எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கென்னத் பீட்டர்சன்கட்டுரைகள்

தேவனுக்காய் கடந்துசெல்ல ஆயத்தம்

“ஹிட்டன் பிகர்ஸ்” என்ற புத்தகம் ஜான் க்ளென் விண்வெளிக்குச் செல்வதற்காக ஏறெடுத்த முன் ஆயத்தங்களை விவரிக்கிறது. 1962இல் உருவாக்கப்பட்ட கணினி கண்டுபிடிப்புகள் குறைபாடுகளுக்கு உட்பட்டது. ஆகவே க்ளென் அவைகளை நம்பாமல் விண்கலம் புறப்படுதற்கான எண் எண்ணிக்கையை யார் கூறுவது என்பதைக் குறித்து அவர் கவலைகொண்டார். பின் அறையில் இருக்கக்கூடிய ஓர் புத்திசாலி பெண்ணினால் எண்களை நேர்த்தியாய் இயக்க முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அப்பெண்ணை நம்பினார். “அவள் எண்ணிக்கையை சொல்ல ஆயத்தமாயிருந்தால், நான் போவதற்கு தயாராக இருக்கிறேன்” என்று கிளென் கூறுகிறார். 

கேத்தரின் ஜான்சன், ஓர் ஆசிரியர் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு தாய். அவள் இயேசுவை நேசித்தாள், அவளுடைய தேவாலயத்தில் ஊழியம் செய்தாள். தேவன் கேத்தரீனை வெகுவாய் ஆசீர்வதித்திருந்தார். 1950க்கு பிறகு, விண்வெளி திட்டத்திற்கு உதவுவதற்காக நாசா அவளை அழைத்தது. அவள் சிறப்பாய் தன் மூளையைப் பிரயோகிக்கக்கூடிய மனித கணினியாய் செயல்பட்டாள். 

நாம் புத்திசாலித்தனமான கணிதவியலாளர்களாக அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை மற்ற விஷயங்களுக்கு அழைக்கிறார்: “கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது” (எபேசியர் 4:7). நாம் பெற்ற அழைப்புக்கு தகுதியான வாழ்க்கையை வாழவேண்டும் (வச. 1). ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில், நாம் ஒரே சரீரத்தின் அவயங்களாய் செயல்பட அழைக்கப்பட்டிருக்கிறோம் (வச. 16). 

கேத்தரின் ஜான்சனின் கணக்கீடுகள் விண்வெளிப்பாதையை உறுதிப்படுத்தின. விண்கலத்தை சுற்றுப்பாதையில் செலுத்துவது என்பது தோராயமாய் பயணிக்கும் கிளென்னின் முயற்சியாகும். ஆனால் இது கேத்தரினின் அழைப்புகளில் ஒன்றாகும். அவள் ஓர் தாயாகவும், ஆசிரியராகவும், தேவாலய ஊழியராகவும் அழைக்கப்பட்டவள். பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, தேவன் நம்மை எந்த நோக்கத்திற்காய் அழைத்திருக்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம். அவர் நமக்கு அருளியிருக்கிற கிருபையின் வரங்களைப் பயன்படுத்தி நம்முடைய அழைப்புக்கு ஏற்ற ஜீவியம் ஜீவிப்பதற்கு நாம் ஆயத்தமாயிருக்கிறோமா?

 

“இருக்கிறேன் என்பவர்”

தத்துவம் மற்றும் இலக்கியப் பேராசிரியரான ஜாக், புத்திசாலியும் கூட. தனது பதினைந்து வயதில் தன்னை நாத்திகராக அறிவித்தார், மேலும் இளமைப் பருவத்தில் தனது "நாத்திக நம்பிக்கையை" பிடிவாதமாக பற்றியிருந்தார். கிறிஸ்தவ நண்பர்கள் அவரிடம் விளக்க முயன்றனர். ஜாக் கூறியது போல், "அனைவரும், அனைத்தும் மறுபுறம் சேர்ந்திருந்தன" ஆனால் வேதாகமம் மற்ற இலக்கியங்கள் மற்றும் புராணங்களிலிருந்து வேறுபட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. நற்செய்திகளைப் பற்றி அவர், "ஒரு கட்டுக்கதை எப்போதாவது உண்மையாகி, மனித உருவேற்பேற்றால் அது இப்படித்தான் இருக்கும்" என்றெழுதினார்.

ஒரு வேதாகம பகுதி ஜாக்கை மிகவும் பாதித்தது; யாத்திராகமம் 3. தேவன் மோசேயை எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை வழிநடத்த அழைத்தார். மோசே தேவனிடம், " பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்" (வ.11) என்றான். தேவன், "இருக்கிறவராக இருக்கிறேன்" (வ.14) என பதிலளித்தார். இந்த பத்தி, வார்த்தைகள் மற்றும் பெயர்கள் குறித்த சற்று கருகலாக இருப்பினும் ஆதியிலிருந்திருக்கும் தேவனின் நித்திய பிரசன்னத்தை பிரதிபலிக்கிறது. சுவாரஸ்யமாக, "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்" (யோவான் 8:58) என்று இயேசு சொன்னபோது அதையே எதிரொலித்தார்.

சி.எஸ். லூயிஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜாக், இந்தப் பத்தியால் ஆழமாக தொடப்பட்டார். ஒரே மெய்யான தேவன் சொல்ல வேண்டியது இதுதான்; அவர் "இருக்கிறவர்" என்று மட்டுமே. வாழ்க்கையை மாற்றும் ஒரு தருணத்தில், லூயிஸ் "தன்னை விட்டுக்கொடுத்து, தேவனே கடவுள் என்று ஒப்புக்கொண்டார்." லூயிஸ் இயேசுவை ஏற்றுக்கொள்ளும் பயணத்தின் தொடக்கமாக இது இருந்தது.

ஒருவேளை நாம் லூயிஸ் போல் நம்ப இயலாமல் போராடலாம் அல்லது ஒரு மந்தமான நம்பிக்கையுடன் இருக்கலாம். தேவன் உண்மையிலேயே நம் வாழ்வில் "இருக்கிறவரா?" என்று நம்மை நாமே ஆராயலாம்.

இயேசுவின் இரத்தம்

சிவப்பு நிறம் எப்போதும் நாம் செய்யும் பொருட்களில் இயற்கையாகவே இருக்காது. ஆப்பிளின் கவர்ச்சியான நிறத்தை உதட்டுச் சாயத்திலோ, சட்டையிலோ எப்படிக் கொண்டுவருவது? ஆரம்பத்தில், சிவப்பு வண்ணத்துகள்கள் களிமண் அல்லது சிவப்பு பாறைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. 1400 களில், ஆஸ்டெக் மக்கள் சிவப்பு சாயத்தை தயாரிப்பதற்கு "காச்சினியல்" பூச்சிகளைப் பயன்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தனர். இன்று, அதே சிறிய பூச்சிகள் சிவப்பு நிறத்தை உலகிற்கு வழங்குகின்றன.

வேதம் சிவப்பு நிறத்தை ராஜ மேன்மைக்கு ஒப்பிடுகிறது, மேலும் இது பாவத்தையும் அவமானத்தையும் குறிக்கிறது. மேலும் இது ரத்தத்தின் நிறம். போர் வீரர்கள் "இயேசுவின் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தினாா்கள் " (மத்தேயு 27:28). சிவப்பு நிறத்தின் இந்த மூன்று அடையாளங்களும் இனைந்து இதயத்தை உடைக்கும் ஒரே உருவகமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இயேசு யூதரின் ராஜா என்று பரியாசம் செய்யப்பட்டார். அவர் அவமானத்தால் மூடப்பட்டார், அவர் விரைவில் சிந்தப்போகும் இரத்தத்தின் நிறத்திலான மேலங்கியால் உடுத்தப்பட்டார். ஆனால் ஏசாயாவின் வார்த்தைகள், நம்மை கறைப்படுத்தும் சிவப்பிலிருந்து நம்மை விடுவிப்பதாக இந்த சிவந்த இயேசுவின் வாக்கை முன்னறிவிக்கிறது: "உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்" (1:18).

சிவப்பு சாயத்திற்குப் பயன்படுத்தப்படும் காச்சினியல் பூச்சிகளைப் பற்றிய மற்றொரு விஷயம் - அவை உண்மையில் வெளிப்புறத்தில் பால் வெள்ளை நிறம் கொண்டவை. அவை நசுக்கப்படும்போது சிவப்பான ரத்தத்தைத் தருகின்றன. இந்த சிறிய உண்மை ஏசாயாவின் தீர்க்கரிசன வார்த்தைகளில் எதிரொலிக்கிறது: "[இயேசு] நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;" (ஏசாயா 53:5).

பாவம் அறியாத இயேசு, பாவத்தால் சிவந்த நம்மை இரட்சிக்க வந்திருக்கிறார். பாருங்கள், அவர் நசுங்கிய மரணத்தில், இயேசு அதிக சிவப்பு நிறங்கொண்டார்,  அதனால் நீங்கள் பனியைப் போல வெண்மையாக மாற முடியும்.

தேவனிடம் சரணடைதல்

ஒரு பண்ணை வீட்டில் பிறந்த ஜட்சன் வான் டிவென்டர் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார், ஓவியக் கலை பயின்று, ஒரு கலை ஆசிரியரானார். ஆனால், தேவன் அவருக்கு வைத்திருந்த திட்டம் வேறாயிருந்தது. திருச்சபையில் அவரது பனியின் அருமை அறிந்த நண்பர்கள் அவரை சுவிசேஷ பணிசெய்ய உற்சாகப்படுத்தினர். ஜட்சனும் தேவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார், ஆனால் ஓவிய பணிக்கான ஈடுபாட்டை விடுவது கடினமாக இருந்தது. அவர் தேவனோடு போராடினார். இறுதியில் அவர், "என் வாழ்க்கையின் முக்கியமான நேரம் வந்தது, நான் அனைத்தையும் தேவனிடம் ஒப்படைத்தேன்" என எழுதினார்.

தேவன் ஆபிரகாமை தன் மகன் ஈசாக்கை பலியாக அர்ப்பணிக்க அழைத்தபோது அவர் மனம் பட்டபாடுகளை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. "அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்" (ஆதியாகமம் 22:2). தேவன் நம்மைப் பலியிட அழைக்கும் விலைமதிப்பற்ற பொருள் எது என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்? தேவன் இறுதியில் ஈசாக்கைக் காப்பாற்றினார் என நாம் அறிவோம் (வ.12). ஆனால் நோக்கம் நிறைவேறிற்று: "தனக்கு மிகவும் விலைமதிப்புள்ளதை ஆபிரகாம் ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தார்". மிகவும் கடினமான அழைப்பின் மத்தியில் தேவன் வழங்குவார் என்று அவர் நம்பினார்.

தேவன் மீது அன்பு கூறுகிறோம் என்கிற நாம், நமக்கு மிகவும் பிடித்ததை தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்கிறோமா? சுவிசேஷ பணிக்காகத் தேவனின் அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜட்சன் வான் டிவென்டர் பின்னர் "இயேசுவுக்கே அர்ப்பணித்தேன்" என்ற அற்புதமான பாடலை எழுதினார். பிற்காலத்தில், தேவன் ஜட்சனை மீண்டும் ஆசிரியரான பணியாற்ற வாய்ப்பளித்தார். அவரது மாணவர்களில் ஒருவர்தான் இளம் பில்லி கிரஹாம்.

நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் நாம் கற்பனை செய்ய முடியாத நோக்கங்களைக் கொண்டுள்ளது. நமக்குப் பிரியமானதைக் கொடுக்க நாம் விருப்பத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் ஏங்குகிறார். நாம் செய்யக்கூடியது இது தான் என்று தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தம்முடைய ஒரே மகனைப் பலியிட்டார்.

மன்னித்தல் மறத்தல்

ஜில் பிரைஸ், ஹைப்பர் தைமேசியா என்னும் மனோநிலையுடன் பிறந்தார். அதாவது, தனக்கு நேரிட்ட அனைத்துக் காரியங்களையும் அசாதாரணமாக விரிவாய் நினைவில் வைத்திருக்கும் திறன். அவள் தன் வாழ்நாளில் அனுபவித்த எந்த சம்பவத்தின் சரியான நிகழ்வையும் அவள் மனதிலிருந்து மீண்டும் இயக்கக்கூடும்.

“மறக்கமுடியாதவைகள்” என்று பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, நடைபெற்ற குற்றங்களை நேர்த்தியாய் நினைவில் வைத்து கண்டறியும் ஹைப்பர் தைமேசியா மனோநிலைகொண்ட ஒரு பெண் போலீஸ் அதிகாரியை முன்னிறுத்தியது. இது ஒருவகையில் நன்மையாகத் தெரிந்தாலும், ஜீல்லுக்கு அப்படி தோன்றவில்லை. அவள் விமர்சிக்கப்பட்ட, இழப்பை அனுபவித்த அல்லது அவளை ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளாக்கிய அவள் மறக்கவேண்டும் என்று நினைக்கிற சம்வங்களை அவளால் மறக்க முடியவில்லை. அவள் அந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு கவலைப்படுகிறாள்.

நம் தேவன் சகலமும் அறிந்தவர் (ஒருவேளை ஒருவகையான தெய்வீக ஹைப்பர் தைமேசியாவாக இருக்கலாம்): அவருடைய புரிதலுக்கு வரம்பு இல்லை என்று வேதம் சொல்கிறது. ஆயினும் ஏசாயா புத்தகத்தில், “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (ஏசாயா 43:25) என்று தேவன் சொல்லுவதை நாம் பார்க்கக்கூடும். எபிரெயர் நிருபத்தில், “நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்... அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை” (எபிரெயர் 10:10,17) என்று சொல்லுகிறார்.

நம் பாவங்களை தேவனிடம் ஒப்புக்கொடுப்பதின் மூலம், அவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவந்து கவலைப்படுவதை நாம் தவிர்க்கலாம். தேவன் செய்வதைப் போலவே நாமும் அவற்றை விட்டுவிடவேண்டும்: “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம்” (ஏசாயா 43:18). தம்முடைய மிகுந்த அன்பின் நிமித்தம், அவருக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களை தேவன் நினைவுகூர விரும்புவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

சாம்பலுக்கு சிங்காரம்

கொலராடோ வரலாற்றில் மிகவும் அழிவுகரமான தீவிபத்தான மார்ஷல் தீவிபத்திற்கு பிறகு, அதில் விலைமதிப்பு மிக்க பொருட்களை இழந்தவர்களுக்கு அதை சாம்பலில் தேடித்தருவதற்காக ஒரு குழுவினர் முன்வந்தனர். விலைமதிப்பற்ற பொருட்கள் இன்னும் அப்படியே பாதுகாக்கப்பாக இருக்கும் என்று குடும்ப உறுப்பினர்கள் நம்பினர். ஆனால் மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு நபர் தனது திருமண மோதிரத்தைப் பற்றி மென்மையாக பேசினார். அவர் அதை மாடி படுக்கையறையில் தனது அலமாரியில் வைத்திருந்திருக்கிறார். வீடு இப்போது இல்லை, அவை அப்படியே எரிந்து சாம்பலாக இருந்தது. தேடுபவர்கள் படுக்கையறை இருந்த அதே மூலையில் மோதிரத்தைத் தேடினார்கள். அவர்களுக்கு மோதிரம் கிடைக்கவில்லை.  

ஏசாயா தீர்க்கதரிசி எருசலேம் தரைமட்டமாக்கப்படப்போகிறது என்னும் அதின் அழிவைக் குறித்து மிகுந்த துக்கத்துடன் எழுதுகிறார். அதேபோல், நாம் கட்டியெழுப்பிய வாழ்க்கை சாம்பலாகிவிட்டதாக சில சமயங்களில் உணர்கிறோம். உணர்ச்சி ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் எங்களிடம் எதுவும் இல்லை என்று உணர்கிறோம். ஆனால் ஏசாயா நம்பிக்கை அளிக்கிறார்: “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலை” அளிக்கவும் அவர் என்னை அனுப்பியிருக்கிறார் (ஏசாயா 61:1-2). தேவன் நம் சோகத்தை மகிமையாக மாற்றுகிறார்: அவர்  “சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தை” கொடுக்கிறார் (வச. 3). “அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்” (வச. 4) என்று வாக்களிக்கிறார். 

அந்த மார்ஷல் தீவிபத்து தளத்தில், ஒரு பெண் எதிர் பக்கத்தில் சாம்பலைத் தேடினார். அங்கு, அவரது கணவரின் திருமண மோதிரத்தைக் கண்டுபிடித்தார். உங்கள் விரக்தியில், உங்கள் சாம்பலில் தேவன் சிங்காரத்தை கண்டுபிடித்துக்கொடுக்கிறார். அது நீங்களே!

ஒளிந்திருக்கும் பிரம்மாண்டம்

“தி அட்லாண்டிக்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆர்தர் ப்ரூக்ஸ் அப்புத்தகத்தை எழுதும்போது தைவானில் அமைந்துள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றதைக் குறித்துக் கூறுகிறார். இது உலகின் மிகப்பெரிய சீனக் கலைகளின் தொகுப்புகளில் ஒன்றாகும். அருங்காட்சியக வழிகாட்டி கேட்டார், “இன்னும் வரையப்படாத ஒரு ஓவியத்தை கற்பனை செய்யும்படிக்கு உங்களிடத்தில் கேட்டால், நீங்கள் என்ன கற்பனை செய்வீர்கள்?” அதற்கு நான், “ஒரு வெற்று கேன்வாஸ்,” என்று பதிலளித்தேன். ஆனால் அந்த வழிகாட்டி, “ அதை நாம் வேறுவிதத்திலும் பார்க்கக்கூடும். அதில் ஓவியம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது, கலைஞர்களின் வேலை வெறுமனே அதை வெளிக்கொண்டுவருவதே” என்று சொன்னார். 

எபேசியர் 2:10 இல், கைவேலை என்ற வார்த்தை, சில சமயங்களில் “வேலைப்பாடு" அல்லது “தலைசிறந்த படைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது கிரேக்க வார்த்தையான “பொய்மா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதிலிருந்து நாம் கவிதை என்று அர்த்தங்கொடுக்கும் “பொயட்ரி” என்ற ஆங்கில வார்த்தையை பெறுகிறோம். தேவன் நம்மை கலைப் படைப்புகளாகவும் வாழும் கவிதைகளாகவும் படைத்துள்ளார். நம்முடைய ஓவியங்கள் தெளிவில்லாமல் இருந்தது. “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (வச. 1). அந்த அருங்காட்சியக வழிகாட்டியின் வார்த்தைகளை சுருக்கமாகச் சொல்வதானால், “ஓவியம் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது, ஒரு தெய்வீகமான ஓவியனின் வேலை அதை உயிர்பெறச்செய்வதே” என்பதாகும். அவருடைய கலைப்படைப்புகளாகிய நம்மை “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்… நம்மை உயிர்ப்பித்தார்” (வச. 4-5).

நாம் பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் மத்தியில் கடந்துசெல்லும்போது, நம்முடைய தெய்வீக ஓவியர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதில் திருப்திகொள்ளலாம்: “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). உங்களில் இருக்கும் ஓவியத்தை வெளிக்கொண்டுவர தேவன் கிரியை நடப்பித்துக்கொண்டிருக்கிறார்.

சாதாரணமாய் தெரிபவர்கள்

ஆஸ்டன்-மார்டின்கள் மற்றும் பிற சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களின் ஓட்டுநர்களாக இருக்கும் உளவாளிகளை பெரிய உளவாளிகளாய் ஹாலிவுட் திரைப்படங்கள் நமக்கு வழங்குகிறது. ஆனால் முன்னாள் சி.ஐ.ஏ தலைவரான ஜோனா மெண்டஸ், அதற்கு முரணாய் ஒன்றை சொல்கிறார். வேவுபார்க்கும் உளவாளி பளிச்சென்ற தெரியாத, விவரமற்ற, “சிறிய சாதாரண மனிதனாய் இருக்கவேண்டும்” என்று சொல்லுகிறார். “அவர்களை நீங்கள் எளிதில் மறந்துவிடுவீர்கள்.” உளவாளிகள் போல் தெரியாதவர்களே சிறந்த உளவாளிகள். 

இஸ்ரவேலின் இரண்டு வேவுக்காரர்கள் எரிகோவுக்குள் சென்றனர். அவர்களை ராகாப் ராஜாவின் போர்ச்சேவகர்களிடமிருந்து மறைத்து வைத்து பாதுகாக்கிறாள் (யோசுவா 2:4). அவளை உளவுப்பணியாளராய் ஏற்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு. அதற்கு மூன்று காரணங்கள் எதிரிடையாய் அமைகிறது: அவள் ஒரு கானானிய தேசத்தாள், அவள் ஒரு பெண், மற்றும் ஒரு விபச்சாரி. ஆனாலும் ராகாப் இஸ்ரவேலின் தேவனை நம்பத் துவங்கினாள்: “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” (வச. 11). அவள் இஸ்ரவேலின் உளவாளிகளை கூரையின் மீது ஆளிமரத்தின் கீழ் மறைத்து, அவர்கள் உயிருடன் தப்பிக்க உதவினாள். தேவன் அவளுடைய விசுவாசத்திற்கு வெகுமதி அளித்தார்: “அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்” (6:25).

நாம் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கருதியிருக்கலாம். ஒருவேளை நமக்கு உடல் ரீதியான வரம்புகள் இருக்கலாம், வழிநடத்தும் அளவுக்கு பிரபலமான நபராய் தெரியாமல் இருக்கலாம், அல்லது ஒரு கெட்டுப்போன கடந்த காலம் இருக்கலாம். ஆனால் வரலாறானது, ராகாப் தேவனுடைய தெய்வீக திட்டத்திற்கு எடுத்து பயன்படுத்தப்பட்டதுபோல மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களாலேயே நிரம்பியிருக்கிறது. உறுதியாக இருங்கள்: நம்மில் சாதாரணமானவர்களுக்கும் அவர் நேர்த்தியான தெய்வீகத் திட்டத்தை வைத்திருக்கிறார்.

ஆயிரம் புள்ளிகள் விளக்கு

அமெரிக்காவின் வடமேற்கு அலபாமாவில் உள்ள டிஸ்மல்ஸ் கேன்யன் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்க்கிறது. இங்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒருவகையான புழுக்கள் குஞ்சுபொரித்து, பளபளக்கும் புழுக்களாக மாறி, இரவில் இந்த பளபளப்பான புழுக்கள் ஒரு நீலநிறமான ஒளியை பிரதிபலிக்கின்றன. மேலும் அதுபோன்று ஆயிரக்கணக்கான புழுக்கள் ஒன்றுகூடி பிரம்மாண்டமான ஒளியை தோற்றுவிக்கின்றன.

பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்தவர்களை அவ்விதமாய் ஒளிரும் புளுக்காய் கருதுகிறார். “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:8). ஒருசில வேளைகளில் என்னுடைய இந்த சிறிய விளக்கு எவ்விதம் ஒளிதரமுடியும் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் அது ஒரு தனிநபரின் விளக்கு அல்ல என்று பவுல் சொல்லுகிறார். அவர் நம்மை “வெளிச்சத்தின் பிள்ளைகள்” என்று அழைக்கிறார் (வச. 8). மேலும் “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு,” தேவன் நம்மை தகுதியுள்ளவர்களாய் மாற்றியிருக்கிறார் என்றும் சொல்லுகிறார் (கொலோசெயர் 1:12). உலகத்திற்கு ஒளியாயிருப்பது என்பது கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையாய் இணைந்து செயல்படுத்துகிற ஒரு கூட்டு முயற்சி. அதை ஒளிரும் புளுக்களாய், “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி” (எபேசியர் 5:19) தேவனை மகிமைப்படுத்தும்படியாய் பவுல் வலியுறுத்துகிறார்.

நாம் சோர்ந்துபோகும்போது, நம்முடைய ஜீவியத்தின் சாட்சியை நினைவுகூருவது என்பது இருண்ட சூழ்நிலையில் ஒளிரும் ஒரு விளக்கைப் போன்று தெரியலாம். ஆனால் நாம் தனியாள் இல்லை. தேவனுடைய வழிநடத்துதலின்பேரில், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பிரயாசப்படுவோம். ஒளிகொடுக்கும் புளுக்கள் ஒன்றாக இணைந்து, மற்றவர்களை வெளிச்சத்திற்கு ஈர்ப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.