
கால்பந்தும் மேய்ப்பர்களும்
இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டின்போது சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைக் காணமுடியும். அதாவது ஒவ்வொரு ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரும் ரசிகர்கள் தங்கள் அணியின் கீதத்தைப் பாடுவார்கள். வேடிக்கையான பாடல் (“கிளேட் ஆல் ஓவர்”), விசித்திரமான பாடல் (ஐம் ஃபாரெவர் புளோயிங் பப்ள்ஸ்”), ஆச்சரியப் பாடல் என அணிக்கு அணிக்கு அந்தக் கீதம் மாறுபடும். உதாரணமாக, வெஸ்ட் புரோம்விச் அல்பியான் அணியின் கீதமாக “சங்கீதம் 23” உள்ளது. அந்த அணி மைதானத்தின் முகப்பில் அந்தச் சங்கீகத்தின் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. “வெஸ்ட் புரோம் பேகீஸ்” அணியின் ஆட்டத்தைக் காணச் செல்கிற ஒவ்வொருவருக்கும் அந்த நல்ல, மகத்தான, பிரதான மேய்ப்பனின் அக்கறையை அந்த வார்த்தைகள் பறைசாற்றுகின்றன.
சங்கீதம் 23, “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்” என்று தாவீது சொல்லியிருக்கும் வார்த்தைகள் காலத்தால் அழியாதவை (வச. 1). பிறகு வந்த நற்செய்தி எழுத்தாளரான மத்தேயு, “அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி(னார்)” என்று எழுதினார் (மத். 9:36). யோவான் 10 தம் காலத்தில் வாழ்ந்த “ஆடுகளாகிய” மக்கள்மேல் தமக்குள்ள அன்பையும் அக்கறையையும் இயேசு சொல்கிறார். “நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” என்று சொன்னார் (வச. 11). இயேசு திரளான ஜனங்களோடு இடைபட்டதற்கும், அவர்களுடைய தேவைகளைச் சந்தித்ததற்கும், இறுதியில் அவர்களுக்காக (நமக்காக) தம் ஜீவனைக் கொடுத்ததற்கும் இயேசுவின் மனதுருக்கம்தான் காரணமாக இருந்தது.
“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்” என்பது வெறும் பழங்கால பாடலோ, அறிவுப்பூர்வமான ஒரு முழக்கமோ அல்ல. தேவனை அறிந்து, அவருடைய அன்புக்கு பாத்திரமாகி, அவருடைய குமாரனால் மீட்கப்பட்டிருக்கிற ஒருவர், நம்பிக்கையோடு சொல்கிற வார்த்தைகளாகும்.

கண்ணுக்குத் தெரியாத உண்மைகள்
டிஸ்கவர் பத்திரிகையின் பதிப்பாசிரியரான ஸ்டீபன் காஸ், தன் அன்றாட வாழ்வில் நிலவுகிற கண்ணுக்குத் தெரியாத உண்மைகளை பற்றி சிந்திக்கத் தீர்மானித்தார். நியூ யார்க் நகரிலிருக்கும் தன் அலுவலகத்திற்கு நடந்துசென்றபோது, ‘ரேடியோ அலைகளைக் காணமுடிந்தால், பல்உருகாட்டி (கலைடோஸ்கோப்பு) ஜொலிப்பதுபோல இந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மேல்பகுதி ஜொலித்து, நியூயார்க்க நகரத்தையே ஒளிவெள்ளமாக்குவது தெரியும்’ என்று யோசித்தார். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் ரேடியோ மற்றும் டிவி அன்டெனாக்கள் மொய்த்தவண்ணம் இருக்கும். ரேடியோ சமிக்ஞை, டிவி சமிக்ஞை, வைஃபை என தன்னைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத மின்காந்தவியல் புலம் இருந்ததை அவர் உணர்ந்திருந்தார்.
கண்ணுக்குத் தெரியாத ஓர் உண்மை பற்றி, எலிசாவின் வேலைக்காரனும்கூட ஒருநாள் காலையில் அறிந்து கொண்டான். காலையில் எழுந்து வந்தவன், சீரியாவின் படைகள் தன்னையும் தன் எஜமானையும் சுற்றி வளைத்திருப்பதைக் கண்டான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் போர்க்குதிரைகளில் ஏறியிருந்த வீரர்கள்தாம் தென்பட்டார்கள்! (2 இரா. 6:15). வேலைக்காரன் நடுங்கினான், ஆனால் எலிசா நம்பிக்கையோடு காணப்பட்டார். ஏனென்றால், தங்களைச் சுற்றிலும் தூதர்களுடைய சேனைகள் இருந்ததை அவர் கண்டார். “அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்று சொன்னார் (வச. 16). பிறகு, எதிரிகள் வளைக்கப்பட்டிருப்பதையும், எல்லாம் ஆண்டவரின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் தன் வேலைக்காரனும் பார்க்கும்படியாக அவனுடைய கண்களைத் திறக்கவேண்டுமென்று ஆண்டவரிடம் கேட்டுக்கொண்டார் (வச. 17).
முற்றிலும் முடங்கிப்போய், உதவியற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறீர்களா? எல்லாம் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதையும், அவர் உங்களுக்காக யுத்தம் செய்வதையும் மறக்கவேண்டாம். “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்”
(சங். 91:11).

இனியும் ஓடவேண்டாம்
1983ம் வருடம், ஜுலை 18ம் தேதியன்று, அமெரிக்க விமானப்படையின் தளபதி ஒருவர் நியூ மெக்சிகோவிலுள்ள அல்புகர்க் என்கிற இடத்தில் காணாமல் போனார். அதன்பிறகு அவரைப் பற்றிய செய்தியே இல்லை. முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு, அவர் கலிஃபோர்னியாவில் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். “வேலையால் மனஅழுத்தம் அடைந்து” அவர் ஓடிவிட்டதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
முப்பத்தைந்து வருடங்கள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறார்! ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்றே பாதி வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்! அவர் எப்போதும் கவலையோடும் சித்தப்பிரமையோடும்தான் அலைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு “ஓடுவதில்” எனக்கும் கொஞ்சம் அனுபவமுண்டு. ஆனால், என் வாழ்க்கையில் ஏதாவது கடமையைப் புறக்கணித்து, சரீர ரீதியாக நான் ஓடினது கிடையாது. மாறாக, ஏதாவது ஒன்றை நான் செய்யும்படி, ஏதாவது விஷயத்தை நான் எதிர்கொள்ளும்படி அல்லது அறிக்கையிடும்படி தேவன் என்னிடம் எதிர்பார்த்திருப்பார். அதில் நான் தவறியிருப்பேன். அதைதான் ஓடுவது என்று குறிப்பிடுகிறேன்.
யோனா தீர்க்கதரிசியும்கூட அவ்வாறு ஓடினவர்தானே! நினிவேயில் சென்று பிரசங்கிக்கும்படி தேவன் சொன்னதை அவர் கேட்கவில்லை (யோனா 1:1-3). ஆனால், தேவனை விட்டு அவர் எங்கே ஓடமுடிந்தது! அவருடைய சம்பவத்தை அறிந்திருப்பீர்கள் (வச. 4,17). புயல் வீசுகிறது, மீன் விழுங்குகிறது, மீனின் வயிற்றில் இருக்கிற சமயத்தில், தான் செய்த தவறுக்கான பலனை எண்ணிப்பார்க்கிறார்; தேவனிடம் உதவி வேண்டுகிறார் (யோனா 2:2).
யோனா குறையுள்ள ஒரு தீர்க்கதரிசி. ஆனால், அவருடைய சம்பவத்திலும்கூட நம்மை ஊக்கப்படுத்துகிற ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, யோனா பிடிவாதமாக இருந்தபோதிலும் தேவன் அவரைக் கைவிடவில்லை. வேறுவழியே இல்லாத நிலையில் தேவனிடம் அவர் உதவிகேட்டபோது, தம் சொல்லுக்கு இணங்காத ஊழியனை அவர் கிருபையோடு காப்பாற்றினார் (வச. 2). நம்மையும் அவர் அப்படித்தான் நடத்துகிறார்.

தேவன் தலையிடுகிறார்
1960 களில் இங்கிலாந்து அரசின் பராமரிப்பில் வளர்ந்தாள் பார்பரா. அவளுக்கு பதினாறு வயதானபோது, அவளும் அவளுடைய பச்சிளங்குழந்தை சைமனும் தங்குவதற்கு வீடின்றி தவித்தார்கள். ஏனென்றால், பதினாறு வயதாகிவிட்டால் அரசாங்க பராமரிப்பு தானாகவே நின்றுவிடும். எனவே தனக்கு உதவும்படி இங்கிலாந்தின் மகா ராணிக்கு பார்பரா ஒரு கடிதம் எழுதினாள்; ராணியிடமிருந்து பதிலும் வந்தது. தன்னுடைய வீடு ஒன்றை பார்பரா தங்கும்படி கொடுத்து, மனதுருக்கத்துடன் ராணி நடந்துகொண்டார்.
பார்பராவுக்கு எது தேவைப்பட்டதோ அதற்கான வசதிவாய்ப்புகள் இங்கிலாந்தின் மகாராணியிடம் இருந்தன. மனதுருக்கத்துடன் அவர் செய்த உதவியானது தேவனுடைய மனதுருக்கத்தை சிறிதளவில் பிரதிபலிக்கிறது. பரலோக ராஜாவுக்கு நம் தேவைகள் எல்லாமே தெரியும். நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தும்படி அவர் செயல்படுகிறார். ஆனால் அவ்வாறு செயல்படுவதற்கு முதலில் நாம் அவரிடம் வரவேண்டுமென விரும்புகிறார். அவரோடு நாம் உறவுவைக்கவேண்டும், அந்த உறவின் விளைவாக நம் தேவைகளையும் கவலைகளையும் அவரிடம் சொல்லவேண்டும்.
இஸ்ரவேலருக்கு விடுதலை தேவைப்பட்டது. அதை அவர்கள் அவரிடம் சொன்னார்கள். எகிப்தின் அடிமைத்தனத்தில் உபத்திரவப்பட்ட அவர்கள், உதவிவேண்டி கதறினார்கள். அவர்களுடைய கதறலை தேவன் கேட்டார், தாம் அவர்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார்: “தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்” (யாத். 2:25). தம் மக்களை விடுவிக்கும்படிக்கு மோசேக்கு அவர் கட்டளையிட்டார்; தாம் அவர்களை மீண்டுமொருமுறை “பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச்” சேர்ப்பதாகச் சொன்னார் (யாத். 3:8).
நாம் தம்மிடம் வரவேண்டும் என்று நம்முடைய ராஜா விரும்புகிறார்! நாம் விரும்புவதை எல்லாம் அவர் தராமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய தேவைகளை எல்லாம் அவர் சந்திக்கிறார். அவருடைய ஆளுகையை, அவருடைய நடத்துதலைச் சார்ந்திருப்போம்.
