண பொருட்களை எடுத்து தன் பணிக்கு பயன்படுத்துகிறார்.

கூடியிருப்பது நலம்

ஒரு புகைப்படக் கலைஞர் ஸ்டார்லிங்ஸ் பறவைகளையும் (கருப்பு நிற சிறிய பறவை), ஆயிரக்கணக்கான இந்தப் பறவைக் கூட்டம் வானத்தில் நிகழ்த்தும் பிரமிப்பூட்டும் "மர்மரிங்ஸ்" எனப்படும் தண்ணீர்போன்ற அசைவுகளையும் படம்பிடிக்கப் பல ஆண்டுகள் செலவிட்டார். இதை விண்ணில் பார்ப்பது ஒரு அலையின் அடியில் அமர்ந்திருப்பது போன்றது அல்லது பற்பல வடிவங்களில், கலைஞர்கள் தூரிகையினால் வரையும் கண்கவர் கண்ணாடி ஓவியம் போன்று உள்ளது. டென்மார்க்கில், இந்த ஸ்டார்லிங் பறவைகளின் அனுபவத்தை பிளாக் சன் என்பார்கள். மிகவும் வியப்பூட்டுவது, இந்த பறவைகள் தங்களுடைய இயற்கையான உள்ளுணர்வால் நெருக்கமாக அருகருகே பறப்பதுதான்; ஒரு பறவை கூட நகர்வில் தவறினால், அவைகள் குழப்பமடைந்து, மொத்த கூட்டமும் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்கவே "மர்மரிங்ஸ்" முறை. ஒரு பருந்து அவைகளில் ஒன்றை இரையாக்க இறங்கும்போது, வேட்டையிலிருந்து தப்பிக்க இந்த சிறிய பறவைகள் நெருக்கமான அமைப்பில் கூட்டாக நகர்கின்றன. அவை தனியாக இருந்தால் அவற்றை எளிதாகப் பருந்து வேட்டையாடிவிடும்.

நாம் தனியாக இருப்பதை விட ஒன்றாக இருப்பது நல்லது. "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்" என்று பிரசங்கி கூறுகிறார். " ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்;" (பிரசங்கி 4:9-11). நாம் தனிமைப்படுத்தப்பட்டால் எளிதாகப் பலியாகிவிடுவோம். மற்றவர்களின் ஆறுதலோ, பாதுகாப்போ இல்லாமல் பலவீனமடைவோம்.

ஆனால் கூடிவாழும்போது நண்பர்கள் மூலம் உதவிகிடைக்கிறது, நாமும் உதவுகிறோம். "ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது" (வ12) என்று பிரசங்கி கூறுகிறார். தேவன் நம்மை வழிநடத்திட,  நாம் கூடியிருப்பதே நலம்.

ஆயுதங்களிலிருந்து அணிகலன்கள்

என் மனைவி மிஸ்காவிடம் எத்தியோப்பியாவின் நெக்லஸ் மற்றும் காதணிகள் உள்ளன. அவர்களின் நேர்த்தியான எளிமை, அவர்களின் மெய்யான கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இந்த துண்டுகளைப் பற்றி மிகவும் வியக்கத்தக்கது அவர்களின் கதை. பல தசாப்தங்களாக கடுமையான மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போரின் காரணமாக, எத்தியோப்பியாவின் புவியியல் அமைப்பானது பீரங்கி குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் சிதறடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் ஒரு செயலாக, எத்தியோப்பியர்கள் எரிக்கப்பட்ட பூமியைத் துடைத்து, குப்பைகளை சுத்தம் செய்கிறார்கள். மேலும் எஞ்சியிருக்கும் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில் இருந்து கைவினைஞர்கள் நகைகளை உருவாக்குகிறார்கள்.

இந்தக் கதையைக் கேட்டபோது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை தைரியமாக அறிவிக்கும் மீகாவின் எதிரொலிகளைக் கேட்டேன். அவர் மக்களைக் குறித்து, ஒரு நாள் “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்” (மீகா 4:3) என்று சொல்லுகிறார். தேவனுடைய வல்லமையான கிரியையினிமித்தம், கொல்ல மற்றும் ஊனப்படுத்துவதற்கான பயங்கரமான கருவிகள், வாழ்க்கையை வளர்ப்பதற்கான கருவிகளாக மாற்றப்படுகிறது. வரவிருக்கிற கர்த்தருடைய நாளில், “ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” (வச. 3) என்றும் சொல்லுகிறார். 

மீகாவின் காலகட்டத்தைக் காட்டிலும் அதை நம்முடைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போலவே பார்க்கத் தோன்றுகிறது. பண்டைய காலத்தின் இஸ்ரவேல் தேசத்தைப் போலவே நாமும் வன்முறைகள் மற்றும் யுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலை எப்போதும் மாறாது என்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் தேவன் கிருபையோடும் குணமாக்கும் வல்லமையோடும் இந்த அதிர்ச்சியூட்டும் நாள் வரப்போகிறது என்று நமக்கு வாக்களிக்கிறார். அப்படியானால், இந்த உண்மையை இப்போதே நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். காயப்படுத்தும் ஆயுதங்களை ஆச்சரியப்படுத்தும் அணிகலன்களாய் மாற்றி, அவருடைய செயல்களை இப்போதிருந்தே செய்ய தேவன் நமக்கு உதவிசெய்வாராக.

கடவுள் மீது நிலைத்திருக்கும் பார்வை

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் புகுஷிமா டெய்ச்சி அணுசக்தி பேரழிவு, பூகம்பத்தால் ஏற்பட்டது. அதின் விளைவாய் பெரிய அளவு நச்சு வாயுக்கள் வெளியேற்றப்பட்டன. 150,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “புகுஷிமாவில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பனி விழுந்து, தொடர்ந்து விழுந்து, அப்பகுதியையே மூடியது போல் உள்ளது” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். கதிர்வீச்சின் பாதிப்புகள் அங்கிருந்த பயிர்கள், இறைச்சி மற்றும் தாவரத்திலிருந்து வெகு தொலைவுக்கு பரவியிருந்தது. கதிர்வீச்சின் அந்த கொடிய விஷங்களை எதிர்த்துப் போராட, உள்ளூர்வாசிகள் கதிர்வீச்சை உறிஞ்சும் தாவரமான சூரியகாந்தியை நடவு செய்தனர். அவர்கள் இருநூறாயிரத்திற்கும் மேற்பட்ட விதைகளை நட்டனர். இப்போது ஃபுகுஷிமாவில் மில்லியன் கணக்கான சூரியகாந்தி பூக்கள் பூத்துள்ளன.

சூரியகாந்தி, முழு உலகத்தையும் குணமாக்கும் கிறிஸ்துவின் செய்கையை பிரதிபலிக்கும் தேவனுடைய வடிவமைப்பு. இயேசு “நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (ஏசாயா 53:4). இந்த உலகத்தின் தீமை, வன்முறை மற்றும் நச்சுகள்  மற்றும் மனிதர்களாகிய நாம் நம்மை நாமே அழித்துக்கொள்ளும் அனைத்து வழிகளையும் அவர் தனக்குள் ஏற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்கள் அனைத்தையும் அவர் தன் மீது ஏற்றுக்கொண்டார். இயேசு சிலுவையில் தன்னுடைய மீறுதல்களுக்காய் அல்லாமல், “நம்முடைய மீறுதல்களினிமித்தம்” (வச. 5) அறையப்பட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்ததினால் நாம் பூரணமாக்கப்பட்டோம். அவருடைய தழும்புகளாலே நாம் குணமாகிறோம் (வச. 5). 

கிறிஸ்து தொலைவில் நின்று நம்மை மன்னிக்கிற தேவனில்லை, அவர் நமக்குள் இருக்கும் தீமைகளையும் பாவங்களையும் அவருக்குள் எடுத்துக்கொள்கிறார். இயேசு அனைத்தையும் உறிஞ்சிக்கொள்கிறார். மேலும் அவர் நம்மை ஆவிக்குரிய ரீதியாகவும் சுகமாக்குகிறார். 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார்.

இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21).

நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.