
நான் யார்?
1859ஆம் ஆண்டில், ஜோஷ்வா ஆப்ரஹாம் நார்டன் தன்னை அமெரிக்காவின் பேரரசனாக அறிவித்தார். நார்டன், சான் பிரான்சிஸ்கோ ஷிப்பிங்கில் தனது அங்கீகாரத்தை ஏற்படுத்தி தோற்றுபோயிருந்தார். ஆனால் அமெரிக்காவின் பேரரசராக தன்னுடைய புதிய அங்கீகாரத்தை ஸ்தாபிக்க விரும்பினார். சான் பிரான்சிஸ்கோ மாலை செய்தித்தாளில், “பேரரசர்” நார்டனின் அறிவிப்புகள் என்று பிரசுரமாகியிருந்தது. மக்கள் அதைப் பார்த்ததும் சிரித்துவிட்டனர். நார்டன் சமூகத்தின் தீமைகளை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். தனது சொந்த நாணயத்தை அச்சிட்டார். மேலும் பிரிட்டிஷ் பேரரசின் ராணி விக்டோரியாவுக்கு கடிதம் எழுதி, அவர் தன்னை திருமணம் செய்துகொண்டு அதின் மூலம் தங்கள் ராஜ்யங்களை ஒன்றிணைக்குமாறு கேட்டுக் கொண்டார். உள்ளுர் தையல்காரர்களால் வடிவமைக்கப்பட்ட அரச இராணுவ சீருடைகளை அவர் அணிந்திருந்தார். “நார்டன் ஒவ்வொரு அங்குலத்திலும் ராஜாவாகவே இருக்கிறார்” என்று ஒரு பார்வையாளர் வர்ணித்தார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படி இருந்ததில்லை. நாம் யாராக இருக்க விரும்புகிறோமோ அவ்வாறு நாம் மாறுவதில்லை.
நம்மில் பலர் பல ஆண்டுகளாக தங்களை யார் என்றும் தங்களின் மதிப்பு என்னவென்றும் தேடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய அங்கீகாரத்தையோ பெயரையோ வைத்து நம்மால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. தேவன் மாத்திரமே நம்மை யார் என்று அடையாளப்படுத்தமுடியும். ஆச்சரியவிதமாய் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் அவர் நம்மை குமாரனாகவும் குமாரத்தியாகவும் அழைப்பு விடுத்து, அவருடைய இரட்சிப்பை அருளினார். “அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான் 1:12) என்று யோவான் சொல்லுகிறார். இந்த அங்கீகாரமானது நமக்குக் கொடுக்கப்பட்ட பரிசு. நாம், “இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (வச. 13).
தேவன் நமக்கு பெயரையும் கிறிஸ்துவில் அங்கீகாரத்தையும் கொடுக்கிறார். அவர் நம்மை யார் என்று நமக்கு அறிவிப்பதினால் நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்திவிடுவோம்.

நட்சத்திரங்களை ஆராய்தல்
2021 ஆம் ஆண்டில், ஒரு பன்னாட்டு முயற்சியானது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை ஏவுவதற்கு வழிவகுத்தது. இது பிரபஞ்சத்தை சிறப்பாக ஆராய பூமியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மைல்கள் தூரம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த விசித்திரமான தொலைநோக்கியானது, ஆழமான விண்வெளியில் ஊடுருவி நட்சத்திரங்களையும் மற்ற வான அதிசயங்களையும் ஆராய்ச்சி செய்யும்.
இது உண்மையில் ஆச்சரியமான ஒரு வானியல் தொழில்நுட்பம். இது நேர்த்தியாய் வேலை செய்தால், அற்புதமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை நமக்குக் கொடுக்கும். ஆனால் அதன் பணி புதியது அல்ல. ஏசாயா தீர்க்கதரிசி நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்து, “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே” (ஏசாயா 40:26) என்று விவரிக்கிறார். “இரவுக்கு இரவு” (சங்கீதம் 19:2) அவைகள் அனைத்தும் இந்த ஆச்சரியமான அண்டசராசங்களை சிருஷ்டித்த தேவனுடைய புகழையும், இரவு வானத்தை ஒளிரச்செய்யும் ஒளிக்கீற்றுகளைக் குறித்தும் விவரித்துக்கொண்டிருக்கின்றன (வச. 3).
ஒளிரக்கூடிய இதுபோன்ற நட்சத்திரங்கள் அனைத்தையும் அவர் தொகையிடுகிறார்: “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்” (சங்கீதம் 147:4). சில நேர்த்தியான கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்து அவற்றை ஆகாயத்திற்கு ஆராய்ச்சி செய்யும்பொருட்டு அனுப்பிவைப்பதின் மூலம், வசீகரிக்கும் ஆச்சரியங்களை அறிய நேரிடுகிறது. அவைகள் அனைத்தும் அவற்றை உண்டாக்கியவரின் மகிமையை விளங்கப்பண்ணுகிறது. ஆம்! “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது” (19:1), நட்சத்திரங்களும் வெளிப்படுத்துகிறது.

அன்பான தலைமைத்துவம்
ஒரு தாய் கரடி தன்னுடைய நான்கு குட்டிகளையும் தூக்கிக்கொண்டு மனிதர்கள் நடமாடும் வீதியில் வலம்வந்த காணொலியை பார்த்தது என் முகத்தில் புன்னகையை வருவித்தது. அது தன் ஒவ்வொரு குட்டிகளையும் சாலையின் மறுபுறம் கொண்டு செல்வதும், அவைகள் மீண்டும் திரும்பி வருவதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அந்த தாய் கரடி, ஒரு கட்டத்தில் தன் நான்கு குட்டிகளையும் ஒருசேர தூக்கிக்கொண்டு ஒரேயடியாய் சாலையை பாதுகாப்புடன் கடந்தது.
ஒரு தாயின் சலிப்படையாத இந்த செய்கையை காண்பிக்கும் இந்த காணொலியானது, தெசலோனிக்கேய திருச்சபை விசுவாசிகள் மீது பவுல் வைத்திருக்கும் அன்பை விவரிக்க பவுல் பயன்படுத்திய உருவகத்தோடு ஒத்துப்போகிறது. அவருடைய அதிகாரத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய வேலையை தன்னுடைய இளம் குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் பெற்றோருக்கு ஒப்பிடுகிறார் (1 தெசலோனிக்கேயர் 2:7,11). தெசலோனிக்கேய மக்கள் மீதான இந்த ஆழமான அன்பே (வச. 8), பவுல் அப்போஸ்தலரை உற்சாகப்படுத்தி, தேற்றி, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழச் செய்தது (வச. 12). தெய்வீக வாழ்க்கைக்கான இந்த உணர்ச்சிபூர்வமான அழைப்பு, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தேவனை கனப்படுத்துவதை பார்க்கவேண்டும் என்ற அவரது அன்பான விருப்பத்தின் விளைவாகும்.
நமது தலைமைத்துவ வாய்ப்புகள் அனைத்திலும், அதிலும் குறிப்பாக பொறுப்புகள் நம்மை சோர்வடையச் செய்யும் போது பவுலின் இந்த உதாரணம் நமக்கு வழிகாட்டியாக அமையும். கர்த்தருடைய ஆவியானவராலே நடத்தப்பட்டு, நம்முடைய தலைமைத்துவத்தின் கீழ் இருப்பவர்களை மென்மையாகவும் உறுதியாகவும் நேசித்து வழிநடத்துவோம்.

அன்பினிமித்தம்
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.
